Friday, March 26, 2021

சிங்கை குறிப்புகள் - 22 - தேயும் கோப்பியும் தேயாத நினைவுகளும்

வேலை நாட்களில் பின்மதிய தேநீர் இடைவேளை அலுவலக நண்பர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. ஒரு தேநீரோடு அன்றைய அழுத்தங்கள் அனைத்தையும் நகைச்சுவையில் தோய்த்து சோப்புக்குமிழ்கள் ஆக ஊதி பறக்க விட்டு மீண்டும் அடுத்த கூடுகைகளுக்கு விரையும் நேரம். அரிதாக தேநீர் பருகியபடி சிறு நடையும் பூங்காவைச் சுற்றி நடந்துவிட்டு மீள்வதுண்டு. ஓரிரு நாட்கள் போகாவிட்டால் அந்தக் கடையில் உள்ள பிலிப்பினோ பெண்ணும் எங்கே ஆளைக் காணோமே எனக் கேட்டுத் தெரிந்து கொள்வாள். இப்போது ஒரு வருடத்துக்கு மேலாகிறது. இதுபோன்ற பல சிறு உணவங்காடிக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. தேநீர் இடைவேளையின் நட்பு உரையாடல்கள் இல்லாமற் போனது இந்த ஒரு வருடத்து வீடுறை நாட்களின் இழப்புகளில் ஒன்று. 



தேநீர் நேரம் ஸ்டார்பக்ஸ் போன்ற பளபளப்பான காபிக் கடைகளை விட உணவு அங்காடி வளாகங்களில் உள்ள சிறு தேநீர்க் கடைகளில்தான் கூட்டம் குழுமும். அதுதவிர நாம் முன்னர் பார்த்த கில்லினே கோப்பிட்டியம்(Killiney Kopitiam), யா குன் காயா டோஸ்ட்(Ya Kun Kaya Toast) மற்றும் டோஸ்ட்பாக்ஸ்(Toastbox) போன்ற உள்ளூர் கடைகளிலும் தேநீர் வேளையில் கூட்டம் அதிகமிருக்கும். இது போன்ற கடைகளில் கிடைக்கும் உள்ளூர் கோப்பியின் சுவை சற்று வித்தியாசமானது, தேநீரின் நிறமும் மணமும் அலாதியானது. இவற்றில் கில்லினே கோப்பிட்டியமும் யாகுன் காயாவும் ஹைனானியர்களால் துவங்கப்பட்டவை. கோப்பிட்டியம்  என்பது கிழக்காசிய நாடுகளில் காபிக் கடையைக் குறிக்கும் சொல். 








சிங்கை வந்த புதிதில் மில்லேனியா வாக் உணவங்காடி தேநீர்க்கடை சென்று ஒரு கப் காபி என்றேன். நெஸ்கபே கலக்கிக் கொடுத்தார்.அதுவும் நன்றாக இருந்தாலும் மற்ற சிலருக்கு நல்ல காபி டிகாஷன் கலந்து கொடுக்கப்பட்டதை கவனித்தேன். அடுத்தநாள் அது போன்ற காபி வேண்டும் எனக் கேட்கலாம் என எண்ணிக் கொண்டு திரும்பிவிட்டேன். மறுநாள் மாலை காபிக் கடை வரிசையில் எனக்கு முன்னால் நிற்பவர்கள் என்ன கேட்கிறார்கள் எனப் பார்த்து அதன்படி கேட்கலாம் என எண்ணி நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் நான்கு ஆண்கள் நின்று கொண்டிருந்தனர். முதலாமவர் இரண்டு தேசி என்றார். அவருக்கு நல்ல மணம் நிறைந்த தேநீர் கொடுக்கப்பட்டது. இரண்டாமவர் கோபிஓ என்றார். அவருக்கு கடுங்காபி தரப்பட்டது. எனக்கு முன்னால் நிற்பவர் நான் அருந்தும் படியான காபி வாங்க வேண்டுமே என வேண்டிக் கொண்டிருந்தேன். அவர் வெகு வேகமாக கோபிசி கொசாங் என்றார். வேறு ஏதோ  வார்த்தை சொல்லி விட்டாரோ என மெனுவை எட்டிப் பார்த்தால் kopi-c-kosong என ஒரு பெயர் இருந்தது. அவருக்கு நாம் சாதாரணமாக அருந்துவது போன்ற காபி தரப் படவே நானும் வெகு வேகமாக கோபிசி கொசாங் என்றேன்.  காபி கைக்கு வந்தது. நல்லதாகப் போயிற்று, இன்று ஒன்று கற்றுக் கொண்டோம் என ஒரு வாகான இருக்கையில் ஐன்னல் ஓரம் வெயில் படும்படி அமர்ந்து கொண்டு காபியை சுவைத்தால் அதில் இனிப்பே இல்லை. சர்க்கரை போட மறந்துவிட்டார் போலும் என அவரிடமே சென்று 'அங்கிள், சர்க்கரை சேர்க்க மறந்துவிட்டீர்கள்' என்றேன். நீ கொசாங் தானே கேட்டாய் என்றபிறகுதான் அது சர்க்கரையில்லாத காபி எனப் புரிந்தது. 

