Thursday, August 20, 2015

சற்குரு - தாத்தா - 15

சற்குரு - தாத்தா - 15

"பேருந்தில் தனியாகப் பயணம் செய்யப் பழகிக் கொள்" என ஒருமுறை தாத்தா என்னிடம் கூற நான் , - "நீங்கள் தனியாகப்  பேருந்துப் பயணம் செய்தது எப்போது தாத்தா?" எனக் கேட்டதற்கு, "19 வயதில் தனியாகக் கப்பல் பிரயாணம் செய்திருக்கிறேன்" என்றார்கள் தாத்தா. முதல்முறை தனது மாமாவுடன் சென்றார்கள்; இரண்டாவது முறை சென்றபோது தனியாகக் கப்பலில் பிரயாணம்.

முதல் முறை 1935 ஜூன் மாதம் ரங்கூன் சென்ற தாத்தா, தாயகம் திரும்பிய போது தாங்கொணாத பல இடிகளை சந்தித்திருந்தது வீடு.

அன்புத் தங்கையை மணம் புரிந்த தாய் மாமா, உடன் வளர்ந்து தோழமையும் பாசமுமாகத் திகழ்ந்த மாமா இளம் வயதில் (22 வயது) மறைந்தார். மலர்ந்து மணம் வீச இதழ் விரித்த இள மொட்டு கருகினாற் போன்ற பேரிழப்பு. பதினாறு வயதுத் தங்கை, 40 நாட்கள் நிரம்பிய கைக்குழந்தையுடன் கைம்பெண்ணாக, கண்ணீராக...

மரணம் தரும் இழப்பு - வலி; உற்ற உறவின் மரணம் - ஆறாத ரணம்; உறவுகளைப் பிரிந்து தொலைதூரத்தில் இருக்கும் காலங்களில் வரும் துயரச் செய்தி, தனிமை எனும் பூதக்கண்ணாடி வழி நூறாயிரமென உருவெடுக்கும். மூச்சென உள்ளே வியாபிக்கும். அந்த வலியை மனதில் சுமந்து கொண்டு தனிமையில் இருக்கும் காலமும், மேற்கொள்ளும் பயணமும்  சிலுவை சுமந்து முள்முடி தாங்கிய  பயணமாகத்தான் இருக்கும், இருந்திருக்கும்.

இந்தத் தகவல் மட்டுமே ரங்கூன் வரை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து 21 நாட்களுக்குள் மறைந்த அருமைத் தம்பி ஆறுமுகம் குறித்தும், அன்புத் தங்கை சொர்ணவல்லி குறித்தும் யாரும் செய்தி சொல்லவில்லை.  புது மணம் முடித்த தம்பதியராய்ப்  பார்த்த தங்கை சௌந்தரத்தை எவ்விதம் இக்கோலத்தில் பார்ப்பது, என்ன ஆறுதல் சொல்வது எனத் தவித்து வீடு சேர்ந்தால், மேலும் இரு மறைவுகளும் சேர்த்து சூறையாடி இருந்தது வீட்டின் மகிழ்ச்சியை. மூத்த மருமகனையும், ஒரு மகளையும் ஒரு மகனையும் இழந்திருந்த வீடு வேறு எப்படி இருக்க முடியும். அடி மேல் அடி வாங்கி கலங்கி நின்றது குடி .

எத்தனை சோதனை வரினும் தளராத இறை நம்பிக்கையும், மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் காட்டிய அன்பும் ஆறுதலுமே ஆணி வேராய்த் தாங்கி இருந்து தழைக்கச் செய்திருக்கிறது முருகன் இல்லத்தை.

முதல் பயணம்; முதல் வேலை;  முதல் சம்பளம்; தம்பி தங்கையருக்காய் ஆசையாய் வாங்கிய ஆடைகள் அர்த்தமற்றுக் கிடந்தன.  விடுதலைப்  போராட்ட வீரர் சத்தியமூர்த்தி போல வெடிப்புடன் பேசும் இளம் தம்பி ஆறுமுகமும், ஆறு வயதே நிரம்பியிருந்த தங்கை சொர்ணவல்லியும் மீண்டும் காணக் கிடைப்பதில்லை - இந்த நாட்களைக் குறித்துப் பேசும் போதெல்லாம் பேச்சு இடையில் நின்று கண்ணீர் வடிய ஒரு மௌனம் கவிந்து விடும் தாத்தா மேல்.

எதுவரினும் வாழ்க்கை நின்று விடுவதில்லை; அடுத்த வேளையே  பசிக்கத்தான்  செய்கிறது. எனவே தானும் தளராது, சோர்ந்த சுற்றங்களையும் அரவணைத்து முன் செல்ல வேண்டும் என்பதை சொல்வதற்காகப்  பலமுறை இந்த நிகழ்வுகள் குறித்து வலியோடும் வேதனையோடும் சொல்லி இருக்கிறார்கள் தாத்தா.

சற்றே நீள் மூச்சுடன் ஆசுவாசப் படுத்திக் கொண்டு மேற்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது - வாழ்க்கையைப் போல...

ரங்கூன் வாழ்க்கை, அன்றாட வாழ்க்கை பற்றி பெரிய அளவில் தகவல்கள் இல்லை. இவற்றில் ஒருமுறை கப்பல் பயணத்தின் போது, ஏதோ ஒருவிதமான விஷக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக, கப்பலை ஒரு சிறு தீவில் நிறுத்தி, அனைவரையும் மருத்துவ சோதனை செய்து இரண்டு நாட்கள் தாமதாக ஏற்றிச் சென்றார்களாம். நோய்வாய்ப்பட்டவர்களை குவாரன்டைன் (quarantine) செய்தார்கள் எனத் தாத்தா கூறிய அன்றுதான் இந்த வார்த்தை அறிமுகம்.  இன்று வைரஸ் பாதித்த filesஐ கணிணியில் quarantined எனப் பார்க்கும் போதெல்லாம், அந்தப் பெயர் தெரியாத தீவு நினைவுக்கு வரும்.

