Friday, March 27, 2026

Measuring Dream by Dream

கனவைக் கனவால் அளத்தல்: https://www.jeyamohan.in/222948/

Jeyamohan's foreword on 'Everyday Yogi' - Translated by Subhasree Sundaram 

In 1989, when I was working in Palakodu, in Dharmapuri district, Pavannan, Tamilavan, P. Krishnasamy, and others organized a literary meet in Bangalore. They invited me, and I attended. It was not a crowded gathering; we sat and talked in the verandah behind a public building in Cubbon Park, Bangalore. Only eight people had come. “Even that is a lot,” they said.


H. S. Shivaprakash had come as the special guest for that event. Even then, he was a literary star in Kannada. In Karnataka, a hundred people would gather wherever he spoke. Yet he had come all the way to address those eight listeners. He spoke with great enthusiasm and assurance about modern literature and religious dogmatism. After the event, he himself said, “Let’s go somewhere, find a restaurant, and continue our conversation.” We walked, found a place, and talked some more; only in the evening did we finally part.


From that day on, H. S. Shivaprakash became a presence that captivated my soul. When he spoke that day, I witnessed in him a certain creative audacity and fearlessness that I had seen only in figures like P. K. Balakrishnan in Malayalam, and in Jayakanthan in Tamil—personalities that both exhilarate and draw one inward. In those days, I stood in awe of such upright artists. That day, what radiated from Sivaprakash was the modernist creator’s resistance to tradition—parody, a scornful irony toward convention, a piercing insistence on presenting his intellectual logic in its entirety, and a rare gift for selecting and preserving words for their own intrinsic value. I have heard him speak on many stages since then. I have traveled to Bangalore and Chennai three times just to listen to him. I have often marveled at how his personality completely envelops the venues where he speaks.


H. S. Shivaprakash is regarded as one of the foremost modern writers in Kannada literature. His contributions to poetry and drama are widely acknowledged, and he is known across India for his literary works in English as well. He has also served in significant roles within literary institutions of the Central Government.


In general, it is very rare for modern literary writers to write on subjects grounded in spirituality or meditation. Some are indeed interested in and trained in those traditions, yet they often feel that foregrounding such inward individuality would compromise the persona of the modern literary writer. Hence they too present only the image generally constructed here as that of a modern writer—one shaped, in the modernist period, by a negative view of history and by a distrust of the individual. Many creators of that period presented themselves as exponents of this outlook, even when, in their private lives, they remained theists.


H. S. Shivaprakash is a person of integrity in his inner quest. He possesses a distinctive fearlessness in articulating his ideas, which is why he is continually engaged in diverse debates. Having begun as a modernist, he later turned toward philosophical inquiry rooted in Indian and Saiva traditions, undertaking the study of yoga and meditation. This brief book is a record of that journey.


In this work, we witness a modernist writer crossing the limits that shaped him through an inner quest. H. S. Shivaprakash’s journey through the Saiva traditions of Karnataka, and the diverse paths of sādhana within them, may offer guidance to those engaged in such disciplines. For readers without that orientation, the work can still resonate deeply as the record of an artist’s inward journey.


In this book, H. S. Shivaprakash does not appear as one who simply accepts beliefs and rituals. Rather, he emerges as a thinker who continually observes and examines all that he knows with a keen logical intellect. This is the journey of a yogi whose path is shaped by intellectual self-assurance.


When a modern literary mind encounters the Indian contemplative tradition of meditation, it does not perceive many of the obstacles that others experience. First, it readily distinguishes the inner journey from religious belief and ritual. Second, it approaches profound archetypes and myths in their true grandeur, without simplifying them through worldly explanation. The literary artist’s inward journey is, in a sense, a measuring of dream by dream. Language—bounded and shaped—is the dream that becomes the instrument of measure; the boundless dream-space called the universe becomes that which is measured.


Yet such a mind arrives at two kinds of understanding. On the one hand, it stands astonished before its own depth. A mind that once regarded words as the sole expression of reality falls silent before what lies beyond words, withdraws to its familiar realm of language, tracing the contours of its own boundary. On the other hand, it redefines all that it has known until then—logically and symbolically.


This book, presenting the metaphysical journey of a modern writer, may be regarded as a new arrival in Tamil. Subhasree Sundaram has translated it in a language of effortless grace. My felicitations to her.

Tuesday, March 17, 2026

இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்

இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள் - கவிஞர் எழுத்தாளர் பெருந்தேவி, எழுத்து பிரசுரம்

'இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்' இன்றுதான் வாசித்தேன். மிகப் பிரமாதமான சிறுகதைத் தொகுதி. 




யோக குருஜி சௌந்தர் கட்டுரையை  வாசித்துதான் இத்தொகுதி குறித்து அறிந்து கொண்டேன். 

ஒரு சிறுகதைத் தொகுப்பில் ஒவ்வொரு சிறுகதையுமே தன்னளவில் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இனிமையான வியப்பு. முதலாவதாக தலைப்பை வாசித்ததும் என்ன ஒரு விசித்திரமான தலைப்பு என எண்ணம் வந்தது. ஆனால் அதுதான் மிகச்சரியாக இவ்வரிசைக் கதைகள் அனைத்தையும் தொட்டுச் செல்லும் சரடு.


ஓவியங்களில் இரு பிரதான வண்ணங்கள் மெல்ல மெல்ல மயங்கி ஒன்று கலக்கும் மென்மையான ஒரு வண்ணமயக்கம் போல வாழ்வின் தொட்டுணரமுடியாத ஒரு பகுதியைத் தொட்டுச் செல்லும் கதைகள். அந்த இரு வண்ணங்கள் சில கதைகளில் நிதர்சனம்- எதிர்பார்ப்பு என்றாகின்றன, சில கதைகளில் வரையறை-மீறல்கள் என்றாகின்றன, சில கதைகளில் அன்றாட உண்மையும் அமானுடமும் ஆகின்றன. ஆனால் அந்த இரண்டும் கலந்துபிரியும் மயக்கங்களே அழகு.


இத்தொகுதியின் கதைகளை இரு வகைமைகளாக மனம் தொகுத்துக் கொண்டது. 


முதல் வகைமை, நெருக்கமான உறவில் இருக்கும் இரு நபர்களுக்கிடையேயான கடக்க இயலாத மனத்தொலைவுகள்.


நீண்ட தாம்பத்ய வாழ்வின் எல்லையில் நிற்கும் கணவன்-மனைவி முதல் (தாம்பத்யம்), திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன இளம் தம்பதி வரை (கேள்விக்கென்ன பதில்), கணவன்-மனைவி உறவுகளில் இதுவரை புனைவுகளில் தொட்டுக்காட்டப்படாத சில நுண்மைகள் தீட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக கணவன் மன்னிக்கப்படவேண்டுமா என்று யாரோ/தன் மனமே எழுப்பும் ஒரு கேள்வி இளம் மனைவியின் மனதில் எழுப்பும் சஞ்சலங்கள். சந்தேகம் எனும் இடத்தில் இருந்து அவை உறுதியான நம்பிக்கைத் துரோகம்தான் என மனம் முடிவெடுக்கும் வேகம். அவ்விதம் கடத்தியது வேறு யாரும் இல்லை எனக் கொண்டால், மனதின் வீர்யம் விஸ்வரூபம் எடுக்கிறது. 

