Tuesday, February 20, 2018

துலாமுனை நடுக்கங்கள்

எனது தந்தை 40+ வருடங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இன்று நாட்டை உலுக்கியிருக்கும் ஒரு மிகப்பெரிய மோசடியின் தருவாயில் இந்தப் பதிவை தலை நிமிர்ந்தே எழுதுகிறேன்.




அப்பாவின் வேலை பற்றிய சிறு குறிப்பு. வேலையில் இருந்த வரை இரவு பகல் பாராது உழைத்தவர். கணக்கில் புலி, வேலையில் சிம்மம். மதுரை மற்றும் பல கிளைகளில் தூண் எனப் பெயர் பெற்றவர். இது தேய்வழக்கல்ல, அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து காலை ஏழு மணி வரை கணக்கு வழக்குகள் பார்ப்பதும், விடுமுறை நாளன்று வேறு இடையூறுகள் இருக்காதென்று அலுவலகம் சென்று வேலை பார்ப்பதும் பலநாள் வாடிக்கை. இந்த வழிமுறைகள் இன்று காலாவதியாகி பணிபுரியும் நிறுவனத்துக்கு விசுவாசமாய் இருப்பது என்பதே கேலிக்குறியதாகிவிட்டது வேறு விஷயம். இத்தைகைய மாபெரும் இயந்திரங்களை நகர்த்தும் முகமறியா பல்சக்கரங்களில் ஒருவராக இருந்து மறைந்தவர்.

இன்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் செய்திகளையும் கேலிச் சித்திரங்களையும் பார்க்க நேர்ந்திருந்தால் எவ்வளவு வலியும் வேதனையும் அடைந்திருப்பார் என்று முதலில் தோன்றியது.
முதற்பார்வைக்கு அவ்வண்ணமே தோன்றுகிறதென்றாலும் உண்மையில் அப்பாவின் நிலைப்பாடு இதில் என்னவாக இருந்திருக்கும்! கடந்த இரண்டு மூன்று தினங்களாக இந்த மோசடி, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும் பல சட்டக இடைவெளிகளையும் ஓட்டைகளையும் ஊடகங்களில் வாசித்துக் கொண்டிருந்த அதே பொழுதுகளில் ஆழுள்ளம் இதை யோசித்துக் கொண்டிருந்தது.

அப்பா குறிப்பிடும் சில சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

அப்பா வேலை பார்த்த வங்கிக் கிளை, ஒரு வணிக முதலீட்டாளருக்குக் கொடுத்திருந்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும் அவர் கடனைத் திருப்பி அடைக்காததால் வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது. அந்த வழக்கில் அப்பா வங்கியின் ஒரு சாட்சியாக செல்ல வேண்டியிருந்தது. குறிப்பிட்ட ஒரு தேதியில் வங்கி மேற்படி நினைவூட்டல் அறிவிப்புக் கடிதம் அனுப்பி விட்டதென சொல்லவேண்டும். ஆனால் உண்மையில் வங்கி அந்தத் தேதியில் அறிவிப்பை அனுப்பவில்லை, தாமதாகவே அனுப்பியிருந்தது. அதை அப்பா வங்கியின் வழக்கறிஞரிடம் எடுத்துச் சொன்ன போது, "அதை உள்ளபடி நீதிமன்றத்தில் சொன்னால் வழக்கு கடன் பெற்றவருக்குச் சாதகமாகத் தீர்ப்பாகி விடும். எனவே நீங்கள் உங்களை இந்தத் தேதியில் அனுப்பப்பட்டதா எனக் கேட்கும் போது, ஆம் என்று மட்டும் சொல்லுங்கள்" என்று பயிற்றுவித்தார்கள். எனில் அப்பா நீதிமன்றத்தில் விசாரணையின் போது உண்மையில் தாமதமாகவே கடிதம் அனுப்பப்பட்டது என்று கூறி, அதனால் வங்கிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது

இரண்டாவது சம்பவம்: கல்கத்தாவுக்கு பிராந்திய மேலாளராக பதவி உயர்வு கிடைத்துப் போன போது, மேல்தட்டில் நிகழும் பலவிதமான கீழ்த்தரமான ஊழல் நடவடிக்கைகளுக்குப் பணிந்து போகாமல் இருக்கவே, அசாம் மாநிலத்தின் குக்கிராமம் வரை பந்தாடப்பட்டதும் நடந்தது. வேலையே போனாலும் பரவாயில்லை என்று சில ஒழுங்கீனங்களுக்கு உடன்பட மறுக்கும் போது தண்ணியில்லாக் காடுகளுக்கும் யாரும் போக விரும்பாத ஒற்றை ஊழியர் மட்டுமே கையாளும் குக்கிராமக் கிளைகளுக்கும் பந்தாடப்படுவதும் இறுதி வரை நிகழ்ந்து கொண்டேதான் இருந்தது. 12ஆம் வகுப்புக்குள் பதினோரு பள்ளிகள் நான் பார்த்ததும் அதன் விளைவே 😊

ஓய்வு பெற்ற பின்னரும் கூட, அப்பா மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படதற்கான மருத்துவச் செலவுகளை காப்பீட்டுத் திட்டத்தில் திரும்பிப் பெற்றுக் கொள்ள ஓய்வு பெற்றோருக்கான திட்டம் வழியாக முயன்ற போது, மிகவும் மோசமாக அலைக்கழித்தது வங்கி. மருத்துவமனை ரசீதுகள் அனைத்தையும் அனுப்பிய பின்னரும், பலமுறை டில்லிக்குத் தொலைபேசியில் அழைத்தபின்னர், அவை எதுவும் வந்து சேரவில்லை என்று அலைக்கழித்தனர். ஓய்வு பெற்ற முதியவர்களை முடிந்தவரை அலைக்கழிப்பார்கள், அவர்கள் தாமாக காப்பீடு பெற முயற்சி செய்வதையும், தொடர்ந்து அதற்காக அலைவதையும் விட்டுவிடுவார்கள் என்று அவ்விதம் செய்கிறார்கள் என்று எண்ணிய அப்பா, சட்டபூர்வ அறிவிப்பொன்றை அனுப்பினார்கள். அடுத்த மாதமே பணம் வந்து சேர்ந்தது.

இதனால் எல்லாம், அப்பா தான் பார்த்தவேலை மீதும் வங்கி மீதும் இருந்த மதிப்பையும் நம்பிக்கையையும் இறுதிவரை இழக்கவில்லை. ஓய்வூதியத்துக்கு வாழ்வுச் சான்றிதழ் புதுப்பிபதற்கு வங்கி ஊழியரை வீட்டுக்கு வர முடியுமா எனக் கேட்கலாம் என்று அப்பாவின் இறுதி தினங்களில் ஒரு முறை கூறியதற்கு, வங்கி மேலாளருக்கு இருக்கக்கூடிய பணிச்சுமையை வலியுறுத்தி, எழுந்து அமரவே சிரமப்பட்ட தனது இறுதிக்கட்டத்திலும் நேரில் வங்கிக்கு செல்ல வேண்டும் என்று முனைப்பாக இருந்தார்கள்.

இவ்வளவு விரிவாக இதை எழுதக் காரணம், அப்பா இன்றிருந்தால், இத்தகைய ஊழல் பெருச்சாளிகள் என்றுமே இருந்தனர் என்பதையும் அதற்கு நடுவில்தான் நாம் நமது மனசாட்சிக்கு உட்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதே அப்பாவின் நிலைப்பாடாக இருந்திருக்கும். என்னை இந்த உயர் அழுத்த வங்கி வேலை வேண்டாம் என்று அப்பா பலமுறை அறிவுறித்தியது இதனால்தான். ஊழ் வலியது - மென்பொருள் பயணமும் ஒருவகையில் அங்குதான் எனைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது 😊

ஆனால் எங்குதான் இவர்கள் இல்லை! தனியாரோ, அரசுப்பணியோ, பெருநிறுவனங்களோ எல்லா இடங்களிலும் நீக்கமற இவர்கள் இருக்கிறார்கள். துலாமுள்ளை நிகர் செய்ய, அலுக்காமல் தங்கள் உண்மையையும் உழைப்பையும் தந்து நிகர் செய்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டு தரப்பும் என்றுமே உண்டு.

வாங்கும் ஊதியத்துக்கு உண்மையாக உழைப்பதும், எதிர்மறை மனிதர்களை, நமது இயல்பு, அல்லது சூழல் மற்றும் சார்ந்திருப்போர் முதலிய புறக்காரணிகளைப் பொறுத்து தவிர்த்தோ, தகர்த்தோ அவரவர் தன்னறத்தையும் நெஞ்சுறுதியையும் பொறுத்து எதிர்கொண்டே நாம் எந்த ஒரு வேலையையும் பார்க்க வேண்டியிருக்கிறது. பணம் அதிகமாகப் புழங்கும் துறைகளில் அழுத்தமும் அசிங்கமும் அதிகம். மிக சமீபத்தில் தங்கை ரம்யா தன்னுடைய அலுவலகத்தில் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு பெரிய மேல்மட்ட ஊழலை வெளிக்கொணர்ந்து மேலிடம் வரை எடுத்துச் சென்று நேருக்கு நேர் மோதி வென்றது. அன்றைய தினம் தந்தையின் இருப்பு இன்றும் தொடர்வது என்ற எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

இதனால் எலலாம் நமக்குக் கிட்டுவது மன உளைச்சலும் பல சமயங்களில் நமது வேலையே இழப்பதும்தான். பிழைக்கத்தெரியாதவர் என்ற பெயர் உட்பட எல்லாம் கிடைக்கும்.

