Thursday, February 25, 2021

சிங்கை குறிப்புகள் - 17 - நெய்தல் சாட்சி

சாங்கி தேவதை முனையில் நின்று கொண்டிருந்தேன். சுற்றிலும் சிறு நெய்தல் வனம் சூழ்ந்திருந்தது. குறுகிய அந்நடைவழி சென்று திறந்து கொண்ட இடம் இன்னும் பிரிட்டிஷ் காலகட்டத்திலேயே இருந்தது. யாருமே இல்லாத சாலைகளில் தனித்து நின்ற வீடுகள்; தனிமையை யாரும் தொட்டுவிடாதிருக்க  காவல் அமர்த்தப்பட்ட வீடுகள். பறவைகளின் ஒலியும் காற்றின் முணுமுணுப்பும் அன்றி அதுவரை காதில் கேட்டு வந்த கடலோசை கூட இங்கே இல்லை. மனிதர்கள் இல்லாத இடத்தில் காலம் உறைந்து போய்விடுகிறது. எந்த வீட்டுக்குள் இருந்தும் இப்போது சர் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் வெளியே வந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. 



நான் சில பாரம்பரிய மரங்களைத் தேடியே இங்கும் வந்திருந்தேன். எனவே அவற்றைத் தேடத் துவங்கினேன். கடற்கரையோரமாக நான் நடந்து வந்த அதே தொலைவை மீண்டும் எதிர்திசையில் சாலை வழியே நடந்து கடந்தால் அனைத்து மரங்களையும் கண்டு விடலாம் எனத் திட்டம். இப்பகுதி விரிந்த தோட்டங்களுக்கு நடுவில் ஒளிந்திருக்கும் கடலோரக் குடில்களும், ஒவ்வொரு குடிலில் இருந்தும் தனித்த துளிக் கடற்கரையும் கொண்டது. அரசாங்க அதிகாரிகளுக்கான இக்குடில்களும் பங்காளாக்களும் மட்டுமே அதிகம் இச்சாலையில் இருப்பதால் ஆளொழிந்தே காணப்படுகிறது. 




முதல் பாரம்பரிய மரம், நான் பலகைப்பாதையில் இருந்து வெளியேறியதுமே இடப்புறம் சென்ற ஒரு தனியார் மாளிகையின் வெளியே நின்றது. அதன் செல்வழியே காவலிடப்பட்டு தடுக்கப்பட்டிருந்தது. எனவே அதைக் காண இயலவில்லை. இரண்டாகப் பிரிந்த சாலையில் எப்புறம் பிரிவதெனப் பார்த்துக்கொண்டு நின்றேன்.



1927-ல் இதே இடத்தில் நின்று கொண்டு வெப் கில்மன்(Webb Gillman) இந்த சாங்கி பகுதியை நில அளவை செய்திருக்கிறார்.  இவரது பெயராலே கில்மன் பாராக்ஸ்(Gillman Barracks) என்ற இடமும் சிங்கப்பூரில் இருக்கிறது. அப்போது பெருமளவு சேறும் சதுப்பு நிலக்காடுகளுமாய் இருந்த இப்பகுதியை சிங்கையோடு இணைத்தது ஒரு சீரமைக்கப்படாத சாலை. அப்போது இங்கிருந்த கிராமப்புற காவல் நிலையத்துக்கு அவ்வழி இட்டுச் சென்றது. அன்று இங்கே அவர் கண்ணில் பட்டிருக்கக்கூடியவை நீர்த்தென்னை ஓலை வேய்ந்த ஒரு சில வீடுகளும், கோவில் குன்றின் மேல் நின்ற ஒரு சீனக் கோவிலும், பொதுப்பணித்துறையை சேர்ந்த அரசாங்க அலுவலகம் ஒன்றும், யூத செல்வந்தர் ஆகிய மேயரின் (Sir Manasseh Meyer) ஆடம்பர மாளிகையும் ஆக இருந்திருக்கும். 





கில்மனின் பார்வை தொட்ட இடங்களையெல்லாம் காடுகள் வெட்டி, சேறு அகற்றி செம்மைப்படுத்த இந்திய மற்றும் சீன கூலித் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். சதுப்பு நிலத்தின் வண்டுகள், பாம்புகள், கொசு, வெப்பம், அவ்வப்போது கொட்டித் தீர்த்து நிலத்தை மேலும் சதுப்பாக்கும் மழை என அனைத்திலும் பாடுபட்டு மூன்றாண்டுகளில் பாதைகளை சீராக்கினார்கள்.  1928-ல் இங்கு சாங்கி ரயில் பாதைக்கான வேலை துவங்கியது. படகுத் துறையும் கட்டப்பட்டு அதன் வழியாக, புலாவ் உபினிலிருந்து பாறைக்கற்கள் வெட்டி எடுத்து வரப்பட்டன. புது சாலை, குவாரி சாலை என்றெல்லாம் இங்கு நடந்த வேலைகளுக்கொண்டு வைக்கப்பட்ட பெயர்கள் பின்னர் நேத்தராவன் சாலை(Netheravon Road),  கிரான்வெல் சாலை (Cranwell Road) என்றெல்லாம் பிரிட்டனில் இருந்த சாலைகளின் பெயர்களைக் கொண்டன. ஜப்பானியரிகளின் பார்வை கிழக்காசியா முழுவதும் படரத் துவங்கியதும் சிங்கையின் ராணுவ பாதுகாப்பு மையமாக, அது தொடர்பான கட்டிடங்களோடு சாங்கியின் முகம் மாறியது. 

இந்த நேத்தராவன் சாலையில்தான் நடக்கத் துவங்கினேன். Shorea gibbosaவைத்தேடி நடந்தேன். தமர் ஹிடம் கஜாஹ் (Damar Hitam Gajah) என்று மலேய மொழியில் சொல்லப்படும் இம்மரம்(Shorea gibbosa) சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளை சேர்ந்த இயல் மரம். மழைக்காடுகளில் வளரும் இது மிக உயரமாக வளரக்கூடியது. போர்னியோ தீவில் 81மீ (266அடி) உயரம் கொண்ட இதே மரம் இருக்கிறதாம். நான் நடந்து சென்ற சாலையில் அந்த வேளையில் என்னைத் தவிர யாருமில்லை. ஒரு மலைப்பாதை போல சற்றே ஏற்றமாக ஏறிக்கொண்டிருந்தது. ஒரு நீள்வளையம் போல அந்த இடத்தில் சாலை இரண்டாகப் பிரிந்து மீண்டும் சேர்ந்தது. அந்த இடத்தில்தான் எங்கோ நிற்கிறது அம்மரம் என வரைபடம் சொன்னது. பத்துப் பதினைந்து நிமிடம் அவ்விடத்தையே சுற்றி வந்த பிறகு, திடீரென சாலைக்கும், அந்த இடத்துக்கும், கீழே இருந்த வேறெந்த தாவரத்துக்கும் சம்பந்தம் இல்லாது உயர்ந்து நின்ற ஒரு மரம் கண்ணில் பட்டது. நான் நடந்து கொண்டிருந்த சாலையிலேயே ஒரு பேருந்து நிறுத்தத்தை ஒட்டி இருந்தது. அருகில் சென்று தகவற் பலகையில் அம்மரம் குறித்த தகவல்களை வாசித்தேன். 

Shorea gibbosa


Damar Hitam Gajah

இம்மரம் "டிப்டீரோகார்ப் (Dipterocarp)" என்ற சிறு வகைமையைச் சேர்ந்தது. அதன் சிறப்பு என்னவென்றால் இவை மிக நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது, கண்டங்கள் பிரிந்து விலகுவதற்கு முன்னர் நிலம் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் இருந்து வருபவை. உதாரணமாக ஆசியக் காடுகளைச் சேர்ந்த   டிப்டீரோகார்ப் மரங்களும் மடகாஸ்கர் தீவில் உள்ள டிப்டீரோகார்ப் மரங்களும் ஒரே வழிவந்தவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சிங்கையில் ஜூரோங் பகுதியில் இருந்த சதுப்புக் காடுகளும் டிப்டீரோகார்ப் வனங்கள் என்றே சொல்லப்படுகின்றன.  அந்த மரத்தை பார்ப்பதன் வழியாக பல லட்சம் ஆண்டுகள் முன்னிருந்த இம்மரத்தின் மூதாதை நின்றிருந்த நிலத்தை அறிந்து கொண்ட ஒரு தருணத்தை உணர்ந்தேன். ஒற்றைப் புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறி விரிந்து செல்லும் பிரபஞ்சம் என்பதை தூலமாக பார்ப்பது போல தோன்றியது.