சிறுதுளிக்கும் உயிர்கொடுத்து பேணி எடுத்து பெரிதாக்கி விடும் ப்ரக்ருதி, பேரியற்கை! தாம்பத்யம் சிறுகதையில் மனைவி கண்டுகொள்ளாமல் விடும் தவறுகளை அக்கறையின்மை என அடையாளும் காணும் கணவனின் மனம். அவளைத் துன்புறுத்துவதற்காக அவன் தன் முன்பாகவே குடிப்பதை அக்கறை என நம்பிக் கொள்ள விழையும் மனைவியின் அகம். அதற்கும் இதற்கும் - அன்பென உணரப் படுவதற்கும், அல்லவென உணர்வதற்கும் இடைப்பட்ட தூரம் அதிகமில்லை போலும்! Fragile beings we are!


மயானக் கொள்ளையின் அம்மன் கதையில் தன் கண்ணைக் கணவனிடம் கொடுத்து மண்ணாகிப் போனவளிடம், கணவனால் வீடு கொள்ளை போன நிலையில் செயலற்று நிற்பவள், வேண்டிக் கொள்ளாது வந்துவிட்ட நினைவும் ஒன்றாகிக் கலக்கின்றன. நீண்ட நாள் நினைவில் நிற்கக் கூடிய சித்திரம்.


நினைவின் நிறம் இரண்டு, தாம்பத்யம் - இரண்டு கதைகளும் அனுமானத்திலேயே மனதளவில் வளர்ந்து செல்லும் விலகலை சொல்கின்றன. நினைவின் நிறம் இரண்டு கதையில், தன் சித்தத்தின் நினைவு மீட்டல் மீதே அவள் மனம் கொள்ளும் சந்தேகம் குறித்த வரி மிக கச்சிதமாக இக்கதையை சொல்கிறது. விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள் கதையின் கணவன் எவ்விதமாவது தன்னை மனைவியின் மனதில் நிறுவிக் கொள்ள விழையும் விசை - தமிழில் மிகப் புதிய அழகான கதை இது!


கணவன்-மனைவி மட்டுமன்றி தாய்-மகன், தந்தை-மகன் என்ற உறவின் இடுக்குகளையும் இரு கதைகள் அடையாளம் காட்டுகின்றன.ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - அம்மா எனும் வரையறை தரும் எதிர்பார்ப்பு, அதற்கு அப்பாலிருக்கும் ஒரு பெண் என்ற பிம்பத்தை பொருத்திக் கொள்ள இயலாத மகனின் தவிப்பு. "அம்மா எப்போதும் அம்மா வயதுதான்" - எவ்வளவு உண்மை! 


அப்பாவுக்குச் சென்னை பிடிக்கவில்லை - அப்பாவின் மீதான மகனின் எதிர்பார்ப்பு செலுத்தும் வன்முறை எனலாம். இத்தொகுப்பிலேயே மிக உறுதியாக மண்ணில் காலூன்றி நிற்கும் கதை. 



இரண்டாவது வகைமைக் கதைகளை, 'இங்கு இவ்விதமாக' எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டவற்றுக்கும், 'அங்கு (ஒருவேளை) அவ்விதமாக இருக்கலாம்' என அனுமானிக்கப்பட்டவற்றுக்கும் இடையில் நடப்பவை என்று சொல்லலாம். இம்மை மறுமை போல..


பாப் சாந்தி, மழை நிற்கப்போவதில்லை, பெயராய்ப் பின்தொடர்தல், பத்தொன்பதாம் நூற்றாண்டுக்காரி வரை, போன்ற கதைகள். நாம் கட்புலன்களால் அறிவதாலேயே உண்மை என உணரும் அனுபவங்களுக்கும், அவற்றை மீறிய காரணத்தாலேயே அமானுடமென நினைக்கும் அனுபவங்களுக்கும் இடையிலான அறியமுடியாமைகள் மீது மிகச் சிறப்பாக நெய்யப்பட்டிருக்கின்றன.


பாப் சாந்தியில், ஒருபுறம் அறியாத, அழையா விருந்தாளியை, நம்மிடம் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச சமூக சம்பிரதாயங்களுடன் உபசரித்துக்கொண்டே மறுபுறம் மனம் எழுப்பிக் கொள்ளும் சந்தேகங்கள், தயக்கங்கள், கணக்குகள் என கதை நகர்ந்து கொண்டிருக்கையில், திடீரென கத்தியோடு பாயும் பாப் சாந்தி போல கதையின் தளம் யதார்த்தத்தில் இருந்து மனப்பிறழ்வுக்கும் அமானுடத்துக்கும் இடைப்பட்ட தளத்துக்குத் தாவுகிறது. மிக அழகான கதை.


எஞ்சியது சிறுகதை - உண்மையிலேயே இவ்விரண்டு வகைமையிலும் இல்லாது எஞ்சிய ஒன்று. நம் நினைவின் அடுக்கில் மிக உன்னதமாக வளர்ந்து விட்ட ஒன்று காலப்போக்கில் முற்றிலும் வேறொன்றாக மாறியிருக்கும் நிதர்சனம். 


இத்தொகுதியின் இறுதிச்சிறுகதையில் 'மிஸஸ் தெரஸா பேயாக இருக்க வாய்ப்பில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது' என வருவது போல, இந்த புரிபடாத அமானுடத்தன்மைகளும் உணர்வுமயக்கங்களும் இல்லையென்று ஆனால், ஒற்றைநிறம் கொண்ட வெற்று வாழ்வில் பெரும் சலிப்பே எஞ்சும் எனத் தோன்றுகிறது. 


சிறப்பான அழகான புதிதான கதைகளுக்காக ப்ரியமும் நன்றியும்.







Wednesday, February 25, 2026

பற்று விடற்கு

குருஜி சௌந்தரிடம் 2021ல் முதற்கட்ட யோகப் பயிற்சிகள் துவங்கியது. அன்றாட யோக சாதனா துவங்கி மூன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. எத்தனையோ விதங்களில் உடலும் மனமும் பிராணனும் மாற்றமடைந்து  வருகின்றன. இப்பயணத்தில் என்னுள் நிகழும் அனைத்தையும் விலகி நின்று உணர்வதும் எழுதுவதும் இன்று எனக்கு சாத்தியமல்ல. ஆனால் முன்னர் ஒரு முறை யோக சாதனா தொடங்கிய பின்னர் அச்சத்தை எதிர்கொள்வதில் நிகழ்ந்த மாற்றத்தைப் பற்றி 'அருமணி' என ஒரு பதிவு எழுதியிருந்ததை நேற்று வாசித்தேன். 


இன்றைய நிலையில் அதன் மற்றொரு பரிமாணம், என் கவனத்துக்கு வந்தது. என்னைப் பல இடங்களில் முன்னேற விடாமல் தடுப்பது அச்சம்தான் என்பது புரிதலில் முதல் நிலை. அதனினும் நுண்ணிய ஒரு தடை அல்லது இயல்பு உள்ளே இருக்கிறது, மிக மெல்லியது; ஆனால் வலுவானது சிலந்தி இழையைப் போல. அதைத்தான் சில மாதங்களாக உணர்ந்து வருகிறேன். இப்போது  இது மேலெழுந்து வருகிறது.


