Monday, November 2, 2020

கங்கையின் அழைப்பு

இன்று(2-நவம்பர்) காலை விழித்ததும் வாசித்த முதல் பதிவு இது.

https://m.facebook.com/groups/TheHimalayanClub/permalink/10158944613165775/
எழுந்ததும் முகநூல் பார்க்கும் வழக்கமில்லை, எனினும் இன்று அவ்விதம்தான் நேர்ந்தது.

கங்கையுடன் அடியிலிருந்து முடிவரை ஒரு தொடர் பயணம் என்ற எனது கனவுகளில் ஒன்றை ஒருவர் நடைபயணமாக செய்திருக்கிறார். சச்சின் சாச்சியா எனும் இவர் வாரணாசியில் துவங்கி அலகாபாத், கான்பூர், ஃபரூக்காபாத், ஹரித்வார், ரிஷிகேஷ், உத்தரகாசி, வழியாக கங்கையின் ஊற்றுமுகமான கங்கோத்ரி வரை 1800கிமீ நான்காண்டுகளாக நடந்திருக்கிறார். 2017 ஆகஸ்ட் 24 வாரணாசியில் நடையைத் துவங்கி இந்த அக்டோபர் 2020-ல் தபோவனத்தில் முடித்திருக்கிறார். இதற்கு முன்னர் இதுபோல நர்மதையின் கரையில் 1300கிமீ மிதிவண்டி பயணமாக சென்றிருக்கிறார்.
மிகச் சுருக்கமான முகநூல்-வகைமையிலான குறிப்புகளே இவரது பக்கத்தில் இருக்கின்றன. புத்தகமாகவும் வரப்போகிறது என்றறிய முடிகிறது.

என்னுள் உறங்கும் ஒரு மிக அணுக்கமான கனவைக் கிளர்த்தி விட்டிருக்கிறது இந்தப் பதிவு.

எனது ஆத்மார்த்தமான கனவுகளில் முக்கியமானவை -

பாரதத்தை நடந்து அறிய வேண்டுமென்ற பேரவாவும், கங்கையை கடல்முகத்திலிருந்து ஊற்றுமுகம்வரை உடன் பயணிப்பதும், இமயத்தை கிழக்கிலிருந்து வடக்கு வரை ஒவ்வொரு மாநிலத்திலும் சிலகாலம் தங்கி தெரிவு செய்த சில பகுதிகளையேனும் நிதானமாக தரிசிக்க வேண்டுமென்பதும். இப்பிறவி எனில் இப்பிறவி, இல்லையெனில் இந்த பயணத்தின் தொடக்கமாவது இங்கு அமையட்டுமே.

இதில் மூன்றாவது பகுதியான மலைப்பயணங்களுக்கு ஒரு செயல்திட்டமும் மனதில் உருவாகி இருக்கிறது, நண்பர்களோடும் அதை செயல்படுத்துவது குறித்தும் பேசி வருகிறேன். இந்த கங்கைக்கரைப் பயணம் இப்போது ஒரு பெரிய அழைப்பாக மனதை முற்றிலும் ஆட்கொண்டிருக்கிறது.

பத்து வயதில் தாத்தாவுடனான மாலை நடைகளில் தாராபுரத்தின் அமராவதி ஆற்றங்கரையில் நின்றுகொண்டு ரிஷிகேஷ், ஹரித்வார், கங்கோத்ரி, யமுனோத்ரி செல்வது குறித்து நானும் தாத்தாவும் கனவுகள் கண்டிருக்கிறோம். பல நாட்கள் இது குறித்துப் பேசியபடி அந்திப்பொன்வெயிலும் அதிகாலை முதல் கதிரும் கண்டிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக நான் ரிஷிகேஷ் சென்றது தாத்தாவின் திதியன்றே நிகழந்தது. அது அங்கே சென்ற பிறகே கங்கைக்கரையில், ஒரு அந்திப்பொழுதில், திதி அன்றுதான் என்று அறிய நேர்ந்தது. தாத்தா அதை நிறைவேற்றி வைத்தார்கள்.


சென்ற வருடம் இந்நாட்களில் தேவ்தீபாவளியை காசியில் தரிசிக்க எதிர்நோக்கி ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டும் அன்னையைக் காணும் தாகம்.

கங்கையின் அடிமுடி காண அழைப்பு வந்திருக்கிறது. எப்படி? எங்கு? எவ்விதம்? எதுவும் இந்த நொடியில் தெளிவாக இல்லை. ஆனால் குருவருள் உடன்வர இந்தப் பயணம் செய்வது உறுதி. அதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது.