Monday, November 30, 2015

சற்குரு - தாத்தா - 18

உயிருக்கு உத்தரவாதமில்லை என்று ஊதிற்று அபாய சங்கு. பணத்தை சரிபார்த்துக் கொண்டிருந்த தாத்தாவும் நண்பரும், வங்கியில் இருந்த அனைவருடன் பதட்டமாய் வெளியேறினர். ஓங்கி அலறிக் கொண்டே இருந்தது சங்கு. தன் உயிரைக் காக்க உடல் பதறி ஓடும் போதும் உள்ளம் பதறுவது உயிரினும் மேலான உறவுகளைக் காணாது போய்விடுவோமோ என்றுதானே. தாத்தா அவசரமாய் இறங்கும்போது கவனம் தவறியதில் படிக்கட்டுகளில் தடுமாறி அத்தனை படிகளிலும் சறுக்கி தரைசேர்ந்து, பாய்ந்து கண்ணுக்குத் தெரிந்த முதல் குழியில் இறங்கிய போது இதயம் காதுகளில் படபடத்தது. மற்ற நேரமாயிருப்பின் படியில் விழுந்த வலி தெரியும். மரணம் கண் முன் ஒத்திகை காட்டும் போது உடல் நினைவில் இருப்பதில்லை.

தலைக்கு மேல் சீழ்கையடித்து பறந்தன சில விமானங்கள். யுகமெனக் கழிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, அபாயம் நீங்கியதென மணி ஒலித்தது. போரின் தீவிரம் நிதர்சனமாய் உணர முடிந்தது. 

பாம்பின் வாய் பிழைத்து பாழ்நரகில் சிக்கியது போல, ஆங்கிலேயர் பிடியில் இருந்த மலேயாவை முற்றுகையிடத் தொடங்கியிருந்தது ஜப்பான். 'ஆசியா ஆசியர்களுக்கே' என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்த முற்றுகை மேலும் கொடுமைகளையே விளைவிக்கப் போகிறது என யாருக்கும் தெரியவில்லை அப்போது..

அவசரமாய் காரில் ஏறிப் பறக்கத் தொடங்கினர் இருவரும் பினாங் நோக்கி. ஆறு மணி நேரத்துக்கும் மேலான பயணம் செல்ல வேண்டும் பினாங் சென்று சேர்வதற்கு. போர் தொடங்கிவிட்ட சூழலில் நெடுஞ்சாலையில் வேறு வாகனங்கள் ஏதுமில்லை. அடர்ந்த மழைக்காடுகள் நிறைந்த பாதையில் பறந்தது கார்.

எதிர்திசையிலிருந்து வந்தது ஒரு போர் வாகனம். ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக, நான்கு நாற்பதாக, சாரி சாரியாக எதிர்த்திசையில் வரத்தொடங்கின இராணுவ வாகனங்கள். கண்ணுக்கு எட்டிய வரை முன்னும் பின்னும் வாகனங்கள் இல்லை தாத்தாவின் கார் பயணித்த திசையில், பினாங்கை நோக்கி...

முந்தைய பதிவு (17)


அடுத்த பதிவு (19)

Tuesday, October 27, 2015

சற்குரு - தாத்தா - 17

சற்குரு - தாத்தா - 17

இரண்டாம் உலகப் போர் முழுத்தீவிரமடைந்தது.

1941 - 1946 இந்தக் காலகட்டத்தை மூன்று தளங்களில் பார்க்கவேண்டியிருக்கிறது.

1. உலகமெங்கும் பரவிக்கொண்டிருந்த, உயிருக்கு உத்தரவாதமற்ற போர்ச்சூழல், அதில் பதைபதைப்புடன் வாழ்வு, இதற்கிடையே மகாத்மா காந்தி, நேதாஜி போன்ற தலைவர்களின் தலைமையில் விடுதலை வேட்கை கொண்டு சுகவாழ்வைத் துறந்து விடுதலைப் போராட்டக் களமிறங்கிய ஆயிரமாயிரம் இளைஞர் கூட்டம் என்ற உலகளாவிய சமூகச் சூழல்.

2. உற்றார் உறவினரைப் பிரிந்து, இறப்புக்கும் இருப்புக்கும் இடையில் இடையறாது தவித்து, இருள் கவிந்திருக்கும் நிகழ்காலம் எதிர்காலத்தையும் விழுங்கிவிடுமோ? உயிர் தப்பி ஊர்சேர வழிவகை ஏதும் உண்டா? பிழைத்திருக்கும் நாள்வரை பிழையாதிருப்பேனா? என வினாக்களே வினாடிகளாக தவித்திருந்த புலம்பெயர் மனிதர்களின் வாழ்வு.

3. பெற்ற தாய் தந்தையும், உடன்பிறந்தாரும், கட்டிய மனைவியும், பெற்ற மக்களும் ஒவ்வொரு நாள் விடியலிலும் 'இன்று ஏதேனும் சேதி வாராதா நலமாயிருக்கிறார் என்று, இன்ன தேதியில் வருகிறேன் என்று' என எதிர்பார்த்து, மேற்கே கதிரவனோடு எதிர்பார்ப்பும் மறைய, நாட்களை நரகமெனக் கழித்த உறவுகளின் நிலை.