பிழைப்பு என்பது வெறும் வயிற்றால் நிரப்பப்படுவதாக அனைவருக்கும் இருப்பதில்லை, அதை மீறிய ஒன்று, வெறும் வசதிகளாலும் அதிகாரத்தாலும் நிரப்ப முடியாத ஒன்று, நம்மில் சிலருக்கேனும் முக்கியமாக இருப்பதால்தான் பிழைக்கத் தெரியாவிடிலும் பிழை இழைக்கத் தெரியாதவர்களாக இருப்பதில் முனைப்புக் கொள்கிறோம்.இது என்றென்றும் தொடரவிருக்கும் ஒரு சரடு. எனவே தந்தையர் வழி நடப்பதில் பெருமையே.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே -- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே -- அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே -- இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ -- இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ? "

#என்தந்தைஎன்ஆதர்சம்

இந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பான பல இணையப் பகடிகள் சிரிப்பை வரவழைத்தாலும், நானும் சில சமயங்களில் அது போன்றவற்றை நண்பர்களுடன் பகிர்ந்தாலும், ஆழத்தில் உணர்வது இதுதான்:
நமது முதல் மந்திரிகளையும், எம் எல் ஏ- க்களையும், பிரதமரையும் உட்பட அனைவரையும் அவர்கள் நமக்கு எதிர்நிலைக் கொள்கைகள் உடையவர்களாயிருப்பினும் ஏதோ ஒரு வகையில் நமது பிரதிநிதிகள்தான் என்ற பிரக்ஞையின்றி பகடியெனும் பகிர்வுகள் மூலம் வரையறையின்றி சமூக ஊடகங்களில் பகிரும் வழக்கம் இன்று பலருக்கும் இருக்கிறது. அது, பிடிக்காத நடிகர் அல்லது தலைவர் சுவரொட்டியில் சாணியடிப்பது போலத்தான், நம்முள் ஒரு கீழ்மை நிறைவு கொள்வதன்றி பயன் இல்லை. எனது வீடு குப்பையாக இருக்கிறது என நாமே உரக்க ஊருக்குச் சொல்வதுதான். நம்மால் முடிந்த இடங்களைத் தூய்மை செய்வோம். வீட்டு எல்லையை விஸ்தரித்து குழாயடி வரை சுத்தம் செய்த தாத்தாவும் இதைத்தான் வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.

அதே போலத்தான் இந்த ஊழல் ஒரு அலை, கூடிய சீக்கிரம் இந்த ஊழலை மறந்து அடுத்த ஊழல் நோக்கி நகர்ந்து விடுவோம். எனில் பல்சக்கரங்களை நகர்த்துபவர்களின் சத்தியத்தால் இந்த தேசம் முன்னகர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இந்தப் பதிவை எழுதத் தூண்டிய தம்பி ராஜேஷ்க்கு நன்றி

Thursday, November 9, 2017

பனிக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - முழு வடிவம் - பகுதி 3

-5-

மிக இளம் வயது முதலே என்னுள் இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்துவன மலைகள். பேருந்துப் பயணங்களில் உடன் வருவது போலத் தோன்றும் மலைத்தொடர்களைப் பார்த்து குழந்தைப் பருவத்தில் பயந்து அழுதிருக்கிறேன். இன்னும் அந்த அச்சத்தின் சுவடை என் ஆழ்மனதில் உணர முடிகிறது. மலைகளின் பேருரு, அசைவின்மை, அணுகமுடியாமை, இருளோடு கரைந்து காண முடியாமல் போகும் ஆழ்நீலம், நுண்கோடுகளாக ஒளிவிடும் தன்மை எனப் பல விளக்கவியலாத காரணங்கள்தனிமை, துயர் ஆகியவற்றால் ஆகிய முடிவேயில்லாத இரவு, நீண்ட  மலைத்தொடரை நினைவுறுத்தும். 'மலையெனத் துயர்வரினும்' என்ற சொற்றொடரை முதலில் சொன்வர் இதுபோல உணர்ந்திருக்கலாம்.



எனில் மலைகளின் கவர்ச்சியும் அதீதமானது. மலைகள் அதன் நிமிர்வால், நொடிதோறும் உருமாறினும் நிலையாயிருப்பதன் காட்சிப்பிழையால், ஒளித்துவைத்திருக்கும் ரகசியங்களால் வசீகரிப்பதும் அதிகமாகிக் கொண்டேதான் வந்தது. தன்னுள் பொதிந்திருக்கும் கரவுகளால் மலைகள் மயக்கின. மேற்குத் தொடர்ச்சி மலையும், மலைகளுக்கெல்லாம் சிகரமாகிய இமயமலையும்  அதில் உலவுவதும் தொடர்கனவுகளாயின.

வடதுருவத்து பனிக்காற்றைத் தன் விரிசடையில் தாங்கி பாரதத்தைக் காக்கும் பேரளியை, அதன் உச்சியில் தோன்றும் நிலவை, முகடுகளிலிருந்து பொழிந்திறங்கும் கங்கையெனும் அருளை, அனைத்தையும் இணைத்து சிவமென உருவகித்த முதல் மூதாதைகளின் உள்ளங்களில் எழுந்த பெருவியப்பும் மெய்சிலிர்ப்பும் இமயத்தை எண்ணும்போதெல்லாம் என்னுள் எழும். அதை ஓவியத்தில் வடிக்கும் பெருவிருப்பும் உண்டு. அப்பனிமலை முகடுகளை இன்னும் சில நிமிடங்களில் பார்த்துவிடலாம் என்னும் சாத்தியமே உடல் தளரும்போதெல்லாம் ஊன்றுகோலாகியது.