முதல் நிகழ்வு:

2006லேயே சிங்கையில் ஒரு முறை சில மாதங்கள் நீச்சல் பயிற்சி எடுத்திருக்கிறேன். பின்னர் 2019-21 வரை பல முறை பயிற்சியாளரை வைத்தும், நண்பர்களுடனும், தனித்தும், சிங்கையில் வீட்டு வளாகத்திலேயே இருந்த நீச்சல் குளத்திலும், ஆழம் அதிகமற்ற தோழி இல்லத்து நீச்சல் குளத்திலும், தேசிய விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் பாதுகாப்பு நிறைந்த நீச்சல் அரங்குகளிலும் முயன்றிருக்கிறேன். எப்போதும் ஒரு கட்டத்தில் பயிற்சி நின்றுவிடும். நீச்சலுக்கான மூச்சுப் பயிற்சி, கை கால்களுக்கான பயிற்சி, மிதக்கும் பயிற்சி, எழுந்து நிற்கும் பயிற்சி என அனைத்தையும் பெற்று விடுவேன். ஆனால் தனியாக தரையில் காலை உதைத்து உந்தித் தள்ளி நீருள் இறங்கும் போது பதட்டம் கவ்வி விடும். கைகளில் மிதவையை வைத்துக் கொண்டு சில பல அடிகள் நீந்துவதற்கே நீண்ட காலம் ஆனது. நீந்தும்போதே, தேவையெனில் எழுந்து நீரில் மிதக்க வராதோ என்று பதற்றமாக இருக்கும்.

என் அச்சத்தைப் போக்க, பயிற்சியாளர் முதலில் நீரில் வான் பார்த்து மிதக்கக் கற்றுக் கொடுத்தார். மிக அற்புதமான உணர்வு அது. எந்த முயற்சியும் இல்லாமல் உடல் இறகு போல உணரும் முதல் சில கணங்கள். மிதக்கும் மேகங்களைப் பார்த்தபடி உடலும் உணர்வும் இலகுவாகும் போதே,  திடுக்கென, மூழ்கினால், பற்றிக் கொள்ளக் கைகளில் ஏதுமில்லையே என எண்ணம் தோன்றும். அடிபட்டு மல்லாக்கக் கிடக்கும் கரப்பான்பூச்சி கூட அப்போது ஒரு முறை நினைவு வந்திருக்கிறது. சென்ற வரியை வாசிக்க ஆகும் கணத்திலும் குறைவான வினாடிகளில், இந்த எண்ணம் தோன்றியதுமே, நீருள் சற்றே உடல் தடுமாறும், காதில் நீர் புகும், மூச்சுத் திணறி அதிர்ந்து, கைகால் உதறி வெளியே வந்து விடுவேன், பயிற்சியாளர் உதவியுடன்தான்!. எனவே தனியாக இருக்கும் போது மிதப்பதை பயிற்சி செய்யும் துணிவே வராது. இடுப்பளவு நீரே நிரம்பிய குளத்திலும் இதே கதைதான். இதன் பயனாக நான் சந்தித்த விளைவைத்தான் இரு வருடங்கள் முன்னர் அருமணியில் எழுதியிருந்தேன்.  


இரண்டாவது:

மூன்றரை வருட சாதனாவிற்குப் பிறகும் உடல் நெகிழாத சில ஆசனங்களை, சில வாரங்களாக அன்றாடம் அவதானித்துக் கொண்டிருந்தேன். புகைப்படங்கள் எடுத்துப் பார்ப்பேன். குருஜியிடம் அனுப்பி கேட்பேன்.


உதாரணமாக ஹாலாசனம், பர்வதாசனம். உடலை முற்றிலும் உயரே தூக்கி கால்களை பின்புறம் கொண்டு சென்று விரல் நுனியால் தரையில் தொடும் பயிற்சி ஹாலாசனம். சர்வாங்காசனத்தில் நிற்பதற்கே அச்சம் இருந்து, அது முதன் முதலாக கைவரத் தொடங்கிய அன்று 'அருமணி' எழுதினேன். இப்போது அதன் அடுத்த கட்டமான ஹாலாசனம்  திணறுகிறது. கால்கள் பின்புறம் தரையிலிருந்து ஒரு சாண் மேலே வரை செல்லும்.  சற்றே முயற்சி செய்து இடுப்பை தோள்பட்டைக்கு நேராக மேலே கொண்டு வந்தால், கீழே தொட்டுவிடலாம், ஆனால் அப்போது அடிவயிற்றில் ஒரு கலக்கம் வரும், கால்களை மீண்டும் கீழே கொண்டு வந்துவிடுவேன். இதுவே இரண்டரை வருடங்களாக நடக்கிறது. பர்வதாசனத்தில் சின்னஞ் சிறு முன்னேற்றங்கள். ஆனால் குதிகால் தரையில் பதியாது,  கால்கள் முழங்காலில் வளைந்துதான் நிற்க முடியும். 

பர்வதாசனம்


பர்வதாசனம் - சரியான நிலை

நன்றி - சாரதா, பொதிகை யோகம் இன்று 

 


இவ்விரண்டு ஆசனங்களிலும் எந்தெந்த விஷயங்கள் முன்னேற வேண்டும் என அவதானித்த போது, உடல் ரீதியாக சில விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக பின் தொடையின் தசைநார்களின் இறுக்கம் ஏற்கனவே தெரிந்த ஒன்று. அதனால் ஹாலாசனத்தில் இடுப்புப்பகுதி தோள்பட்டைக்கு மேல் செல்வதில் தடை. கீழ் முதுகு அந்த அசைவைத் தடுப்பதை உணர முடிந்தது. அதே போல பர்வதாசனத்திலும் பின்தொடை இறுக்கமும் கெண்டைக்கால் இறுக்கமும் கால்களைத் தடுப்பது தெரிந்தது. 

இவற்றை சரி செய்வதற்கான பல உதவிப் பயிற்சிகளும் ஆசிரியர் பரிந்துரைத்திருக்கிறார், அவற்றையும் செய்தே வருகிறேன்.

இவை உடல்ரீதியான தடைகள் மட்டுமே. நீடித்த பயிற்சியின் விளைவாக உடல் பல இடங்களில் நெகிழ்வுத்தன்மை அடைந்திருக்கிறது. ஆனாலும் மேலே குறிப்பிட்ட ஆசனங்களில் வேறு சில கூறுகள் இருக்கின்றன.


மூன்றாவது:

ஒரு சில மாதங்களாக இடுப்பில் ஒரு வலி இருந்து கொண்டே இருந்தது. தரையில் கால் மடித்து அரை மணிநேரத்துக்கு அதிகமாக அமரும் போது இடுப்பில் தொடங்கி முன் தொடைப் பகுதி வரை வலி ஒன்று உருவாகும், வெகுநேரம் பிறகு நீடிக்கும். நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ, வேலைகள் செய்வதோ, வேறு ஆசனங்கள் செய்வதோ,  எப்போதும் வலி இருப்பதில்லை. அமர்ந்த நிலை மட்டும்தான். ஆசனம் என்ற சொல்லின் பொருளே இருக்கைதான், இருத்தல்தான். எனவே அதை சரி செய்வதற்கான யோகப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன். ஃபிஸியோ உதவியும் எடுத்துக் கொள்கிறேன். இந்த வலிக்கான  எத்தனையோ பயிற்சிகள் எடுத்தும், பலன் இல்லை. 