அனைத்தையும் சுமந்து கொண்டு புவி நித்தம் தன் பயணம் மேற்கொண்டுதானிருந்தது விடியலை நோக்கி..

1941-மலேயா அதிதீவிரமான போர்த்தாக்குதலுக்கு உள்ளாயிற்று. அதுவரை ஆங்கிலேயர் வசமிருந்த மலேயா மீது ஜப்பானியர் வான்வழித்தாக்குதல் தொடங்கினர்.

மலேயாவின் போர் வரலாற்றில் முக்கியமான தினங்கள் - டிசம்பர் 1941. ஜப்பானியப் படை மலேயாவைக் கைப்பற்றத் தொடங்கியது. கிழக்கு கடற்கரையில் கோட்டாபாருவில்(kota bahru) தொடங்கிய ஜப்பானியர் ஊடுருவல் 11-டிசம்பர் பினாங்கைத் தொட முயற்சித்தது.

நித்தமும் அநித்தியமாகிக் கொண்டிருந்த சூழலிலும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அன்றாடங்களில் புதிதாய் சேர்ந்திருந்த வாடிக்கை - மரணத்தை எண்ணி பதைத்தவாறு பதுங்கு குழிகளில் உயிரைத் தஞ்சமடைவது.

அந்த டிசம்பர் 1941-ல் 25வயது நிரம்பிய தாத்தாவும்(தாத்தா என்ற சொல் ஏற்படுத்தும் வயதான அகத்தோற்றத்தை மாற்றிக் கொள்ளவே வயது குறிப்பிடுகிறேன் - 25 வயதே ஆன அய்யாத்துரை) அவரது நண்பரும் பினாங்கிலிருந்து கோலாலம்பூர் சார்ட்டர்ட் வங்கி சென்றிருந்தார்கள். கடைப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு வங்கியில் நின்று கொண்டிருந்தார்கள். அபாய சங்கு ஊதிற்று.



முந்தைய பதிவு (16)

அடுத்த பதிவு (18)

Monday, October 5, 2015

ஏகாந்தம் ஏதுக்கடி


தன்னை சுமப்பதே கசக்கும் தனிமை - சிறியது;
தனைத்தான்அறியத் தளம்தந்து தன்னை மறக்கச் செய்யும்
ஏகாந்தம் - மிகப் பெரியது.

வெற்றிடத்தில் நாம் மட்டும் தனித்துக் கிடப்பதாய் சொல்லும் தனிமை. எல்லைகளற்று நாம் விரிந்து கிடப்பதாய் சொல்லும் ஏகாந்தம்.

நம்மை உண்டு, மனதை வதைத்து, நல்லியல்புகளை, நம்பிக்கைகளை, கரையான் போல மெல்ல அரிக்கும் தனிமை. அன்றாட அழுத்தங்களைக் கரைத்து நேர்மறை எண்ணங்களில், ஈடுபாடுகளில், சுயத்தை மறக்கும் ஏகாந்தம்.

குரல் இழந்த குருட்டுப் பறவை தனிமை. விட்டு விடுதலையாகி நிற்கும் மோனம் ஏகாந்தம். இருப்பினும் ஏகாந்த வரம் வாங்க தனிமையில்தான் தவம் வேண்டும்.
வரங்களே சாபங்கள் ஆகும் என்றால் இங்கே தவங்கள் எதற்காக என்றொரு கவிதை வரி உண்டு. ஏகாந்தம் இனிது -  துய்க்கத் தெரிந்து விட்டால்; தனிமையில் மனம் தன்னோடு சிநேகமாய் இருக்கத் தெரிந்துவிட்டால். இல்லையெனில் தனிமை பெரும் சாபம்.

'Go cashless' இந்த விளம்பர வாசகம் ஒவ்வொரு முறையும் முகத்தில் புன்னகை பூக்கச் செய்யும்.
Cashless state - positiveஆ negativeஆ? பணம் இல்லாதவனின் நிலை பொருளாதார வறுமை. பணத்தைப் பையில் சுமப்பதே ஒரு சுமையாகும் காலம் பொருளாதார செழுமை. செரிமானம் தாண்டிய செழுமை. மாதந்தோறும் கடன் வாங்க நேரிடும் மக்களுக்கு - மரக்கோடரி தொலைத்த விறகுவெட்டிக்குத் தங்க கோடாரி தந்து ஆசைகாட்டும் தேவதை போல - இரு முனைகளை இணைக்க முயலும் நடுத்தர வர்க்கத்திற்கு இரண்டு லட்சம் வரை கடன் தந்து ஆசை காட்டும் credit cardஜக் குறித்து சொல்லவில்லை. 'You need not carry cash' - என்ற marketing வாசகத்தைக் குறித்து சொல்கிறேன்.

அதேபோல ஆன்மாவின் வறுமை தனிமை. அதன் செழுமையே ஏகாந்தம். You can go 'I'less in solitude.

தனிமையிலிருந்து ஏகாந்தம் நோக்கிய பயணம் மேற்கொள்ள நம்  மனமென்னும் இருட்டறையை அன்பின் வெளிச்சத்திற்கும், அறிதலின் காற்றோட்டத்திற்கும் திறந்து வைக்க வேண்டும். அறிதல், கற்றல் - மனதை தூசு தட்டும். அறிதல் எதுவாயினும் இருக்கலாம். அறிவும் அதனால் வரும் சுகமும் போதை. நம் ஆர்வத்தைப் பொறுத்து கற்றலின் களம் இசையாகவோ இறையாகவோ ஏன் சுயமாகவோ கூட இருக்கலாம். கற்றலும் மறந்து, கற்றதோடு நாம் கரைய ஏகாந்தம் மட்டும் நின்றிருக்கும். 

இனிதாகும் எதுவும் எளிதல்ல - எனினும் கைவர அரிதுமல்ல.

"இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே" - ஔவையார்

Saturday, September 26, 2015

சற்குரு - தாத்தா - 16

சற்குரு - தாத்தா - 16

பிஞ்சு விரல் பதித்த கடிதம்கண்டு, அடக்கி வைத்திருந்த நேசம் வெடித்துக் கிளம்ப, 'இன்னைக்கு கப்பல் ஒன்று கிளம்புது சென்னைக்கு, இன்னைக்கே கிளம்புறேன்' என்று தாத்தா செட்டியாரிடம் அனுமதி கேட்க, 'நிலவரம் சரியில்லை.. யுத்தம் ஆரம்பிச்சுடுச்சு. இந்த சூழ்நிலைல கப்பல் போக்குவரத்து பாதுகாப்பானதல்ல' என்று அவர் மறுத்துவிட்டார். துக்கம், கோபம், ஆதங்கம், ஏக்கம் மாற்றி மாற்றி பந்தாட, உணர்ச்சிக் கொந்தளிப்பில் கண்ணுறக்கம் தொலைந்த இரவு. 'செட்டியார் ஒத்துக்கொண்டிருந்தால் இந்நேரம் கப்பல் ஏறியிருக்கலாம், இந்நேரம் தாய்மண் நோக்கி பயணம் தொடங்கியிருக்கலாம். பத்துநாட்களில் பெற்ற இளம் மகவு முகம் பார்த்திருக்கலாம். " - அனைத்தையும் கெடுத்து விட்ட முதலாளி மேல் அளவு கடந்த கோபம். உடன் பணிபுரிந்த தோழர்கள் சமாதானப் படுத்தினார்கள்- 'அடுத்த கப்பல்ல போயிடலாம் அண்ணே, கலங்காதீங்க'  என்று. 'ஆமாம்..இது என்ன வாழ்வு, அடுத்த கப்பலில் ஏறிவிட வேண்டும், யார் தடுத்தாலும் சரி..' புயலில் கடையுண்ட கடலாய் மனது. அழுதழுது கண்களில் சிவப்பேற விடிந்தது காலை.

மதிய வேளையில் வந்ததோர் சேதி. தாத்தா பயணம் செய்வதாயிருந்த கப்பல் மீது நடுக்கடலில் குண்டுவீச்சு. கப்பல் மூழ்கி பயணம் செய்த அனைவரும் மரணம். செய்தி கேட்டு வெகுநேரம் உடலும் உள்ளமும் நடுங்கிக் கொண்டிருந்தது. வெற்று செய்தியாய் காதில் விழுந்துகொண்டிருந்த யுத்தம், அண்டை வீட்டான் போல் அருகில் வந்துவிட்டது என்பதை உணர்ந்தனர் அனைவரும். தெரிந்தவர்கள் சிலரும் பயணப்பட்டிருந்தனர் அந்தக் கப்பலில். அந்த துக்கமும், தான் உயிர் பிழைத்து இன்னும் இருப்பதன் சத்தியமும் நெஞ்சம் உணர, பயணத்தைத் தடுத்தவன் தகப்பனாய்த் தெரிந்தான்.

இடையூறென்பது எப்போதும் கெடுதல் அல்ல - நமக்கு விளங்காத பெரிய ஆடுகளத்தில் நமை பேரிடரிலிருந்து காப்பதற்கும் தடங்கல்கள் நேரிடலாம், என்பதற்கு தாத்தா இதை அடிக்கடி உதாரணமாக சொல்வார்கள்.

அத்தோடு கப்பல் தொடர்பும் நின்று போனது.

முந்தைய பதிவு (15)

அடுத்த பதிவு (17)


Thursday, September 3, 2015

திக் விஜயம்

எமிரேட்ஸ் உபயத்தில் சும்மா கிடைத்தது என்பதால் சுமார் 10000km அதிகமாய் பயணித்து உலகை முக்காற் பிரதட்சணம் செய்திருக்கிறேன் SFO எனும் San Franciscoவுக்கு.