ஒரு முறை தகவல் பலகை கண்ணில் பட்டு விட்டதும் அடுத்தடுத்து அவற்றைக் கண்கள் அடையாளம் கண்டன. அங்கேயே ஐம்பது அடிக்குள் சற்று பள்ளத்தில் சென்ற இணை சாலையில் இன்னொரு மரம் இருந்தது. ஒரு பேருருவ யட்சனைப் போல ஆறுகரம் விரித்து நின்றது அணிற்பலா எனப் பெயர்கொண்ட இம்மரம். இதன் பழங்கள் குறும்பலாவைப் போல இருப்பதால் "Squirrels Jack" (Artocarpus kemando - மலேய மொழியில் Pudu )என்ற பெயர்.  Artocarpus எல்லாமே பலா குடும்பத்தைச் சார்ந்தவையாம், ஆனால் இந்த வகை சிங்கையில் சற்று அரிதான மரம்.

Artocarpus kemando

அடுத்ததாக காண வேண்டிய மரம் சாங்கி சிறையில் இருக்க வேண்டிய மரம் என்றே சொல்லலாம். கழுத்தை நெரிக்கும் அத்தி மரம்( Ficus stricta - Strangling fig). அது மற்றொரு மரத்தின் மேற்பகுதியில் முளைக்க ஆரம்பித்து வேர்களைக் கொண்டு முதல் மரத்தின் உடலை முற்றிலும் நெரித்து வளரும். காலப்போக்கில் அந்த ஆதி மரம் உயிர் விடவே நேரும். இதுவும் ஒரு சுற்றுச்சுவருக்கு அப்பால்  இருந்தது. சற்றுத் தொலைவில் இருந்தே இந்தப் அமுக்குவான் பேயை படம் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். சாங்கி என்றதும் ஆவியின் நினைவு வருவதும் இயல்பானதே. 

Ficus stricta - Strangling fig

அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு ஒரே ஒரு பேருந்துதான் இருந்தது. பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து வரலாற்றில் இருந்து எழுந்து வரவேண்டிய பேருந்துக்காக காத்திருந்தேன். யாருமற்ற சாலையில் ஒரு பேருந்துக்கு காத்திருக்கும் போது கூட, வெயிலில்  ஒற்றறியும் பார்வைகளையும், காற்றில் உளவு கேட்கும் காதுகளையும் உணர்ந்து புலன்கள் சிலிர்த்துக் கொள்கிறது.

நான் நின்ற இடத்துக்கு சற்றுத் தொலைவில் ஒரு மேட்டில் ஒரு ஆங்கிலேய பாணி கட்டிடம் கண்ணில் பட்டது - பழைய சாங்கி மருத்துவமனை. 

பழைய சாங்கி மருத்துவமனை




இக்கட்டிடமும் சாங்கியில் சிந்தப்பட்ட ரத்தத்தின் வாடை கொண்டது, கிச்சேனெர் பாராக்ஸ் (Kitchener Barracks) என்ற ராணுவ கட்டிடமாக முதலில் இருந்தது. 1935-ல் கட்டப்பட்ட இக்கட்டிடம் ராயல் விமானப் படையின் மருத்துவமனையாயிற்று. இங்கும் ஜப்பானியர் ஆட்சி காலத்தில் கொடூரமான தண்டனைகள் நிறைவேற்றப் பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் இறந்தவர்களின் அலைவுறும் ஆவிகள் இன்றும் அலறல்களாக, நடமாட்டமாக இக்கைவிடப்பட்ட கட்டிடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இக்கட்டிடம் பல தொலைக்காட்சித் தொடர்களில் இடம்பெற்றிருக்கிறது.

முன்னர் தெலாக் குராவ் நடையில் நாம் பார்த்த சூக் சிங் (Sook Ching) படுகொலைகள் நாடெங்கும் நடந்த படுகளங்களில் முதலாவது சாங்கி கடற்கரையிலேதான் நடந்திருக்கிறது. சாங்கி கடற்கரையிலும் 66 சீன ஆண்கள் கெம்பிதாய் படையினரால் கொல்லப்பட்டனர். கயிறுகளால் கட்டப்பட்டு கடலை நோக்கி வரிசையாக நடக்கும் படி செய்து, நீரை நெருங்கியதும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். நீரில் விழுந்து தப்பிப் பிழைக்க முயன்றோரும் பயோநெட் கத்திமுனைகளால் குத்தப்பட்டு கடலில் வீழ்த்தப்பட்டனர். எனவே சாங்கி கடற்கரையின் சில பகுதிகளிலும் இன்றும் அமானுஷ்ய நடமாட்டங்களை கண்டதாக பலர் சொல்வதுண்டு.

 1942 பிப்ரவரி ஏழாம் தேதி ஜப்பானியர்கள் புலாவ் உபின் தீவைக் கைப்பற்றினார்கள். ஆனால் சாங்கியை கைப்பற்ற முனையவில்லை. ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தி இக்கரையின் காவலை பலப்படுத்தினார்கள். ஆனால் அது கவனத்தை திசை திருப்பும் உத்தி என்பது வெகு விரைவிலேயே தெரிந்தது. இந்தக் கிழக்குப் பகுதியில் நடமாட்டம் காட்டிக்கொண்டே எதிர்பாராது சிங்கப்பூரின் மேற்குப் புறத்திலிருந்து  ஜப்பானியப் படைகள் தாக்கத் துவங்கின. இங்கிருந்த படைகள் அனைத்தும் ஏற்கனவே எதிரிகளை எதிர்கொள்ளத்தொடங்கிவிட்ட மேற்குப்புறத்துக்கும் நகரமையத்துக்கும் அனுப்பப்பட்டனர். சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் சரணடைந்ததும் பிப்ரவரி மாத இறுதியில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போர்க்கைதிகள் சாங்கிக்கு கொண்டு வந்து சிறை வைக்கப்பட்டனர்.  மேலும் தாய்லாந்து பர்மாவை இணைக்கும் மரண ரயில் பாதை என இன்றழைக்கப்படும் வேலைக்கு பலரும் அனுப்பி வைக்கப்பட்டனர். திரும்பும் வழியில்லாத ஒற்றை வழி மரணப் பாதையாகவே பலருக்கும் அது அமைந்தது.


 

போர்க்கைதிகளைக் கொண்டே ஒரு விமான ஓடுதளத்தையும் ஜப்பானியர் அமைத்தனர். அப்போது இவர்கள் சாங்கியின் தலைவிதியை எப்போதைக்குமாக மாற்றுவதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வருடத்துக்கு மேல் எடுத்துக்கொண்ட அப்பணியின் நிறைவில் 1944-ல் இங்கிருந்து முதல் முறையாக ஒரு விமானம் வானோக்கி எழுந்தது. மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு சிங்கப்பூர் வந்தபோது இந்த ஓடுதளத்தை மேலும் விரிவாக்கி பயன்படுத்திக்கொண்டனர். அதுவே ராயல் ஏர் போர்ஸ்-ன்(Royal Air Force (RAF) அடித்தளமாயிற்று. சாங்கி விண்ணளக்க தொடங்கியது. 1968-ல் பிரிட்டிஷ் படைகள் சிங்கப்பூரில் இருந்து விலகின. செலெட்டர் விமான தளம் (Seletar Air Base) 1969ல் சிங்கப்பூர் அரசின் வசம் வந்தது. ஆனால் RAF ஆங்கிலேயர் வசமே இருந்தது. 1971-ல் தான் ராயல் ஏர் போர்ஸ் சிங்கப்பூர் ஆயுதப் படையின் கைக்கு வந்தது. 



பேருந்து வந்துவிடவே அதில் ஏறி சாங்கியை விட்டு வெளியேறத் தொடங்கினேன். சாங்கி ராமர் கோவிலில் இருந்து நகர் நோக்கி செல்லும் வழியில் இந்த விமானப் படைத்தளங்களையும், விமானப் படை அலுவலகங்களையும் காண முடியும். நுழைய அனுமதியில்லாத பகுதியில் நுழைந்துவிட்டு, எங்கிருந்தோ மறைந்து நம்மைக் கண்காணிக்கும் பார்வைகள் உடலில் உணரக் கூடிய விதமாகவே இப்பகுதியின் பயணம் எப்போதும் இருந்திருக்கிறது. 

சாங்கியில் விமான நிலையத்தையும் இந்த கடற்கரையையும் தவிர புகழ்பெற்ற மற்றொரு இடம், சாங்கி சிறை.

சாங்கி சிறை

இன்றும் சிங்கையின் குற்றவாளிகள் அடைக்கப்படும்  இச்சிறை 1936-ல் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் சிங்கப்பூரைக் கைப்பற்றிய பின் ஐம்பதாயிரம் போர்க்கைதிகள் இங்கு அடைபட்டிருந்தனர். தற்போது சாங்கி சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறை மிகவும் கடுமையான கண்காணிப்பு கொண்டதும், தொழில்நுட்ப ரீதியில் மிகவும் முன்னேறியதும் ஆன ஒன்று என்கிறார்கள். 