கோபிசி கொசாங்

எனவே சிங்கையில் தேநீர், காபி குடிக்க விரும்புவர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய சொற்கள் இவை - கோப்பி(Kopi) & தே(Teh). இவற்றோடு இணையும் மந்திரச் சொற்களில்தான் நமது கைமேல் வரும் பலன் இருக்கிறது. 

  • கோப்பி   - மலாய் மொழியில் காபி
  • தே - ஹோக்கீய மொழியில் தேநீர் (தமிழிலும் அதைத்தான் சொல்கிறோம்)
  • ஓ(Kopi O/Teh O) - பால் சேர்க்காத காபி/தேநீர்  - ஹோக்கிய (சீன) மொழி
  • சி (Kopi C/Teh C) - பால் சேர்த்தது - ஹோக்கிய மொழி
  • கொசாங் (Kopi Kosong, Teh Kosong) -  சர்க்கரை சேர்க்காத - மலாய் மொழி
  • சூ டாய் (Kopi/Teh Siew Dai) -  குறைந்த சர்க்கரை - ஹாக்சூ (சீன) மொழி
  • கா டாய் (Kopi/Teh Ga dai) - அதிக சர்க்கரை - சீன மொழி
  • காவ் (Kopi/Teh Kao)- அதிக டிகாஷன் சேர்த்த - ஹோக்கிய (சீன) மொழி
  • போ (Kopi/Teh Poh) - நீர்த்த
  • டீ லோ (Kopi/Teh Di Loh) - நீர் சேர்க்காத - சீன மொழி
  • பெங் (Kopi/Teh Peng)- ஐஸ் சேர்த்த - ஹோக்கிய மொழி
  • புவா சியோ(Kopi/Teh Pua Sio) - பருகும் சூடில் - சீன மொழி 



இப்படி, வாய்க்கு ருசியாய் ஒரு காபி குடிக்க பன்மொழிப் புலமை அவசியம். அதிலும் பல பந்துகளை அம்மானை ஆடுவது போல எல்லா மொழியையும் கலந்து 'தே ஓ கொசாங் பெங்' ( சர்க்கரை சேர்க்காத, பால் சேர்க்காத ஐஸ் தேநீர்) என்றெல்லாம் வாங்குவார்கள். எனது தாத்தாவின் குழந்தைப் பருவத்தில் அவர்கள் சகோதரர்கள் அனைவரும் அவர்களது அம்மாவிடம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பால் வேண்டுமெனக் கேட்பார்களாம். நுரையில்லாமல் சூடான பால், ஆடைபடியாமல் ஆறிய பால், நுரையோடு ஆறிய பால், நுரையில்லாமல் ஆடையோடு பால், இப்படிப் பட்டியல் நீளுமாம். இதற்கெல்லாம்  மலேய/ஹோக்கிய மொழியில் என்னவெனக் கேட்க வேண்டும்.



தேநீரில் மேற்சொன்ன வகைகள் தவிர தே தாரிக்(Teh Tarik - நன்கு நீளமாக இழுத்து நுரைக்கக் கலந்தது, நம்ம ஊர் டீ மாஸ்டர்கள் செய்வதுதான்!!) மற்றும் தே ஹாலியா (இஞ்சி சேர்த்த) ஆகிய வகைகளும் உண்டு. 

தே ஹாலியா


இந்த காபி, தேநீர் தயாரிக்கும் முறைகளைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். தேநீர் பெரும்பாலும் தடித்த கண்ணாடியால் ஆன குவளைகளிலோ அல்லது வெண்பீங்கான் குவளைகளிலோ தரப்படும். கொதிக்கும் நீரை குவளையைச் சுற்றிலும் வழியும்படி ஊற்றி குவளைகளை சூடாக்குவார்கள். அதில் நமது தேவைக்கு ஏற்ப முன்னமே வடிகட்டி வைத்திருக்கும் கோப்பி அல்லது தே நீரை விட்டு சிறிது ஆவியாக்கப்பட்ட பால், சர்க்கரை போன்றவற்றைக் கலந்து மேலும் சிறிது கொதிநீர் மேலோடு விட்டு பரிமாறுவார்கள். எவ்வளவு சிறிய கடையாக இருந்தாலும் இங்கு தேநீர் நன்றாக இருப்பதை கவனித்திருக்கிறேன். 



இதனோடு, சிறுதட்டில் தளும்பி நலுங்கும் அரைவேக்காடு வெந்த இரு முட்டைகளில் சோயா சாஸ் கலந்து, காயா என்னும தேங்காய்ப் பாலும் முட்டையின் வெள்ளைக் கருவும் சேர்த்து செய்த ஒரு ஜாம் போன்ற கலவை தடவிய ரொட்டி இரண்டும் சேர்த்து கிடைக்கும். இதுவே பெரும்பாலானவர்களின் காலை உணவு. 