சென்ற வாரம் நெஞ்சுக்கூட்டுப் பகுதியை விரிவடைய வைப்பதற்கான ஒரு பயிற்சி செய்தபோது திடீரென இந்த இடுப்பு வலி சரியானது. மீண்டும் மீண்டும் வலி வரும் போதெல்லாம் இப்பயிற்சி வலியை சரி செய்தது. மார்புப் பகுதியை விரிவடையச் செய்கையில் இடுப்பில் எந்த சிறு அசைவும் பாதிப்பும் உணர முடியவில்லை. ஆனால் வலி சரியானது.


அந்த வலி ஏற்படாமல் இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டுமென இப்போது புரிந்து விட்டது. தரையில் கால்களை மடித்து அமரும் போது சிறிது நேரத்தில் மிக மெல்லிய கூன் விழுகிறது. மனதால் உணரக்கூடிய ஒரு சிறு சரிவு. அதை அவதானித்து சரி செய்து கொண்டே இருந்தால், அந்த இடுப்பு வலி வருவதில்லை. ஒரு மணி நேரம் அமர்ந்தாலும் வருவதில்லை. எத்தனையோ முறை ஆசிரியர் சொன்ன விஷயம்தான். கூன் போடுகிறேனா என பார்க்கச் சொல்வார். ஆனால் மிகச்சிறிய அந்தக் கூனை நானே உணரவும் வெகு காலம் பிடித்தது.


அவதானிப்பு:


இவை மூன்று விஷயங்களும் உணர்த்துவதை இப்போதைய நிலையில இவ்வாறு விளங்கிக் கொள்கிறேன்.


பொதுவாக சம்மனம் இட்டு தரையில் அமர முடியாத அளவு உடல் விறைப்பாக இறுக்கமாக இருப்பவர்களிடம் குருஜி சௌந்தர் சொல்வது ஒன்று உண்டு. மனதின் இறுக்கம் உடலிலும் தெரிகிறது என்பார். வாழ்வை, அது தரும் எதிர்பாரா மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாத மன இறுக்கங்கள். இறுகிப்போன உடலில் இறுகிப்போன மனம், தடைப்பட்ட பிராணன். அது நினைவு வந்தது. எனக்கு முதுகு ஓரளவு நெகிழ்வுத்தன்மை அடைந்திருக்கிறது, வேறு ஆசனங்களில் அது தெரிகிறது. ஆனால் சில இடங்களில் உடல் செல்ல சாத்தியமான அளவுக்கு கூட, அதை விட்டுக்கொடுக்க உள்ளே ஒன்று மறுக்கிறது. 


முதலாவதில், நீச்சலில் ஏற்படும் பதற்றம், நீரில் மூழ்கி விடும் அச்சம் அல்ல; கைகளிலும் கால்களிலும் இருக்கும் பற்றுக்கோலை விட்டுவிட்டு நீருக்கு எனை ஒப்புக் கொடுக்க மறுக்கும் ஒன்று. இது மேலோட்டமாகத் தோன்றும் அச்சத்தை விட சற்று நுண்ணிய, மேலும் ஆழமான பாதுகாப்பு உணர்வு. இரண்டாவது, அதே போல, சற்றே கடினமான ஆசனங்களில் உடல் பாதுகாப்பெனத் தான் உணர்ந்த ஒன்றை விட்டுக் கொடுக்க மறுக்கிறது. மூன்றாவது, தனை மறந்து அமரும் போது உடல் மெல்ல சரிந்து ஒரு கோணலுக்கு உட்படுகிறது. நேர் நிலை இன்னும் உடலின் இயல்பாகவில்லை.


"சுகம் ஸ்திரம் ஆசனம்" என்கிறார் பதஞ்சலி.  இலகுவாகவும் நிலைத்தும் எதில் நீடித்து இருக்க முடிகிறதோ அந்த நிலையே ஆசனம். தொடர் பயிற்சிகளினால் உடலில் ஸ்திரம் உருவாகி வருகிறது. ஆனால் அது சுகமாக மாறவேண்டும் என்றால் அந்தந்த ஆசனத்தின் நிலைகளுக்கு உடல் இயல்பாக ஒப்புக் கொடுக்க வேண்டும். இப்போது பயிற்சிக்குக் கட்டுப்பட்டு வளையும் உடல், தன்னியல்பாக அந்த நிலைகளில் அமைய வேண்டும்.


Control எனப்படும் கட்டுப்பாட்டின் மூலமாக அடையும் ஸ்திர நிலையில் இருந்து Being என்னும் அதுவாக மாறும் நிலைக்கு  நகர வேண்டும். இன்றைய நிலையில் அன்றாடத்தை ஓர் ஒழுங்கில் வகுத்துக் கொண்டு பின்பற்றுவது வருகிறது. ஆனால் அதை நான் உள்ளூர ஒரு முயற்சியினால் அடைகிறேன். அது என் இயல்பாகவில்லை. எனவே நீரோட்டத்தில் ஒழுகிச் செல்ல முடியவில்லை. நீர், தடையை உடனே உணர்த்திவிடும் தன்மை கொண்டது. எனவே நீச்சலில் அகம் தன்னைக் காட்டியிருக்கிறது. சித்தத்தை, மனதின் செயல்பாட்டை உடல் காட்டிக் கொண்டே இருக்கிறது.


மனதளவிலும் வேறு சிலவற்றுக்கு இந்த அவதானிப்பு அப்படியே பொருந்துகிறது.ஒழுக்கிற்கு ஒப்புக்கொடுக்க மறுப்பது ஒரு பாதுகாப்பின்மையின் விளைவு என்று தோன்றுகிறது. பழகிவிட்டவற்றிலிருந்து விலக மறுக்கும் மனம். பழகியவற்றின் சொகுசிலில் இருந்து விடுபடச் சொல்லி அதற்கான வாழ்வியல் மாற்றங்களை, கர்மயோகத்தை பல முறை குருஜி சொல்லியிருக்கிறார். 


அங்கும் இதே இயல்புதான் தடையாகிறது. சொகுசு என்பதற்கு ஆடம்பரம் என்றோ, வசதி என்றோ பொருள் அல்ல. பழகிப் போன வழக்கங்கள் அனைத்துமே சொகுசுகள்தான். அவை 'பிசுக்குகள்' என்றாலும், நம் தர்க்கம் அதனை வேறு வண்ணம் பூசி, அது வாழ்வுக்கு மிகத் தேவையான ஒன்று என்றே காட்டும். அப்பழக்கம் இல்லாவிட்டால் பாதுகாப்பு இல்லை என்று சொல்லும். எனவே அதை விட்டு விலக புத்தி துணியாது. 