சந்திரபாபு ஒரு பாட்டில் "இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கிருந்தே தாண்டிடுவேன்" என்று நாற்காலியிலிருந்து ஒரே தாண்டு தாண்டுவார். அதுபோல சிங்கப்பூரிலிருந்து நேரே ஜப்பான் தொட்டுத் தாண்டவேண்டிய பசிபிக் மகாசமுத்திரம் - அக்கரையில் அக்கறையான தம்பிவீடு. உலகை பிரதட்சணம் பண்ணி 36மணி நேரம் தாண்டி SFO வீடு தொட தலை கிறுகிறுத்தது நேரம்காலம் புரியாமல். முக்கால் சுற்றுக்கே சுற்றுதே தலை- உலகையே முழுதாய் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தால், பழத்தை அண்ணனுக்கு கொடுத்த குடும்பத்தார் மீது மயிலோனுக்கு வந்த கோபம் நன்கு புரிகிறது. 

நேற்றைய என்னுடைய ஒரு மதியப்பொழுது சிங்கப்பூர்/இந்தியாவின் ஒரு முழு நாளும், அமெரிக்காவின் ஒரு முழு இரவும் ஆகும்.  பூகோளம்(Geography) மீட்டிக் கொண்டே பூலோகம் முக்காற்பங்கு கடக்க
பிரம்மனின் ஒரு பகல் ஆயிரம் யுகம்
என்பது புரிவது போல இருந்தது.
பூமியின் சுழற்சிக்கு எதிர்திக்கில் பயணிக்க நேரம் உறைந்து போய்விட்டது போலும். இந்த செப்டம்பர் 2ஆம் தேதி 36 மணி நேரங்களால் ஆனது; 20+ மணி நேரமாய் பகல், அதிலும் துபாயிலிருந்து விமானம் கடந்த பாதை நெடுகிலும் உள்ளூர் நேரம் மதியம் 11.30 - 12.30மணியளவிலேயே ஏறக்குறைய 8 மணிநேரமிருந்தது. பின்னர் சட்டைக்கு மார்பு அளவெடுப்பது போல அமெரிக்காவின் அகலமான பகுதியில் கிழக்கிலிருந்து-மேற்கு கடற்கரைக்கு பயணம். வழியெங்கும் மாலை நேரம் ஆறுமணி நேரம்!!
சில ஆயிரம் அடிகள் உயரத்திலேயே நேரக்கணக்கு இவ்விதம் இருக்க, பிரம்மலோகத்தில் கடிகாரம் சற்று தாமதாய்த்தான் சுழலும்..

பூகோள அறிவை நன்கு சோதித்தது விமானம் கடந்த பாதை. துபாயிலிருந்து  இரான்-துருக்கி-கருங்கடல்-பல்கேரியா- ருமேனியா-ஹங்கேரி-போலான்ட்-ஸ்வீடன்-நார்வே-சமுத்திரம்-போஸ்டன். இவை அனைத்துக்கும் தலைநகரம் என்ன - நாணயம் என்ன - ஆயிரம் கேள்விகள்.. விமானமே கவலையின்றி இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்க, என்னுள் கேள்விகள்.. கூகுள் கிட்டாத கையறு நிலையில் பல பெயர் தெரியாத மலைகளையும் ஆறுகளையும் கேமராவில் புகைப்படமெடுத்துத் தாகம் தீர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. 

துபாயிலிருந்து 3-4 மணிநேரம் பெரும்பாலை நிலம் - பார்த்தால் மட்டுமே புரிகிறது இயற்கையின் இந்த முகம். முடிவே இல்லாத துயர் போன்ற வறண்ட மலைமடிப்புகள்; நம்பிக்கைகளைத் தளரச் செய்யும் நீண்ட இரவு போன்ற மலைத்தொடர்கள். வரலாறு காட்டும் பாலைநில மனிதர்களை புரிந்து கொள்ள இந்த முகத்தின் தரிசனம் அவசியம். இங்கே வாழ்வை வாழ கள்ளியின் வெளிப்புறம் போல் ஒட்டகத்தின் உட்புறம் போல் இயற்கை customize செய்த வரங்கள் தேவை. 



'வால்காவிலிருந்து கங்கை வரை' சொல்லும் ஆதி மனிதன் உலவியதாய் கருதப்படும் டைக்ரிஸ் சற்று தெற்கே வரைபடத்தில். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு ஜீனில் வாழும் பாட்டன் பாட்டி வாழ்ந்திருக்கக் கூடும் இப்பகுதிகளில்..

இரான் துருக்கி எல்லையில் ஊர்மியா என்றொரு அழகிய ஏரி. இறைவன் ஓவிய ரூபன் - என்னென்ன வண்ணங்கள் குழைத்து தீட்டுகிறான். பின்னர் துருக்கியில் நுழைந்து  வான் என்றொரு மாபெரும் ஏரி - இது பாலை நெற்றியில் நீல வண்ணத் திலகம் போலிருந்தது. மேலும் வடமேற்காய் பறந்து கருங்கடலின் தென்கரையோரம் பறந்து சற்றே கருங்கடல் மீது பறந்து பல்கேரியாவுள் நுழைந்தது. பின்னர்தான்  ருமேனியா-ஹங்கேரி-போலாண்ட்-ஸ்வீடன்-நார்வே-சமுத்திரம்-போஸ்டன். 