கண்காணிப்புப் பணிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சாங்கி சிறை மிகவும் முன்னணியில் இருக்கிறது. முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்பை அதிகரித்து அதற்கான காவல் பணியாளர்களை வேறு  பணிகளுக்கு மாற்றியிருக்கிறார்கள். அதே போல குற்றவாளிகளின் நடவடிக்கைகள், முகமாற்றங்கள், உடல் மொழி போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து ஏதேனும் அதீதங்களோ, அல்லது நடத்தை மாறுபாடுகளோ தெரியும் போது எச்சரிக்கை செய்யும் படி 'அவதார்' என்னும் தொழிநுட்பமும் பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம் குற்றவாளிகளின் தற்கொலை முயற்சிகள், அல்லது வன்முறை மனநிலை ஆகியவை முன்கூட்டியே கணிக்கப்படுகிறது. 


சாங்கி சிறையில் நீண்ட கால தண்டனை அடைந்தோரும், மரண தண்டனை விதிக்கப்பட்டோரும் கடும் குற்றங்கள் புரிந்தவர்களும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதவிர  கடைகளில் பொருட்களைத் திருடுவது, பொது இடங்களில் அத்துமீறி நடந்து கொள்வது போன்ற குற்றங்களுக்கும் சிறை  தண்டனை வரை உண்டு என்பதால் சிறை சென்று மீள்வோர் இயல்பான சமூக வாழ்வில் மீண்டு வந்து அமைவதற்கான திட்டங்களும் இங்கே திறமையாக செயல்படுத்தப்படுகிறது. 


2006-ல் நான் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் மகன் ஏதோ ஒரு காரணத்துக்காக சிறையில் இருந்தார். முதியவரான தந்தை எங்களிடம் வீட்டு வாடகை வசூலித்து விட்டு தனது மகனைப் பார்க்க செல்வதாக சொல்வார். அவர் மகனுக்கு விடுதலைக்கு சில வாரங்களே இருந்த நிலையில் எங்கோ வேலை கிடைத்திருப்பதையும் ஒரு முறை மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டார். 

வேலை நிமித்தம் அலுவலகத்தில் தரப்படும் ஆளுமைப் பயிற்சிகளில் ஒரு முறை வந்த பயிற்சியாளர் சாங்கி சிறையில் இளம் குற்றவாளிகளுக்கு வழக்கமாக ஆளுமைத் திறன் பயிற்சிகள் கொடுப்பவர். மிகவும் இளவயதில் சிறை செல்வோரின் மனநிலை, மற்றும் குடும்ப சூழல் காரணமாக புரிந்த குற்றத்தின் பேரில் எந்தக் குற்றவுணர்வும் இன்றி பலரும் இருப்பது போன்ற சில உளவியல் ரீதியான கருத்துகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். இன்றும் வாரம் இருமுறை நிகழும் பிரம்படி குறித்தும் அவர் கூறிய தகவல்களே சிறையை அஞ்சப் போதுமானதாக இருந்தது. 



 நேற்றைய பார்வையில் மிக அழகாகத் தெரிந்த நீலமும் பசுமையும் நிறைந்த கடற்கரை இன்று வரலாற்றின்  செங்கருமை பூசித்தெரிகின்றன. காட்சி என்பதும் காணும் மனதைப் பொறுத்ததுதானே. அதோ ஒரு காரில் வந்திறங்கி திருமணத்துக்கான வெள்ளை ஆடை பால் போல பொங்கி வழிய நடக்கும் இளம்பெண், அவளோடு இணையாக செல்லும் அந்த இளைஞன்,  திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்புக்கென சாங்கி கடற்கரை நோக்கி செல்லும் அந்த ஜோடிக்கு இந்தக் கட்டிடத்தின், இந்த இடத்தின் அதிர்வுகள் வேறுவிதமாக இருக்கலாம்.

The Loyang Rock / Squance Rock / Batu Putih

இந்தக் கடற்கரையோரப் பாறை பது புதி கம்போங் (Batu Putih Kampong) என்ற மலேய கிராமம் இருந்ததன் அடையாளம் என்கிறார்கள். 200 வருடங்களாகவேனும் இந்தப் பாறை தனித்து இருக்கிறது.  அனைத்துக்கும் சாட்சியாக. கடலும் காற்றும் அனுதினம் புதிதெனத் தோன்ற பாறை மட்டும் வரலாறு போலத் தோன்றுகிறது.

References:

https://www.aasingapore.com/articles/changi-a-presentday-perspective-and-its-history/

https://remembersingapore.org/2013/09/20/colonial-changi-history/


முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 16 - நெய்தல் நடை

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 18 - சிங்கையின் சிறகுகள்

Tuesday, February 23, 2021

சிங்கை குறிப்புகள் - 16 - நெய்தல் நடை

இது மற்றொரு காலை நடை, சாங்கி கடற்கரைப் பகுதி.

சாங்கி கடற்கரை

 

ஏன் இத்தனை நடை குறித்த பதிவுகள் என யோசித்துப் பார்த்தால், இந்நாடு, நடப்பவர்களுக்கு செய்து கொடுத்திருக்கும் வசதி ஒரு மிக முக்கியமான காரணம். இரண்டாவது முக்கிய காரணம் ஒரு ஊரை அறிந்து கொள்வதற்கு நடையைப் போல சிறந்த வேறொரு வழி இல்லை. காலறிய கண்ணறியும், கண்ணறிய கனவு அறியும். கனவில் நிகழ்களங்களாக வரத் துவங்கிய  நிலமே நாம் "வாழும்" ஊராகிறது.  இதற்கும் எத்தனை காலம் அவ்வூரில் வாழ்ந்தோம் என்பதற்கும்  தொடர்பிருக்க வேண்டுமென்பதில்லை. மிகக் குறைந்த காலமே வாழ்ந்த ஊர் கூட மனதுக்கு மிக அணுக்கமாகி இருக்கிறது, அதுவும் இதே போன்ற நடை அனுபவத்தால்தான் எனலாம். 

சென்ற நவம்பரில், ஒரு வார விடுப்பும், கொரோனாவால் அனைத்து நாடுகள் கதவடைப்பும் ஒன்று சேர்ந்து கொள்ள, நான் தினமும் அதிகாலை நடைக்குக் கிளம்பினேன். சற்றுத் தொலைவில் உள்ள இடங்கள் என்றால் குறிப்பிட்ட இடம் வரை பேருந்தில் சென்று விட்டுப் பிறகு நடை. முழுமையும் நடந்தும் செல்லலாம்.   அப்படி ஒரு எண்ணமும் இருக்கிறது - ஒரு கரையிலிருந்து மறுகரை வரையிலான நடை செல்வதான திட்டம். அடுத்த ஒரு நீண்ட விடுமுறையில் முயற்சிக்கவேண்டும். 

அப்படி ஒரு காலைப் பொழுதில் சாங்கி கடற்புறம் காணச் சென்றேன். "சாங்கி" என்னும் பெயரை பலரும் விமான நிலையத்தோடு சேர்த்துக் கேள்விப்பட்டிருக்கலாம். சிங்கப்பூர் தீவின் கிழக்கு முனை. ஒவ்வொரு முறையும் விமானம் தரையிறங்கத் தொடங்கும் போது சற்றே பிசகினால் ஒரு சக்கரம் மலேசியாவிலோ இந்தோனேசியாவிலோ இறங்கிவிடக்கூடும் எனும் அளவுக்கு அண்டைத் தீவுகளை அருகில் காண முடியும். சிங்கப்பூர் ஒரு கிழக்கு நோக்கிய ஆமை எனக்கொண்டால் அதன் மூக்கில் இருக்கிறது விமான நிலையம். நான் சென்ற இந்த நடைப்பகுதி ஆமையின் தலையின் மேற்புறம். சிங்கப்பூரைச் சேர்ந்த பெரிய தீவுகளில் ஒன்றான புலாவ் உபின்-ஐ (Pulau Ubin) நோக்கிய வடகிழக்குப் புற கடற்கரை. (Pulau - தீவு)

அப்பகுதிக்கு பேருந்தில் பயணம் செய்யும் நேரத்தில் சாங்கியின் அறியப்பட்ட வரலாற்றை கொஞ்சம் பார்க்கலாம். சாங்கி பகுதிக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. சாங்கி எனும் பெயர் இங்கு அதிகம் நின்றிருந்த செங்கை (Chengai - Neobalanocarpus heimii) மரத்தினால் வந்திருக்கலாம் என்கிறார்கள்.  மலேயாவின் தென் முனையில் ஒரு சிறு பொட்டாக இருந்த சிங்கப்பூரைத் தனித்த அடையாளத்தோடு உலக வரைபடத்தில் முதலில் பெயர் குறிப்பிட்டவர் என "இமானுவல் டீ கோடினோ எரேடியா" (Emanuel Godinho de Erédia 1563-1623) என்னும் மலேய-போர்த்துகீசியரைக் குறிப்பிடுகிறார்கள். 

