Sunday, September 2, 2018

வனவாசி

https://www.jeyamohan.in/109452#.W4yrWegzZnI

அன்புநிறை ஜெ,

ஊட்டி காவிய முகாம் நாட்களின் ஒரு அதிகாலை நடையில், இந்தியா உருவாகி வந்த சித்திரத்தை, சிறு இனக்குழுக்களில் இருந்து பேரரசுகள் உருவாகும் சித்திரத்தைக் குறித்து ஜெ விளக்கியது, உள்ளூற சுழன்று கொண்டே இருந்தது. டி.டி.கோசாம்பி எழுதிய மேய்ச்சல் இனத்துக்கும் வேளாண் இனத்துக்குமான இடையறாத முரண். இதன் விளைவாக 'வனவாசி' நினைவில் எழுந்து வரவே மீள்வாசிப்பு செய்தேன்.

பழங்குடிச் சமூகங்கள் நிறைந்த வனங்கள் நிறைந்தது பண்டைய இந்தியா. வனங்களில் வாழ்ந்த இனங்களை நாகரிகத்தின் பலம் கொண்ட இனங்கள் வென்றதன் தொடர் சித்திரமே வரலாறு. விபூதி பூஷண் வந்த்யோபாத்யாய எழுதிய 'ஆரண்யக' எனும் வங்க நாவலின் தமிழாக்கம் 'வனவாசி' (தமிழில் த.நா.ஸேனாபதி - விடியல் பதிப்பகம்)

நகரத்திலிருந்து வேலை நிமித்தம் வனம் செல்பவன் வனவாசியாகி நகர் மீளும் கதை. கதை வங்காளத்துக்கும் பீகாருக்கும் இடையிலான ஒரு வனப்பரப்பில், பூர்ணியா பகுதியில், சுதந்திரத்துக்கு முற்பட்ட காலகட்டத்தில் நிகழ்கிறது. பெருங்காட்டு வெளியின் உரிமையாளராகிய ஜமீன் ஒன்றின் எழுத்தராக கல்கத்தாவிலிருந்து செல்லும் சத்தியசரணின் வாழ்வின் பிற்பகுதியில் முன் நினைவுகளென நிகழ்கிறது கதை.

வீட்டின் பரணை சுத்தம் செய்கையில் தட்டுப்படும் நாள்குறிப்பொன்றின் வழியாக சில சமயம் நமது முன்னோரது வாழ்க்கையின் வாயிலுள் நுழைந்துவிட நேருமல்லவா, அதுபோன்ற ஒரு கதையமைப்பு. பயணத்தில் பின் நழுவிச் செல்லும் மரங்கள் போல வனமென்னும் கதைக்களத்துள் பல காட்சிகள், பல சித்திரங்கள், பல மனிதர்கள் வந்து செல்கிறார்கள்.

கதையின் நாயகன் 'நாகரிக' நகரிலிருந்து 'பண்படாத' காட்டுக்குச் செல்கிறான். அவ்வனப் பகுதியை விளைநிலமாக மாற்றி ஜமீனுக்காக குத்தகைக்கு விடுவதே அவனது வேலை. ஓரிரு மாதங்களுக்குப் பிறகு வேலை தனக்கு ஒத்துவரவில்லை என்று கூறித் திரும்பிச்செல்லும் எண்ணத்தில்தான் தொடங்குகிறான். ஆரம்பத்தில் திகிலையும் ஏக்கத்தையும் உண்டுபண்ணும் காடு மெல்ல மெல்ல மோகினியென அவனை வசப்படுத்தி அவனுள் நிறைகிறது. கதைசொல்லியோடு நாமும் வனத்துள் நுழைகிறோம், வனம் நம்முள் நுழைகிறது.

அங்கு அவன் காணும் காட்சிகளும், எளிய மனிதர்களும், அவர்கள் வாழ்க்கை முறையும், அவன் இவற்றின் வழியாக அடையும் தரிசனமுமே இக்கதை.