உச்சியை அடையும் தருணத்தை மனம் விதவிதமாகத் தீட்டி வைத்திருந்தது. அது  நிகழ்ந்துவிட்டதாலேயே அந்த நிமிடம் ஏதும் உளக்கிளர்ச்சி ஏற்படவில்லை. கீர்கங்கா என்ற அறிவிப்பைப் பார்த்துதும் திரும்பிப் பார்த்தால் ஒரு சரிந்தேறும் விரிந்த புல்வெளியெங்கும் பல வண்ணங்களில் கூடாரங்கள். முன்னரே வந்துவிட்ட குழுவினர்  கீர்கங்காவின் வெந்நீரூற்றுக்களுக்குத்தான் சென்றிருப்பார்கள் எனத் தோன்றியது. அது எங்கே என விசாரித்தால் அப்பெருவிரிவின் உச்சியைக் காட்டினார்கள். அரை கிலோமீட்டரே இருக்கக்கூடும். அத்தொலைவை கம்பூன்றி, 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு' எனப் பாடி ஏறும் கே.பி.சுந்தராம்பாள் போல முக்கால்மணி நேரம் ஏறினேன்.


"முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட மலையேறும் இந்தியப் பெண்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவே, எனவே கவலைப்படாதீர்கள், நீங்கள் ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவர்" என்றெல்லாம் கூறி ஊக்குவித்தனர் குழுவினர். நம்பத்தான் வேண்டியிருந்தது. ஏறும் வழியெங்கும் பயணிகள் மிகக் குறைவே. கசோலில் குழுமியிருந்த நெரிசலில் இருந்து ஒரு சதவீதமே மலையேற வந்திருந்தது. சராசரி வயது முப்பதுக்கும் கீழே. மலையேறுபவர்களில் வெளிநாட்டினர் மட்டுமே இருபாலரும் அனைத்து வயதினரும் இருந்தனர்.

உச்சியில் செங்கொடி பறந்த ஒரு சிறு கோவில் இருந்தது. அதற்கு சில அடிகள் முன்னதாக ஒரு பெரிய வெந்நீரூற்றுக் குளத்தை இரண்டாகப் பிரித்து பெண்களுக்குத் தனி அறை போலக் கட்டியிருந்தனர். 33 சதவீதம் இடஒதுக்கீடு இருந்தது. 

 முன்னரே நீராடிக் கொண்டிருந்தவர்களோடு இணைந்து கொண்டேன். நீண்ட காலம் பிரிந்த நட்புகளைக் கண்டது போல சிறிது நேரம் ஒரே உற்சாகம். சிலர் ஏற்கனவே குளித்து வெளியேறி அமர்ந்திருந்தனர். கந்தகம் கலந்த நீராதலால் அதிக நேரம் இருந்தால் தலை லேசாக சுற்றுகிறதென முன்னதாகக் குளித்து வெளியேறிய பெண் கூறினார். வெந்நீர்க்குளம் ஐந்தடி ஆழம் கொண்டது.
அது நீச்சல்குளம் அல்ல, அதில் இறங்குவதற்கு முன்னர், அதிலிருந்து வெளியேறும் சிறு குழாய்களில் குளித்து உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டே நீரூற்றுக்குள் இறங்க வேண்டும். என்பதை வலியுறுத்தும் அறிவிப்புகளும் இருந்தன.


உடலின் ஒவ்வொரு தசையும் தன்னிருப்பை அறிவித்துக் கொண்டிருந்தது. நீர் உடலில் பட்டதும் எரியும் அளவுக்கு வெப்பம். எனில் உள்ளே இறங்கி பாசி படிந்த தரையில் கால்களை ஊன்றிக் கரையைப் பற்றிக் கொண்டு நின்றதும், நீர் அணுஅணுவாக உள்வாங்கி எண்ணத்தையும் நிறைத்துக் கொண்டது. கொதிக்கும் நீரும் குளிரும் உடல்வலியும் ஒரு போதையை ஏற்ற, நீரிலிருந்து வெளியேற மனமே இல்லை. மீண்டும் தோழிகள் எச்சரிக்கவே வெளியேறி கரையில் அமர்ந்ததும் அவர்கள் சொன்னது புரிந்தது. பொதுவாகவே குளியலுக்குப் பிறகு பசியும் இனிய சோர்வும் ஏற்படும். நடையின் களைப்பும் கந்தக நீராவியும் சேர்ந்து செயலோயச் செய்தது. எழவும் உடல் ஒப்புதலின்றி தலை மிகவும் லேசாக உணர, அப்படியே அமர்ந்திருக்கவே முடிந்தது