தாத்தாவுக்கு கோலாலம்பூர் அம்பாங் தெரு AMM firm-ல் வேலை. செட்டியார் தெரு என்றும் அழைக்கப்பட்ட இந்த வீதியில் முக்கியமான வணிக நிறுவனங்களும், வட்டிக்கடைகளும் இருந்திருக்கின்றன. இந்த அம்பாங் வீதி இன்றும் இருக்கிறது. - Leboh Ampang என. மலேயாவிலிருந்து ரப்பர், ஈயம்( tin ) போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கிறது. சார்ட்டர்ட் வங்கி (Chartered bank) என்றழைக்கப்பட்ட (standard chartered ன் மூல வங்கி) வங்கி கோலாலம்பூரிலும், ப்ளாங்கிலும்(சிலாங்கூர்) இருந்திருக்கிறது. ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த பெரும்பாலானோர் தமிழர்கள் - குறிப்பாக இராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து மிக அதிக அளவில் சென்றிருக்கிறார்கள்.

அம்பாங் தெரு - அன்று

அம்பாங் தெரு - இன்று

தாத்தா குறிப்பிடும் மற்றொரு வீதி - பெட்டாலிங் வீதி - அன்று 

பெட்டாலிங் வீதி - இன்று



மலேயாவில் கோலாலம்பூரில் தலைமைக் கிளையும், பினாங்கில்(Penang) இன்னொரு கிளையும் இருந்திருக்கிறது தாத்தா வேலை பார்த்த AMM firm-ற்கு . (AM Murugappa Chettiar - Cholamandalam, TI cycles, Carborundum groups குழுமத்தின் 1900களின் தொடக்க வணிகம் இந்த மலேய வட்டிக்கடைகள்)

பினாங் நாட்களைப் பற்றிய பகிர்வுகளே அதிகம்.

மனைவி கருவுற்ற செய்தி, முதல் மகன் (சிவசுந்தரவேலன்) பிறந்த செய்தி, அனைத்தும் கடிதங்கள் வாயிலாகத்தான் தாத்தாவை அடைந்திருக்கிறது. 24 வயது நிரம்பிய இளைஞன் முதல் மனைவியின் இழப்புக்குப் பின், இரண்டாவது திருமணம் முடித்து இரண்டரை மாதங்களில், உறவினர் அனைவரையும் பிரிந்து தனிமையில். அந்த தருணத்தில் சொந்தங்கள் அனைவரின் அன்பையும், ஆசாபாசங்களையும், ஏக்கங்களையும் சிற்சில வரிகளில் பொதித்து சுமந்து வரும் கடிதங்கள் தேவதூதர்களாகவே  இருந்திருக்கின்றன.

மகன் பிறந்த மகிழ்ச்சியான செய்தியையும் பிஞ்சு விரல்கள் மஞ்சளில் தோய்த்துப் பதித்த கைத்தடத்தையும் தாங்கி வந்தது ஒரு கடிதம். அதுவே இறுதிக் கடிதம் -தகவல் தொடர்பு அறுந்து போனது.

- தொடரும் -  (தொடரும், தொடர்பும்)

முந்தைய பதிவு (14)

அடுத்த பதிவு (16)

Wednesday, July 29, 2015

சற்குரு - தாத்தா - 14

ஒவ்வொரு மறைவும் உணர்த்திக் கொண்டே இருந்தும், மறந்து விடும் மனித மனம் - நிலையிலா வாழ்வில் நம் நிலை யாதென்று. ஒரு போர்க்களம் பார்த்துவிட்டால், மரணத்தோடு கணம்தோறும் வாழ்ந்தாக வேண்டிய நாட்களில் ஒருமுறை வாழ்ந்து விட்டால், ஒருவேளை உயிரின் மதிப்பு புரிந்துவிடக்கூடும்.

மாபெரும் மனிதர்களை இழந்திருக்கும் இத்தருணம், வாழ்வு குறித்த - பயனுள்ள வாழ்வு குறித்த  பல கேள்விகள் அனைவருக்கும் மனதுக்குள்  எழும்பி இருக்கிறது. அதை சற்றே உற்றுநோக்கி மனதுக்குள் விடை தெளிதல் நலம். இல்லையெனில் இயற்கையின் கொடையாக ஞாபக மறதி இருக்கிறதே - அன்றாடக் கவலைகளுக்கு சீக்கிரம் திரும்பி விடுவோம்.

சிற்றலை கரை கடத்தி மீண்டும் அமைதி கொள்ளும் குளம்.

அடிமேல் அடியென அப்பாவின் மறைவுக்குப் பின், மாமாவின் மறைவு... பொதுவாக சமீபத்திய மாதங்களில் பல துறை ஆளுமைகள் அமரர் ஆகி இருக்கிறார்கள். (ஜெயகாந்தன், பாலச்சந்தர், MSV, அப்துல் கலாம் வரை) இறப்பும் இழப்பும் நம் மனதை பண்படுத்தவில்லையெனில், வாழ்வு நமக்கும் பிறர்க்கும் கனியாத காயாய் கசந்துபோக நேரும்.

--------------------

எழுத விழைந்த கதைக் களமும் மரணத்தை சுவாசித்த ஒரு பெரும் போர்ச்சூழல்தான்

1942 - மலேயாவில் கோலாலம்பூர் அருகே ஒரு சிறிய ரயில்வே நிலையம்.  நாடாள்பவர் யாராயினும் உயிர்வாழ உத்தரவாதமின்றி மக்கள் அலைக்கழியத் தொடங்கிஇருந்த காலம்.

நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்ய, அனைவரது பெருமூச்சுக்களையும் சேர்த்து வெளிவிட்டு வந்து நின்றது ஒரு புகைவண்டி. திடுமென போர் விமானங்களின் வருகையைக் குறிக்கும் எச்சரிக்கை சங்கு ஒலித்ததும், அனைவரும் அருகிருந்த பதுங்குகுழிகளுக்குள் பாய, ரயில் பிரயாணிகளுக்கு அலறுவதற்கும் அவகாசம் இன்றிப் போனது - அடுத்த வினாடி பலருக்கும் சுவாசம் நின்றுபோனது - குண்டுகள் ரயில் மீது விழ பெருநாசம். அன்று உயிர் இழந்த நூற்றுக்கணக்கானோரில் ஒருவர் என் ஆசிரியையின் தந்தை . சில நூறடிகளுக்குள் குழியில் பதுங்கித் தப்பியவர்களில் ஒருவர் தாத்தா . ஆசிரியையிடம் பேசும் போதே இருவர் உணர்வுகளும் பின்னோக்கிப் பாய்கிறது. தாத்தாவைப் பார்த்து, தான் பார்க்க இயலாது போன தன் தந்தையை பார்த்தாய் கண்கலங்கிய தமிழ் ஆசிரியை.

அன்று இரவு, எத்தனையோ முறை தாத்தா கூறக் கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்டேன் தாத்தா கடல் கடந்த கதை, உற்றாரைப் பிரிந்து, உலகப் போர் நாட்களில் நிலையாமையை மட்டுமே நித்தமும் பார்த்த கதை. ஆங்கே தன்னிகர் இல்லாத் தலைவர் 'நேதாஜி' யின் INA படையில் இணைந்த கதை.

சாரங்கள் சதமல்ல எனத் தெரியும் தருணம், சாரம் அறுத்தும் எழுந்து நிற்கும் கோபுரங்களாய், மனிதர்கள் வேரறுந்த மண்ணில் வான் நோக்கி உயர்ந்த கதை. உற்றார் யாருமில்லை, பெற்ற மகன் காண வழி இல்லை, நாளை நான் உண்டா, நாளை என ஒன்றுண்டா - எதற்கும் பதில் இல்லை - எனும் போது வாழ்வை இரு விதமாய் கழிக்கலாம். இருப்பது ஒரு வாழ்க்கை, எப்போதும் அறுந்து விழக்கூடிய கத்தி தலை மேல்.

அஞ்சிக் கொண்டும், அஞ்சாதது போல் வாழ்வைக்  கட்டற்று மனம் போல் வாழ்வது ஒரு வகை. தோன்றிடின் பயனுற வாழ்வதும், வீழின் விதையென வீழ்வதும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நிகழும் நிகழ்வைக் கர்ம பூமியாய்க் கொண்டு களம் புகுவது இரண்டாம் வகை.

தர்மத்தைக் கையில் எடுத்துக் கர்ம பூமியில் களம்புக வாயில் அனைவருக்கும் திறந்தேதான் இருக்கிறது. சிறகு கொண்ட பறவை எல்லாம் வடதுருவம் வரை பறந்தா விடுகிறது!! மதிவேண்டும், மதிகிட்டும் விதி வேண்டும்.

அந்த களம் காண, காலம் தாத்தாவைக் கொண்டு சேர்த்த கதை:

தேடல் - மானுடனுக்குள் சுடர்விடும் அணையா நெருப்பு. கடல் கடந்து திரவியம் தேட இன்றொரு வாழ்வுமுறை IT. அன்றொரு வாழ்வுமுறை 'வட்டி'. நகரத்தார் எனும் பெருவணிகர் இல்லங்கள் நடத்திய கிழக்காசிய வாணிபம் - பர்மா, மலேயா, இலங்கை என பல தேசங்களில். நேர்மையும் காரியநேர்த்தியும், நிர்வாகத்திறனும் மிக்க இளைஞர்படையை கணக்குப் பிள்ளைகளாய் காரியமாற்ற இருகரம் நீட்டி இழுத்துக் கொண்டது இவ்வணிக வாழ்வு. வாழ்வை புதைகுழியில் ஆழ்த்தும் இன்றைய கந்து வட்டிக் கடைகள் அல்ல. வணிக நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நவீன வங்கிகளின் முந்தைய வடிவம் இந்த வட்டிக் கடை. நாடாறு மாதம் காடாறு மாதம் என உற்றாரை பெற்றாரை விட்டு வாழ்க்கை. இதன் வாயிலாய் தாய்மண்ணில் வருமானம் பெருக்கி வளம் கண்டது பலரது வாழ்வு.

19 வயதில் (1935) தன் மாமாவோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் சென்றார்கள் தாத்தா . கப்பல் வழி 4 நாள் பயணம் ரங்கூன் - அன்றைய பர்மாவின் தலை நகரம். பல குடும்பங்களின் பொருளாதாரத்தை உச்சியில் ஏற்றவும் அங்கிருந்து சறுக்கவும் செய்த தலைவிதி நகரம்.

முதல் திருமணம் 1938-ல்  தாத்தாவுக்கும் அவரது அத்தை மகள் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் நடந்தது.
நல்ல நிறமாயும், சின்னஞ்சிறு பெண் போல இருப்பார்களாம் - பிறர் சொல்லக் கேள்விதான். அதிகாலை காணும் அற்புதக் கனவு யாரோ அடித்து எழுப்பக் கலைவது போல விதியின் கருணையற்ற கரங்களில் கலைந்தது 5 மாதத்தில். முதற் புள்ளியிலேயே முற்றுப் புள்ளி கொண்டு நிறைவடைந்தது அந்தக் கவிதை.

