Sunday, May 8, 2016

சற்குரு - தாத்தா - இறுதிக்கனல்

21 மார்ச் 1946: கப்பல் கரை சேர்ந்தது.

கண்ணீர் பொங்க நிலத்தை முத்தமிட்டனர் கரைசேர்ந்த பலரும்.
ஆனந்த வெள்ளத்தில் நீந்தி மதுரையிலிருந்து வந்திருந்த தோழர்களுடன் தாத்தா மதுரை நோக்கிய ரயில் பயணம் மேற்கொண்டார்கள். கொடை ரோட்டில் ரயில் நிலையத்திலேயே உற்றார் உறவினர் வரவேற்பு. 'மதுரைக்குள் நம் வீடு வரை பேருந்து செல்கிறது' என்றெல்லாம் நவீன மாற்றங்களை நண்பர்கள் உற்சாகமாய் கூறிக் கொண்டே வந்தார்கள். தன் முகம் பாராது வளரும் மகனைக் காண, மன எழுச்சியோடு விரையும் தந்தை. 

ஆறு வயது மகன் சிவசுந்தரவேலனுக்கு,  தந்தை போல இந்திய தேசிய ராணுவ உடை தைத்து அணிவித்து அனைவரும் காத்திருந்தனர். வாசலில் வந்து இறங்கியதும் தாய் தந்தையும் தம்பி தங்கையரும் பழனி மலை தெய்வத்துக்கும், குலதெய்வக் கருப்பனுக்கும் நன்றி சொல்லிக் கண்ணீர் விட, முதன் முதலாய் அதுவரை கண்டிராத மகன் நேதாஜியின் ராணுவ உடையில் முன் வந்து, வீர வணக்கம் செலுத்தி, 'ஜெய்ஹிந்' என்று முதல் வணக்கம் சொன்னான். மகனை ஆரத்தழுவிக் கொண்டு மண்ணில் விண்ணைக் கண்டார்கள் அந்த மகான்.


மிகச் சரியாக 48 வருடங்களுக்குப் பிறகு:
20 மார்ச் 1994: கப்பல் கரை சேர்ந்தது.

குலம் விளங்க மூத்த மகனாய்ப் பிறந்து, தம்பி தங்கையர் குடும்பங்களுக்கு எல்லாம் உற்ற துணையாய் திகழ்ந்து, நாட்டுக்கென களப்பணியில் முன் நின்று, சுற்றத்துக்கென, சமூகத்துக்கென, நட்புக்கென, பெயரறியா சகபயணிகளுக்கென, மனம் விரிந்த மலர், தன் பணி முடிந்தது என அமைதி கொண்டிருந்தது. எண்ணற்ற சுழல்களையும், சூறாவளிகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து வந்த கப்பல் கரை சேர்ந்து விட்டது.

மயானத்தில் இறுதிச் சடங்குகளும் முடிந்து பூவுடலைத் தீ உண்ணத் தரும் தருணம்.  தகவலறிந்து மதுரை INA கிளையிலிருந்து  மிகவும் வயதான தளர்ந்த ஒரு முதியவர் நேராக மயானக் கரை வந்து சேர்ந்தார். தடுமாறி நடந்து வந்து, இராணுவ வீரர்களுக்கே உரிய இறுதி அஞ்சலிக்காக தேசியக்கொடி ஒன்றைக் கொண்டு வந்து தாத்தா உடலின் மீது போர்த்தினார். தன் கால்களைச் சேர்த்து, உடலை விரைத்துக் குரலை உயர்த்தி வீர முழக்கமிட்டார். அந்தத் தளர்ந்த உடலுக்குள் அவ்வளவு திடமான ஜீவன் இருப்பதை நடுக்கமற்று உயர்ந்த அவர் குரல் உணர்த்திற்று. கூடியிருந்தோர் அனைவரையும் அவர் குரல் உலுக்கியது - 'ஜெய்ஹிந்'. 

அதுவரை ஒரு துளியும் கலங்காதிருந்த மூத்த மகன் சிவசுந்தரவேலன், தனது தந்தைக்கும் தனக்குமான முதல் முழக்கம் வானதிர முழங்கவே உடைந்து அழுதார்.

காற்றில் அந்த நெருப்பு வீரவணக்கத்தையும்  அனைவரது அஞ்சலியையும் ஏற்றுக் கொண்டு உயர எழுந்தது.