பின்னர் அந்த அறையிலிருந்து வெளியேறி புல்தரையில் காற்றில் படுத்திருந்தேன்.  இயல்பு நிலை திரும்பியதும் அதுவரை மறைந்திருந்த பசி எழுந்தது. பசியெழுந்த கண்களுக்கு உணவகங்கள் தெரிந்தன.அந்தச் சரிவு முழுவதும் பல விடுதிகள் தங்குமிடமும்(கூடாரம்) உணவகமும் நடத்துகிறார்கள்.  இருபது முப்பது கூடாரங்கள ஒவ்வொரு விடுதிக்கும் சொந்தமாக இருந்தது. மதியதுக்கும் இரவுக்கும் சேர்த்து மாலையில் உணவு. அத்தனை தொலைவில் எல்லா விதமான உணவும் சமைத்தளிக்கும் கைகள். வெளிறிய மஞ்சள் மாலை. அமர்ந்திருந்த இடத்துக்கு அருகில் காற்றில் படபடத்தது கூடாரம். அருகில் ஒரு சிறு பாறையில் மூன்று பெரிய சிலந்திகள் தொற்றி ஏறிக் கொண்டிருந்தன. பாறை மாமலையில் கயிறு கட்டியேறும் மலையேற்றக் குழுவினர்.

கண்ணுக்கு எதிரே பெருமலைத்தொடர் - பார்வதி சிகரம்வெள்ளி உருகியது போல அருவிகள் மலையில் பல இடங்களில் ஒலியின்றி சரிவிறங்கின. அனைத்துக்கும் ஆதார சுருதியாக நதியின் நடையோசை. அத்தலத்தின் புராணமாக பார்வதி தேவி ஒருமுறை நீராடும் போது காதணியைத் தொலைத்துவிட சிவன் தேடித் தந்த இடமாக ஒரு கதையை யாரோ சொன்னார்கள். நீராடும் இடத்தில் தன் தோடைத் தொலைத்துவிட்டுப் புலம்பிய ஹேமாவிடம் அக்கதையைச் சொன்னேன். எங்கிருக்கிறாய் எனது சிவனே என்று குரலெழுப்பி சிரித்தாள். தோடுடைய செவியனும் சிரித்திருக்கக் கூடும்.

வேகமாகச் சரிந்திறங்கிய அந்தியொளியில் மின்னிய பனிமலைகளின் அடுக்குகளிலிருந்து முகில்கள் விரைந்து நாங்கள் இருந்த சிகரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனகுளிரும் அடர்ந்து கொண்டே இருந்தது. ஏழு மணி வரை வெளிச்சம் இருந்து கொண்டே இருந்தது. காடுகளின் மரங்கள் தனிக்கோட்டுருவை இழந்து முதலில் இருளத் தொடங்கின. பூச்சிகளை விரட்டப் பல இடங்களில் புகை மூட்டம் போட்டிருந்தனர். அத்துடன் மேகமும் இறங்கி சூழ்ந்து கொள்ள காட்சி மங்கியது. கேளிக்கைக்கென மூட்டப்பட்டிருந்த நெருப்பு ஆங்காங்கே தெரிந்தது. சூரியமின்விளக்குகள் மிக மென்மையாக ஒளி சிந்திக் கொண்டிருந்தன. இரவின் முற்றுகையில் அந்தி சரணடையும் தருணம் எதுவெனத் தெரியாது நழுவிச் சென்றது.


இரவுணவுக்காகவும் புகைக்காவும் நீருக்காகவும் குழு வேறுவேறு திசைகளில் பிரிந்து சென்றிருந்தது. நானும் ஹேமாவும் இன்னொரு பெங்களூர் தோழி அனுஷாவும் புல்வெளியில் அமர்ந்திருந்தோம். மிக உற்சாகமான இரு பெண்கள். எங்களுக்கு வேறு உத்தேசங்கள் இல்லை. குளிர்  மிகுந்துவிட்டது. கழிவறை வசதிகள் நன்கு இருந்தன - நீள்குழாயில் இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் இளவெந்நீர் நிறுத்த வேண்டிய தேவையே இல்லாமல் அவ்விடத்தை சுத்தமாக நாற்றம் இன்றி வைத்திருந்தது. மூவர் தங்கிக் கொள்ள ஒரு கூடாரம். உள்ளே மெத்தையிட்டு இருக்க குளிர் ஓரளவு தயங்கி வெளியே நின்றதுதோழியரோடு இரவுக்காக அறையைச் சற்று சீரமைத்துவிட்டு வெளியே வந்தபோது முகில் கடந்து விட்டிருந்தது. கண்களிலிருந்து எண்ணைப் பசை அகன்று விட்டது போல் ஒரு தெளிவு. இருளிலும் ஒளிர்ந்தது பனிச்சிகரம்.