காலை உணவு


1800களில் பல நாடுகளின் மக்கள் வந்து குழுமும் இடமாக சிங்கப்பூர் உருவாகி வந்தது. அதனோடு சேர்ந்து கோப்பியின் கலவையான சுவையும் உருவாகி வந்திருக்கிறது. 1920களில் கோப்பிட்டியங்களில் சூதாட்டமும் நிறைய நடந்திருக்கிறது. பிறகு சூதாட்டம் முறைமைப்படுத்தப் பட்ட பிறகு கோப்பிட்டியங்களில் அது நடப்பதில்லை. 

காயா தடவிய ரொட்டி

சைனாடவுன் பகுதியில் இருக்கும் நான்யாங் பாரம்பரிய காபிக் கடை இதுபோன்ற உள்ளூர் கோப்பி/தே வகைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு உள்ளூர் முறையில் கோப்பி தயாரிக்கப்படுகிறது.  இங்கு தயாரிக்கப்படும் காபி டிகாஷன் நம்மூர் ஃபில்டர் காபி போல இருப்பதில்லை. இது வேறு சுவை. இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்படும் காப்பிக் கொட்டையில் பல வகைகள் இருக்கின்றன. அதன் வகையையும் அதை வறுப்பதில் உள்ள சூட்சுமங்களையும் சேர்க்கப்படும் பொருட்களையும், பெரும்பாலான உள்ளூர்க் கடைகள் தங்கள் வணிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். என்றாலும் பொதுவாக அறியப்பட்ட செய்முறை என்பது, காப்பிக் கொட்டை மிக சூடான பாத்திரத்தில் வெண்ணை, மார்கரின் எனப்படும் செயற்கைக் கொழுப்பு, மற்றும் சர்க்கரை சேர்த்து வறுக்கப்படுகிறது. இதில் விலை மலிவான கடைகளில் சோளம், எள் போன்றவையும் சேர்க்கப்படுவதுண்டு என்கிறார்கள். இது அரைக்கப்பட்டு, பின்னர் கடைகளுக்கு வருகிறது. காப்பி வடிகட்டப் பயன்படும் காலுறை போன்ற நீண்ட துணி வடிகட்டி 'சாக்'(sock) என்றே சொல்லப்படுகிறது. காபித்தூளை இதில் போட்டு ஒரு வாய் குறுகிய நீண்ட கழுத்து கொண்ட பாத்திரத்துள் வடிகட்டப் படுகிறது. மிக நீண்ட குழாய் போன்ற மூக்கு வழியாக குவளைகளில் கோப்பியின் வகைக்கேற்ப இந்த டிகாஷன் பால் அல்லது சுடுநீர் அல்லது ஐஸோடு கலக்கப்படும். 


இந்த கோப்பி/தே-யை இங்கு எடுத்து செல்வதற்கு (Takeaway) சிறு பிளாஸ்டிக் பையில் விட்டுக் கொடுப்பார்கள். அதுவும் முதலில் சற்று வியப்பாகவே இருந்தது. 



ஒவ்வொரு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு அருகிலும் நடைதொலைவில் உள்ள உணவங்காடியில் கோப்பிட்டியம்  நிச்சயம் இருக்கும். சிங்கையில் 2000 காப்பிக் கடைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.



அதில் நாள் முழுவதும் கூட்டம் இருப்பதைப் பார்க்கலாம். இங்கு உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் உணவங்காடிக் கடைகளிலேயே(Hawker Center) உணவருந்தும் வழக்கம் கொண்டவர்கள். 1960-கள் வரை  கம்போங் வீடுகளும் சிறிய தேநீர் கடைகளும் உணவு விடுதிகளுமாக இருந்த சிங்கையின் முகம் 1970-களில் புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளும் அதை ஒட்டி அமைக்கப்பட்ட உணவு அங்காடிகளுமாக மாறிப் போனது. ஒவ்வொரு உணவு அங்காடியிலும் ஓரிரண்டு சீன உணவுக் கடைகள், ஓரிரண்டு மலாய் உணவுக் கடைகள், ஒரு தேநீர், கோப்பி, மைலோ விற்கும் கடை, ஒரு ப்ராட்டா கடை, இந்தியர்கள் அதிகமிருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் தோசை(Thosai என்றே இங்கு எழுதப்பட்டிருக்கும், அப்படித்தான் உச்சரிக்கிறார்கள்), வடை, சப்பாத்தி போன்றவை விற்கும் ஒரு தமிழ் முஸ்லிம் கடையையும் நிச்சயம் பார்க்க முடியும். 




நான் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் வயதானோர் எண்ணிக்கை மிக அதிகம். எழுபது எண்பது வயதைத் தாண்டியோர். அநேகமானோர் தனியாக வாழ்பவர்கள். பிள்ளைகள் வேறெங்கேனும் அவர்களது குடும்பத்தோடு இருந்து கொண்டு வார இறுதிநாட்களிலோ, மாதம் ஒரு முறையோ வந்து செல்வார்கள். 