மாமன் மகளை (சேது அப்பத்தாவை) மணந்தது அடுத்த வருடம் 1939. மிகச் சரியாக மூன்றே மாதங்களில் மருமகனை அழைத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள் பசளைத் தாத்தா.

இம்முறை சென்றது கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

அப்போது தெரியாது - யுத்தம் வருவதும், அடுத்த ஆறு வருடங்கள் கழியப் போவது யாருமற்ற வனவாசமும், உற்றார் உறவினரின் இடையறாத மனவாசமும் - இருப்பிடமும் தெரியாமல், இருப்புக்கும் இறப்புக்கும் இடையே நடந்த அஞ்ஞாதவாசமும் என்று.


சில தேதிகளும் குறிப்புகளும் - தாத்தாவின் குறிப்புகளில் இருந்து

28-ஜூன்-1935-ல் தன் மாமா ஸ்ரீமான் ராமநாத பிள்ளை அவர்களோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் பயணம் . கப்பல் வழி 4 நாள் பயணம், 1-ஜூலை-1935 ரங்கூன் .

1936-ல் மார்ச் மாதம் இந்தியா வருகை, டிசம்பர்  வரை (8 மாதம்) மதுரை வாசம்.

1936 டிசம்பர் ரங்கூன் சென்று 1938 மார்ச்-ல் அடுத்த வருகை. 

6-ஏப்ரல்-1938 தாத்தாவுக்கும் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் திருமணம்.
(என்னைப் பல வருடங்கள் கழித்து, பெங்களூர்-ல் உமா அத்தை வீட்டில் பார்த்து சிவசாமி தாத்தா சொன்ன முதல் வார்த்தை செல்லம்மா அப்பத்தா போல இருக்கிறேன் என்பது, வேறு யாரும் அவர்கள் குறித்து விரிவாக சொல்லிக் கேட்டதில்லை).

12-செப்டம்பர்-1938 செல்லம்மாள் அப்பத்தா மறைவு.

சேது அப்பத்தாவை மணந்தது அடுத்த வருடம் 14-டிசம்பர்-1939.

கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

முந்தைய பதிவு (13)

அடுத்த பதிவு (15)

Saturday, July 4, 2015

சற்குரு - தாத்தா - 13

சற்குரு - தாத்தா - 13


ஆறுமுகநேரி - ரகசியம் பேசத் தெரியாத பனைமரக் காடுகள். அதன் இடையே நடக்கும் போது திகில் பட இசையமைப்பாளராய் காற்று வேலை பார்க்கும். கால்கள் நடந்து உருவாக்கிய பாதைகள் வழியாக நடைபோட புதிய திசைகள் தினந்தோறும் உருவாகும். காக்கா முள் நிறைந்த தடத்தில், ஓணான் , நத்தை உடன் வரும் பாதைகளில் explorers ஆக நடைபயணம். இந்த V வடிவ கருவேலம் முள் alias காக்கா முள் மிகவும் கடினமானது, ஒருநாள் பனை ஓலை காத்தாடி செய்து அதைக் குத்திக் கொடுத்தார்கள் தாத்தா. பலநாள் என் நிலவறை பொக்கிஷங்களில் இருந்தது அது. ஆனால் அந்த முள் குத்தினால் மிகவும் கடுக்கும்-காலணி தாண்டி தாத்தாவின் கால் பதம் பார்த்தது ஒருநாள் - பின்னர் என் காலைப் பதம் பார்த்த அன்றே கடுக்கும் என்ற வார்த்தைக்குப் பொருள் புரிந்தது.


அப்படிப்பட்ட ஒருநாள்(நினைவுக் கோப்பில் எத்தனையோ ஒருநாள்-கள், ஒருநாள் போதுமா!!) காலை நடையில் மரங்களுக்கு ஊடே ஒரு குடிசை இருப்பதைப் பார்த்து அருகில் சென்று பார்க்க கரடுமரடாய் ஒரு மனிதர். இன்று அவ்விதம் நடக்க முடியுமா, அப்போது இன்றிருப்பது போன்ற பாதுகாப்பு குறித்த அச்சங்கள் இல்லையா எனத் தெரியவில்லை. தாத்தா உடனிருக்க நமக்குதான் அச்சமென்பதில்லையே. நாய்களுக்கு மட்டும்தான் எனக்கு பயம் - தாத்தா உடனிருந்தாலும்.. பயமென்றால் 'சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்' என்று பாரதியின் பா சொல்லி தைரியமாக நடைபோடச் சொல்வார்கள் தாத்தா. பின்னர் எத்தனையோ நாய்கள் - அச்சம் தரும் வேளைகளிலெல்லாம் இந்த வேலே துணை.


பதநீர் கள்ளாவதற்குள் அங்கே செல்வோம். அந்த பதநீர் இறக்குபவருடன் பேசி - அவர் தன் பெயர் 'சுதந்திரம்' என்றதும், 1947-ல் பிறந்தாயா எனத் தாத்தா கேட்க, சுதந்திரம் கிடைத்த அன்று பிறந்தேன் என்று கூற, தொடர்ந்து அவர் குடும்பம் குறித்தும் பேசி, அவர் சிலநாட்களில் தாத்தாவுக்கு மிக நெருக்கமாகிப் போனார்.