இந்தக் கருங்கடல் நீல வண்ணக்கடல், என்னே ஒரு ஏமாற்றம்.


திரையில் ஓடிய வரைபடத்தின் ஊர்களும் என்றோ பயின்ற geographyயும் சற்றே கைகொடுத்தது. நாடுகளின் அரசியல் கோடுகள் மேலிருந்து நோக்கத் தெரிவதில்லை. அனுமானம்தானே எல்லைகள் அனைத்தும்.

SFO இறங்கி தம்பியின் முகம் பார்தத்ததும், உறங்காமல் வரவேற்கக் காத்திருக்க முயன்று உறங்கிய மருமகனையும், அத்தனை வேலைப்பளுவையும் புன்னகையோடு செய்யும் விஜியையும் பார்த்ததும் மறந்தது பயணத்தின் களைப்பு.

Thursday, August 20, 2015

சற்குரு - தாத்தா - 15

சற்குரு - தாத்தா - 15

"பேருந்தில் தனியாகப் பயணம் செய்யப் பழகிக் கொள்" என ஒருமுறை தாத்தா என்னிடம் கூற நான் , - "நீங்கள் தனியாகப்  பேருந்துப் பயணம் செய்தது எப்போது தாத்தா?" எனக் கேட்டதற்கு, "19 வயதில் தனியாகக் கப்பல் பிரயாணம் செய்திருக்கிறேன்" என்றார்கள் தாத்தா. முதல்முறை தனது மாமாவுடன் சென்றார்கள்; இரண்டாவது முறை சென்றபோது தனியாகக் கப்பலில் பிரயாணம்.

முதல் முறை 1935 ஜூன் மாதம் ரங்கூன் சென்ற தாத்தா, தாயகம் திரும்பிய போது தாங்கொணாத பல இடிகளை சந்தித்திருந்தது வீடு.

அன்புத் தங்கையை மணம் புரிந்த தாய் மாமா, உடன் வளர்ந்து தோழமையும் பாசமுமாகத் திகழ்ந்த மாமா இளம் வயதில் (22 வயது) மறைந்தார். மலர்ந்து மணம் வீச இதழ் விரித்த இள மொட்டு கருகினாற் போன்ற பேரிழப்பு. பதினாறு வயதுத் தங்கை, 40 நாட்கள் நிரம்பிய கைக்குழந்தையுடன் கைம்பெண்ணாக, கண்ணீராக...

மரணம் தரும் இழப்பு - வலி; உற்ற உறவின் மரணம் - ஆறாத ரணம்; உறவுகளைப் பிரிந்து தொலைதூரத்தில் இருக்கும் காலங்களில் வரும் துயரச் செய்தி, தனிமை எனும் பூதக்கண்ணாடி வழி நூறாயிரமென உருவெடுக்கும். மூச்சென உள்ளே வியாபிக்கும். அந்த வலியை மனதில் சுமந்து கொண்டு தனிமையில் இருக்கும் காலமும், மேற்கொள்ளும் பயணமும்  சிலுவை சுமந்து முள்முடி தாங்கிய  பயணமாகத்தான் இருக்கும், இருந்திருக்கும்.

இந்தத் தகவல் மட்டுமே ரங்கூன் வரை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து 21 நாட்களுக்குள் மறைந்த அருமைத் தம்பி ஆறுமுகம் குறித்தும், அன்புத் தங்கை சொர்ணவல்லி குறித்தும் யாரும் செய்தி சொல்லவில்லை.  புது மணம் முடித்த தம்பதியராய்ப்  பார்த்த தங்கை சௌந்தரத்தை எவ்விதம் இக்கோலத்தில் பார்ப்பது, என்ன ஆறுதல் சொல்வது எனத் தவித்து வீடு சேர்ந்தால், மேலும் இரு மறைவுகளும் சேர்த்து சூறையாடி இருந்தது வீட்டின் மகிழ்ச்சியை. மூத்த மருமகனையும், ஒரு மகளையும் ஒரு மகனையும் இழந்திருந்த வீடு வேறு எப்படி இருக்க முடியும். அடி மேல் அடி வாங்கி கலங்கி நின்றது குடி .

எத்தனை சோதனை வரினும் தளராத இறை நம்பிக்கையும், மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் காட்டிய அன்பும் ஆறுதலுமே ஆணி வேராய்த் தாங்கி இருந்து தழைக்கச் செய்திருக்கிறது முருகன் இல்லத்தை.

முதல் பயணம்; முதல் வேலை;  முதல் சம்பளம்; தம்பி தங்கையருக்காய் ஆசையாய் வாங்கிய ஆடைகள் அர்த்தமற்றுக் கிடந்தன.  விடுதலைப்  போராட்ட வீரர் சத்தியமூர்த்தி போல வெடிப்புடன் பேசும் இளம் தம்பி ஆறுமுகமும், ஆறு வயதே நிரம்பியிருந்த தங்கை சொர்ணவல்லியும் மீண்டும் காணக் கிடைப்பதில்லை - இந்த நாட்களைக் குறித்துப் பேசும் போதெல்லாம் பேச்சு இடையில் நின்று கண்ணீர் வடிய ஒரு மௌனம் கவிந்து விடும் தாத்தா மேல்.