எனவே காலை முதலே இந்தக் கடைகளில் தாத்தாக்களும் பாட்டிகளும் கூடுவார்கள். சற்று வசதி உடையவர்களை அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்கள் சக்கர நாற்காலிகளில் அமர்த்தி அழைத்துக் கொண்டு வருவார்கள்.  உரத்த குரலில் விவாதங்கள் செய்வார்கள்.மாலையில் செஸ் போன்ற விளையாட்டுகள் எல்லாம் உண்டு. அதே நேரம் இது போன்ற பல உணவங்காடிகளில் உணவு மேஜைகளைத் துடைப்பது, தட்டுகளைத் துலக்குவது போன்ற வேலைகளிலும் பல முதியவர்கள் இருப்பதைக் காண முடியும். 



இப்புகைப்படம் வீட்டருகே உள்ள உணவங்காடியில் எடுத்தது. இவர் நடக்க இயலாத முதியவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உணவு பரிமாறும் தட்டுகளை துடைத்து வைத்துக்கொண்டிருக்கிறார்.தெளிவாக இல்லையென்றாலும், இது நேரடியாக அனுதினம் காணும் காட்சி என்பதால் இணைத்திருக்கிறேன். ஒரு சிலர் எங்கோ வெறித்தபடி தனியே அமர்ந்திருந்துவிட்டு இரவு வெகுநேரம் கழித்து தங்கள் வீடு திரும்புவார்கள்.



வீட்டருகே குடியிருப்பைச் சுற்றிலும் கடைகளிலும் 90 வயதுக்கும் மேற்பட்ட பலரை அன்றாடம் காண முடியும். மருத்துவ வசதிகளால் சராசரி ஆயுட்காலம் 84 வயதாக உயர்ந்திருக்கிறது. எனவே பணி ஓய்வுக்குப் பிறகு மீண்டும் ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்லாமல் உலகிலேயே அதிக செலவாகும் இந்நகரில் வாழ இயலாது. 


மேலும் வயதானவர்களிடையே இங்கு அல்சைமர் எனும் மறதி நோய் மற்றும் பார்கின்சன்ஸ் எனும்  நடுக்கு நோய் பாதித்தவர்கள் சற்று அதிகம் கண்ணில் படுகிறார்கள். மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்கும் வகையில் ஒரு கோப்பிக்கடை பிஷான் பகுதியில் திறக்கப்பட்டிருக்கிறது. கிம் சாங் லெங் (Kim Sang Leng)கோப்பிட்டியம் என்ற அக்கடையில் உள்ள மேசைகளில் அங்கு விற்கப்படும் உணவுகளின் படங்களும் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளன. 



மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாணயங்களை எளிதில் அடையாளம் காண முடியாது என்பதால் நாணயங்களின் வடிவங்களும் உணவு மேசை களில் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மட்டுமன்றி நமக்கு அக்குறைபாடு உள்ளவர்களை நினைவூட்டி, அவர்களுக்கு உரிய சேவையை வழங்கவும் உதவிபுரியும் என்கிறார் அந்தக் கடை உரிமையாளர். 

முன்னர் நான் வழக்கமாக தேசி அருந்தும் இடத்தில் மேஜை சுத்தம் செய்யும் தாத்தாவுக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். அதை பலமுறை சொல்லியிருக்கிறார், வாய் திறந்த புன்னகையோடு. அதற்கு மேல் பேசுவதற்கான பொதுவான மொழித்திறன் எங்கள் இருவருக்கும் இல்லை. ஒரு முறை எனக்கு அவர் கொண்டு வந்த தேநீர் கோப்பை கீழே விழுந்து உடைந்துவிட்டது. அதற்குரிய பணத்தை அவருக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த சம்பளத்திலேயே பிடிப்பார்கள். எனவே என் கைபட்டு உடைந்ததாகச் சொல்லி பணத்தைக் கட்டிவிட்டேன்.  அன்றுமுதல் இதைச் சொல்கிறார். எனக்குச் சீனமொழியும் அவருக்கு ஆங்கிலமும் தெரியாவிட்டால் என்ன. 



காபி டேயின் பிரத்யேக வாசகமான 'A lot can happen over coffee' நினைவுக்கு வருகிறது.


அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 23 - அஞ்சிறைத் தும்பி


முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 21 - நில்லாப் பெருஞ்சகடம்


Monday, March 15, 2021

சிங்கை குறிப்புகள் - 21 - நில்லாப் பெருஞ்சகடம்

மில்லேனியா டவரில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் பதினாறு முதல் பதினெட்டு மணிநேரம் வேலை நேரமிருக்கும்.  அந்த வேலை அழுத்தங்களுக்கிடையே எனது மேலாளர் ஒரு தனிச்சலுகையாய் ஜன்னலோர இருக்கையை எனக்களித்திருந்தார். அங்கு தெரியும் காட்சியின் அழகிலும் குறைந்துவிடாத கவனத்தோடு வேலை செய்வேன் என்று அச்சலுகை தரப்பட்டது. கடலின் நீலமும் வானின் நீலமும் கரைந்து கசியும் நீலவெளியில் கலங்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருப்பதும், கல்லாங் நதி சென்று கடலிணைவதும் அங்கு தெரியும். இன்றைய சிங்கையின் முக்கிய அடையாளங்களாக மாறிவிட்ட பல கட்டிடங்கள் அமைப்புகள் அன்று அங்கு இல்லை. அந்த ஜன்னல் வழியே தெரிந்த நீலவிதானத்தை ஒரு ஓவியத்தாளாகக் கொண்டு முற்றிலும் வேறொரு சித்திரத்தை வரைந்து விட்டது சிங்கை. 



அந்தத் தளத்துக்கு, அந்த சாளரத்துக்கு இப்போது அனுமதியில்லை, ஆதலால் அந்த வழியே காணச் சாத்தியமான இன்றைய காட்சிக்கோணத்தை வேறு இடங்களிலிருந்து பார்த்து ஆறுதலடைய வேண்டியிருக்கிறது. 2006-ல்தான் சிங்கப்பூர் ஃப்ளையர் (Singapore Flyer) எனப்படும் மாபெரும் சுழல்ராட்டினத்தை நிர்மாணிக்கத் தொடங்கினார்கள்.

Singapore Flyer from F1 Track nearby



150மீட்டர் விட்டமும் 165அடி உயரமும் கொண்டது என்றார்கள்,
நானமர்ந்திருந்த 42 தள உயரம் கொண்ட கட்டிடத்தைப் போலவே 42 தள உயரம் கொண்ட சுழல் சக்கரம், இந்த நின்றசீர்நெடுமாறன்(மில்லேனியா கோபுரம்தான்) சுழல்வதைக் கற்பனை செய்ய இயலவில்லை. 

தொடக்கத்தில் அங்கு என்ன பணி நடக்கிறது என வெளியே தெரியவில்லை.மாபெரும் தடுப்புகள் மறைத்திருந்தன. மில்லேனியா வாசலிலேயே இருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து நீளும் மாபெரும் பரமபதப் பாலங்கள்(ஓபிர் சாலையும், ரோசர் சாலையும், பெஞ்சமின் ஷியேர்ஸ் பாலத்தோடு இணைந்து மேலேறி கல்லாங் நதியைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலை நோக்கி செல்லும்) வழியாக அனுதினமும் நான் பயணம் செய்யும் 36ஆம் எண் பேருந்து மரைன் பரேட் நோக்கி செல்லும். அந்தப் பாலத்தின் உச்சத்தில் கல்லாங் ஆற்றைக் கடக்கும் போது, அருகே உள்ள தளத்தில் இரவும் பகலும் வேலை நடப்பது தெரியும்.

Benjamin Sheares Bridge


சில நாட்கள் கழித்து கழியூன்றித் தாண்டும்(pole vault)  போட்டிகளுக்காக நடப்பட்ட கழிகள் போன்ற ஆனால் அளவில் மிகப்பெரிய ஒரு கட்டுமானம் வெளித் தெரிய ஆரம்பித்தது. இரவும் பகலும் சிங்கையில் நடந்து கொண்டேயிருக்கும் கட்டுமானங்கள் ஒரு வியப்புக்குரிய காட்சி. பொது வழித்தடங்களுக்கு எந்தவித சிரமும் ஏற்படுத்தாது நம் காலடியிலேயே மாபெரும் கட்டுமானங்கள் நடந்தேறிவிடும். அதுபோல இதுவும் ஓயா உழைப்பில் சிதல்புற்று போல கணந்தோறும் வளர்ந்து கொண்டிருந்தது. 

இதன் மையத் தூண்கள் நடப்பட்டிருந்தன 


சில காலம் கழித்து அதில் ஆரங்கள் அமைக்கப்பட்டு பகுதி பகுதியாக வட்டக்கோண வடிவங்கள் (பீட்ஸா துண்டங்களின் வெளிக்கோடு போல) அதில் பொருத்த ஆரம்பித்தார்கள். 




மாபெரும் வடிவமாதலால் அதன் ஒவ்வொரு சிறு துண்டும் இணைக்கப்பட்டு வளர்ந்து வருவதை கண்களால் அறிய முடியவில்லை. 2007 மத்தியில் ஒரு மாபெரும் மிதிவண்டிச் சக்கரத்தை நிமிர்த்தி வைத்தாற் போல அது எழுந்து நின்றது. 

2007


சில மாதங்கள் கழித்து அதில் கண்ணாடிக் கூண்டுகள் பொருத்தப்பட்டன. கண் முன் நிகழ்ந்து கொண்டே இருப்பதும், மாற்றமேயின்றி அப்படியே இருப்பதும் போன்ற மாயை கொண்டதாக  வாழ்வைப் போல இதன் மாற்றமும் வளர்ச்சியும் கண்ணறிய முடியாததாக இருந்தது.



