Wednesday, August 29, 2018

ஆளரவமற்ற வீடு - பஷீர்

காலச்சுவடு வெளியிட்ட அனல்ஹக் தொகுதியில் வந்த 'ஆளரவமற்ற வீடு' நான் தெரிவு செய்திருக்கும் சிறுகதை. ஓவியனும் கவிஞனுமாக இரண்டே கதைமாந்தர்கள்.

பொதுவாக பஷீருடையது எளிமையும் மேலோட்டமான வாசகர்களுக்கு முகத்தில் சிரிப்பை உருவாக்குவதுமான நடை. ஒரு சிறு குழந்தையின் பார்வையில் விரியும் வியப்பு மேலிட்ட உலகு பஷீருடையது. பஷீரின் ஆரம்பகால படைப்புகளில் ஒன்றான (பிரேம லேகனம்) காதல் கடிதத்தில் எழுதியிருப்பார் - 'வேடிக்கை வாழ்க்கையின் நறுமணமாகிறது. பரவாயில்லையே. வேடிக்கையே வாழ்க்கையின் நறுமணம்'. வேடிக்கையும் வியப்புமான பஷீரின் இனிய உலகத்தில் உட்புகுந்த பின்னர் நுண்ணிய வாசகனுக்குத் திறந்து கொள்வதோ ஒரு எல்லையற்ற பெருவெளி. அவர் அலைந்து திரிந்து கண்டு கொண்ட அன்பின் பெருவெளி.

இக்கதை அந்தக் குழந்தையின் வியப்பின் விழிகள் இல்லாது தனித்துத் தெரிந்தது. எதனால் இப்படி ஒரு கதை அந்தத் தொகுதியில் என்பதே என்னை இதன்பால் ஈர்த்தது.

இக்கதையை இரண்டு தளங்களில் புரிந்து கொள்கிறேன். 

1. கலைகள் எதற்கு? ஓவியம் கவிதைகள் கதைகள் என அனைத்துக் கலை வடிவங்களின் நோக்கமும் தேவையும் என்ன என்று கேட்டால் அது ஒரு பயணம் என்றே தோன்றுகிறது. எங்கிருந்து செல்வது? எங்கு வரை செல்வது? அவரவரது முழுமைக்கான தேடலின் பயணம். அறியாமையிலிருந்து அறிதலுக்கு இட்டுச் செல்லும் பயணத்தின் திசை அறிந்தவற்றிலிருந்து தொடங்கி அறியாதன நோக்கி நகர்வதாகவே உள்ளது. அதுபோன்ற முயற்சியை கலைஞன் ஒருவன் மேற்கொண்டு அதுவரை மானுடன் அறியாத ஒன்றின் தரிசனத்தைக் காட்டும்போது சராசரிக் கவலைகளில் உழல்பவனுக்கு அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. எனில் சககலைஞர்கள் அவனைப் புரிந்து கொள்கிறார்களா? 

பண்டு மலைக்குகைகளில் பேச மொழியென ஒன்றில்லாத போது தன் கைத்தடங்களையும், வேட்டைக்குச் சென்றவனின் சித்திரங்களையும் செதுக்கி வைத்த ஆதி மானுடன் அளவுக்கே இந்தக் கேள்விகள் பழமையானவைதான். எனில் இக்கதையில் பஷீரின் தரிசனம் தெரிகிறது.


மனித சமூகத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளும் ஒரு தொடரில், தனிமையும், வறுமையும், காளான் பூத்த, பூனை உறங்கும் அடுப்பும், நீர்த்த கஞ்சி வாழ்க்கையும் கொண்ட சங்க காலப் புலவன் முதல் இன்று வரை நீளும் புறக்கணிக்கப்பட்ட கலைஞர்களின் பெருவரிசையில் ஒரு சாதாரண நிகழ்வென அவனது இருப்பும், இறப்பும் நடந்து முடிகிறது. எனில் கலை எஞ்சுகிறது. இது முதல் தளம்.


2. கலைகள் என்பது நம் அறிவு மற்றும் தர்க்கம் மட்டும் சார்ந்ததல்ல. நமது மனம் நனவுள்ளம், கனவுள்ளம், நுண்ணுள்ளம் - ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி எனும் அடுக்குகளால் ஆனது. இவற்றுள் ஜாக்ரத்ஐத் தாண்டி ஸ்வப்னம், சுஷுப்தி, துரிய நிலைகளின் வெளிப்பாடுதான் கலைகள். அங்கு உறையும் ஆழ்தள அறிதல்களை நிகழ்த்த கலைகளே உள்ளன நம்மிடம். 