எதுவரினும் வாழ்க்கை நின்று விடுவதில்லை; அடுத்த வேளையே  பசிக்கத்தான்  செய்கிறது. எனவே தானும் தளராது, சோர்ந்த சுற்றங்களையும் அரவணைத்து முன் செல்ல வேண்டும் என்பதை சொல்வதற்காகப்  பலமுறை இந்த நிகழ்வுகள் குறித்து வலியோடும் வேதனையோடும் சொல்லி இருக்கிறார்கள் தாத்தா.

சற்றே நீள் மூச்சுடன் ஆசுவாசப் படுத்திக் கொண்டு மேற்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது - வாழ்க்கையைப் போல...

ரங்கூன் வாழ்க்கை, அன்றாட வாழ்க்கை பற்றி பெரிய அளவில் தகவல்கள் இல்லை. இவற்றில் ஒருமுறை கப்பல் பயணத்தின் போது, ஏதோ ஒருவிதமான விஷக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக, கப்பலை ஒரு சிறு தீவில் நிறுத்தி, அனைவரையும் மருத்துவ சோதனை செய்து இரண்டு நாட்கள் தாமதாக ஏற்றிச் சென்றார்களாம். நோய்வாய்ப்பட்டவர்களை குவாரன்டைன் (quarantine) செய்தார்கள் எனத் தாத்தா கூறிய அன்றுதான் இந்த வார்த்தை அறிமுகம்.  இன்று வைரஸ் பாதித்த filesஐ கணிணியில் quarantined எனப் பார்க்கும் போதெல்லாம், அந்தப் பெயர் தெரியாத தீவு நினைவுக்கு வரும்.

தாத்தாவுக்கு கோலாலம்பூர் அம்பாங் தெரு AMM firm-ல் வேலை. செட்டியார் தெரு என்றும் அழைக்கப்பட்ட இந்த வீதியில் முக்கியமான வணிக நிறுவனங்களும், வட்டிக்கடைகளும் இருந்திருக்கின்றன. இந்த அம்பாங் வீதி இன்றும் இருக்கிறது. - Leboh Ampang என. மலேயாவிலிருந்து ரப்பர், ஈயம்( tin ) போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கிறது. சார்ட்டர்ட் வங்கி (Chartered bank) என்றழைக்கப்பட்ட (standard chartered ன் மூல வங்கி) வங்கி கோலாலம்பூரிலும், ப்ளாங்கிலும்(சிலாங்கூர்) இருந்திருக்கிறது. ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த பெரும்பாலானோர் தமிழர்கள் - குறிப்பாக இராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து மிக அதிக அளவில் சென்றிருக்கிறார்கள்.

அம்பாங் தெரு - அன்று

அம்பாங் தெரு - இன்று

தாத்தா குறிப்பிடும் மற்றொரு வீதி - பெட்டாலிங் வீதி - அன்று 

பெட்டாலிங் வீதி - இன்று



மலேயாவில் கோலாலம்பூரில் தலைமைக் கிளையும், பினாங்கில்(Penang) இன்னொரு கிளையும் இருந்திருக்கிறது தாத்தா வேலை பார்த்த AMM firm-ற்கு . (AM Murugappa Chettiar - Cholamandalam, TI cycles, Carborundum groups குழுமத்தின் 1900களின் தொடக்க வணிகம் இந்த மலேய வட்டிக்கடைகள்)

பினாங் நாட்களைப் பற்றிய பகிர்வுகளே அதிகம்.

மனைவி கருவுற்ற செய்தி, முதல் மகன் (சிவசுந்தரவேலன்) பிறந்த செய்தி, அனைத்தும் கடிதங்கள் வாயிலாகத்தான் தாத்தாவை அடைந்திருக்கிறது. 24 வயது நிரம்பிய இளைஞன் முதல் மனைவியின் இழப்புக்குப் பின், இரண்டாவது திருமணம் முடித்து இரண்டரை மாதங்களில், உறவினர் அனைவரையும் பிரிந்து தனிமையில். அந்த தருணத்தில் சொந்தங்கள் அனைவரின் அன்பையும், ஆசாபாசங்களையும், ஏக்கங்களையும் சிற்சில வரிகளில் பொதித்து சுமந்து வரும் கடிதங்கள் தேவதூதர்களாகவே  இருந்திருக்கின்றன.

மகன் பிறந்த மகிழ்ச்சியான செய்தியையும் பிஞ்சு விரல்கள் மஞ்சளில் தோய்த்துப் பதித்த கைத்தடத்தையும் தாங்கி வந்தது ஒரு கடிதம். அதுவே இறுதிக் கடிதம் -தகவல் தொடர்பு அறுந்து போனது.