இன்றும் அனைவரது வாழ்விலும் இருள் சூழ்ந்த பாதைகளில் ஒளியேற்றிக் கொண்டுதானிருக்கிறது அந்த அருட்ஜோதிதெய்வம். தன்னலம் கருதாத அன்பினில், இளம் தலைமுறையை வழிநடத்தும் ஆசிரியர் மனதினில், விளம்பரங்கள் தேடாத கருணையில்,  பிறர் வாழ சிறு உதவியேனும் செய்யும் உள்ளங்களில், நேர்மை தவறாத மாண்பினில், நேர்மறை எண்ணங்கள் விதைக்கும் மனங்களில், நம்பிக்கை தளராத இறையாண்மையில் மிளிர்கிறது அந்த அருட்ஜோதி தெய்வம்.

மறுபடி மரணம்
மறுபடி ஐனனம்
இடையினில் இருளினில்
தேடல்தான் பயணம்..

சிலர் வழிகாட்டுவார்
பலர் நடைபோட்டிட -
சிலர் பலராகவே
அவர் வலிதாங்குவார்

பிறன் நலம்வாழ்ந்திடத்தன்
பிறவியை மாற்றுவார்
முள்முடி தாங்கியும்
முகமலர் காட்டுவார்

விறகொடு எரிவது
உடலது தானே
உடன்வரப் போவது
அவனருள் தானே

மண்ணொடு கலந்தபின்
எஞசுவதென்ன
மனதொடு கலந்திடும்
நினைவுகள்தானே

வெற்றுத் தாளொடு
பிறந்தவர் நாமே
எழுதுவோம் பாக்களை
அன்பொடு தினமே

தாளது ஒருதினம்
அவன்தாள் சேரும்
எழுதிய கவிதைகள்
மனதிடை வாழும்

அன்பது சிவமாம்
அன்பது தவமாம்
வாழ்வை நீட்டும்
அன்பின் கரமாம்..

அன்பே சிவம்! அன்பே சிவம்!!

முந்தைய பதிவு (34)
(நிறைவு)

Wednesday, May 4, 2016

சற்குரு - தாத்தா - 34

1946: கப்பல் போக்குவரத்து துவங்கியது. மிக நீண்ட ஆறு வருடங்கள் கழித்து வந்தது விடியல்.

ஆறு வருடம் கழித்து தாயகம் திரும்பும் பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டது. சிங்கப்பூர் வந்து பயண உரிமச் சீட்டும் அனுமதிக் கடிதமும் பெற்றுக் கொண்டு கப்பலேறினார்கள் தாத்தா. (காண்க: அனுமதிக் கடித புகைப்படம். இந்த Havelock Roadல் தான் நான் சிங்கப்பூர் வந்ததும் ஒரு மாதம் தங்கியிருந்தேன். தினசரி நாம் நடக்கும் பாதைகளில் ஒளிந்திருக்கும் கடந்தகால நிகழ்வுகள் -  காணக் கண்கள் திறக்கும் வரை கிடைப்பதில்லை அதன் தரிசனம்)

அனுமதிக் கடிதம்



சென்னை துறைமுக அனுமதியும் ஜப்பான் நோட்டுகளும்





மலேயாவிலிருந்து கப்பலில் சென்னை துறைமுகம் நோக்கி ஒரு வாரத்திற்கும் மேற்பட்ட பயணம். கப்பலின் அனைத்துத் தளங்களிலும் உற்சாகம் அலைபுரண்டது.

நீலம்..பச்சை.. கருப்பு என மாறி மாறி மாயம் காட்டியது எல்லையற்ற நீர்வெளி... மேலே அமைதியாய் இருந்தது கடல்பரப்பு. ஒளிந்திருந்தது ஆழமும் அதன்மடியில் கண்ணாமூச்சி ஆடும் அலைவீச்சும்..அன்னையையும் தந்தையையும் உடன்பிறந்தாரையும் உற்றாரையும் மனைவியையும் முகமறியா மகனையும்  காணப்போகும் தருணத்தை எண்ணி எண்ணி ஆனந்த அலையாடும் மனது. கடல் மேல் இரவுகள் - இருள் மீது மேலும் கருமை பூசியது போன்ற காரிருள் கடந்தகாலமாய். எப்போதாவது ஒளிகோபுரமாய் மற்றொரு கப்பல் கடந்து செல்லும் எதிர்கால நம்பிக்கையாய். (தாத்தாவின் காலடிச்சுவடுகள் தேடி கோலாலம்பூர் பினாங் - கப்பல் வழிப் பயணம் சென்ற கடந்த மூன்று நாட்கள், தாத்தா விவரித்த கப்பல் பயணத்தை மனதுள் கொண்டு வந்து நிரப்பியது - look this space next week for further photos and blog on Penang trip)


பயணத்தின் நடுவில் தாத்தாவுக்கு கடும் ஜுரம். உடல் அனலாய்க் கொதித்தது. உணவுண்ணவும் நகர இயலாது, மேல் தளத்திற்கு வரவும் முடியாது உடல்வலியோடு கடும் காய்ச்சலில் தனது அறையில் படுத்திருந்தார்கள்.