எரேடியா வரைந்த தற்படம்

இவர் தாய் இந்தோனேசியாவின் சுலாவெசி (Sulawesi) பகுதியை சேர்ந்த இளவரசி; தந்தை போர்த்துகீசிய மிஷனரி சேவைகளுக்காக சுலாவெசி வந்த இடத்தில் பதினைந்து வயதான இளவரசியைக் காதலித்து  மணம் புரிந்துகொண்டு மலாக்கா சென்று குடியேறிவிட்டார். இந்தோனேசிய - போர்த்துகீசிய - மலேய வேர்களைக் கொண்ட  எரேடியா (E. G. de Eredia), ஒரு நிலவரைபடநிபுணர். கோவாவில் (Goa) வானவியல், நிலவரைபடவியல், கணிதம் கற்றிருக்கிறார். இவர் ஸ்பெயினின் அரசுக்காக கிழக்காசிய நாடுகளின் வரைபடங்களைத் தயாரித்தார் எனப்படுகிறது. இவர் 1613-ல் எழுதிய  "Declaraçam de Malaca e da India Meridional com Cathay" என்ற இந்திய, மலேயா, சீனாவைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய நூலில் இடம்பெற்ற வரைபடத்தில் சிங்கப்பூர் தீவின்  பல பகுதிகள் பெயர்களோடு குறிப்பிடப்படுகின்றன.   

இந்த கேத்தே பசிபிக்(Cathay Pacific) போன்றவற்றில் நாம் கேள்விப்படும் கேத்தே எனும் சொல் ஐரோப்பியர்களால் வட சீனாவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் 'கித்தே' அல்லது 'கித்தான்' (Khitay/Khitan) எனப்படும் மங்கோலிய பழங்குடி நாடோடிக்குழுவினர்  மஞ்சூரியா மற்றும் வடக்கு சீனா பகுதிகளை கைப்பற்றி 200 ஆண்டுகாலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த இனத்தின் பெயரின் மரூஉ கேத்தே (Cathay) எனப்படுகிறது.

1900க்கு முன்னர் வரையபட்ட தென்கிழக்கு ஆசியப் பகுதியின் வேறு வரைபடங்கள் எனப்பார்த்தால், பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கடல்வழிகளைக் காட்டும், செல்டனின் சீனா வரைபடம் (Selden Map of China) எனும் வரைபடம் ஒன்றில் சீனாவின் குவாங்ஜோவ் (Guangzhou) பகுதியில் தொடங்கி கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளும், ஜப்பானும், சிங்கப்பூரைச் சுற்றிலும் உள்ள பிரதேசங்களும், கடல் வழிகளும், காட்டப்பட்டிருக்கிறது. அதிக கப்பல் போக்குவரத்து கொண்ட பகுதியாகவே இந்த ஜோஹோர் கடல்சந்தி இருந்திருக்கிறது. 

செல்டனின் வரைபடம் 

சென்ற வருடம் "1867-க்கு முந்தைய சிங்கப்பூர்" என்ற கண்காட்சியில் இந்த வரைபடமும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதைத் தவிர கிழக்கிந்திய கம்பெனியின் வாணிபத்தை விரிவுபடுத்த, முக்கியமான கிழக்காசிய துறைமுகம் ஒன்றை கண்டடைவதற்காக ராஃபில்ஸ் கேட்டுக்கொண்டதன்படி தயாரிக்கப்பட்ட "சிங்கப்பூர் மேப்" விரிவாக சிங்கப்பூர் துறைமுகத்தை ஆவணப் படுத்தியது(கல்கத்தா ஜர்னல் இந்தியா நூலில் இருந்து எடுக்கப்பட்டது). 

கல்கத்தா ஜர்னல் இந்தியாவிலிருந்து - சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம்

1821-ல் சிங்கப்பூரின் கடல் எல்லைகளை விரிவாக ஆராய்ந்து கேப்டன் ஜேம்ஸ் பிராங்க்ளின் (Captain James Franklin)  மற்றும் பிரான்சிஸ் பெர்னார்ட் (Francis Bernard) ஆகியோர் முதல் விரிவான சரியான அளவுகோல்களோடு கூடியஒரு சிங்கையின் வரைபடத்தை வெளியிட்டனர். சிங்கப்பூரின் பல இடங்களுக்கு அவர்களே பெயரும் வைத்து விட்டனர். உதாரணமாக ஏற்கனவே மலாய் மொழியில் சாங்கி எனப் பெயர் இருந்த இடத்திற்கு 'பிராங்க்ளின் முனை' என்றே பெயரிட்டுக் கொண்டனர். 

பிராங்க்ளின் தயாரித்த பென்சிலால் வரைந்த வரைபடம்.

இன்னொன்று ப்யுட் மேப் (Bute map) எனப்படும் 1820-களின் வரைபடம் சிங்கப்பூரின் நிலஅமைப்பை விரிவாக பதிவு செய்த முதல் பதிவு எனலாம். இது ஆங்கிலேயர்கள் ஆட்சி துவங்கிய பிறகு வெளிவந்ததென்பதால் ஸ்டாம்போர்ட் கால்வாய் (ஆர்ச்சர்ட் சாலையில் வண்ணார்கள் துவைத்த அதே சிற்றோடை) முதல் கம்போங் கிளாம் வரை, அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த பாலங்கள் வரை அனைத்தும் இடம்பெறுகின்றன. 

ப்யுட் மேப்

ஆனால் மிகவும் குறிப்பாக சிங்கைத் தீவின் இடங்களின் பெயர்களைப் பதிவு செய்த வகையில் எரேடியாவின் வரைபடம் முக்கியம் பெறுகிறது.  எரேடியாவின் படத்தில் அவர் சாங்கியையும் குறிப்பிட்டிருப்பதனால் அவரது படத்தை விரிவாகப் பார்ப்போம்.

எரேடியாவின் வரைபடம் 


இவரது மேப் இன்று நாம் வழக்கமாகக் காண்பதைப் போலல்லாமல் தலைகீழானது, தெற்கு மேலேயும். வடக்கு கீழேயும் உள்ள வரைபடம். அதனால் மலேசியாவின் தென்முனைப்புள்ளியான சிங்கப்பூர் இப்படத்தில் தலைக்கு மேலே அமர்ந்திருக்கிறது.ஜோஹோர் நதியின் முகத்துவாரம் என "சிங்கப்பூரா (SINCAPURA)" காட்டப்படுகிறது. புலோவ் சாங்கி (Pulochagni) என ஒரு சிறு தீவும் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது.   1604-ல் வரையப்பட்ட இப்படத்தில் இன்றைய பகுதிகளோடு அடையாளம் காணக்கூடிய இடங்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. சிங்கப்பூரா (Singcapura) என சிங்கப்பூர் அடையாளப் படுத்தப்படும் இப்படத்தில்,  தானா மேரா - இன்றும் அதே பெயரில்(Tanamera - Tanah Merah), சுனே போடோ - பெடோக்(இன்று) (Sunebodo - Sungie Bedok), டேன்ஜோன் ரூ - தஞ்சோங் ரூ(இன்று) (Tanjon Ru - Tanjong Rhu) என பல இடங்களும், ஸபேண்டரியா  (Xabanderia / Shanbandahar), எனக் கடல்துறைமுகக் காப்பாளரின் இருப்பிடமும் காட்டப்பட்டிருக்கிறது. 1600களிலேயே இங்கு ஒரு துறைமுகம் இருந்ததை இதில் இருந்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.  

எரேடியாவின் வரைபடம் - சிங்கை Source: historydelocalized.blogspot.com/

1800-களில் கொசுக்கடி நிறைந்த சேற்றுப் பகுதியாகவும் சில தென்னந்தோப்புகளும் நிறைந்த இப்பகுதி 1845 முதலாகவே கடலோரம் இளைப்பாறும் வீடுகளும், ஆங்கிலேய அரசினர் தங்கும் கடலோர விடுதிகளும் கொண்ட உல்லாச கடற்கரையாக மாறத் துவங்கியது. சாங்கி பேட்டரி குன்று(Battery hill), தேவதைமுனைக் குன்று (Fairy point hill), சாங்கி குன்று (Changi hill) என 3 குன்றுகளோடு சேர்ந்த கடற்கரைப் பகுதி. 1900-களில் ஜோஹோர் பகுதியைச் சேர்ந்த காடுகளில் இருந்து சிறு தொலைவே என்பதால் கடலில் சிறுதூரம் நீந்தி வந்து புலிகள் இங்கு குட்டிகளை ஈன்று சென்ற கதைகளும் இருக்கின்றன. இங்கும் அருகில் உள்ள புலாவ் உபின் தீவிலும் எளிதில் கிடைத்த காட்டுப்பன்றி போன்ற வேட்டை உணவும் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். 

சாங்கி கிராமம் (Changi Village) எனப்படும் இப்பகுதியில் தான் இன்றும் பல கடற்கரை உல்லாச விடுதிகள் அமைந்திருக்கின்றன. ஸ்டேகேஷன் (Staycation) என்று இந்த தசாப்தத்தில் அகராதிகளில் இடம் பெற்ற சொல் குறிக்கும் வெளியூர்களுக்கு செல்லாமல் உள்ளூரிலேயே நாட்களை செலவிடும் விடுமுறை இப்பகுதிகளில் சிங்கப்பூரர்களிடையே மிகவும் பிரபலம்.  அதற்கான மனநிலையையும் சூழ்நிலையையும் ஏற்படுத்தித் தருகிறது இந்த கடற்கரைப் பகுதி.