- தொடரும் -  (தொடரும், தொடர்பும்)

முந்தைய பதிவு (14)

அடுத்த பதிவு (16)

Wednesday, July 29, 2015

சற்குரு - தாத்தா - 14

ஒவ்வொரு மறைவும் உணர்த்திக் கொண்டே இருந்தும், மறந்து விடும் மனித மனம் - நிலையிலா வாழ்வில் நம் நிலை யாதென்று. ஒரு போர்க்களம் பார்த்துவிட்டால், மரணத்தோடு கணம்தோறும் வாழ்ந்தாக வேண்டிய நாட்களில் ஒருமுறை வாழ்ந்து விட்டால், ஒருவேளை உயிரின் மதிப்பு புரிந்துவிடக்கூடும்.

மாபெரும் மனிதர்களை இழந்திருக்கும் இத்தருணம், வாழ்வு குறித்த - பயனுள்ள வாழ்வு குறித்த  பல கேள்விகள் அனைவருக்கும் மனதுக்குள்  எழும்பி இருக்கிறது. அதை சற்றே உற்றுநோக்கி மனதுக்குள் விடை தெளிதல் நலம். இல்லையெனில் இயற்கையின் கொடையாக ஞாபக மறதி இருக்கிறதே - அன்றாடக் கவலைகளுக்கு சீக்கிரம் திரும்பி விடுவோம்.

சிற்றலை கரை கடத்தி மீண்டும் அமைதி கொள்ளும் குளம்.

அடிமேல் அடியென அப்பாவின் மறைவுக்குப் பின், மாமாவின் மறைவு... பொதுவாக சமீபத்திய மாதங்களில் பல துறை ஆளுமைகள் அமரர் ஆகி இருக்கிறார்கள். (ஜெயகாந்தன், பாலச்சந்தர், MSV, அப்துல் கலாம் வரை) இறப்பும் இழப்பும் நம் மனதை பண்படுத்தவில்லையெனில், வாழ்வு நமக்கும் பிறர்க்கும் கனியாத காயாய் கசந்துபோக நேரும்.

--------------------

எழுத விழைந்த கதைக் களமும் மரணத்தை சுவாசித்த ஒரு பெரும் போர்ச்சூழல்தான்

1942 - மலேயாவில் கோலாலம்பூர் அருகே ஒரு சிறிய ரயில்வே நிலையம்.  நாடாள்பவர் யாராயினும் உயிர்வாழ உத்தரவாதமின்றி மக்கள் அலைக்கழியத் தொடங்கிஇருந்த காலம்.

நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்ய, அனைவரது பெருமூச்சுக்களையும் சேர்த்து வெளிவிட்டு வந்து நின்றது ஒரு புகைவண்டி. திடுமென போர் விமானங்களின் வருகையைக் குறிக்கும் எச்சரிக்கை சங்கு ஒலித்ததும், அனைவரும் அருகிருந்த பதுங்குகுழிகளுக்குள் பாய, ரயில் பிரயாணிகளுக்கு அலறுவதற்கும் அவகாசம் இன்றிப் போனது - அடுத்த வினாடி பலருக்கும் சுவாசம் நின்றுபோனது - குண்டுகள் ரயில் மீது விழ பெருநாசம். அன்று உயிர் இழந்த நூற்றுக்கணக்கானோரில் ஒருவர் என் ஆசிரியையின் தந்தை . சில நூறடிகளுக்குள் குழியில் பதுங்கித் தப்பியவர்களில் ஒருவர் தாத்தா . ஆசிரியையிடம் பேசும் போதே இருவர் உணர்வுகளும் பின்னோக்கிப் பாய்கிறது. தாத்தாவைப் பார்த்து, தான் பார்க்க இயலாது போன தன் தந்தையை பார்த்தாய் கண்கலங்கிய தமிழ் ஆசிரியை.

அன்று இரவு, எத்தனையோ முறை தாத்தா கூறக் கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்டேன் தாத்தா கடல் கடந்த கதை, உற்றாரைப் பிரிந்து, உலகப் போர் நாட்களில் நிலையாமையை மட்டுமே நித்தமும் பார்த்த கதை. ஆங்கே தன்னிகர் இல்லாத் தலைவர் 'நேதாஜி' யின் INA படையில் இணைந்த கதை.

சாரங்கள் சதமல்ல எனத் தெரியும் தருணம், சாரம் அறுத்தும் எழுந்து நிற்கும் கோபுரங்களாய், மனிதர்கள் வேரறுந்த மண்ணில் வான் நோக்கி உயர்ந்த கதை. உற்றார் யாருமில்லை, பெற்ற மகன் காண வழி இல்லை, நாளை நான் உண்டா, நாளை என ஒன்றுண்டா - எதற்கும் பதில் இல்லை - எனும் போது வாழ்வை இரு விதமாய் கழிக்கலாம். இருப்பது ஒரு வாழ்க்கை, எப்போதும் அறுந்து விழக்கூடிய கத்தி தலை மேல்.

அஞ்சிக் கொண்டும், அஞ்சாதது போல் வாழ்வைக்  கட்டற்று மனம் போல் வாழ்வது ஒரு வகை. தோன்றிடின் பயனுற வாழ்வதும், வீழின் விதையென வீழ்வதும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நிகழும் நிகழ்வைக் கர்ம பூமியாய்க் கொண்டு களம் புகுவது இரண்டாம் வகை.