ஓயாது கொந்தளிக்கும் சமூகத்தை, கலைஞனைச் சூழ்ந்திருக்கும் புறவுலகை ஜாக்ரத் என்னும் விழிப்புமனம் என்றும், வார்த்தைகளாக, படிமங்களாக, அணிகளாக உணர்வுகளை வெளிப்படுத்தும் அந்தக் கவிஞனை கனவுமனம் ஸ்வப்னம் என்றும், கோடுகளாக, தீற்றல்களாக, வண்ணங்களாக எண்ணங்களை அறிதல்களைத் தொகுத்துக் கொள்ளும் அந்த ஓவியனை நுண்ணுள்ளம் சுஷுப்தி என்றும் புரிந்து கொள்கிறேன். தினசரி வாழ்வின் விழிப்பு நிலையிலிருந்து மேலான விழிப்பு நிலையில் விழித்துக் கொள்வதே கலை எனலாம். சுஷுப்தியில் விதையென உறங்கும் ஆலமரம். இக்கதை மரத்தை அலைக்கழிக்கும் புறவெளியில் - வெயிலும், காற்றும், மழையும், கடுவெளியும், மண்ணும் எனத் தொடங்கி, வேர்வழி மண்ணிறங்கி வேர்களென எஞ்சியிருக்கும் விதையைக் கண்டடையும் பயணம். 

இது இரண்டாம் தளம்


1. விரிவு

முதல் நோக்கிற்கு இது சாதாரணமான சிறுகதை. பொதுவாக ஒரு நல்ல சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குவது. இக்கதையில் முதல் வரியே கடைசி வரியும். 

'எனக்கு உடம்புக்கு முடியவில்லை. நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை எழுப்பிவிடாதீர்கள்' என்ற விநோதமான வேண்டுகோள் மூடிக்கிடக்கும் ஜன்னலின் கதவுகளில் எழுதப்பட்டிருக்கும் ஒரு ஆளரவமில்லாத வீடொன்றின் முன் கதை தொடங்குகிறது. 


கதைக்குத் தலைப்பென இருக்கும் அந்த வீடு, அதன் முன் நிற்கையில், "வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு காலகட்டத்தில், பழமையான ஆள் நடமாட்டமில்லாத பகுதியிலுள்ள தேவாலயத்தின் அருகில் நிற்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும் வீடு". அந்த அம்மானுடத்தன்மை யாரும் அறியாது மரணித்து வெள்ளெலும்பென எஞ்சியதால் அந்த வீட்டை சூழ்ந்தததா? என்றைக்குமான அறிதல்களை உலகுக்கு சொல்பவர்கள் முன்னர் சமுதாயம் உணரும் அல்லது கட்டமைக்கும் அமானுடத்தன்மையா அது!?

அதிர்வு மிக்க இடங்களில் ஆள்நடமாட்டமில்லாத போது ஏற்படும் ஒரு அமானுடத்தன்மை காலம் கடந்து அங்கு காத்திருக்கும் உணர்வுகளின், அதிர்வுகளின் அலையென நம் மேல் படிவதை பல தொன்மையான கோவில்களில் நாம் உணர்ந்திருக்கலாம், அங்கு அமர்ந்திருக்கும் புறாக்களும் வௌவால்களும் கூட நாமறியாத ரகசியத்தோடு நம்மை உற்று நோக்கும் பார்வை கொண்டிருக்கும். 
கம்போடியாவின் காடுகளில் கைவிடப்பட்டு மீண்டும் இன்று சில நூற்றாண்டுகள் கழித்து மீட்டெடுக்கப்படும் பல கோவில்கள் உள்ளன. கோவில்களின் மீது பெருமரங்கள் வளர்ந்து கோவிலை இறுகக் கவ்வியிருக்கும். இன்னும் சிலகாலம் கண்டடையப் படாதிருந்தால் அப்பெரு விருட்சங்கள் தனது வேர்களெனும் உகிர்களால் கவ்வி விண்ணோக்கி ஏகியிருக்கக் கூடும். இத்தகைய மாபெரும் கலைப் படைப்புகள் எதற்காக யாரை நோக்கி எழுப்பப்படுகின்றன! காலத்தோடு இடையறாது கலைஞன் எதற்காகப் போரிடுகிறான்? தான் வாழும் காலத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்படினும், கைவிடப்படினும் எதற்காகப் பறந்தெழ முயற்சிக்கிறான்? 