அந்த ஆறுமுகநேரியிலிருந்து 10 கிமீ தொலைவில் திருச்செந்தூர். வழியில் 64 வீதிகளில் 64 பள்ளிவாசல்கள் கொண்ட காயல்பட்டணம்; மிகப் பெரிய தேவாலயம் அமைந்த வீரபாண்டியபட்டணம், படித்த பள்ளியோ ஜைனப் பள்ளி - மினி இந்தியா - வடஇந்திய மாணவர்களும், 8ஆம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப்போட வேண்டிய காயல்பட்டிணத் தோழிகளும், வேறெங்கும் கிடைக்காத கலவையாய், ஒரு பள்ளி. 

பயம் வேண்டாம் - மீண்டும் பாடங்களுக்குள் செல்லவில்லை. ஒரு மிக முக்கியமான அத்தியாயத்திற்கு நுழைவதால் சிறு முகவுரை..


அங்கே வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய பாடம் எடுத்த தமிழாசிரியை, மிக உணர்ச்சிவயமாய் உலகப் போரை விவரித்ததை தாத்தாவிடம் நான் கூற, 'அவர்களிடம் கேட்டுப்பார் யாரேனும் அவர் வீட்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம்' என்றார்கள் தாத்தா.

மிகவும் கண்டிப்பான அந்த ஆசிரியையிடம் அதைக் கேட்க பயந்து நான் நாட்களை ஒத்திப் போட்டுக்கொண்டே போக, தாத்தா 'நான் வந்து பேசுகிறேன்' என்று சொல்ல, அதற்கு பயந்து அடுத்தநாளே பேசினேன். அந்த ஆசிரியையின் தந்தை 1940களில் மலேயாவில் (இன்றைய மலேசியா) இருந்திருக்கிறார். ஒரு மாலை வேளையில் தாத்தாவுக்கு அரை மைல் தொலைவில் இருந்திருக்கிறார் - இறந்திருக்கிறார்.


-ஆறுமுகநேரி தொடரும்/மலேயா தொடங்கும்-

முந்தைய பதிவு (12)


அடுத்த பதிவு (14)




Thursday, July 2, 2015

சற்குரு - தாத்தா - 12

சற்குரு - தாத்தா - 12


ஒரே அச்சில் எத்தனை உலகங்கள் சுழல்கின்றன. சிலருக்கு மிக மெதுவாகவும், சிலருக்கு தலை கிறுகிறுத்துப் போகும் வேகத்துடனும்! பெற்றோருக்கு வாழ்வின் சிகரப் புள்ளிதொடும் பகுதியில், கடமைகளும் கட்டாயங்களுமாய் நிர்தாட்சண்யமாய் சுழலும் உலகம்; அப்போது காலடி நிலம் போல நிச்சயத்தன்மையுடன், தாத்தா பாட்டி என முந்தைய தலைமுறை உடன் இருப்பது பிள்ளைகளுக்குப் பெரும் சுகம்.


உறக்கமின்றி, ஓய்வின்றி, விடுமுறைகளின்றி, தனிமனித இயந்திரமாய் ஒரு வங்கிக் கிளையைத் தன் அதீதத் திறமையாலும், அயராத உழைப்பாலும் அப்பா ஒருபுறம் ஓட்டிக்கொண்டிருக்க, தாத்தா அப்பத்தாவுடன் எனக்கு வேறு ஒரு உலகம். மேலும் அம்மா சேகரித்திருந்த வீட்டு நூலகத்தில் மூழ்கியதும் இந்த காலகட்டத்தில்தான்.


பெரியவர்களின் மன உளைச்சலும், இறுக்கங்களும், அதன் வெளிப்பாடுகள் வீட்டுச் சூழலில் சிதறும் தருணங்களில், ஏதோ அவர்கள் கோபமாய் நம் மீது பாய்ந்து விட்டதாய், சற்றும் கருணையின்றி தண்டித்துவிட்டதாய் எத்தனையோ குற்றச்சாட்டுகள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் மீது. எனக்கும் இருந்திருக்கிறது. அதிலும் சில பிணக்குகள் - திருப்பாவையில் ஆண்டாள் பாடியது போல் 'ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்- ஒருத்தி மகனாய்..' வளர்ந்த கண்ணனைப் போல் இருதாய்க்கும் தந்தையர்க்கும் இடையே, அவர்கள் வாரி வழங்கும் அன்புக்குப் பாத்திரமாய் இருக்கவும், அதில் ஏற்படும் சிறு சலசலப்புகளுக்கும் அஞ்சவோ மனம் சுளிக்கவோ கூடாது, அன்பு இருமடங்காய் கிடைப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்றும், இன்னும் எத்தனை எத்தனையோ விதங்களில் யார் பக்கமும் நூலிழை பிசகிவிடாது தாத்தா துலாக்கோல் ஏந்தி நடத்திச் சென்ற நாட்கள். Salute him for the patience and perseverance.


அந்த சூழ்நிலையை மிக இதமாய் விளக்கி, பல நேரத்துக் கோபங்கள் அளவுகடந்த நேசத்தின் வெளிப்பாடே, அன்பைக் குறித்தெழும் ஆற்றாமையே என்பதை விவரித்தது - பொய்யோ புனைவோ அல்ல; 11-12 வயது பேத்தியிடம் சக மனிதராய் மதித்து, இவை புரியும், மயக்கும் பிணக்கும் அகலும் என நம்பிக்கை வைத்து, பேசிட ஒரு மிகச் சிறந்த பக்குவம் வேண்டும். அன்றே சிறு மனதுக்கு அனைத்தும் விளங்கிவிடாது என்பது தாத்தாவுக்குத் தெரிந்தே இருக்கும். பின்னாளில் என்று தேவையோ அன்று இந்த விதை வேரூன்றி இருக்குமென நம்பி விதைத்த நடவு அது. தழைத்துமிருக்கிறது. ஆண்டிறுதித் தேர்வுக்குத் ஆயத்தம் செய்வதன்று குருவின் பணி; ஆயுள் காப்பீடு போல் மறைவுக்குப் பின்னும் காத்து நிற்கும் ஈடு.