சில மாதங்கள் கழித்து நான் சிங்கையிலிருந்து கிளம்பி விட்டேன்.சில வருடங்கள் கழித்து மீண்டும் வந்தபோது சிங்கையின் கடல்முகம் முழுக்க மாறிவிட்டது. 

Marina Barrage (கடல்முகத்தில் தடுப்பணை) & Gardens by the Bay(கண்ணாடிச் சிறகுகள்) - View from Singapore Flyer

வளைகுடா தோட்டங்கள்(Bay Gardens), மரீனா பராஜ்(Marina Barrage), சிங்கப்பூர் ராட்டினம்(Singapore Flyer), மரீனா பே சாண்ட்ஸ்(Marina Bay Sands) என மாபெரும் தூரிகை கொண்டு ஏதேதோ வரைந்து விட்டார்கள். முதல் முறையாக 2012-ல் மாதங்கியின் அம்மா சிங்கை வந்தபோது அவர்களுக்கு ஊர் சுற்றிக் காட்டுவதான சாக்கில் ஏற்கனவே அறிமுகமான சிங்கையை மீண்டும் மறுஅறிமுகம் செய்துகொண்டோம். அப்போதுதான் முதல் முறையாக இந்த மாபெரும் சுழல் வளையத்தின் அடிவாரம் செல்ல நேர்ந்தது.     

நில்லாச் சகடத்தைத் நிறுத்தும் கம்பிகள்

மில்லேனியா டவர் அருகே இறங்கி ஃப்ளையர் நோக்கி நடந்து சென்றோம். உயரமான எல்லாவற்றிற்கும் உரிய விதத்தில் அருகெனக் காட்டி நடக்க நடக்க விலகிச் சென்றது, அது அங்கேயேதான் நின்றுகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் தானே உயரங்களை நோக்கி நடந்து செல்கிறோம். 



சாலைக்கு அப்புறம் 541அடி உயரம் கொண்ட (165 மீட்டர்) அத்திகிரி ஒரு மேடையின் மீது நின்று கொண்டிருந்தது. 

Singapore Flyer
சிங்கப்பூரின் முக்கியமான முகப்பு அடையாளங்களை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சுற்றிப் பார்ப்பதற்கான பேருந்துகள் அந்தக் கட்டிடத்துக்கருகே சுற்றுலாப் பயணிகளை உதிர்த்துவிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தன, பல தேசத்து முகங்கள் அங்கே தலைதூக்கி அந்த மெல்லென சுழலும் சக்கரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 



வெளிர் நீல வானத்தின் மீது மிதந்து செல்லும் வெண்துகில்கள் ஒளியென சிதறிக்கொண்டிருந்தன. அருகில் ஓடும் கல்லாங் நீரின் பிரதிபலிப்பும் சேர்ந்து சில நொடிகளுக்கு மேல் அச்சுழலியை காண விடாது செய்தது. 



மேடை போல வெளியே தெரிந்த அந்த வளாகத்தில் நகரும் படிகளில் ஏறி மேலே சென்றதும் இரண்டாம் தளத்தில்  சில அங்காடிகள், உணவகங்கள் இருந்தன.   நெளி முக்கோண வடிவம் கொண்ட அக்கட்டிடத்தின் மையத்தில் அம்மாபெரும் மோதிரத்தை ஏந்தி நின்ற கால்களுக்கு இடையே மழைக்காடுகளை நகல் செய்திருக்கிறார்கள். வண்ண கோய்  மீன்கள் நீந்தும் ஜப்பானிய கோய் நீர்க்குளமும் தெரிகிறது. வளத்தின் அடையாளமாக வண்ணமயமான கோய் மீன்களை வளர்க்கிறார்கள். 

கோய் நீர்க்குளம்

கால்களின் கீழே
எல்லா சுற்றுலாத் தலங்களையும் போல முகப்பிலேயே ஒரு இடத்தில் நிறுத்தி குழுவாகப் படங்கள் எடுக்கிறார்கள், அவ்விடம் விட்டு வெளியேறும் போது அச்சுற்றுலாத் தலம் பின்னணியில் இருக்க நாம் அதன் முன்னர் நிற்பது போன்ற புகைப்படங்கள் விற்பனைக்கு இருக்கும்.  முதல் சில முறைகள் இதில் மயங்கி படம் எடுத்துத் தெளிவது மரபு.

மேலும் ஒரு தளம் ஏறிச் சென்றதும் ராட்டினத்தில் தரை தொடும் கண்ணாடிக்கூண்டில் ஏறிக்கொள்ளும் மேடை இருக்கிறது. 

ஏறிக்கொள்ளும் மேடை (இடப்புறம்)


வழக்கமாக இது போன்ற மாபெரும் ராட்டினங்களில் முக்கோண வடிவ பட்டையாக இதன் வெளிப்புற ஆரம் அமைக்கப்படுமாம். இந்த மாபெரும் சுழலியின் வெளிப்புற ஆரம் முழுவதும் ஒரு ஏணி போன்ற பட்டை வடிவத்தில் அமைந்திருக்கிறது. 