இந்தச் சாங்கி கடற்கரைக்கு அருகே அமைந்த ராமர் கோவில் அருகே இறங்கி எனது காலை நடையைத் துவக்கினேன். மரத்தடியில் ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்த இந்த ராமர் கோவிலை எடுத்து ஆலயமாகக் கட்டியவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய ராம் நாயுடு எனும் இந்தியர். இக்கோவிலில் புத்தருக்கும், குவான் யின் (ஆர்ச்சரட் சாலை சியான் டெக் ட்ங் ஆலயத்தில் இருக்கும் அதே கருணையின் தேவி) எனப்படும் சீன தெய்வத்துக்கும் சன்னதிகள் இருக்கின்றன. பல சீனர்களும் இங்கு வழிபட வருகிறார்கள்.

ஸ்ரீ ராமர் கோவில்

நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் வீண் என்று நொடிமுள் போல விடாது ஓடும் சிங்கப்பூர் வாழ்வில் இருந்து விலகி சற்றே சோம்பல் பூசிய பகுதியாக இதைப் பார்க்க முடிகிறது. வீட்டருகே உள்ள கிழக்கு கடற்கரை சென்றால் கூட கைக்கடிகாரத்தைப் பார்த்த படி, மணித்துளிகளைக் கணக்கிடும் செயலிகளை அணிந்தபடி கடற்கரையில் நடப்போரையே அதிகம் காண முடியும். காலை ஏழு மணிக்கு இப்பகுதி எங்கும் அமைதியில் தோய்ந்திருக்கிறது. கடல் இன்னும் கண்ணில் படவில்லை. பூங்காவாகத் தெரிந்த ஒரு பகுதியை நோக்கி அதில் தெரிந்த சிங்கப்பூர் நெய்தல் நில அடையாளங்களை (மெலிந்த தென்னைகள், சீரான நடைபாதை, அங்சானா மரங்கள்) கண்ணில் கண்டு அதை நோக்கி நடந்து சென்றேன்.  

சாங்கி முனை படகுத்துறைக்கான(Changi Point Ferry Terminal) வழிக்குறிப்புகள் ஆங்காங்கே கண்ணில்பட்டன. நான் நடந்து சென்ற இடத்தில் இருந்து கரை ஒரு நீண்ட வாளென  கடலுக்குள் சிறிது தூரம் நீண்டு சென்றது.  அதில் சில இளம் இயல்வாகையும் வேங்கை மரங்களும் நிழல் படிந்த இருக்கைகளில் ஒரு பெண்ணும் அவளது நாய்க்குட்டியும் தவிர யாருமில்லை. 

சாங்கி முனை


மறுபுறம் விலகிச் சென்ற ஒரு பாலத்தைக் கடந்து, டீசல் வாடை நிறைந்த படகுத்துறையின் கட்டிடத்தை சுற்றிக்கொண்டு,  சாங்கி முனை கடற்கரை நடைவழிக்கு(Changi Point Coastal Walk) வந்து சேர்ந்தேன். இங்கிருந்து எதிர்க்கரையெனத் தெரியும் புலாவ் உபின் தீவுக்கு படகுகளை இயக்கும் சிறிய படகுத்துறை இது.  மலேசியத் தீவுகளுக்கும் படகுகள் இங்கிருந்து செல்லும், ஆனால் கொரோனா காலம் ஆதலால் கூட்டம் அதிகமில்லை.

சாங்கி முனை நடை என்பது கடற்கரையோரமாகவே செல்லும் ஒரு இரண்டு கிலோமீட்டர் நடை வழி. அதையே ஆறு பகுதிகளாக பிரித்து அடையாளமிட்டு வைத்திருக்கிறார்கள். தொடக்கத்தில் ஒரு சிறிய நிழற்கூரை மண்டபத்தில் நின்று அப்பகுதியின் வரைபடத்தைப் பார்த்துகொண்டேன். சிங்கையில் எங்கேயும் வழி தவற ஆசைப்பட்டால் கூட தொலைந்து போக வழியே கிடையாது. நான் பார்த்துக்கொண்டது, நான் காணவேண்டிய மரங்கள் நிற்கும் பகுதிக்கு எவ்வழியே செல்லவேண்டும் என்பதைத்தான். 



இந்த மண்டபத்துக்கு அருகே ஒரு புறம் கடல் லெட்டூஸ் (Scaevola taccada) எனப்படும் ஹவாய் தீவுகளைச் சேர்ந்த தாவரங்கள் நின்று கொண்டிருந்தன.  இதன் பூக்கள் பாதிமலர் போல இருக்கும் என இணையத்தில் பார்த்திருந்தேன் (மலர்ந்தும் மலராத பாதிமலர் போல அல்ல,மலர்ந்தும் பாதிமலர்;  ஒரு மலரை பாதியாக வெட்டியது போல), ஆனால் அப்போது அந்தப் பாதியும் மலரவில்லை. 


Sea Lettuce - Scaevola taccada
மலர்ந்தும் பாதிமலர் 



இடப்புறம் ஒரு ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடம் - அரசு சேவை சங்கம் (Civil Service Club), அதன் பின்புறம் வேலைகளுக்கு அப்பால் தெரிந்தது.  நீண்ட பலகைகள் பதித்த பாதை (Boardwalk) இறங்கியும் எறியும் சென்றது. கடற்காற்றில் உப்புபாரித்து கருவண்ணம் ஏற்ற பலகைகள். ஊடே ஓடி மறையும் நிறம் மாறும் பல்லிகள். வலப்புறத்தில் கடல் இளநீல வண்ணம் முதல் எழுந்து வரும் கதிர் ஒளியில் கண்கூசும் வெண்மை வரை பலவண்ணங்களிலாகத் தெரிந்தது.   

Boardwalk


வடக்கு நோக்கி நடந்து கொண்டிருந்த பலகைப் பாதை ஓரிடத்தில் மேற்கு நோக்கி திரும்பியது. அத் திருப்பத்தில் பல நாரைகள் கழுத்தை நீட்டிக் கொண்டு நிற்பது போல கடலில் சிறுபடகுகள் கூட்டம். சாங்கி படகோட்டும் சங்கம்(Changi Sailing Club) அருகே இருக்கிறது என நினைவு படுத்தியது அக்கடல் பறவைகள். 


Changi Sailing Club


பாதையை ஒட்டி சிறிதளவே நீண்டிருந்த மணலில் பச்சை நிற வண்ணத்துப்பூச்சி சிறகு குவித்து விரிக்கத் தயாரான நிலையில் அமர்ந்திருப்பது போல இதய வடிவ இலைகளும் ஊடே தலை நிமிர்த்தி சிரிக்கும் ஊதா நிற மலர்களும் அந்த மணல் வெயிலில் விரிந்து கிடந்த காலை வெயிலை மிக அழகாக்கின. பெயர் வைத்தவர்களுக்கு நல்ல ரசனை, பெயரும் அதற்கேற்ற பெயர்தான் (Beach morning glory) , மணற்பாங்கான கடலோரங்களில் படர்ந்து வளரும் களை போன்ற தாவரம் இது. ஊடாக சிறு பட்டுக் குஞ்சம் போலத் தெரிந்த தொட்டாற்சிணுங்கி மலர்கள்.

தொட்டாற்சிணுங்கி மலர்கள்

Beach morning glory


சாங்கி கோல்ப் கிளப்பிற்கு பின்புறம் நடை தொடர்ந்தது. அப்பகுதி ஒரு பழங்காலத்து  கிராமம் போல இருந்தது. வளைந்த தென்னை மரங்களோடு, ஒரு புறம் சரிந்தேறிய மேட்டு நிலமெங்கும் நிறைந்த பசுமையோடு மறுபுறம் பசிய நிழல்கள் கலந்த நீலத்தில் வெள்ளை அலைக்கோடிட்டது. 


காற்றில் உப்பு மனமும், கடற்பறவைகளின் சிறகடிப்பும், அலைகளின் மெல்லிய சிலம்பும் ஒலியும் அன்றி வேறேதுமில்லை. தரையில் சில அடிகள் தள்ளி நிற்பது போன்ற பாவனையில் நின்ற இரு தென்னைகள் மேலே கைகோர்த்துக்கொண்டன. 



அங்கே கடற்கரையெங்கும் கல்பாவியிருந்தது. மக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்கும் பொருட்டு வேலியும் போடப்பட்டிருக்கிறது.   ஆனால் கடல் கை மீறி கரையைத் தொட்டுக்கொண்டே தான் இருக்கிறது. கிழக்கு கடற்கரையில் நாம் முன்னர் பார்த்த எட்டு திசைகளிலும் விரிந்த கடல் செம்பருத்தி (Sea hibiscus - Talipariti tiliaceum) இங்கு சற்றே பெரிய மரமாக இருந்தது.  ஓங்கி வளர்ந்த தென்னையை எட்டிப் பிடிக்க முயல்வது போல கொடிகள் பற்றிப் படர்ந்தேறி தென்னையை சட்டையைப் பிடித்து மிரட்டிக் கொண்டிருந்தன. 