அந்த ஓவியனுக்கு உலகப் புகழ்பெற்றுத் தந்த பல்வேறு ஓவியங்களை அவன் முன்பே வரைந்து வைத்திருந்தான். எனில் ஏன் அவன் அப்போது உலகப் புகழ் பெறவில்லை? ஏன் அவர்கள் அனைவரும் குற்றமும் குறையும் சொன்னார்கள்? 

பல்லாயிரம் பேர்களில் ஒருவன் அந்தப் பல்லாயிரம் பேர் சென்றடையமுடியாத ஒரு புள்ளியைச் சென்று தொடுகிறான். அதுவரை மானுடம் அடையாத ஒன்றை அடைகிறான். அது ஒரு பெரும் அறைகூவல். சராசரிகளுக்குப் புரிவதில்லை. சக கலைஞர்களின் ஆணவத்தைச் சீண்டுகிறது. கலையினூடாக அந்தக் கலைஞன் சென்ற தொலைவை, அவனது ஊடாக அந்தக் கலை சென்ற தொலைவை 
அந்த யாத்ரீகனைத் தவிர, சமகாலத்தில் அறிபவர்கள் வெகுசிலரே. 
கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பவன் ஆற்றின் பயணத்தை அறிவது எங்கனம். ஆற்றின் பெருவெள்ளத்தைக் குடங்களில் அள்ளி ஆற்றின் மீதான விமர்சனங்களை வைக்கிறார்கள். ஆற்றின் கட்டின்மையில் குதித்து நீந்துபவர்களுக்கே அனுபவம் கிட்டுகிறது. எனினும் அது நதி என்பதாலேயே ஊற்றுமுகம் விட்டெழுந்து யாருமில்லாத மலையுச்சிகளிலும் நிலங்களிலும் ஆறு பயணித்துக் கொண்டேதான் இருக்கிறது.

அந்த ஓவியரது வாழ்நாட்களில் அவனைப் பலவிதமான விமர்சனங்கள் நிந்தனைகள் சூழ்கின்றன. ஓவியன் தனது வாசல்களை ஜன்னல்களை அடைத்துக் கொள்கிறான்,எனில் அவனது அறையிலிருந்து இசை கசிவதற்கும், வெளிச்சத்தின் பொன்னூலிழைகள் வெளித்தெரிவதற்குமான இடைவெளி அந்த அடைக்கப்பட்ட கதவுகளில் இருக்கிறது. அவனது சுயசரிதையை எழுதும் அந்தக் கவிஞனுக்கு மட்டும் எப்போதும் உள்நுழைய அனுமதி தருகிறான்.

முதலிலும் இறுதியிலும் ஒளிபாய்ச்சி காட்டப்படும் அந்த வேண்டுகோள் - யாரும் தவறவிடாதிருக்கும்படி நீலவண்ணப் பிண்ணனியில் சிவப்பெழுத்துக்களில் அந்த ஓவியன் எழுதியது. அந்த வேண்டுகோளில் முதல் வாசிப்பு மேலும் விரிந்து மற்றொரு கதவைத் திறந்து கொள்கிறது.

அந்த அறிவிப்பு மானுடத்தின் மேல் அவன் கொண்ட நம்பிக்கையை நோக்கி நீட்டிய கரம். எனக்கு உடம்புக்கு முடியவில்லை என்ற அறிவிப்பு எழுதப்பட்டிருந்தும் அணுகி வரும் கரங்களற்றதாகவே நமது சமூகம் வேடிக்கை பார்த்துக் கடந்து போகிறது. அடைக்குந்தாழ் அன்பிற்கு இல்லை, திறக்கும் அன்பு சூழ்ந்திருந்த சமூகத்துக்கு இல்லை. 

"வாசல்களும் ஜன்னல்களும் அடைத்திருந்தாலும்.. உள்ளே பாட்டுக் கேட்காமலிருந்தாலும்.. நான் உள்ளேதான் இருப்பேன். நீங்கள் ஒரு பேனாக் கத்தியால் அந்த ஜன்னல் கொக்கியை நீக்கிவிட்டு உள்ளே வரலாம்" என்கிறான். 
இரவு பகல் பாராது அவனது அதே வாழ்க்கையை வாழும் கவிஞனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். உள்ளே பாட்டுக் கேட்காமலிருந்தால், கத்தியால் ஜன்னல் கொக்கியை நீக்கிவிட்டு உள்ளே வரச்சொன்னவன் தனது இறுதியை உணர்ந்தே அந்த வரியைச் சொல்லியிருக்கக் கூடும். 