தர்மத்தைக் கையில் எடுத்துக் கர்ம பூமியில் களம்புக வாயில் அனைவருக்கும் திறந்தேதான் இருக்கிறது. சிறகு கொண்ட பறவை எல்லாம் வடதுருவம் வரை பறந்தா விடுகிறது!! மதிவேண்டும், மதிகிட்டும் விதி வேண்டும்.

அந்த களம் காண, காலம் தாத்தாவைக் கொண்டு சேர்த்த கதை:

தேடல் - மானுடனுக்குள் சுடர்விடும் அணையா நெருப்பு. கடல் கடந்து திரவியம் தேட இன்றொரு வாழ்வுமுறை IT. அன்றொரு வாழ்வுமுறை 'வட்டி'. நகரத்தார் எனும் பெருவணிகர் இல்லங்கள் நடத்திய கிழக்காசிய வாணிபம் - பர்மா, மலேயா, இலங்கை என பல தேசங்களில். நேர்மையும் காரியநேர்த்தியும், நிர்வாகத்திறனும் மிக்க இளைஞர்படையை கணக்குப் பிள்ளைகளாய் காரியமாற்ற இருகரம் நீட்டி இழுத்துக் கொண்டது இவ்வணிக வாழ்வு. வாழ்வை புதைகுழியில் ஆழ்த்தும் இன்றைய கந்து வட்டிக் கடைகள் அல்ல. வணிக நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நவீன வங்கிகளின் முந்தைய வடிவம் இந்த வட்டிக் கடை. நாடாறு மாதம் காடாறு மாதம் என உற்றாரை பெற்றாரை விட்டு வாழ்க்கை. இதன் வாயிலாய் தாய்மண்ணில் வருமானம் பெருக்கி வளம் கண்டது பலரது வாழ்வு.

19 வயதில் (1935) தன் மாமாவோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் சென்றார்கள் தாத்தா . கப்பல் வழி 4 நாள் பயணம் ரங்கூன் - அன்றைய பர்மாவின் தலை நகரம். பல குடும்பங்களின் பொருளாதாரத்தை உச்சியில் ஏற்றவும் அங்கிருந்து சறுக்கவும் செய்த தலைவிதி நகரம்.

முதல் திருமணம் 1938-ல்  தாத்தாவுக்கும் அவரது அத்தை மகள் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் நடந்தது.
நல்ல நிறமாயும், சின்னஞ்சிறு பெண் போல இருப்பார்களாம் - பிறர் சொல்லக் கேள்விதான். அதிகாலை காணும் அற்புதக் கனவு யாரோ அடித்து எழுப்பக் கலைவது போல விதியின் கருணையற்ற கரங்களில் கலைந்தது 5 மாதத்தில். முதற் புள்ளியிலேயே முற்றுப் புள்ளி கொண்டு நிறைவடைந்தது அந்தக் கவிதை.

மாமன் மகளை (சேது அப்பத்தாவை) மணந்தது அடுத்த வருடம் 1939. மிகச் சரியாக மூன்றே மாதங்களில் மருமகனை அழைத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள் பசளைத் தாத்தா.

இம்முறை சென்றது கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

அப்போது தெரியாது - யுத்தம் வருவதும், அடுத்த ஆறு வருடங்கள் கழியப் போவது யாருமற்ற வனவாசமும், உற்றார் உறவினரின் இடையறாத மனவாசமும் - இருப்பிடமும் தெரியாமல், இருப்புக்கும் இறப்புக்கும் இடையே நடந்த அஞ்ஞாதவாசமும் என்று.


சில தேதிகளும் குறிப்புகளும் - தாத்தாவின் குறிப்புகளில் இருந்து

28-ஜூன்-1935-ல் தன் மாமா ஸ்ரீமான் ராமநாத பிள்ளை அவர்களோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் பயணம் . கப்பல் வழி 4 நாள் பயணம், 1-ஜூலை-1935 ரங்கூன் .

1936-ல் மார்ச் மாதம் இந்தியா வருகை, டிசம்பர்  வரை (8 மாதம்) மதுரை வாசம்.

1936 டிசம்பர் ரங்கூன் சென்று 1938 மார்ச்-ல் அடுத்த வருகை. 

6-ஏப்ரல்-1938 தாத்தாவுக்கும் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் திருமணம்.
(என்னைப் பல வருடங்கள் கழித்து, பெங்களூர்-ல் உமா அத்தை வீட்டில் பார்த்து சிவசாமி தாத்தா சொன்ன முதல் வார்த்தை செல்லம்மா அப்பத்தா போல இருக்கிறேன் என்பது, வேறு யாரும் அவர்கள் குறித்து விரிவாக சொல்லிக் கேட்டதில்லை).

12-செப்டம்பர்-1938 செல்லம்மாள் அப்பத்தா மறைவு.

சேது அப்பத்தாவை மணந்தது அடுத்த வருடம் 14-டிசம்பர்-1939.

கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

முந்தைய பதிவு (13)

அடுத்த பதிவு (15)