ஒற்றைக் கால் மடித்து நிற்கும் நாரை போல ஒரு படகு ஒற்றைக் காலில் தவமிருந்தது. 



நிலத்தில் நிற்கும் படகுக்குப் போட்டியாக கடல் நீரில் நின்றது ஒரு மரம். உப்பு நீரில்  நின்ற அக்கடல் மரம் பாதி வெயிலும் பாதி நிழலுமாக பாதி மணலும் பாதி கடலுமாக ஹிரண்ய வரம் போல நின்றது. Sonneratia alba என்றது இணையம், சதுப்பு நிலத் தாவரமாம்.  

Sonneratia alba

அங்கே கடலுக்குள் மரப்பாலங்கள் நீண்டு சென்று கடல் மீது கட்டப்பட்ட குடில்கள் வரை நீண்டன.  கதிர்மறைவைக் காணும் அந்த நடைவழிக்கு இப்போது அனுமதி இல்லை. 

Sunset Point

எனவே இடப்புறம் உயர்ந்திருந்த குன்றின் மீது சென்ற படிகள் வழியே மேலேறத் தொடங்கினேன். சில்வண்டின் சத்தமும் இன்னபிற சிறு பூச்சிகளின் ஒலியும் பகலை இரவு போல செவியுணரச் செய்தது.மரங்களின் நடுவே செல்லும் வழி ஏறிக் கொண்டே சென்றது. பச்சை சுவற்றில் சிறு சிறு இடுக்குகளில் கடல் எட்டிப் பார்த்தது. ஒரு குன்றை முழுமையாக ஏறி மறுபுறம் கடந்து இறங்கியது பாதை. 



இந்த இடத்தில் சாங்கி முனை கடற்கரை நடைவழியும் அதன் ஒரு பகுதியான பலகைப் பாதையும் முடிவுக்கு வந்தன.

அருகே இணையாகச் சென்ற ஒரு வாகனங்கள் செல்லும் பாதை மரவேலிக்கு அப்பால் கண்ணில்பட்டது. உல்லாச மாளிகைகளில் ஒன்றின் வாயில் தெரியாத வண்ணம் வேலிகாக்கும் செடிகள் அடர்ந்து நின்றன. சங்குபுஷ்பமும், மிக்கி மவுஸ் மலர் எனப்படும் ஒரு செடியும், வெண்மலரில் ஒரு துளி பசுமஞ்சள் புல்லிவட்டம் கொண்ட ஒரு மலரும் என ஏதேதோ செடிகள் அடர்ந்த வேலிகளில் இடையிடையே கிடைத்த சிறு பிளவுகளில் தலைநீட்டிக்கொண்டிருந்தன. காடாக இருந்த கடந்தகாலக் கனவுகளின் எச்சம் அத்துமீறும் இக்கொடிகளில் மிச்சமிருக்கிறது. 

அத்துமீறியவர்களுக்கு ஏற்படும் கதியைக் காலம்காலமாக கண்ட மண் சாங்கி. அதன் வடுக்களையும் உலராத உதிரத்தையும் நாளை பார்க்கலாம்.

உதவிக் குறிப்புகள்:

https://en.wikipedia.org/wiki/Manuel_Godinho_de_Er%C3%A9dia

https://www.straitstimes.com/singapore/what-are-the-rare-maps-on-display-at-on-paper-singapore-before-1867

முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 15 - பணத்தோட்டச் சாலை

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 17 - நெய்தல் சாட்சி

Monday, February 22, 2021

சிங்கை குறிப்புகள் - 15 - பணத்தோட்டச் சாலை

1850களில் ஆர்ச்சர்ட் சாலை மெல்ல மெல்ல குடியிருப்புப் பகுதியாக மாறிய சித்திரத்தை ஜாதிக்காய் கதையோடு இணைத்துப் புரிந்து கொள்ளமுடியும். உதாரணமாக ஆக்ஸ்லியின் ஜாதிக்காய்த் தோட்டத்தின் இன்றைய சுவடாக நிற்கும் வின்ஸ்லாந்து வீட்டைக்(Winsland House) குறிப்பிடலாம். ஒட்டி நிற்கும் இரண்டு இணை முகப்புகளைக் கொண்ட விக்டோரிய பாணிக் கட்டிடங்கள். அன்றைய தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி குடியிருப்புகள் அமைகின்றன. அந்த தோட்டங்களின் பெயர்களிலும், அதை அமைத்தவர் பெயரிலும் வீதிகளும் பகுதிகளும் உருவாகின்றன.

வின்ஸ்லாந்து வீடுகள் 1996-97ல் புணரமைக்கப்பட்டன. இக்கட்டிடங்கள் அதற்கேயுரிய அழகியல் கூறுகளான உயர்ந்த கூரை கொண்ட தாழ்வாரங்கள், கட்டிட முகப்பு ஆகியவை கெட்டுவிடாமல், முன்புறம் படிகள் விரிவாக்கப்பட்டு சிறு மாற்றங்களும் செய்யப்பட்டன.


165, பினாங் சாலை, வின்ஸ்லாந்து வீடுகள்


தோட்டத்தோடு குடியேறிய மக்களின் எண்ணிக்கையோடு சேர்த்து, 1900-களின் தொடக்கத்தில் ஆங்கிலேய உயர் அதிகாரிகள் மற்றும் வணிகர்களின் வசிப்பிடமாக ஆர்ச்சர்ட் மாறிவந்தது. அதே நேரத்தில் பாக்தாதை சேர்ந்த யூதர்களின் குடியேற்றமும் டோபி காட், ப்ரஸ் பாஸா பகுதிகளில் நிகழ்கிறது.    

இவ்விதம் பல இனங்கள் கூடி வாழத் துவங்கவே வழிபாட்டுத்தலங்களும், சந்தைகளும், அரசு சேவை நிறுவனங்களும், கேளிக்கை மையங்களும் ஒவ்வொன்றாகத் தோன்றுகின்றன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை  இன்று பார்க்கலாம். 

ஆர்ச்சர்ட் சாலை - பீட்டர்சன் சாலை சந்திப்பில் ஒரு காவல் நிலையம் 1850களில் துவங்கப்படுகிறது; இன்றைய ION Orchard வளாகம் நிற்கும் இடத்தில்தான் அந்த ஆர்ச்சர்ட் காவல் நிலையம் இருந்தது. 

1880 - காவல் நிலையம்




2016 - Christmas Lighting - ION Orchard

1902-ல் கட்டப்பட்ட அஞ்சல் நிலையம் ஒன்று ஆர்ச்சர்ட் சாலையில் இருக்கிறது. இன்றும் அதே இடத்தில் இரண்டாவது தளத்தில் ஒரு தேநீர்க் கடையோடு கூடிய கில்லினே அஞ்சல் நிலையம் இயங்குகிறது. அந்தப் பழத்தோட்ட காலத்தில் இருந்து இன்றைய பணத்தோட்டக் காலத்தை நோக்கி அனுப்பப்பட்ட கடிதம் போல அக்கட்டிடம் நிற்கிறது.

கில்லினே அஞ்சல் நிலையம்

தற்போது குடியரசுத் தலைவரின் அரசுமுறை இல்லமாகிய இஸ்தானா கட்டிடம், 1867-ல் பிரின்செப் வசமிருந்த ஜாதிக்காய் தோட்டம் நின்ற லாக்ஸ் குன்று மற்றும் கரோலினா குன்று ஆகியவை ஆங்கிலேய அரசால் வாங்கப்பட்டு, மலைகள் சமப்படுத்தப்பட்டு, ஆங்கிலேய ஆளுநர்களுக்காக கட்டப்பட்டது. 3000 இந்தியக் கைதிகளை கூலித் தொழிலாளர்களாகக் கொண்டு இக்கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது.  ஆர்ச்சர்ட் சாலையில் செல்லும் போது வழக்கமாக அழகான உயர்ந்த வாயிற்கதவுகள் அருகே நிற்கும் காவலர்களை மட்டுமே காண இயலும். ஆண்டில் சிலமுறை சிறப்பு தினங்களை முன்னிட்டு பொதுமக்கள் இஸ்தானாவுக்குள் அனுமதிக்கப்படுவதுண்டு. 

பன்னாட்டு தூதரகங்கள் ஆர்ச்சர்ட் சாலையிலும் அருகாமையிலும் இருக்கின்றன. இவற்றில் தாய்லாந்து தூதரகம் மட்டும் பொதுமக்கள் உள்ளே சென்று பார்க்கக் கூடிய வகையில் கண்காட்சிகள், விழாக்கள் ஆகியவற்றை நடத்துகின்றன. 