உள்ளே தொடர்ந்து இசைக்கும் பாடலும், ஒளிக்கோடுகளும் அவனது இருப்பை அறியும் வழியாகி இருக்கின்றன. உள்ளே இசை தவழும் வரை கலை நிகழ்கிறது. அந்த இசை நின்றுவிடில், அங்கு கலை ஒழியுமெனில் எச்சமென அங்கும் கழிவிரக்கங்களும் ஏமாற்றங்களும் மட்கி நாற்றமெடுக்கலாம். இசை நின்று போன பிறகும் அறையில் நிறைந்திருக்கும் எல்லையற்ற ஒளியென அவனது கலை எஞ்சுகிறது.


2. விரிவு

இந்தக் கதைக்கு ஏன் ஒரு ஓவியனும் கவிஞனும் தேவைப்படுகிறார்கள்? 

ஓவியம் உலகை அடக்கும்
உலகம் ஓவியத்தை அடக்கும்
ஓவியன் தன்னை அடக்கி
உலகை ஓவியத்துக்குள் அடக்குவான் - ஆத்மாநாம் கவிதைகளில் ஒன்று.


இன்மையில் கரைவதென்பது அசாதரண நிகழ்வல்ல. அதை ஒரு இடைவெளியாகக் கருத வேண்டியதுமில்லை. நான் இறந்துபோனால்... அந்த இடைவெளி நிரப்பப்படுமா...?இங்கே நான் என்று குறிப்பிடுவது என்னையல்ல.
மனித சமூகத்தின் தொடக்கம் முதல் நீங்கள் வரையிலான ஒரு நான் உண்டல்லவா? அந்த நான் என்றே புரிந்துகொள்ளுங்கள் - என்கிறார் பஷீர்

இந்த நீண்ட நிரையை மானுட மனம் என்று கொள்கிறேன். மனம் என்பதே அறுபடாத நீட்சியென ஓடும் எண்ணங்கள்தானே! 

நமது மேல்மனம் அறியாத போதும், தன்னுள்தான் நிறைந்து விதையென ஓர் எண்ணம் நுண்ணுள்ளத்தில் கருக்கொள்கிறது, யாரும் கண்டுகொள்ளாத போதும் அங்கே ஓவியனால் வரையப்பட்டு காத்திருக்கும் ஓவியங்கள் போல. நமது கனவுள்ளம் ஸ்வப்னம் ஒரு ரகசியப்பாதையைத் திறந்து சுஷுப்தியைத் தொடவல்லது.; திறப்பதற்கான அனுமதியும் வழிகளும் பேனாக்கத்தியும் கொண்ட கவிஞனைப் போல. நனவுள்ளமான ஜாக்ரத் இடையறாத சலனத்தாலானது, சூழ்ந்திருக்கும் சமூகம் போல. அதன் பேரிரைச்சலினிடையே என்றேனும் கனவுள்ளம் வெளிப்படுத்தும் உணர்வுகளை ஜாக்ரத் பெற்றுக்கொள்ளலாம்.

இன்னொரு விதத்தில் மூன்றடுக்குகளும் ஒரு கலைஞனில் நிகழ்பவையே. 
நாம் அறியும் மனமாகிய ஜாக்ரத்தைக் கடந்து ஒரு ரகசியப் பாதை போன்ற ஸ்வப்னத்தைத் திறந்து சுஷுப்தியில் உறைந்திருக்கும் விதையைக் காண்பதே கலை முகிழ்க்கும் தருணம். துரியம்தான் அசைவிலாத உள்ளுணர்வு. அது சுஷுப்தி வழியாக, ஸ்வப்னம் வழியாக வெளிப்படுகிறது. ஜாக்ரத்தால் அதைப் புரிந்து கொள்ள முயல்கிறோம்.

இந்த இரண்டு விதமான வாசிப்புகளிலிருந்தும் நான் புரிந்து கொள்வது:

நான் நீ என்ற இரட்டை நிலையிலிருந்து நீ மட்டும் எஞ்சுவதே மரணம் என்பது பஷீரது தரிசனம். தன்மேல் எச்சமிட்ட பறவைகளை, நாற்சந்தியில் நிறுத்திய சமூகத்தை எல்லையின்றித் தன் புன்னகையால் அரவணைத்துக் கொள்கிறார். எல்லாக் கலைஞர்களும் அதைத்தானே செய்ய இயலும், எவ்வளவு உன்னதமாயினும் மண்ணிலேயே கலை உருவாகிறது. கலைஞன் கலை என்ற இரட்டை நிலையிலிருந்து கலலஞன் மறைந்த பின்னர் கலை மட்டும் எஞ்சுவதே இக்கதையில் பக்ஷீர் காட்டும் மரணம்.