ஒருநாள் நண்பகலில் திடீரென மேல்தளத்தில் உற்சாகக் கூக்குரல்களின் ஒலி, கதவு திறந்து வந்த நண்பரோடு அறைக்குள் வந்து நுழைந்தது.  நண்பர் 'அண்ணே மேல வந்து பாருங்க, கரை தெரியுது' என்று உரக்கக் கூவினார். உண்மையாகவே தாயகம் உயிரோடு திரும்பிவிட்டோம் என்று உள்ளம் பொங்கியது. தாத்தா எழ முயன்றார்கள் -  உடல் தள்ளாடியது கடும் சுரத்தினாலும், அலைமோதிய உணர்ச்சியாலும்.

தாத்தாவை அள்ளித் தோளில் சேர்த்துக் கொண்டு தளர்ந்த கால்களோடு துவண்ட தாத்தாவை மேல் தளத்துக்கு கைத்தாங்கலாய் அழைத்து வந்தார் அந்த நண்பர். கடல்காற்று உடலில் மோதி அறைந்தது.  தொலைவில் சென்னைப் பட்டணம் அடிவானில் தெரிந்தது. உணர்ச்சி வெள்ளம் கண் வழியே பாய்ந்தது.

"கடவுளே! என் தாயகம்! உன்னருளாலே நான் உயிரோடு கரை மீள்கிறேன் குறையின்றி, ஊனமின்றி, மனச்சுமைகளின்றி!! இது சத்தியம்! இந்த தருணம் சத்தியம்!! ஆயிரம் முறை மனம் நடித்து பார்த்த ஒத்திகை அல்ல இது."  காய்ச்சலை மீறி உடல் உவகையால் நடுங்கியது.  கப்பலில் எழுந்த ஒலி அலைகளை மீறி வானைத் தொட்டது.

எத்தனை நூறு முறை இதைச் சொல்லும் போதும் தாத்தாவுக்கு உணர்ச்சி மேலிட்டுக் கண்கள் கலங்கும். இப்போதும் விமானம் தரையிறங்க முற்படும்போது ஒவ்வொரு முறையும் மெரீனாவின் அழகிய கடற்கரை கண்களுக்குத்  தெரியும் போது, தாத்தா விவரித்த அந்தக் காட்சி என் கண்முன் விரியும் - I feel as if I was there in the ship on that memorable day.

எம் தலைவனை சுமந்து வந்த அந்தப் பெயர் தெரியாத தோள் கொடுத்த தோழன் யாரோ! அந்த உன்னத தருணங்களிலும் அதற்கு முந்தைய போர்முகங்களிலும் உடனிருந்த நட்புக்கள் எத்தனையோ!! எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்; அனிச்சையாய் மானுடம் மலர்ந்த முகடுகள்!! நிரந்தரமாய் ஆழ் தடம் பதித்து ஒரு மனிதனை வாழ்நாளுக்கும் புடம் போட்ட நெருப்புக் குளியல்கள்!!

எம் தலைவனைக் காத்து தோள்கொடுத்து உளம்சோரும் போது உடனிருந்த பெயர் தெரியாத அத்தனை கருணைகளுக்கும் நட்புகளுக்கும்  உன்னதங்களுக்கும் எமது நன்றி. எங்கோ காற்று வெளியில் நிறைந்திருக்கும் உங்கள் அனைவரது நினைவுகளுக்கும், பெருமூச்சுகளுக்கும், புன்னகைகளுக்கும், எதிர்காலத்தின் -நிகழ்காலத்தின் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்!! உங்கள் வலிகள் எங்களுக்கு மேடையமைத்துக் கொடுத்திருக்கின்றன.

அன்றிலிருந்து 70 ஆண்டுகள் கழித்து இன்று விழுது இங்கு நிலம்தொடும் தருணம் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது.
சதுப்பு நிலமாயும் நிணமும் கொலையுமாயும் இருந்த சிங்கப்பூர் இன்று  உலகிலேயே சிங்காரமாய்  மயனமைத்த மாய நகராய் செல்வ செழிப்பாய் மாறியிருக்கிறது. பினாங்கும் கோலாலம்பூரும் தடதடக்கும் இரயில்தடத்து அருகில் படபடக்கும் பட்டாம்பூச்சியென, இன்றைய பரபரப்பின் ஊடே எழுபத்தைந்து வருட நினைவுகள் பொதித்துக் காத்திருக்கிறது.

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது.
அதில்தான் சரித்திரம் நிகழ்கின்றது.

முந்தைய பதிவு (33)

அடுத்த பதிவு (35)