காட்சிகள்:
லப்துலியா வனப்பகுதியின் அந்நிலப்பரப்பும், காடும் கதை வாசித்து வெகுநாட்களுக்கு மனதில் நிறைந்து விடக்கூடியது. மஞ்சம்புல் வேய்ந்த கூரைகள், தங்குதடையின்றி நிலவு பொழியும் ஃபுல்கியா நிலத்துப் பெருவெளி, பலவிதமான மரங்கள், பூக்களால் நிறைந்தது இக்காடு, எனில் பசுங்காடல்ல. ஆண்டுக்கு ஒரு முறை மழை பெறும், கடும் கோடையையும், கடும் குளிரையும் சந்திக்கும் காடுகள். அதன் உக்கிர வெயிலில், கரடு முரடில் கதை சொல்லிக்கு காளி தெரிகிறாள். கதை சொல்லி குதிரை மேலேறி காட்டினூடே செல்லும் காட்சிகளில் எத்தனை எத்தனையோ மரங்களின், மலர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார் - கஜாரி மரம், காட்டு வாதுமை, பலாசம், சாலமரம், தாதுப மலர்கள், இப்படிப் பலவகை. காட்டின் பல மரங்களும் மலர்களும் அறிய முடிகிறது.

பல பருவங்களும் வந்து செல்கின்றன, கடும் கோடை, காட்டுத்தீ, அடை மழை, குளிர், வசந்த காலம் என காடு பல்லுரு காட்டி அவனுள் வேர்பிடிக்கிறது. வனதேவதைகள் மண்ணிறங்கக் கூடிய நிலவுபூசிய பல இரவுகளை வனவிலங்குகளின் அபாயத்தை மீறிக் குதிரையிலேறிச் சென்று கானகத்தில் கதைசொல்லி செல்லும் பகுதிகள் கவிதையானவை, கனவு நிறைப்பவை.

கதை மாந்தர்கள்:
ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள், அவர்களோடு கதைசொல்லிக்கு நிகழும் அறிமுகங்களும், அவர்கள் வனத்தில் மேற்கொள்ளும் வாழ்க்கை முறைகளும், வாழ்வியல் போராட்டங்களுமாக நாட்குறிப்பென நகர்கிறது கதை. மிக மெல்லிய காற்று எதிர்பாராது பெருத்த ஓசையுடன் பொருட்களை வீழ்த்தி விட்டு செல்வது போல, சில கதாபாத்திரங்கள் மிகக் குறைவாகவே வந்து, மனதில் பெருஞ்சலனமேற்படுத்துகிறார்கள்.

தாவ்தால் ஸாஹூ எனும் ஒருவன் வட்டிக்குப் பணம் கொடுப்பவன், அந்நிலப்பகுதியில் செல்வப்பசையுள்ளவன் என்று அறியப்படுபவன், பழந்துணியில் பொரியரிசியுடன் அறிமுகமாகிறான். கடன் கொடுத்தவர்கள் ஏமாற்றிய பிறகு, காலாவதியான கடன் பத்திரங்களை அநாயசமாக கிழித்தெறிந்து விட்டு, 'நானேதான் எல்லாவற்றையும் சேர்த்தேன், நானேதான் தோற்றேன். தொழில் என்றால் லாபம், நஷ்டம் இரண்டும்தான் இருக்கும்' எனக் கடந்து போகிறான் - வறட்சியையும் வெள்ளத்தையும் ஒன்றென எதிர்கொள்ளும் பெருவனம் மட்டுமே கற்பித்திருக்கக்கூடும் இதை.

ஜயபால்குமார் என மற்றொருவன் இருபது வருடங்களாக மனைவி மக்களை இழந்த பிறகு முழுத்தனிமையில், தனது குடிசை வாசலில் வெறுமனே அமர்ந்திருப்பவன் - அவனைக் கண்டு முதலில் கதைசொல்லி வியப்படைகிறார். பிறகு அவனை சூழ்ந்துள்ள வனமும், நீலக்குன்றுகளும், புரசமர நிழலும், ஓடி ஓடி என்ன லாபம் என்று கதைத்தலைவனது மனப்போக்கை அங்கு செல்லும் அமைதியான ஆற்றுநீர் போல அமையச் செய்கிறது.