இதை எழுதக் காரணம் - அன்பின் அடிப்படையிலையே சில சமயங்களில் நாம் பல வார்த்தைகளையும், பிறர் கூற்றில் நாம் ஏற்றும் தற்குறிப்பேற்ற அணியாய் - பிறர் கருத்தாய் நாம் நினைக்கும் கருத்துக்களையும் சுமத்தி, உறவென்னும் நூலிழையை சிக்கலாக்கி விடுவதுண்டு. அது போன்ற தருணங்களில் அன்பெனும் மாயக்கயிற்றால்தான் அனைத்தும் கட்டி இழுக்கப் படுகிறதென உணர்ந்து, இறுதியில் காண விழையும் நோக்கத்தின் மேல் நம்பிக்கை கொண்டு, அனைவரையும் அனைத்துச் செல்லும் பெருநோக்கு - தவறெனில் சுட்டிக் காட்டும் கடமை, எதுவரினும் ஒதுங்கிக்கொள்ளாமல், ஒத்திப்போடாமல் நேர் எதிர் நின்று ஏற்றுக்கொள்ளும் தீரம். இவற்றையும் பகிர்ந்து கொள்ளவே.


-ஆறுமுகநேரி தொடரும்-

முந்தைய பதிவு (11)


அடுத்த பதிவு (13)

Saturday, June 27, 2015

சற்குரு - தாத்தா - 11

சற்குரு - தாத்தா - 11

அடுத்த களம் - காற்றில் உப்பு மணக்கும் தூத்துக்குடி. ஆறாம் வகுப்பை அங்கே தொடர்வதென பேச்சு. அப்பா அஸ்ஸாம் வேண்டாமென்று, அலுவலகத்தில் மேல்மட்டத்தின் கீழ்மட்டங்கள் பொறுக்காமல், regional manager பதவியைத் துறந்து 30+ வருட அனுபவத்துடன் சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் PNB கிளை மேலாளராய்,  பதவியேற்பு. வீடு தூத்துக்குடியில். அந்த நாட்களில் அது ஒரு பங்களா. 26கிமீ அன்றாட பயணம் தூத்துக்குடியிலிருந்து - இன்று மிக எளிதாய்த் தோன்றும் இந்தத் தொலைவு, அன்று வெளியூர் பேருந்தில் ஒன்றரை மணி நேரப் பயணம். வீடுகளின் பின்புறம் private jacuzzi போல் தாமிரபரணி ஓடும் தோட்டங்கள் இருகரையிலும் கொண்ட ஆத்தூர் தாண்டியதும் வரும் இந்த சிற்றூர்.

மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி தாத்தாவுடன் பஸ் பயணம். எப்போது வரும் தூத்துக்குடி என அருப்புக்கோட்டை தாண்டியதுமே என் கேள்விகள். ஏறத்தாழ 100கிமீ இதே கேள்வியுடன் எப்படிப் போவது. எனவே 200மீட்டருக்கு ஒரு முறை வரும் 2, 4, 6, 8 என இலக்கமிட்ட கற்களைக் காட்டி இது ஏறக்குறைய ஒரு ஃபர்லாங்குக்கு ஒரு முறை வரும்.  இது ஒரு முறை முடிந்தால் 1 கிமீ என சொல்லிக் கொடுத்தார்கள். பின்னாளில் பழனி பாதயாத்திரையின் போது மட்டும் இந்தக் கற்களை யாரோ 1மைல்-க்கு ஒன்றாய் வைத்திருப்பதாய்த் தோன்றும். இன்றும் இதில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு ஒரு தியானமாய் பஸ்ஸில் பயணம் செய்வது சுகம்.

தூத்துக்குடி Holycross entrance exam - தாத்தா வழக்கமாய் கேட்பதினும் எளிய கேள்விகளே. Admission கிடைத்து பள்ளி தொடங்கி ஒரு வாரத்தில் அப்பா அலுவலகம் அருகே ஆறுமுகநேரிக்கே வீடு மாற்றம் என முடிவாகியது. எனவே மீண்டும் புதிய வீடு, புதிய பள்ளி, புதிய நண்பர்கள். ஆறாம் வகுப்பு - ஏழாவது பள்ளி.

உப்பளங்கள் - அலை அலையாய் மலை மலையாய் கண்ணுக்கெட்டியவரை. வெண்மை தோய் கரிப்பு மணிகளிடையே கரிய மனிதர்கள். ஊர் புதிது, சொல் புதிது. 'ஏல வயிறு பசிக்கு, அங்க என்ன செய்யுதே! ' என்று ஏச்சைப் போல் தொனிக்கும் தூத்துக்குடிப் பேச்சும், 'அவிய வரட்டும் பாத்துக்கிடுதேன், நீ இஞ்ச இரி' என்ற நாஞ்சில் தமிழுக்கும் கலப்பு மணம் அங்கு ஆறுமுகநேரி பகுதியில் உலவிய தமிழ். நேசமணி, கட்டபொம்மன் போக்குவரத்துக்கழகப் பயணங்கள் - தாத்தாவுடன்.

இங்கே தாத்தாவுடனான நேரங்கள் - இன்னும் உன்னதமாய், உரையாடல்கள் - இன்னும் தீவிரமாய். பின்னாளில் கேட்டாலும் கிடைக்கப் போவதில்லை என்ற உத்வேகம் போலும்.