மரகதக் குன்று எனப் பெயர் கொண்ட எமரால்டு ஹில் பகுதியில் 1930-களில் மலேசியர்கள், தியோசூக்கள், காண்டனீயர்கள், ஹாக்கியர்கள் மற்றும் சில இந்தியக் குடும்பங்கள் அடங்கிய ஒரு சிறு குடியிருப்புப் பகுதி உருவானது. ஏற்கனவே பலபகுதிகளில் அறிமுகமான கடைவீடுகள் அமைப்பில் சிறிய மாற்றங்களோடு, அருகருகே உள்ள வீடுகளை இணைத்து முன்பகுதியில் ஒரு தாழ்வாரம் போல கொண்ட கட்டிட அமைப்பு. இவை ஐந்து அடி வழிகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. எமரால்டு ஹில் வீடுகள் இந்தக் கட்டிடக்கலைக்கு சான்றாக பாதுக்கப்பட்டிருக்கின்றன.  

எமரால்டு ஹில்ஸ் வீடுகள்

இதே போல அருகிலிருந்த கப்பேஜ் வீதியில் அமைக்கப்பட்ட  17 வீடுகள் இன்று மிக அழகான உணவு அங்காடிகளாக சுற்றுலா வருபவர்களை வசீகரிக்கின்றன. இங்கு ஒரு தேநீர் அருந்திவிட்டு நடையைத் தொடர்ந்தேன். சிங்கப்பூரின் தே-சி (பாலோடு சேர்ந்த தேநீர்).


கப்பேஜ் தெரு உணவகங்கள்


செவ்வகம் ஆர்ச்சர்ட் பகுதி - வட்டமிட்டுக் காட்டப்பட்டிருப்பவை லிட்டில் இந்தியா, கம்போங் கிளாம், சன்டெக்

ஆர்ச்சர்ட் ரோட்டில் கேணிங் கோட்டை பக்கமாக நுழைந்தால் சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக் கழகத்துக்கு (SMU) அருகில் முதலில் நாம் காணும் வரலாற்றுக் கட்டிடம் YMCA கட்டிடம். 1844-ல் துவங்கப்பட்ட YMCAவின் சிங்கை கிளை  1911-ல் கட்டி முடிக்கப்பட்டது. சிங்கையின் முதல் பொதுமக்களுக்கான நீச்சல் குளம் இங்குதான் துவங்கப்பட்டது. 

[இன்று சிங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் பொதுமக்களுக்கான நீச்சல் குளங்கள் மிக சிறப்பான வசதிகள் கொண்டவை.  பேருந்துகளுக்குப் பயன்படுத்தும் அதே கட்டண அட்டையைப் பயன்படுத்தி சிறு கட்டணம் செலுத்திவிட்டு இக்குளங்களில் நீச்சல் பயிலலாம்]. 


இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானியர்கள் ஆட்சி காலத்தில் YMCA கட்டிடத்தின் அறைகள் ஜப்பானிய கெம்பித்தாய் காவல்துறையினரால் சிறைகளாகவும் கொடூர தண்டனை வழங்கும் இடமாகவும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 1981-ல் இதன் பழைய கசந்த நினைவுகள் இடித்துவிட்டு இப்போதிருக்கும் கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார்கள்.



YMCA கட்டிடத்துக்கு எதிர் வரிசையில் நிற்கும் கேத்தே திரையரங்கம் (Cathay Theatre) வரலாற்று சிறப்பு கொண்டது. கேத்தே திரையரங்கம் 1936-ல் கட்டப்பட்ட போது, சிங்கப்பூரின் முதல் உயரடுக்கு கட்டிடம் என்ற பெருமையையும், தென்கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கட்டிடம் என்ற சிறப்போடும் துவங்கியிருக்கிறது. இன்று நாம் மரீனா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) பார்த்து பிரமிப்பதுபோல அன்று இதை உணர்ந்திருப்பார்கள். " The Four Feathers” (1939) திரைப்படம் 1000 பேர் அமர்ந்த நிறை அரங்கில் குளிரூட்டப்பட்ட முதல் திரையரங்கில் திரையிடப்பட்டது.

ஜப்பானியர்களிடம் சிங்கை சரணடைந்ததைக் குறிக்கும் முதல் கொடி இங்குதான் ஏற்றப்பட்டது (இது கேனிங் கோட்டைக்கு மிக அருகே என்பதை மேலே வரைபடத்தில் பார்க்கலாம்). அதன் பிறகு ஜப்பானிய போர்க்கால வானொலி ஒலிபரப்பு மையம் இங்கிருந்தே இயங்கியது. இதிலிருந்து தான் உலகப் போர் காலத்தில் இந்திய தேசிய ராணுவமும் தனது வானொலி ஒலிபரப்பை நிகழ்த்தியிருக்கிறது. நேதாஜி தலைமையில் தற்காலிக அரசாங்கத்தின் பதவியேற்பு நிகழ்ந்ததும் இதே கேத்தே திரையரங்கில்தான். 

கேத்தே திரையரங்கில் சுபாஷ் சந்திர போஸ்

இன்றும் இக்கட்டிடத்தின் முகப்பை வரலாற்று நினைவுச் சின்னமாக அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள். பின்னால் ஒரு பெரிய வணிக வளாகமும் ஒரு சிறு கண்காட்சியும் இருக்கிறது. வரலாறு நிகழ்ந்த திரையரங்க மேடைகள்.



2021 - Cathay

சைனா டவுன் பகுதியில் பார்த்தது போல, இங்கும் பல இனத்தவர் கூடுகிற இடம் ஆதலால், பல விதமான வழிபாட்டுத் தலங்கள் உருவாகி வருகின்றன.  YMCA கட்டிடத்துக்கு அடுத்த கட்டிடம் பொது ஆட்சிமுறைத் திருச்சபையின்(presbyterian church) கிறிஸ்தவ தேவாலயம். 1878-ல் கட்டப்பட்ட இந்த சர்ச்,  இப்பகுதியின் மிகப் பழமையான ஆலயம். இரு புறமும் பாக்கு மரங்களோடு ஒரு பழைய காலகட்டத்தை நினைவுறுத்தியபடி ஆர்ச்சர்ட் சாலையின் துவக்கத்தில் நிற்கிறது இந்த தேவாலயம்.  

Presbyterian church

1821-லேயே கட்டப்பட்ட சிவன் ஆலயம் ஒன்றும் ஆர்ச்சர்ட் சாலையில் இருந்திருக்கிறது. இன்று டோபி காட் ரயில் நிலையம் இருக்கும் பகுதியில் இருந்த இந்த சிவனாலயத்துக்கு சிவலிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. சிங்கையில் இன்றும் மிக முக்கியமான திருவிழாவாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவின் போது ஸ்ரீநிவாஸ பெருமாள் ஆலயத்தில் இருந்து டேங்க் சாலை தெண்டாயதபாணி கோவில் வரை காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் இங்கு ஒரு சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். இங்கு ரயில் நிலைய வேலை துவங்கியதும் இங்கிருந்து கிழக்குப் பகுதிக்கு, கெய்லாங் (Geylang) பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.  ஆர்ச்சர்ட் சாலைக்கு வைராவி மடம் எனப் பெயர் கொடுத்த வைரவிமாதா காளியம்மன் ஆலயமும் 1860களில் கில்லினே சாலையில் ஒரு சாவடியில் துவங்கப்பட்டு  பின்னர் தொ பாயோ(Toh Payoh) பகுதிக்கு மாறியிருக்கிறது. 

உணவகங்களும் மதுவிடுதிகளும் நிறைந்த கப்பேஜ் சாலையின் மறு எல்லையில் இன்னொரு வழிப்பாட்டுத் தலம்  நிற்கிறது. சியான் டெக் ட்ங் (Sian Tek tng) எனப்படும் இச்சீனக் கோவில் எமரால்டு மலையில் வாழ்ந்த சீனப் பெண்கள் வழிபாட்டுத்தலமாக விளங்கியது. குவான் யின் (Guan Yin) எனப்படும் கருணையின் தெய்வம் குடி கொண்ட இவ்வாலயம் பெண்களுக்கான மடமாகத் துவங்கப்பட்டு இங்கு விதவைகளும் மணமாகாத பெண்களும் தங்கி சமய நூல்கள் கற்கவும், பூஜைகளை மேற்கொள்ளவும் செய்திருக்கிறார்கள்.

 Sian Tek Tng


இப்பகுதி 1850-களில் செல்வந்தர்களும் வணிகர்களும் நிறைந்த குடியிருப்புப் பகுதியாக உருமாறத் தொடங்கியதுமே கடைகளும் வணிகமும் தொடங்கிவிட்டன.  1880-ல் இப்பகுதியின் நகராட்சி தலைவராக இருந்த எட்வின் கோக் இங்கு ஒரு திறந்த வெளி சந்தையைத் துவங்கி வைக்கிறார்.  பிறகு அரசாங்கமே இந்த இடத்தில் நகராட்சி சந்தையை துவக்கி வைத்தது. எமரால்டு ஹில் மற்றும் இப்பகுதியை சேர்ந்த பெண்கள் அனைவரும் காலையில் சென்று காய்கறிகள் வாங்கி வரும் இடமாக அந்த சந்தை இருந்ததென 1960-களில் இப்பகுதிகளில் வளர்ந்தோர் நினைவு கூறுகின்றனர். 