தாசியின் மகளாகிய குந்தா ராஜ்புத்திரன் ஒருவனுக்கு மனைவியாகி செல்வத்தில் திளைத்து, அவன் மறைவுக்குப் பின் குழந்தைகளுக்காக எச்சில் இலைக்காகக் காத்திருக்கும், இருளில் உதிர்ந்த தானியங்களைப் பொறுக்கும் வாழ்வு விதிக்கப்பட்டும், வலுக்கட்டாயமான தகாத உறவுக்கு இணங்காது இருக்கும் பெண். சரும வியாதி வந்து ஊராரால் கைவிடப்படும் ஒருவனைத் தனது பணிவிடையால் உடல்நலம் தேற்றி, அதற்கீடாகப் பணம் பெற மறுத்து தந்தையென எண்ணும் அவளது அன்பு. அத்தனை பருவகால மாற்றத்திலும் வேரூன்றி நிற்கும் வனவிருட்சம்.

தாதுரியா - காட்டுவாசிச் சிறுவன், கலைஞன். காடு அவனுள் கலையெனத் திகழ்கிறது. ஒரு வேளை உணவுக்கு வழியில்லாத போதும் 'சக்கர்பாஜி' நடனம் கற்றுக்கொள்ள அவன் படும் பாடும் அவனை மாணவனாக ஏற்கும் குருநாதரும்' அந்த மண்ணின் கலையின் இறுதித் துளிகள். அவனது இரும்புப் பாதை மரணம் நகரம் காடை அழிப்பதன் ஒரு காட்சியே.

யுகல் பிரசாத் - நன்கு படித்தவன், எனில் வனத்தில் தன் வாழ்வைக் கழிப்பவன், அரிய மலர்ச்செடிகொடிகளைத் தேடி வேறு நிலங்களிலிருந்து வனத்திற்கு கொண்டு வந்து விதைப்பவன். தனக்கென நோக்கமின்றி, காட்டுப் பகுதியின் வனப்பை மேலும் அதிகரிக்க வாழ்வை செலவழிப்பவன். அழிக்கப்படும் காட்டின் இறுதிக் கொடியை உயர்த்தும் பிரதிநிதி.

மஞ்சி - அறுவடைக்கு வரும் நாடோடிக் குடும்பத்தில் கிழவன் நக்சேதிக்கு இளையவளாக வாழ்க்கைப்பட்ட துடிப்பான பெண். அவளது உயிர்ப்பும் இளமையும் கான் தந்தது. வருடந்தோறும் அவள் காணும் அறுவடைக்கால சந்தை நகர வாழ்வெனும் மகுடியை அவள் முன் ஊதி மயக்கி அழைத்துச் செல்கிறது. இரண்டு முரணோட்டங்கள் ஏற்படுத்தும் சிக்கலில் குழந்தையையும் இழந்து தொலைந்து போகிறாள்.

இவர்கள் அனைவரும் சிறிதே வரினும், பெரிதும் மனம் நிறைப்பவர்கள்.

தரிசனம்:

கதை நடக்கும் 1920-களுக்கு மட்டுமல்ல என்றென்றும் ஏதோ ஒரு சமூகம் இன்னொன்றை உள்ளிழுத்தோ அழித்தோ முன் சென்று கொண்டுதான் இருக்கிறது. அவ்விதத்தில் வனவாசி பசுமைமாறாதது. ஏறத்தாழ
நூறாண்டுகள் தொடும் தருவாயிலும்(1920களில் விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய இக்காட்டுப்பகுதிகளில் பணிபுரிந்திருக்கிறார்) இந்த நாவல் இன்றைக்கும் பொருத்தமாகவும், வாசித்து முடித்ததும் வெளிவரும் பெருமூச்சை மேலும் நீட்டிப்பதாகவுமே இருக்கிறது.