கால்கள் புதையும் மணல்வெளி. நாற்புறத்திலும் நாளெல்லாம் சலசலக்கும் பனைமரங்கள். தாரங்கதாரா ஊழியர்கள் நிலம் வாங்கிக் கட்டிய பன்னிரண்டே வீடுகள் கொண்ட காலனி. இருபுறமும் ஒரு கிமீ செல்ல வேண்டும் - ஒரு தேங்காய்ச்சில் வாங்குவதற்கும் (அதற்குதான் அதிகம் சென்றிருக்கிறேன்) அம்மாவின் உழைப்பில் மணல் நான்கைந்து மாதங்களில் பசுமை போர்த்தியது.

மொட்டை மாடியில் அனுதினம் தியானம் . அலைபாயத் தொடங்கும் வயதின் மனது, கடிவாளம் சற்குரு கைகளில். விழிமூடி பார்வையைத் திறந்து வைக்கவும், பேச்சைக் குறைத்து மூச்சை அடக்கவும் பயிற்சி. சக்கரங்களும் அதன் விளக்கங்களும், இரு பெரும் நாடிகள் குறித்தும்,  ஓஜஸ் குறித்தும், அனுதினம், அன்றாடம், அருகிருந்த நாட்களில் எல்லாம் பாடம், தீட்சை. கூர் தீட்டப்படும் போது அம்புக்குத் தெரிவதில்லை அதன் இலக்கு. பின்னாளில் வாழ்க்கை நமைப் பின்னோக்கி இழுக்கும் தருணங்களில் முன்னோக்கி சீறி எழும் விசை உந்தித் தள்ள,  கூர்முனை தப்பாது சென்றடையும் அதன் இலக்கு. அன்று இடப்பட்ட வீரியமான விதைகள் இன்றளவும் குருவின் அருள் மழை படும் தோறும் துளிர்த்துக் கொண்டே இருக்கின்றன. புரியா வயதில் கிடைக்கும் புதையலைத் தொலைத்து விடாதிருக்க பல மனப் பயிற்சிகள். To register, recall and recollect at appropriate time. மனித மனதிற்கு அந்தத் திறன் உண்டு; அதனை மேம்படுத்திக் கொள்வதும், கண்டு கொள்ளாது இழப்பதும் நம் கைகளில். ஒரு தலை சிறந்த வீரனுக்கு, 'உனக்குக் கிடைத்த அதி உன்னதமான ஞானம் தேவையான தருணத்தில் மறந்து போகும்' என்ற குரு சாபத்தினும் வலிய பிரம்மாஸ்திரம் ஏதுமில்லை கர்ணனை வீழ்த்தியது.

குருவருள் இருப்பின் திருவருள் சேரும்.

-ஆறுமுகநேரி தொடரும்-

முந்தைய பதிவு (10)

அடுத்த பதிவு (12)


Thursday, June 25, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர் - 4

அமுதுக்கும் தமிழென்று பேர் - 4

முத்தமிழின் ஓர் இயலாய் திரையிசைத் தமிழும் இடம்பெறும் தகுதியை சில கவிஞர்கள் தம் கவித்திறத்தால் ஏற்படுத்தினார்கள் (past tense intended with some sense)

அப்பாவின் பழைய recordல் 'சாரசம் வசீகரக் கண்கள் சீர்தரும்' கேட்டுவிட்டு அண்ணன் கேட்ட கேள்வி - "அப்பா இது என்ன language?". அன்றைய தமிழுக்கே இந்த கதி.

இன்று வரும் பாடல்களில் பலவும் அஜீரணத்தை ஏற்படுத்தி விடுகின்றன. (அதாரு அதாரு உதாரு உதாரு என்ற பாடலை எதேச்சையாய் கேட்ட அன்று கண்ணதாசனும் பட்டுக்கோட்டையாரும் பாடிய அதே தமிழுக்காய் சிறிது கண்ணீர் சிந்தினேன்) அதைப் பற்றியும் தனியே அரம் பாடலாம் என்றிருக்கிறேன். அரம் பாடுதல் - சங்கத் தமிழில் இதுவும் ஒருவகைப்பாடல்,பாடியே பாட்டுடைத் தலைவனையோ/பொருளையோ அழிப்பது, இதுபற்றிய சுவையான செய்திகள் வேறொரு நாள் பேசலாம்.

இன்றைய பாடல்களில் நல்ல தமிழ் தப்பிப்பிழைத்தாலும் தமிழறியா நாக்குகளில் சிதைந்து வெளிவருவதை 'பர்ருவாயில்லை' என்று கேட்க எனக்குப் பக்குவம் போதவில்லை. அதனால் எடுத்த முடிவு - பாடல் வரிகள் மிக நன்றாக இருக்கிறதென நம்பத் தகுந்த வட்டாரங்கள் சூடம் ஏற்றி சத்தியம் செய்தால் அன்றி நான் பாடல்கள் கேட்பதில்லை.

காவியத்தமிழை மக்களுக்கு எளிமையாய் எடுத்துச் சென்ற சிறந்த ஊடகம் திரைப்படம். அவற்றில் காவியநயத்தை எளிமையாய் வடித்துத் தந்த சில பாடல்களை இன்று பார்க்கலாம்.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மறைவுக்குப் பின் பாரிமகளிரின் கையறு நிலை குறித்த சங்கப்பாடல்:

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே"


Literalஆக மொழி பெயர்த்தால்
"அந்த நாள் அந்த வெண்ணிலா...
எங்கள் தந்தையும் இருந்தார் எங்கள் குன்றும் இருந்தது
இந்த நாள் இந்த வெண்ணிலா...
பகைவர் எங்கள் குன்றைக் கைப்பற்றினர்; எங்கள் தந்தையும் இல்லை...."