ஆர்ச்ர்ட் சாலை திறந்த வெளி சந்தை

இந்த இடமே ஆர்ச்சர்ட் பாயிண்ட் எனப்படும் வணிக வளாகமாக மாறி நிற்கிறது. 1905-ல் இங்கு துவங்கப்பட்ட கோல்டு ஸ்டோரேஜ் (Cold Storage) அங்காடி இப்பகுதிக்கு ஒரு அடையாளமாக விளங்கி இருக்கிறது. அதுவே சிங்கையின் முதல் பல்பொருள் அங்காடி என்ற பெருமையும் கொண்டது, இன்று இவ்விடத்தில் சென்டர்பாயிண்ட் வணிக வளாகம் இருக்கிறது. 



1800களில் டோபி காட் பகுதியில் எண்ணற்ற குதிரை வண்டிகள், சாரட்கள் விற்கும் கடைகளும், லாயங்களும் இருந்தன. 1900களில் அவையிருந்த இடத்தை கார் விற்பனையகங்கள் எடுத்துக் கொண்டன. சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கான விற்பனை நிலையமாக SMA (Singapore Manufacturers' Association) துவங்கியது. 

SMA Building

துரைமார்களும், துரைசானிகளும், மலேய பெரானக்கன் மக்களும், யூதர்களும் , சீனர்களும், தமிழ் வணிகர்களும்  என பல உயர்குடி மக்களுக்கென  ஆடைகள் தைப்பதற்கென்று சிறந்த பொற்பின்னல் வேலைப்பாடுகள் செய்பவர்களும், பட்டாடை தைப்பவர்களும், மேலை நாகரீக உடைகள் வடிவமைப்போரும் குடியேறுகின்றனர். இன்றும் ஆர்ச்சர்ட் சாலை நவீன ஆயத்த உடைகளுக்கு மட்டுமன்றி, ஆடை வடிவமைப்புக்கும், தையலுக்கும் மிகவும் புகழ்பெற்றது. இதுவும் 1900-களில் இங்கு துவங்கிவிட்டது. இத்தனை வணிகம் நிகழ, வங்கிகளும் இங்கே கிளை பரப்பத் தொடங்கின. அவற்றுள் மெக்டொனால்ட் ஹவுஸ் எனப்படும் கட்டிடமும் HSBC வங்கியால் இச்சாலையில் கட்டப்பட்ட முக்கியமான அடையாளங்களில் ஒன்று.

The MacDonald House

1950-களில் கூட மிக அமைதியான இடமாகவும் மாலைகளில் ஆள்நடமாட்டம் குறைந்தும் காணப்பட்ட இப்பகுதியின் வணிக வாய்ப்புகளை முன்னுணர்ந்து இங்கு உயர்தட்டு வணிகத்தை துவங்கியதில்  முக்கியமானவர் சி.கே. டாங். அவர் தொடங்கிய டாங்ஸ் (Tangs) பல்பொருள் அங்காடி பௌத்த விஹாரங்கள் போன்ற முகப்பு அமைப்போடு வாடிக்கையாளர்களை ஈர்க்கத் துவங்கியது.



கல்லறை இருந்த இடத்தில் துவங்கப்பட்ட ஙீ ஆன் சிட்டியும் அதிநவீன வணிகத்துக்கென புகழ் பெறத் துவங்கியது. இன்று அச்சாலை முழுவதும் இருபுறமும் ஒன்றோடொன்று போட்டியிட்டு எழுந்து நிற்கும் வணிக வளாகங்கள். அதன் இணை சாலைகளில் எல்லாம் உலகின் பெரும் பணக்காரர்கள் பலரும் குடியிருக்கும் வீடுகள்.

1980-களுக்குப் பிறகுதான் ஆர்ச்சர்ட் சாலை இன்றைய நவநாகரீக, அதிநவீன வணிக மையம் என்ற பிம்பத்தை நோக்கி நகரத் துவங்கியது. இதன் உச்சமாக கிறிஸ்துமஸ் ஒளியலங்கார விழாவும் சேர்ந்து கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மற்றும் அதன் மூலம் பெருகும் வருவாயை  அதிகரிக்கும் பொருட்டு கிறிஸ்துமஸ் ஒளிவிளக்குகளின் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சித் துறையால் 1984-ல் துவங்கப்பட்ட இந்நிகழ்வில் இங்கிருக்கும் வணிக அமைப்புகள் அனைத்தும் இணைந்து இந்த இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள தெருவை வருடாவருடம் வெவ்வேறு விதங்களில் ஒளி விளக்குகளால் வண்ணமயமாக்குவார்கள். அவற்றுள் தலை சிறந்த கிறிஸ்துமஸ் அலங்காரமும், கிறித்துமஸ் மரமும் பரிசு பெறும். இதையும் ஒரு சுற்றுலா கேளிக்கையாக உருமாற்றி இரவுலா பேருந்துகள் அந்த நாற்பது நாட்களும் இயக்கப்படுகின்றன. 










அதே போல சிறப்பு சிங்கப்பூர் விற்பனை (Great Singapore Sale) என ஊரே அமர்க்களப்படும் மே மாத இறுதி முதல் ஜூலை வரை நடக்கும் விற்பனை விழாவின் உத்தியும் இங்குதான் ஆர்ச்சர்ட் சாலையில் துவங்கியது. அச்சுறுத்தும் வணிகமயம், எனவே இங்கு எதையும் வாங்கத் தோன்றுவதில்லை. சிங்கை வருவோருக்கெல்லாம் சுற்றிக் காட்டி ஒளிக்குருடாகும் வரை சுற்றித் திரிந்து புகைப்படமெடுத்துத் திரிவதே ஆர்ச்சர்ட் குறித்த நினைவுகள். 


இரண்டாம் உலகப் போரில் இச்சாலையின் பங்கு குறித்தும், இதன் வரலாறு குறித்தும் வாசிக்கத் துவங்கியதும் அதற்கென சில முறை இதன் அடிமுதல் நுனி வரை நடந்திருக்கிறேன். 


இந்த ஆர்ச்சர்ட் பகுதியிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஓரிடம், 'ஆர்ச்சர்ட் கேட்வே' எனப்படும் வணிக வளாகத்தின் நான்காவது தளத்தில் இருக்கும் சிங்கை நூலகத்தின் ஆர்ச்சர்ட் கிளை. 18 முதல் 35 வயதுக்குழுவினரை ஈர்ப்பதற்கென,  நவீன வடிவில் அமைக்கப்பட்ட நூலகம்.   

இந்த "தி டியூப்" (The tube) எனப்படும் கண்ணாடிப் பாலம் சென்று இணையும் "ஆர்ச்சர்ட் கேட்வே" (Orchard Gateway)  கட்டிடத்தில்தான் சிங்கை நூலகத்தின் ஆர்ச்சர்ட் கிளை இருக்கிறது. இது நுண்கலை சார்ந்த புத்தகங்கள், ஒளி/ஒலி தகடுகளுக்கான சிறப்பு நூலகமாகவும் விளங்குகிறது.  அந்தக் கூடணையும் பறவைகளின் பெருமரத்திற்கு மிக அருகே தான்  இக்கனிமரமும் இருக்கிறது.


"The Lifestyle Library"

நேற்றில் வேர்பதித்த கனிமரங்கள்  இன்றில் நிழல் கவியும் சாலை.

மொத்தத்தில் ஜோஹோர் நோக்கி செல்லும் குன்றுகள் சூழ்ந்த தனிமை நிரம்பிய கிராமத்து சாலையில் கடந்து சென்ற பறவைகளின் அடுத்தடுத்த தலைமுறைகள், காம்பியர் தோட்டங்களையும், ஜாதிக்காய் எஸ்டேட்களையும், கனிமரங்களையும், வண்ணான்கள் துணி உலர்த்தியதையும், குதிரை வண்டிகள் கார்கள் ஆகிப் பறந்ததையும், நவநாகரீகமென உலகம் கருதும் ஒவ்வொன்றையும்  முன்னின்று விற்பதையும் வாங்குவதையும் அனைத்தையும் கண்டபடி இன்றும் இவ்விடத்தின் ஒளிஒலி வெள்ளத்திலும் கூடடைய பழகிக் கொண்டிருக்கின்றன.  அப்பறவைகளின் பார்வையில் சிங்கை முன்னேறி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால்  முன்னிரவைப் பகல் என மயங்கி  வாகனங்களின் இரைச்சலை மீறி அவை இடும் கூச்சலில் ஏதோ செய்தி இருக்கிறது.


முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 14 - பழத்தோட்டச் சாலை

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 16 - நெய்தல் நடை