அதன் வெளிப்புற விளிம்பில் 28 பேர் வரை பயணிக்கக்கூடிய இடை சிறுக்காத உடுக்கை போன்ற குளிரூட்டப்பட்டகண்ணாடி அறைகள் பொருத்தப் பட்டிருக்கின்றன. 



இச்சக்கரம் மிக மெதுவாகவே சுழலும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆட்கள் ஏறுவதற்கு இறங்குவதற்கும் இவை நிறுத்தப்படுவதில்லை. மிக மெதுவான அந்த சுழற்சியில் முதியவர்களும் கூட மெதுவாக நடந்து சென்றே ஏறிக் கொள்ள முடியும். சக்கர நாற்காலிகளில் வருவோரும் எளிதாக உள்ளே வரும் வண்ணம் அகன்ற வாயில். அந்த கண்ணாடிக் கூண்டுக்குள் நுழைந்ததும் சிங்கையை விட்டு மெல்ல காற்றாடி போல வானில் தொற்றி ஏறும் உணர்வு வருகிறது. 

F1 பந்தயத்துக்கான ஆயத்தங்களை மேற்பார்வையிடும் மேதான்ஷ்

முதல் பத்துப் பதினைந்து நிமிடங்கள் எத்திசையில் எதைப் பார்ப்பது எதைப் புகைப்படம் எடுப்பது என்ற பதற்றத்தில் அனைவரும் நாலா புறமும் நகர்ந்து ஆர்வமாகப் படம் எடுக்கிறார்கள். 


அம்மா மற்றும் மாதங்கியுடன் - 2016



மெல்ல மெல்ல மேலேறும் பொழுதில் இதன் கட்டுமானத்தை வியக்காமல் இருக்க இயலவில்லை.கிஷோ குரோகவா (Kisho Kurokawa) என்ற ஜப்பானியரும் டிபி ஆர்கிடெக்ட்ஸ் (DP Architects) என்ற சிங்கப்பூர் நிறுவனமும் இணைந்து இதனை வடிவமைத்திருக்கின்றனர். 2005-ல் துவக்கப்பட்ட இத்திட்டம் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டது. இதன் கட்டுமானத்தில் நூறு வருட மானுட பொறியியல் அறிவின் பங்களிப்பு இருக்கிறது. 1893-ல் சிகாகோவில் ஜார்ஜ் வாஷிங்டன் கேல் பெர்ரிஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட சுழல் ராட்டினத்தின் பெயராலேயே இது போன்ற அனைத்து ராட்டினங்களும் பெர்ரிஸ் வீல்(80மீ) என்றழைக்கப்பட்டன. அதற்கு அடுத்த வருடமே லண்டனில் ஏர்ல்ஸ் கோர்ட்(Earls Court) எனப்படும் இடத்தில் பிரிட்டிஷ் அமைத்த இந்திய சாம்ராஜ்யத்தை அங்கு மக்களுக்கு காட்டுவதற்காக கண்காட்சி அமைக்கப்பட்டு மாபெரும் ராட்டினம் அமைக்கப்பட்டது (94மீ).  2000ஆவது ஆண்டை முன்னிட்டு திறக்கப்பட்ட லண்டனின் கண் எனப்படும் லண்டன்ஸ் ஐ(London Eye) 135மீ உயரத்தில் உலகத்திலேயே மிகப் பெரிய ராட்டின வரிசையில் அடுத்து இணைந்து கொண்டது.  சீனாவின் ஜியாங்க்ஸி மாநிலத்தில் 2006-ல் கட்டப்பட்ட நான்சாங் நட்சத்திரம் (Star of Nanchang) - 160மீ உயரம் கொண்டு நான் பெரிதென்றது. இவற்றின் வடிவமைப்பில் இருந்து கற்றுக்கொண்டதனைத்தும் இந்த பிளையர் வடிவமைப்பில் உதவியிருக்கின்றன. முக்கியமாக சுமத்ராஸ் (Sumatras / Sumatra Squall) என்றழைக்கப்படும் வானிலை தொடர் நிகழ்வுகளும் அதன் விளைவான அதிவேக காற்றும் இதன் பொறியியல் கட்டுமானத்தில் ஒரு மிகுந்த அறைகூவலாகவும் இருந்திருக்கிறது. இந்தோனேசிய சுமத்ரா மலைத்தொடர்களால் தடுக்கப்படும் காற்று பல்வேறு தொடர் சுழற்காற்றுகளையும், இடி மின்னல் பின்னல் தொடரையும்இரவுகளில் ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக மலாக்கா நீர்ச்சந்தி நோக்கி செல்லும் காற்றின் அதிவேக விசையை கணக்கில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 