இதனை "அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகில்" என்று காதலின் குரலாய் குழைத்துக் கொடுத்தார் கவியரசர்.

பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல், செல்போனில் காதல் என காதல் தோல்வி கதாநாயகன் முரளி சில காலம் தமிழ் சினிமாவை வதைத்து எடுத்ததுண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நாவுக்கரசர் கூறும் பக்தியாய்க் கணிந்த காதலைப் பாருங்கள்:

"முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

தலைவி தலைவனைக் குறித்து அறியத் தொடங்கி, மெல்ல மெல்லத் தன்வயம், சுயம் இழக்கிறாள். தலைவன் இங்கு சிவன்(சாட்ஷாத் சிவபெருமான்தான்) சங்க இலக்கியத்தில் பெயர் சுட்டுதல் மரபன்று - hero, heroine என்றால் தலைவன், தலைவிதான்.

இந்தப் பாடலை மிகப் பொருத்தமாக எடுத்தாண்டது கல்கி - நவீன தமிழ்க் காவியங்களில் ஒன்றாகிய 'சிவகாமியின் சபதத்தை', இந்த தேவாரப் பாடலுடன் 'தலைவன் தாள்' சரணடைந்து முடித்திருப்பார்.

இதனைத் திரையிசையில்

"அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்" - என்று மீண்டும் கவியரசர் (மீண்டும் MGR!!)

திருக்குறளில் கவிதையாய் ஒரு குறள் வரும் -
"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்."

கவியரசர் வரிகளில் இதை அழகாய்,
"உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே" என்று PBS குரலில்.. இனிமை.

மற்றுமொரு பாடல் - கல்லூரித் தமிழ்ப் பாடத்தில் படித்த பாடல்
"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடங்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே" - மீண்டும் நாவுக்கரசர் தேவாரம் - கவியரசர் வரிகளில் சாரமாய் வடித்து,
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா"

கண்ணதாசன் பல பாடல்களைக் காப்பியடித்தார் என்று யாரேனும் அவசரமாய் முடிவெடுத்துவிடும் முன், இவையெல்லாம் காப்பியங்களை பாமரருக்கும் எடுத்துச் சொல்லும் முயற்சியாய் அவர் எடுத்தியம்பிய ஓரிரு வரிகள் மட்டுமே. அவர் எழுதிய காவியங்கள் கணக்கில்லாதது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் இந்தப் பாடலையே எடுத்துக் கொள்ளலாம் - இப்பாடலின் சரணத்திலேயே இரு வரிகள்-
"உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்கண்ணா-இதை
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம்விலகும் கண்ணா".

நாம் பலரும் அறிந்திருக்கும் கர்ணன் படப்பாடல்கள் - ஒவ்வொன்றும் இலக்கியத் தரம் வாய்ந்ததே.
"மணநாள் மன்னன் உனைக்கண்டு மதிமயங்குகிறானே", "வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன்" இதுபோல ஒவ்வொரு பாடலிலும் கவியரசர் அதில் எடுத்தாண்ட சொல்லாட்சியை வியக்காமல் தமிழை ரசிக்க முடியாது.

இதில் வரும் "வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்
வைப்பவன் கர்ண வீரன்" பைபிள் மத்தேயு அதிகாரம் எனில் என்னே அவர் வீச்சு.

மத்தேயு - நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது

தர்மம் குறித்து இதனினும் தெளிவாய் சொல்லவும் கூடுமோ!!

இன்னும் நூற்றுக்கணக்கான பாடல்கள் சொல்லலாம் கவியரசர் பெருமை சொல்ல. எனின் இந்த இணையிலாப் பாடலோடு இந்தப் பதிவை முடிக்கிறேன். மேலும் பல பாடல்கள், மேலும் பல கவிஞர்களோடு தொடர்வோம்.

"ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!"


Thursday, June 18, 2015

சற்குரு - தாத்தா - 9

சற்குரு - தாத்தா - 9



கற்றதும் பெற்றதும் ஆயிரம் உண்டுகாண்-நீ

உற்றதும் உணர்ந்ததும் உணர்ந்திடச் செய்ததும்

சுற்றமது உயர்ந்திட சுப்பன்வழி வந்ததும்

பெற்றவரின் அருளை - நின்கருணை நிதியெனவே

உற்றாரும் உடையாரும் உய்த்திட ஈந்ததும்

செற்றம் செருக்கடக்க படைமுனையில் நின்றதும்

குற்றமற குருவாகி குலம்காத்து நின்றதும் 

கற்றவரின் கருத்தினிலே கருவாகிக் கலந்ததும்

மற்றவரும் போற்றிடவே வாழ்வாங்கு வாழ்ந்ததும்

பற்றதுவும் நீங்கிவிட மாயையாம் பவவினைகள்

அற்றதும் அகன்றதும் அரனடியை சேர்ந்ததும்

கற்றாவின் மனம்போலக் கசிந்துருகி யாம் மனத்-துணுக்

குற்றதும், "துயர்வேண்டாம்! உடனிருக்கும் 

வெற்றிவேல்! துணையிருக்கும் சக்திவேல்!!

தொற்றிவரும் துயரனைத்தும் விட்டகலும் வேல்முனையில்! அவனைப்

பற்றிடுக பாடிடுக பகல்விடியும் இருள்முடியும்!!"என

முற்றிலும் பயம்விலக்கி எமையாளும்

பெற்றவனே உற்றவனே கொற்றவனே 

சிற்றறிவுக்கெட்டியவரை சிறுவிரலால் எழுதுகிறோம் - சீரியநின் சிறப்பை...

முந்தைய பதிவு (8)

அடுத்த பதிவு (10)