ஆழ்மனதில் புதைந்து உறங்கிக் கொண்டிருக்கும் வாசனாவின் விதைகளுக்கு (விதைகள் - பற்று, அச்சம், கோபம், பொறாமை என எதுவாகவும் இருக்கலாம்) நாட்பட்ட பழக்கங்களே உரம். அந்தப் பழக்கங்களுக்கு ஒவ்வொரு முறை ஆட்படும் போதும், அந்த விதைகள் மீண்டும் செயல்களாகி கர்மங்களாக உயிர்கொள்கின்றன. மீண்டும் மீண்டும் களைகள் சேர்கின்றன. இந்த விதைகளை எரிப்பதே தவம் என நூற்றுக்கணக்கான முறை ஆசிரியர் சொன்ன சொல் காதில் ஒலிக்கிறது. 


திரௌபதியின் கதைதான். இறுகப்பற்றிய தன் கையை விடுவதற்கு பற்றற்றவனை பற்ற வேண்டும். கண்ணா என இருகரம் கூப்ப வேண்டும். என்றேனும் நிகழலாம். அதுவரை சாதனாவில் தொடர்வோம்.


குருவருள் துணை வருக!









Tuesday, December 2, 2025

அன்றாட யோகி

கன்னட எழுத்தாளர் ஹெ. எஸ். சிவபிரகாஷ் எழுதிய 'Everyday Yogi' (கன்னடத்தில் 'பத்தீஸ் ராகா')-ன் தமிழ் மொழிபெயர்ப்பு விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளியாகி இருக்கிறது. அச்சில் எனது முதல் நூல் - ஆசிரியர்கள் பாதங்களில் சமர்ப்பணம்.



2021-ல் கன்னட எழுத்தாளர் ஹெ. எஸ். சிவபிரகாஷ் எழுதிய "GURU: Ten Doors to Ancient Wisdom"-ன் தமிழாக்கத்தை (தமிழில் குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள் - ஆனந்த் ஸ்ரீனிவாசன்) வாசித்துவிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். https://www.jeyamohan.in/148348/. அதை யோகா குருஜி சௌந்தர் ஹெ.எஸ்.எஸ் அவர்களிடம் பகிர்ந்திருந்தார். 


2021 குரு பௌர்ணமி அன்று காலையில், கோவை அருகே நிகழ்ந்த கவிதை முகாமுக்கு லோகமாதேவியுடன் சென்று கொண்டிருக்கும் போது ஹெ.எஸ்.எஸ்-ன் அழைப்பு வந்தது. "குரு"வைப் பற்றிய சிறிய தொலைபேசி உரையாடல். அது குருபௌர்ணமி அன்று நிகழ்ந்ததை ஆசியாக உணர்ந்தேன். 


பின்னர் குருஜி சௌந்தர் பெங்களூர் வந்தபோது அவரை நேரில் சந்திக்க அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு முன்னர் 2020 ஜனவரியில் சென்னையில் நடந்த பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் ஹெ.எஸ். சிவப்பிரகாஷ் கன்னட இலக்கியம் குறித்தான மிகச் செறிவான உரை ஒன்றை ஆற்றக் கேட்டிருந்தேன். ஆனால் தனிப்பட்ட இந்த சந்திப்பில் அவரது ஆன்மீக அனுபவங்கள் குறித்த உரையாடல் அவரது மற்றொரு பக்கத்தை காட்டியது. Everyday Yogi அவரது ஆன்மீக வாழ்வின் சுயசரிதை. அந்தப் புத்தகத்தில் எழுதியதற்குப் பிறகான காலகட்டத்தின் சில அனுபவங்கள் குறித்து அன்று அவர் பகிர்ந்து கொண்டார். மனதுக்கு மிக அணுக்கமான நாள். அன்று குருஜி நான் செய்து கொண்டிருந்த மற்றொரு மொழிபெயர்ப்பு பற்றிக் குறிப்பிட்டதும் இதைத் தமிழில் மொழியாக்கம் செய்யுமாறு ஹெ.எஸ்.எஸ் சொன்னார். 


அடுத்த குரு பூர்ணிமை அன்று இதன் மொழியாக்கத்தைத் தொடங்கினேன். இப்புத்தகத்தில் ஸ்வாமி சத்யானந்தரிடம் அவர் தீட்சை பெற்ற பகுதியை மொழியாக்கம் செய்யும் போது நான் தீட்சைக்காக சத்யானந்த ஆசிரமம் செல்ல நேர்ந்தது. இதைத் தமிழில் எழுதிய மொத்த நாட்களும் எனக்கு தனிப்பட்ட அளவில் மிக முக்கியமான காலகட்டம். ஒவ்வொரு நாளும் குருவின் கரம் வழிநடத்திச் சென்றது. 


ஹெ.எஸ். சிவப்பிரகாஷ் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, பல யோகம் சார்ந்த, சாதனா சார்ந்த வார்த்தைகளை சரிபார்த்து ஆலோசனைகள் கூறி, உறுதுணையாக நின்று, இன்று இது நூலாக வெளிவருவதற்கு முதன்மையான காரணமாக இருந்த குருஜி சௌந்தருக்கு அன்பும் நன்றியும். 


விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு நன்றி!

நூலை வாங்க

Friday, March 7, 2025

ஆசிரியருடன்..

ஆசிரியருடனான பயணம் என்பது ஒரு ஆசி.  சொற்களாக பாடங்களாக ஆசிரியர்கள் அள்ளிக் கொடுப்பது ஒரு வகை கொடை எனில், உடனிருந்து அவரது அருகாமையில் உணர்வதும் கற்றுக் கொள்வதும் கணக்கிலடங்காதவை, வாழ்வுக்கானவை. பல நேரங்களில் அத்தகைய கல்வி நேரடியாக, புறவயமாக அறியமுடியாத நுண்மையில் மிக ஆழத்தில் நடைபெறுகிறது. பின்னர் ஒரு தருணத்தில் மேலெழுந்து வருகிறது.

இந்த மூன்று நாள் கன்னியாகுமரி பயணம்(விவேகானந்த கேந்திரம் நடத்திய 8ஆவது யோக சாஸ்திர சங்கமம்) உள்ளுக்குள் மிகச் செறிவாக இருந்தது.  அதை விரித்து, கடந்த மூன்று வருட பயணத்தையும் பார்க்கும் தோறும் எத்தனை எத்தனை அறிதல்களையும் அனுபவங்களையும் அள்ளித் தந்திருக்கிறது குருவருள் எனத் தெரிகிறது.





பொதுவாக, புதிய அறிவுபூர்வமான தர்க்கபூர்வமான ஓன்றை அறியும்போது ஒரு மகிழ்ச்சி பிறக்கும். அறிவுக்கான தேடல் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் இன்பம் இது. ஆனால் அதனினும் பேரின்பம் சில அறிதல்கள் நம்முள் முளை விட்டிருப்பதை உணரும் போதும் உள்ளார்ந்த மாற்றங்களை கவனிக்கும் போதும் கிடைக்கிறது. குறைந்தபட்சம் அத்தகைய விஷயங்களை மனம் தொடர்ந்து கவனித்து அடையாளம் கண்டு கொள்ளவாவது கற்றிருக்கிறது. 