2008-ல் இச்சகடம் முதல் முறையாக பொது மக்களுக்குத் திறக்கப்பட்டிருக்கிறது. இருபத்தெட்டு கண்ணாடிக் கூண்டுகள் கொண்ட இச்சக்கரம் அதிர்ஷ்டத்தின் சக்கரம் என நம்பப் படுகிறது.  இதிலேயே விண்ணில் தேநீர் விருந்து போன்றவற்றுக்கு முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட அதற்கு சற்று அருகில் இங்கே உயரத்தில் வந்து நடத்திக் கொள்கிறார்களாம்.  இதற்கான கட்டணமும் வானுயரமே. 20 பேர் கலந்து கொள்ளக்கூடிய ஒரு கண்ணாடிக் கூண்டு மணமக்களுக்கும் நெருங்கிய உறவினர்/நண்பர்களுக்கும், அதைத் தவிர மேலும் ஒரு கண்ணாடிக்கூண்டுக்கு இரண்டு சுழற்சிக்கு 3000 முதல் 4000 வெள்ளி (சிங்கப்பூர் டாலர்) கட்டணம். வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது, அதில்தான் சரித்திரம் நிகழ்கின்றது என்று மணமக்களிடம் சொல்கிறார்கள் போலும்.   

உயரத்தில் இருந்து காணும் போது நான்கு வழிச்சாலை கொண்ட நான்கு பாலங்கள் அருகருகே செல்கிறது. மில்லெனியா மற்றும் செண்டெனியல் கோபுரங்கள் சற்று கீழே தெரிகின்றன. சன்டெக் நகரமும் கண்ணுக்கு எட்டிய வரை கட்டிட நிறைகளும் மேலை மற்றும் வடக்கு திசையை நிறைக்கின்றன. கீழே வளைந்து கிடக்கும் மாபெரும் சாலை அதில் ஊர்ந்து செல்லும் வாகன அசைவுகளால் மேலிருந்து காண்கையில் உயிருள்ள நாகங்கள் என நெளிகிறன்றன.

மரீனா மிதவை & ஹீலிக்ஸ் பாலம் 


மில்லேனியா கோபுரமும் சன்டெக் நகரமும்

தென்மேற்கு திசையில் மரீனா பே எனும் கடல் குடாவில் சிங்கையின் சிங்கம் நீரை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. உல்லாசப்படகுகள் வளைகுடாவில் ஓசைகளின்றி அசைந்து செல்கின்றன. மாபெரும் கப்பல் ஒன்றை அல்லது திமிங்கிலத்தை தலையில் சுமந்து கொண்டிருப்பது போன்ற மரீனா பே சாண்ட்ஸ் (கடல் குடா மணல்)  பிளையரை நோக்கி எக்கணமும் பாய்ந்து விடும் என்பது போல உடல் வளைத்து ஆயத்தமாக இருக்கிறது.

Downtown & Marina Bay





 சிங்கப்பூர் வணிக முகப்பின் விண்தொடும் கட்டிட நிரைகள் அணிவகுத்து நிற்கின்றன. 


தென்கிழக்கு மூலையில் கல்லாங் நதி கடலைத் தொடுவதன் முன் மரீனா பராஜ் கையால் தடுத்து நிறுத்துகிறது. அப்பால் ஓசைகளின்றி நீலவிதானத்தில் கப்பல்கள் மிதக்கின்றன. சிங்கை நகர், செந்தோசா தீவு மட்டுமல்லாது  மலேசியா மற்றும் இந்தோனேசியவை  சேர்ந்த தீவுகளையும் இதிலிருந்து காண முடியும்.



உச்சம் தொட பதினைந்து நிமிடங்கள் ஆகும். அதற்குள் அநேகமாக படம் எடுத்து அனைவரும் ஓய்ந்து கண்ணாடி அறையின் மைய பெஞ்சுகளில் அமர்ந்து விடுவார்கள். அடுத்த பதினைந்து நிமிடம் அவரோஹணம். இதை ஒட்டியே காலடியில் சிறு நெளிவென F1 அதிவிரைவு கார் பந்தயத்தின் துவக்க வளாகமும் பாதையும் தெரிகிறது. 



வான் நின்று  மண் நோக்கிய பார்வை, மண் தொட்டு இறங்க மீண்டும் ஒரு முறை விண்ணோக்குகிறது.  தலைக்கு மேலே வேறு கூண்டுகள் இப்போது உச்சத்தில் இருக்கின்றன, நமது உச்சத்தில் தாழ்வில் இருந்தவர்களை மேலே ஏற்றி நம்மைத் தரையில் இறக்கி விடுகிறது இக்காலச்சக்கரம்.    

 


இதன் கட்டுமானத்தை கால நகர்வுக் காணொளியாகக் காண 

https://www.youtube.com/watch?v=2IymrnRueSw


முந்தைய பதிவு: சிங்கை குறிப்புகள் - 20 - வினைக்களம்

அடுத்த பதிவு: சிங்கை குறிப்புகள் - 22 - தேயும் கோப்பியும் தேயாத நினைவுகளும்