எங்கிருந்து ஒளி கசிகிறது என விண்ணைப் பார்த்ததும் உடல் விதிர்த்ததுஇடைவெளியேயின்றி நட்சத்திரங்கள். ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் உற்று நோக்கும்  பார்வை நிலையழிவை ஏற்படுத்தியது. எவ்வளவு சிற்றுயிர் இந்த மானுடன்; எனில் இயற்கையோடு இடையறாது மோதிக் கொண்டே இருக்கிறான்; குழந்தைகளுக்கே உரிய அறியாமையோடு. கையை இழுத்து, வயிற்றில் ஏறி முடியைக் கலைத்து, முதுகில் குத்தி, கன்னத்தைக் கடிக்கும் மகவின் சீண்டலை கருணையோடு அனுமதிக்கும் தந்தையென பிரபஞ்சம். 'மகத்தான இந்த விரிவின் முன்னால் பதைபதைப்பின்றி நிற்க முடியாதுதான் மனிதன்
வீடுகளைக் கட்டிக் கொண்டான்' என்றகாடு நாவலின் வரி நினைவில் வந்தது.


சிங்கையிலும் மதுரையிலும் சென்னையிலும் எங்கிருந்தாலும் காணும் ஓரியன் மண்டலத்தின் மூன்று தாரகைகளைத் தேட சரிவுக் கோணத்தில் தெரிந்தது. முன்பின் அறியாத கூட்டத்தில் தெரிந்தவர்களைப் பார்த்த அமைதி ஏற்பட்டது. அவற்றை வைத்து, என் தோழியின் மகனோடு தினம் காணும் வேறு சில நட்சத்திரங்களை அடையாளம் காண முயன்று கொண்டிருந்தேன். அறிந்தவற்றைக் கொண்டு அறியாதவற்றை அறிய முயலும் மனித அறிவு. அவனிடம் சொல்வதற்கேனும் சில புதிய நட்சத்திரங்கள் காண வேண்டும். பெயரறிய கூகுள் அங்கில்லை. மனதில் மட்டும் பதிந்து கொண்டேன். குளிர் மெல்ல எலும்புகளுக்குள் இறங்கத் தொடங்கியது. இரவு கலப்படமில்லாது  கருமையோடு இருந்தது. கூடாரத்துக்குள் நுழைந்து கொள்ள இரவின் முழுக்கருமையோடு குளிரும் போர்வைக்குள் அடங்கியிருந்தது. இரவை துணைக்கும் எத்தனையோ சிறு பூச்சிகளின் ஒலி. மாலையில் பார்த்த சிலந்திகளின் நினைவு வந்தது. தொடர்ந்து தவளைகளின் ஒலி கேட்டதும் நாகங்களை மனம் கற்பனை செய்து கொண்டது. அரவும் அலைபுனலும் இளமதியும் நகுதலையும் விரவும் சடை - இறுதி நினைவில் இது என்ன பாடல் என யோசிக்கும் போதே கனவுகளில் குதிரை இந்தியில் பேசத் தொடங்கிவிட்டது.

-6-

விழிப்பு தட்டியதும் கூடாரத்தைத் திறந்து வெளியே பார்த்த போது வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. குளிராடையை கூடாரத்திலேயே விட்டுவிட்டு ஒரு காற்று தடுக்கும் ஆடையை அணிந்து கொண்டு ஊற்றை நோக்கி மெல்ல ஏறத் தொடங்கினேன். காற்று குழலோடும் உடையோடும் கலைத்து விளையாடியது. நீர்க்குளத்தருகே ஓரிடத்தில் அமர்ந்து கதிரின் முதல் ஒளி முகடுகளைத் தொடும் தரிசனத்துக்குக் காத்திருந்தேன். நடமாட்டம் இல்லாத காலை. தொலைவின் பனி உச்சிகள் மெல்ல ஒளியேற்றிக் கொண்டனகதிர் எங்கோ மலைகளுக்குப் பின்னால் எழுந்துவிட்டதை உணர முடிந்தது. வானின் இளநீலமும் மலையின் கருநீலமும் இணையும் கோடுகளில் ஒளி கசிந்து கொண்டிருந்தது. வேகமாக வெளியேறிய இருள் அருகிலிருந்த வலதுபுறக் தேவதாருக் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டிருந்தது.

எதிரே மலையின் உடலில்  மின்னித் தெரிந்தன அருவிகள். விழியை மூடினாலும் பார்வதியின் பெருஞ்சுழிப்பையும் வேகத்தையும் உள்ளே நிறைத்துக் கொண்டிருந்தது நீரின் இடையறாத ஒலி. இரண்டு நாட்களாக மூச்சென உடனிருக்கும் ஆதார நாதம். சில நொடிகளின் விழி அலைவில் தவறவிட்டு விட்டேன்; மலை தனது பொன்முடியைச் சூடி முழுமோனத்தில் அமர்ந்திருந்தது. திடீரென்று மீண்டும் ஒரு குளிர் அலை எழுந்து உடலை மூழ்கடித்தது.