உதாரணமாக, குருஜி சௌந்தருடனான பயணங்களில், அனைவரும் மிக,ஆனந்தமாக கேலியும் சிரிப்பும் கொண்டாட்டமுமாக ஒரு புறம் திகழும் போதே மறுபுறம் மிக ஆழமான தாக்கம் ஒன்றை யாரும் அறியாத வண்ணம் தனிப்பட நம்முள் ஏற்படுத்தி விடுவார். அது நாள்பட்ட தவறாக இருக்கலாம், நாமே அகங்காரம் என அறியாத அகங்காரமாக இருக்கலாம், அல்லது தப்பித்துக் கொள்ளுதல், தவிர்த்தல் போன்ற அகப்பழக்கங்களாக இருக்கலாம்.

அதை முகத்துக்கு நேராக உடைப்பது கூட அவரது வழக்கம் இல்லை. ஆனால் ஆசிரியர் அவராகத் திகழ்வதன் மூலமே அதை உணர்த்திவிடுகிறார். அதனால்தான் வகுப்பிலோ, இத்தகைய கூட்டான பயணங்களில் சொல்லப்படும் சொற்களும் அதில் உணரப்படும் விஷயங்களும், நமக்கே பிரத்யேகமான பாடமாக, அவர் இதன்மூலம் நமக்கான  செய்தியைதான் சொன்னார் என ஒவ்வொருவரும் உணரும் வண்ணம் ஏதோ ஒன்று உள்ளே சென்று விடுகிறது


உதாரணமாக இந்தப் பயணத்தில் அவரது ஞானத்தை, கனிவை நோக்கிக் கொண்டே இருந்தேன். ஆசிரியரிடம் வியந்து தீராத எத்தனையோ விஷயங்கள் அனைவருக்கும் இருக்கும். என்றும் ஒவ்வொரு நொடியும் புதிதாக விளங்கும் தன்மை கொண்டவர்கள் ஞான ஆசிரியர்கள். இந்த ஞானம் என நான் உணர்வது, புத்தகங்களை வாசிப்பதாலோ சொற்பெருக்கத்தாலோ வருவதல்ல. பல்லாண்டு ஒரு பாதையில் வாழ்ந்து அந்த சாதனையின் விளைவாக கனிந்திருப்பது, அதுவாகவே திகழும் அறிவு. எத்தனை உயரத்தில் தான் நின்றாலும் சுற்றி இருக்கும் யாரையும் கீழே குனிந்து நோக்கும் அதிகாரப் பார்வை இல்லாமல் அத்தனை குழந்தைகளையும் தன் தோளிலும் முதுகிலும் இடையிலும் ஏற்றிக் கொண்டு விளையாடும் தந்தையின் கனிவு. தேவையெனில் சரிசெய்து விடமுடியும் எனத் தெரியும் தந்தையர் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடத் தெரிந்தவர்கள். நன்மேய்ப்பர்கள்.




இது போன்ற ஒரு கனிந்த ஆசிரியரைப் பார்க்கும் போது, குழந்தையாய் தந்தையின் உயரத்தைக்கண்டு வியந்து நானும் ஒரு நாள் என் அப்பா போல வலிமையானவளாவேன் என்னும்  உறுதியும் வைராக்கியமும் ஏற்படுகிறது.


அப்படி சிரிப்பும் களிப்புமாக நடந்த இப்பயணத்தில் அவதானித்தவற்றில் சில:


கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, கேள்விகளே அற்ற, கேள்விகளை எழுப்பிக் கொள்ளக்கூடாத, சில இடங்கள் இருக்கின்றன. அந்த ஆதார மையங்களை அடையாளம் கண்டு கொள்வது ஓரு பேரறிவு. அத்தகைய அச்சில் நின்றே இங்குள்ள அனைத்தும் இயங்குகின்றன அவற்றில் எழுப்பப்படும் தர்க்கரீதியான ஐயங்களும் கேள்விகளும் அகங்காரத்தை பெருக்குவதையோ அமைதியின்மையை உண்டாக்குவதையோ அன்றி வேறேதும் செய்வதில்லை.


இதற்கு நேர்மாறாக பழக்கத்தினாலும் நமது வசதிகளுக்காகவும், சில பயனற்ற/பின்னிழுக்கும் விஷயங்களை எந்த விசாரமும் இன்றி நடைமுறைப்படுத்தி வைத்திருப்போம். சுற்றத்தையும் சமூகத்தையும் நமக்கு நாமே கூட மிக விரிவான சமாதானங்களுடன் அவற்றை நியாயப்படுத்தி வைத்திருப்போம். அத்தகைய சில கூறுகளை நிர்தாட்சண்யமாக கேள்வி கேட்க வேண்டிய அறிவும் மிகத்தேவையான ஒரு அறிவு.


அழைப்பு எழும் முன்னரே அல்லது அதை உணர்ந்தவுடனேயே சென்று முன் நிற்க வேண்டிய களங்கள் இருக்கின்றன, கர்மசேவைக்கான பல வாய்ப்புகள் அப்படித் தான் இருக்கின்றன.  நம்மைச் சுற்றி அப்படி ஓருயிர் தேவையோடு காத்திருக்கிறது அல்லது ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது என்று உணர்வதற்கான கண்களைத் திறந்து வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த அறிதலும் விழிப்புணர்வும் மிக முக்கியமானது. மற்றோர் உயிரை ஏதேனும் ஒரு வகையிலாவது தொடாத எந்தப் பயணமும் பொருளற்றது என ஆசிரியர் சொல்வதன் பிரத்யட்ச விளக்கம் இம்முறையம் நிகழ்த்திக் காட்டப்பட்டது, யாரோ ஒரு பெயரறியாத ஆட்டோ ஓட்டுனருக்கு அவரது வாழ்வுக்கு மிக முக்கியமான பயிற்சி ஆசிரியரால் கற்றுத்தரப்பட்டது.


அதே சமயம் நம்மைச் சுற்றிச்சூழ எத்தனை இரைச்சலாக இருந்தாலும் நாம் காதிலேயே வாங்கிக் கொள்ளக் கூடாதவை இருக்கின்றன, நம் காலடியும் படக்கூடாத அகங்கார வாயில்கள் சில இருக்கின்றன. அதை அடையாளம் கண்டு கொள்வதும் உடலால் அத்தகைய சூழலின் உள்ளே இருந்தாலும் மனதில் ஒரு துளியும் ஒட்டாமல் விலகிச் செல்வதும் பேரறிவு.


எந்த இடங்களில் வலிகளை, சிரமங்களை தாங்கிக் கொள்ளும் திதிக்ஷா தேவை என்பதும், எந்தெந்த விஷயங்களில் நாம் தேவையற்ற, நாம் உதறவேண்டிய எடைகளை சுமந்தலைகிறோம் என்பது குறித்ததுமான பகுத்து அறியும் அறிவு. 


உணர்வுகளாக மிகைப்படுத்திக் கொள்ளக்கூடாதவை, சொற்களாக விரித்து பெருக்கிக் கொள்ளக்கூடாதவை, வெளிப்படுத்தத் தேவையற்ற மிகை சொற்களும், மிகை உணர்ச்சிகளும் குறித்த பிரக்ஞை, எத்தகைய பெருமகிழ்ச்சியாக இருந்தாலும் அள்ளிச்சூடி ஆடிக்களித்து விட்டு அங்கேயே அவற்றை இறைக்கர்ப்பணித்து விட்டு அதிலிருந்து நகர்ந்து விடுதல், ஒரு கணமும் சோர்வுறாதிருத்தல், அதற்கான பிராணனை வளர்த்துக் கொள்ளுதல் என உடல், பிராணன், மனம், உள்ளுணர்வு என அனைத்துத் தளங்களுக்குமான பாடம் நடந்து கொண்டே இருந்தது, இருக்கிறது. அத்தனையும் 'ஆனந்தம்' என்ற ஒற்றை உணர்வாக உள்ளே நிறைந்திருக்கிறது.





Thursday, November 21, 2024

பிரியத்துக்குரிய யேசு - பால் சக்காரியாவின் யேசு கதைகள்

ஒரு இனிய மாலை நேரத்தில் வாசித்து முடித்துவிடக்கூடிய சிறிய மொழியாக்க சிறுகதைத் தொகுப்பு 'யேசு கதைகள்'. மிக அழகான கதைகளை அதன் 'ஸ்நேகம்' சிறிதும் குன்றாமல் தமிழில் கொணர்ந்த கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு அன்பும் நன்றியும்.


இத்தொகுப்பின் முதல் கதையான 'யாருக்குத் தெரியும்' சிறுகதை.

ஏரோது மன்னனின் ஆணைப்படி இரண்டுவயதுக்குட்பட்ட குழந்தைகளை வாள்முனையில் கொன்று குவித்து அந்த ரத்தக்கறையின் எடையுடன் விபசார விடுதியில் அடைக்கலமாகும் படைவீரனின் கதை. அவனுக்கும் அவ்விடுதியின் தலைவிக்குமான கூர்மையான உரையாடல் வழி விரிகிறது யேசுவின் பிறப்பின் செம்புலம். படைவீரர்களுக்கு யாரோடும் யுத்தமில்லை என்பதையும் கொலையின் அபத்தங்களையும் உணர்ந்துவிட்டவன். அவனுக்காக  இறைமைந்தனிடம் மன்னிப்பின் அடைக்கலம் கோருகிறது  அந்த விடுதியின் தலைவியான ஓர் அன்னையின் மனம்.


"இத்தனை ஆயிரம் குழந்தைகளின் குருதியினூடேதான் ஒரு ரட்சகன் வருகிறானா?" என்னும் அவ்வீரனின் குமுறல் - வெண்முரசு நாவல் வரிசையின் நீலம் நாவலில், கண்ணனின் பிறப்பையொட்டி கம்சனின் வெறியாட்டத்தை கண்டு "இத்தனை குருதியில் பிறந்த அவனே இந்த யுகத்தின் அதிபன்...பொன்முடிகொண்டு பிறக்கவில்லை. பெரும்புகழ்கொண்டு பிறக்கவில்லை. பொல்லாப்பழிகொண்டு பிறந்திருக்கிறான்! பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்!" என வெடிப்புறும் வசுதேவரின் சன்னத வரிகளை நினைவுறுத்தியது. 


'அன்னம்மா டீச்சர் சில நினைவுக் குறிப்புகள்' மனதுக்கு மிக அணுக்கமான சிறுகதை. தன் முப்பத்து மூன்றாவது பிறந்தநாளில் இனி தனக்கு மட்டுமே வயதாகும் என்று, யேசுவைத் தம்பி என விளிக்கும் பாசமிக்க பெண். வீட்டில் அனைவருக்கும் மூத்த அக்காவாக சுமைதாங்கி பழகிய அவளுக்கு யேசுவுக்கும் ஒரு நொடியில் அக்காவாகி விட முடிகிறது.


இரக்கமற்ற ரட்சகன் மீது இரக்கப்பட அன்னையராலும் சகோதரிகளாலும் காதலிகளாலும்தான் இயல்பாக முடிகிறது. இச்சிறுகதைத் தொகுப்பின் மற்றொரு கதையில் வரும் வரிகள்: "தாயும், மனைவியும், காதலியும், சகோதரியும் தருவதை விடவும் ஒரு ஆத்ம பலத்தை வேறு யாரால் தந்துவிட முடியும்? அவர் பிதாவைத் தேடிப் போவதற்கிடையில் மாதாவையும் புரிந்துகொள்ள முயன்றிருக்கலாமே. அதற்கு பதில் அவன் தந்தைமையின் ஊடுவழிகளிலூடே முட்டி மோதி நடந்தபடி இருந்தார். தந்தை யாராக இருந்தால் என்ன? கருவறைதானே உண்மையில் அவன் தந்தை?" இவ்வரிகளே இச்சிறுகதைகளின் மையம் எனலாம், இக்கதைகள் அனைத்தின் வழியாக வெளிப்படும் பிரியத்துக்குரிய யேசுவைக் குறித்த ஒரு பெண்ணின் அங்கலாய்ப்பு.

அன்னம்மா டீச்சரின் மரணத்தருவாயில் அவளைத் தாங்கிக்கொள்வதற்காக வரும் தம்பி யேசு இக்கதைகளிலேயே மிக அழகானவன்.


போந்தியஸ் பிலாத்துவின் கடிதத்தின் வழியாக வெளிப்படும் யேசுவும் பெண்களால், அவன் மரணத்துக்கும் உயிர்த்தெழலுக்கும் முன்பே அடையாளம் காணப்பட்டு நேசிக்கப்படுபவன் ஆராதிக்கப்படுபவன். இக்கதைத் தொகுப்பின் வழி நாம் காணும் யேசு, யாதவகுல அழகனைப் போல பெண்களின் விழி வழி காணப்படுபவன். யேசுவே இக்குறுநாவலில் ஓரிடத்தில் சொல்வது போல தான் நேசிக்காத போதும் தன்னை நேசிக்கும் சிநேகிதிகளைக் கொண்டவன். அவனது மறைவுக்குப் பின்னர், மூன்றாம் நாளில் அவன் உயிர்த்தெழுவதற்கு முன்னரே அவன் வரக்கூடுமென அவனைக் காண அவனை ஆராதித்த  பெண்கள் பாலை மலைச்சரிவில் ரகசியமாக நடந்து செல்கின்றனர். அப்போது, 

"யேசு நிச்சயம் இந்த வழியில் வருவாரென உனக்கு எப்படித் தெரியும்?" என்ற ஒரு பெண்ணின் கேள்விக்கு மரியம் "எனக்கொன்றும் நிச்சயமாகத் தெரியாது. அவர் வருவார் என்று நான் நம்புகிறேன். அவ்வளவுதான். இன்று பார்க்கவில்லையென்றால் வேறு ஒரு நாளில், வேறு பாதையில் பார்ப்போம். அவர் எங்கேயிருக்கிறார் என்பது நமக்குத் தெரியாவிட்டால் கூட, நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டாமா? அவர் அறிந்திருப்பார் என்று நாம் நம்புவோம்." என்கிறாள். 