மகாலிகாரூப மலைக்காட்டில் சத்யசரண் காணும் 90 வயது வனக்குடியைச் சேர்ந்த மூதாட்டியை அன்னபூரணி என்ற பராசக்தியை நரை மூதாட்டியாக வருணித்த கவிஞரை நினைவுகூறுகிறான். "சில இனத்தாரிடம் என்ன பண்பாட்டின் வித்து ஒளிந்து கிடக்கிறதோ, அதைப்போகப் போக அவர்கள் வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். வேறு சாராரோ ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் ஒரே இடத்தில் தூணைப் போல அசைவற்று நிற்கிறூர்கள்" என்ற வரி சிந்தனையைக் கிளர்த்தியது. சொல்வளர்காட்டில் வரும் வரி நினைவில் வந்தது - ஞானம் தேடி அனைத்து குருநிலைகளுக்கும் அலைந்த லௌபாயனரிடம் சுஃபலர் சொல்வது - "ஆலமரத்தடியிலிருந்து ஆலமரத்தடிக்குச் செல்லலாம், மரங்கள் வேறு, நிலம் ஒன்று". மாறாதிருப்பதை காலம் உண்ணும், எனினும் ஆறு ஓடி அறிவதை கடல் அமைந்து அறிகிறது. கடல் சுழற்சியில் அறிவதை, விசும்பு பரந்து அறிகிறது, விசும்பு விரிந்து கிடப்பதை, மனம் சுருங்கி அறிகிறது. நாகரீகம் என்பதை பயன்மதிப்பு என அளவிடுகையில் நாமறியாத ஒன்றை தரிசனம் என்று அறிகையில் நாம் உணரக்கூடும். வளர்ச்சியடைந்த நாடுகள் பின்தங்கிய நாடுகளை 'முன்னேற்றும்' பொறுப்பைத் தலைமேல் எடுத்து நடந்து கொள்ளும் முறை கண்கூடு.

இவர்களைத் தவிர முக்கியமான கதை நாயகி சாந்தால் அரசரின் பேத்தி இளவரசி பானுமதி. இவளை கதைசொல்லி சந்திப்பதே இக்கதையின் வனம்-நகரம் சந்திப்பின் மையம். அவள் நேற்றைய 'பூலோகத்தையே ஆண்ட' காட்டரசுக் குலத்தின் இளவரசி, இன்று ஆடுமேய்க்கும் அரசரின் மரணத்துக்குப் பிறகு கடனில் தத்தளிப்பவள். கதைசொல்லி, நாகரிகத்தின் உச்சமென கதைக்குள்ளேயே கருதப்படும் வங்காளத்தின் நவீன இளைஞன். அவன் ஆலமரத்தடியில் சாந்தால் குல முன்னோர்களின் சமாதியில் பூ வைக்கும் காட்சியே இந்தக் கதை என்றும் சொல்லலாம். தோற்றவரின் மறைவுக்கு வென்றவன் சிந்தும் இருதுளிக் கண்ணீர்.

கல்கத்தா நகரில் அமர்ந்து குற்ற உணர்ச்சியோடு அவன் நினைவுகூறும் இக்கதையில், அவன் வனத்தை அழிக்க நீளும் நகரின் இரும்புக் கரம். அவனை மயக்கி அவனுள் நுழைபவள் வனமெனும் மோகினி, எனில் அவளது நினைவுகளுக்கு மலர் வைத்து, காட்டை அழித்து விளை நிலமாக்கி, பலரும் 'முன்னேற' வழி செய்து நகர் திரும்புகிறான் கதைசொல்லி. 'முன்னேற்றம்' என்பதைக் கேள்வியாகவே பார்க்கிறான். "மனிதனுக்கு வாழ்வில் வேண்டியது என்ன? முன்னுக்கு வருவதா? மகிழ்ச்சியா? முன்னுக்கு வந்தும் மகிழ்ச்சி இராவிட்டால் அதனால் என்ன பயன்?" ஒரு சில கணம் பானுமதியை மணந்து அங்கேயே தங்கிவிடும் சாத்தியமொன்றை அவன் மனம் கனவு காண்கிறது. எனில் அவனது பழகிய நரகத்துக்கு அவன் திரும்பி வருகிறான்.