ஆறு மணியானதும் நீரூற்று குளிக்கத் திறக்கப்படும். மீண்டும் ஒரு முறை வெந்நீராடல். இம்முறை ஏகாந்தமாக - மொத்தக் குளமும் எனக்கென விரிந்திருக்க, குளத்தில் வந்து கலந்த சிற்றோடை சலசலத்துக் கொண்டிருந்தது. நீரின் மேலெழுந்து நின்ற மெல்லிய புகையில் மிதந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு. கரையேறி உடைமாற்றிக் கோவிலை நோக்கி நீண்ட படிகளில் ஏறும் போது மணி ஒலிக்கத் தொடங்கியது. மணியின் கார்வையோடு வெந்நீர் குளியலுக்குப் பிறகு உள்ளிருந்து எழுந்த இதயத்துடிப்பும் இயைந்து காதில் கேட்டது. படிக்கு ஒரு மணியென ஒலிக்க அந்தச் சிற்றாலயத்தின் நந்தியருகே நின்று பார்த்தேன்.  மலையின் பின்னால் வெள்ளமெனப் பெருகிவிட்டது கதிரொளி.


திரை விலகி உள்ளே ஒற்றை தீபத்தின் ஒளியில் வீற்றிருந்தது சிவம். மூவாயிரம் ஆண்டுகள் அங்கு சிவன் தவமிருந்ததாகக்  தலவரலாறு. மூவாயிரமா - இக்கணம் வரை நீடிக்கும் தவமல்லவா அது.

மனித வருடங்களில் அளவிட முடியாத ஏதோ ஒரு புள்ளியில் ஒளியும் புவியும் விசும்பும் காற்றும் புனலும் மட்டுமே அறிந்த முதல் ஆடலை நிகழ்த்தி விட்டு மலையென அமர்ந்து விட்ட பெருமோனத்தான். ஒலி வெள்ளருவி ஓங்குமலைநாடன். காலையும் மாலையும் அவன் மடியில் தவறவிட்டுச் சென்ற தன் பொன் அணிகளை, பகல் முழுவதும் இரவுமுழுவதும் அவன் மடியில் தவழ்ந்தோடித் தேடியலையும் மலைமகள். சிரிக்கிறாள் சீறுகிறாள் அலைக்கழிகிறாள் . பெருந்தவத்தான் முகம் புன்னகையில் கதிர்சூடி பிறைசூடி ஒளிகொள்கிறது. பொன்னொளி பார்த்து அமைதிகொள்கிறாள்.

ஆலயத்தில் மணி அதிர்ந்தெழ மண்ணில் வந்து விழுந்தேன். படியிறங்கியதும் மலைவிட்டிறங்கத் தொடங்கியதும் அதன் போக்கில் நிகழ்ந்தன. எல்லாமே அதனதன் போக்கில்தானே நிகழ்கின்றன - அறிவென்றும் மனமென்றும் மயங்கி நிற்கும் போது நாம் நடத்துவதாக ஒரு மயக்கம்.

ஏறுவது கடினமெனில் சரிவிறங்குவது அதனினும் அறைகூவலாக இருந்ததுபனியில் நனைந்திருந்த மண்ணில் பாறைப் பதிவுகளில் சறுக்காமல் கால்வைத்திறங்க உடல் பழகிக் கொண்டிருந்தது. இறங்கும்போது சில கிளைவழிகளில் வேகமாக இறங்க முடிந்தது. ஆனால் உயரமான பாறைகளில் இறங்கும் போது கால்மடித்து அமர்ந்து இறங்குவதே பாதுகாப்பாக இருந்தது. நதியை நெருங்கிக் கொண்டிருப்பது அணுகி வரும் பேரோசையில் தெரிந்தது. சிற்றாறுகள் அருவிகள் கடந்து, முந்தைய நாள் மூன்று மணி நேரத்தில் கடந்த தொலைவை ஒன்றரை மணிநேரத்தில் இறங்கி ருத்ரநாக் அருவிக் கரையை வந்தடைந்தோம்.

இளைப்பாற அருவிக்குளத்தில் மீண்டும் இறங்கினோம். முந்தைய தினத்தை விட நீர் தண்ணென்றிருந்ததுகுழுவினரில் சிலர் அருவியை மேலும் அணுகி குளிக்கத் தொடங்கினர். குளத்தின் பெரும்பாறையில் அமர்ந்து நீர் சிலம்புவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்பொழியும் நீர்ச்சிதறல்களில் சிறு வானவில் தெரிந்தது. மாயவில் சிறகு கொண்டது போல நீர்த்திவலைகள் ஊடே பறந்தலைந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி பெருவெள்ளப் பெருக்கின் முன், பெருமலையடுக்கத்துக்கு முன், தன் சிறு சிறகு விரித்து வண்ணங்களோடு தனக்கேயான வானைத் தயக்கமின்றி விரித்தெடுக்கும் சிற்றுயிர்.  தயக்கம் சட்டென்று அகல எழுந்து நீருக்குள் சென்றேன்

முதல் தொடலில் தீக்கதிர் தலையிறங்கியது. இடையைத் தாண்டுவதற்குள் தீயைப் பனியென்று சொன்னது. மேலும் நீருள் முன்னகர, நேற்றும் இன்றும் அற்ற ஒரு பொழுதில், சூழ்ந்து வழிந்திறங்கியது பெருந்தவத்தின் ஒரு துளி பல துளி சிறு வெள்ளமாக - ஓசைகள் அடங்கிய ஒரு தருணம் தலைக்கு மேலே கவிந்திருந்தது.  

மூச்சுக்காக தலையை வெளியே நீட்டியதும் காது வெடித்துத் திறந்தது போல ஓசைகள். ஒளியும் நீரும் வழிந்து விழிதிறக்க முடியாத சில நொடிகளுக்குப் பிறகு கால்வழியாகக் குளிர்தெரிந்தது
ஹேமா அந்தக் குளிர் நீர் சுனையில் வில்லென பின்புறம் உடல் வளைத்து நிலம்தொட்டு ஒரு கால் தூக்கி அசையாது நின்றாள். அர்ஜுனன் கையேந்திய காண்டீவம் என உடல் வளைந்திருக்க, சீறத் துடித்த நிலையில் சிலைத்திருந்தது வான்நோக்கிய அவள் சிறுபாதம். இன்ஒரு பக்கம் ‘Teach for India’ எனும் அமைப்பில் பணிபுரியும் மற்றும் ஒரு பெண் ஆர்ப்பரித்து வீழும் அருவியின் மடியில் தாவியேறி பெருநீர்ப் பொழிவைக் குழலில் தாங்கி கொற்றவையெனக் கால்மடித்து அருவியில் அமர்ந்தாள். இயற்கை ஒவ்வொருவருக்கும் உள்ளிருந்த இன்னொருவரை இழுத்து வெளியில் விட்டது


பாம்பு சட்டையை உரித்து விட்டது போல, அதுவரை எனக்கு உள்ளிருந்த தயக்கங்கள் அச்சங்கள் அங்கே கரைந்தன. அங்குதான் இப்பயணம் முழுமை கொண்டது. சிறிது தாமதமான தருணமாக இருக்கலாம்; அதுவரையிலும் சில காட்சிகளை தரிசனங்களை அதீத முன்னெச்சரிக்கையிலும் தயக்கங்களிலும் தவறவிட்டிருக்கலாம். இருந்தாலும் இப்போது மனம் உற்சாகம் கொண்டிருந்ததுபறக்கத் தெரிந்துவிட்ட பறவையின் முதல் சிறகு விரித்தல்.
ஐந்து கிலோமீட்டர் இறங்கி முடித்திருந்தோம்; இன்னும் எட்டு கிலோமீட்டர் இருந்தது. உச்சிவெயில் - உருகும் வியர்வை - களைத்த உடல் - எனில் உள்ளம் மலர்ந்திருந்தது. குழுவில் பெரும்பாலோர் விரைவாக இறங்கத் தொடங்கிவிட்டனர். மூவர் மட்டும் குழு ஒருங்கிணைப்பாளர் ஒருவருடன் சில அடி தொலைவுகளில் முன்னும் பின்னுமாக வந்து கொண்டிருந்தோம். எண்ணற்ற முகமறியா பயணிகள் இறங்க முடியாமல் தவித்து நின்ற பாறைச் சரிவுகளில் கை கொடுத்தனர். ஒவ்வொரு அடியிலும் பயணம் விரிந்து கொண்டே சென்றது.

மீண்டும் இரு நதி இணைவையும் நீர்மின்னணு நிலையத்தையும்  கடந்து பர்ஷிணியைச் சென்றடைந்தோம். அன்றிரவே தில்லி நோக்கிய பயணம்.

இறங்கும் பயணத்தில் பின்னால் சென்று மறைந்த மலைகளைப் போல அனைத்தும் நினைவுகளாகி விட்டன. இரண்டு நாட்களின் ஐந்து ஆறு மணிநேர நடைமலையேற்றம், தில்லி திரும்பிய நெடும்பயணம், சிங்கை திரும்பிய வான்பயணம், அனைத்தும்.

இந்தப் பயணம் முதல் முறையாக கூடுடைத்து வண்ணத்துப்பூச்சி சிறகு விரித்த அனுபவம். குழுவில் இருந்த ஒவ்வொரு பெண்கள் வாயிலாகவும் இன்றைய தலைமுறையின் வாழ்க்கை குறித்த பார்வையும் அவர்களது தெளிவான தெரிவுகளும் இப்பயணத்தில் நான் அறிந்து கொண்ட மற்றுமொரு முக்கியமான பகுதிஅதை விரித்தெழுத இன்னொரு தொடர் தேவைப்படும்.

சிறகுகளில் கனவுகளெனும் வண்ணம் சுமந்து காத்திருக்கிறது வண்ணத்துப்பூச்சி. கண்ணாடிக்கு வெளியே சாங்கி தளத்திலிருந்து ஓசையின்றி பறந்தேறுகிறது ஒரு விமானம் வேறொரு மலர்தேடி.

- வேறு பயணங்களில் சந்திப்போம் -