இறையும் குருவும் அனைத்தையும் அறிந்தே, கல்லும் கரடுமான பாதைகளில், பூமி நடுங்கும் வேளைகளில் நடக்கவைக்கிறார்கள். ஆனால் 'நாமிருக்கும் இடம் எதுவாயினும் அவர் அறிவார்' என்ற அந்த ஒற்றை நம்பிக்கையில்தான் குருதி சொரியும் பாதங்களுடனும், சறுக்கியும் விழுந்துமேனும் அவரை எதிர்நோக்கி  நடக்க முடிகிறது. 

ஒளியை நோககிய பாதையில் இருள் நிழல்கள் புறமுதுகே காண்கின்றன.


Sunday, August 4, 2024

அடுத்த பணி

மாஸ்டர் கிறிஸ்டியன் எழுதியதில் என்ன நிகழ்ந்தது?

மாஸ்டர் கிறிஸ்டியன் (நித்திய வழி) மொழிபெயர்ப்பு என்பது ’ஆசிரியரின் சொல்’ என்ற ஒற்றை விளக்கொளியில் நிகழ்ந்த பயணம். இது இலக்கியப் பணி என்பதை விட ஆன்மீகமான ஒரு பயிற்சி என்பதே உண்மை. எனவே இதை எழுதியதன் மூலம் கண்டடைந்த எதையும் இலக்கிய ரீதியான ஒரு அனுபவமாக என்னால் எண்ணிப் பார்க்க இயலாது.



எழுதிய விதத்தில், ஒன்றை சொல்வதென்றால், ஆசிரியர் அறிவுரையின்படி, ஒவ்வொரு பக்கமாக மொழிபெயர்க்கும் போதுதான் நானும் முதல் முறையாக அப்பக்கத்தை வாசித்தேன். அவ்வகையில் மூன்று வருடங்கள் வாசித்த நூல் இது. இவ்வளவு நிதானமாக ஒரு நூலை வாசித்த அனுபவமே எனக்கில்லை. அதனால் முதல்முறையாக ஒரு படைப்பை வாசிக்கும் போது அடையும் உணர்வெழுச்சியை அப்படியே எழுத முடிந்தது.


நமது குருகுலங்களில் மாணவனுக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விதமான பணி வழங்கப்படும். குறிப்பாக ஞான யோகத்தில் பயணிக்க விரும்பும் மாணவருக்கு, மாணவரின் மனம், அறிவு, வாசனா, படிநிலை எனப் பல விஷயங்களைப் பொறுத்து அப்பணி ஆசிரியரால் நிர்ணயிக்கப்படுகிறது. அது ஏதேனும் ஒரு எழுத்துப் பணியாகவோ, கீதை, உபநிடதம் போன்ற முக்கியமான நூல்களின் உரையாகவோ, மொழிபெயர்ப்பு பணியாகவோ, ஆசிரியர் கற்றுக் கொடுத்த ஒன்றை தொகுத்து எழுதுவதாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எழுதி முடித்த பின்னர் அப்படைப்பு என்னவாயிற்று என்பது இங்கு முக்கியமல்ல. அதை ஆசிரியர் அக்கணமே நிராகரிக்கலாம், அல்லது ஏற்றுக்கொண்டு அப்பால் எடுத்து வைத்துவிட்டு அடுத்த ஒரு பணியை, கல்வியை வழங்கலாம்; அது எத்தனை வருட உழைப்பைக் கோரியிருந்தாலும், முழு வாழ்வைக் கோரியிருத்தாலும் அதில் மாற்றமில்லை. அவ்வேலையின் வழியாக மாணவருக்கு நிகழும் அறிதல்களும் மாற்றங்களுமே அதன் முழுப்பயனும் ஆகிறது.


அவ்வகையில் மாஸ்டர் கிறிஸ்டியன் ஆசிரியர் ஜெயமோகன் உருவில் குரு நித்யா எழுதப் பணித்த ஒரு சாதனா - ஆசிரியர் சொன்ன பிறகு எந்நிலையிலும் பின்வாங்கக் கூடாத, பின்வாங்க எண்ணவும் இயலாத ஒரு அன்றாட நியதி. அதில் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் இணைந்திருத்தல். அது அத்தனை எளிதாக அமைந்து விடவும் இல்லை. எண்ணற்ற ஊசல்கள், அலைக்கழிப்புகள், எழுதாமல் இருக்க ஏற்புடைய காரணம் என நம்பச் செய்யும் வகையில் அத்தனை அத்தனை மயக்கங்கள், மாயைகள். இவை அனைத்திலும் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டதாகவோ இத்தடைகள் இல்லாமல் ஆகிவிட்டதாகவோ நிச்சயம் சொல்லமுடியாது. மூன்று வருடங்களில் எத்தனையோ மனத்தளர்வுகள், சுணக்கங்கள். இப்படி ஒவ்வொரு முறை தடையோ மனத்தளர்வோ ஏற்பட்ட பொழுதிலும், சாதனாவில் நிலைத்திருக்க வைத்தது யோகம் தான். யோகம்

என்ற சொல்லால் ஆசன, பிராணயாமப் பயிற்சிகளை மட்டும் குறிப்பிடவில்லை. யோகத்தை வாழ்வு முறையாக மாற்றிக் கொள்ளும் அனுபவத்தை சொல்கிறேன். அவ்விதம் மனம் தளரும் ஒவ்வொரு முறையும் ஆசிரியர் சௌந்தர் அனேக நூற்றுக்கணக்கான முறை வகுப்புகளில், உரையாடல்களிலும் சொன்ன சொல்லை இறுகப் பற்றிக் கொண்டேன் - ‘ச து தீர்க்க கால நைரந்தர்ய’ - நீண்ட காலம், தொய்வின்றி, பக்தியுடன் ஈடுபடும்போதுதான் சாதனா உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது என்ற பதஞ்சலி யோக சூத்திரம்தான் அது. சாதனாவைப் பொறுத்தவரையில் மூன்று வருடத்தை நீண்ட காலம் என சொல்ல இயலாது. இது ஒரு ஆரம்பம் என்ற வகையில் இப்பாதையில் நீடித்து முன் செல்வதற்கான அடித்தளம் எனக் கொள்கிறேன்.


இன்று (குருபூர்ணிமா  21-ஜூலை-2024) இப்பணி நிறைவுற்ற தருணத்தில் இது முழுமையாக குருவருள் என்று உணர்கிறேன். எழுதப் பணித்த குரு நித்யா/ஆசிரியர் ஜெயமோகன், எழுத்தெனும் யோகத்தில் இருந்து விலகாதிருக்க வழிகாட்டிய குரு சத்யானந்தர்/ஆசிரியர் சௌந்தர் அருளும் ஆசியும் வேண்டி பாதம் பணிகிறேன்!

***


ஆசிரியர் பாதங்களில் இதை சமர்ப்பித்ததுடன் என்னை இதில் இருந்து விலக்கிக் கொண்டு அடுத்த பணியை இன்று (ஆடி அமாவாசை - 4-ஆகஸ்ட்-2024)  கையில் எடுத்துக் கொள்கிறேன். (ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் அவர்களின் ‘Everyday Yogi’ மொழிபெயர்ப்பு)  அதுவும் நிறைவுடன் நிகழ குருவருளையம் இறையருளையும் நாடுகிறேன்.