கதையில் கதைசொல்லி நினைத்துக் கொள்கிறான் - "இந்தப் பிரதேசத்தில் காண்பதுபோல் - பரந்த இந்த வெளியும், மேக வரிசைகளும், மலை வரிசைகளும், தொலைதூரம் வரை விரிந்து கிடப்பது போல் - பானுமதியிடமும் ஒருவிதக் கூச்சமற்ற தன்மையும், எளிமையும், தங்குதடையற்ற ஒரு சுதந்திர மனப்பான்மையும் இருந்தன. காடும் மலையும் இவர்கள் மனதில் இப்படி ஒரு விடுதலை உணர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. பானுமதியிடம் நான் கண்ட ஆதிப் பெண்ணின் இயல்பை நாகரிகச் சமூகத்தில் காணமுடியாது. அங்கே பெண்ணின் ஆன்மா சமூகக் கட்டுதிட்டங்களில் அழுந்தி, உணர்வற்றுக் கிடக்கிறது."
இது நிதர்சனம், எனில் நாகரிகம் என்பது கூர்மழுங்கிய கூழாங்கல்லின் அழகைக் கண்டு பொறுக்கிச் சேர்க்கும் நாம், கரடுமுரடான கற்களை மிதித்துக் கடந்து செல்வது போலத்தானே.

வனம் என்பது நமது உள்ளுறையும் அகம். இருள் நிறைந்தது, தானாய் வளர்வது, கட்டற்றது, கருணையும் அற்றது, பாவனைகளுக்கான தேவையற்றது. நாம் காட்டும் வெளித்தோற்றம் நகரம், பிறரது பார்வைக்கானது, ஒளிமிக்கது, அழகு செய்யப்படுவது, கட்டுறுத்தி, மட்டுறுத்தப்பட்டது. இவை கொள்ளும் முரண்களில் புறம் வெல்லும் தருணங்களே மிகை, எனில் அகம் அழியாத வரையே சமன் நிலைக்கிறது. இருளே ஒளியை சுமக்கிறது. வனம் சென்று முழுமையை மீண்டவர் இல்லை,தன் மனதுள் சென்றுவிட்டவனும் அவ்விதமே.

'காடு' நாவல் வாசித்ததும் மனதில் நின்ற நிறம் பச்சை. இக்கதையில் காடு இருந்தும் பசுமை மனதில் இல்லை. இரண்டும் காடழிந்து நாடு உட்புகுந்த பின்னர் காட்டை அசைபோடும் நினைவுகளே. இரண்டும் வாசித்த பல நாட்களுக்கு காட்டை நம் கனவுள் புகுத்தி விடுகின்றன. எனில் அவ்வளவிலேயே அதன் ஒற்றுமைகள் நின்றுவிடுகின்றன. காடு நீலியெனில் வனவாசி மோகினி. குறிஞ்சிப்பூச்சூடி காமமென காதலென அலைக்கழிக்கும் யட்சி காடு காட்டும் 'காடு'. கனவில் கண்ட நிலவு மிதக்கும் ஆற்றங்கரை வனவாசி மோகினி 'வனவாசி'.

கானகம் தன்னளவில் ஒரு தனி உயிர். அதற்கெனப் புலன்களும் உணர்வுகளும் உண்டு. அதன் கருவில் உருவான மனிதன், அந்தத் தொப்புள்கொடியறுத்து நாகரிகம் எனும் ஆடை அணிந்து கொண்டாலும் அந்த வடு இன்னும் அவனில் இருக்கிறது. அவனது ஆழ்மனதுள் அச்சமென, இருளென, வேட்டையென, மீறல் என காடு இருந்துகொண்டே இருக்கிறது. அதுவே இந்த நாவல்களோடு நம்மைப் பிணைக்கிறது.

மிக்க அன்புடன்,
சுபா