Saturday, April 17, 2021

இரவு

இருளை அருந்தியபடி

திசையழித்து வழிந்தோடும் பால்

மிதக்கும் சில வெள்ளெறும்புகள்

தலைகீழ் வான்வெளியில்

ஓயாமல் தலைமோதும் அலைகள்

கடல் நோக்கி சென்று

மீளாத சுவடுகளை 

உற்று நோக்குகிறது இரவு



Friday, April 16, 2021

காலாதீதம்

ஒற்றைக் காலின் தடங்களை
இழுத்துக் கொண்டு 
கடல் மீளும் நுரை

அடுத்த அலைவரக்
காத்திருக்கும்
எஞ்சும் மறுகால் பதிவுகள் 

பின்வாங்கிச் செல்லும் 
வெண்விளிம்பின் குரூரம்
இயலா நடையின் அறுதடம்  

அலைகளுக்கிடையே
காலாதீதங்களில் நிற்கும்
ஒற்றைப் பாதங்களின் தவம்




Friday, April 2, 2021

சிங்கை குறிப்புகள் - 23 - அஞ்சிறைத் தும்பி

சிங்கையை ஒரு பறவைப் பார்வையில் பார்க்க நேர்ந்தால் கணநேரமேனும் கவர்ந்து பார்வையை நிறுத்திவிடும் அழகு இந்தக் கடலோர அஞ்சிறைத் தும்பிக்கு உண்டு. சிங்கை கடல்முகப்பை பசுமையால் அலங்கரிப்பவை வளைகுடா பூந்தோட்டங்கள்.  கிழக்கு, தெற்கு, மையத் தோட்டங்களோடு(Bay East, Bay South, Bay Central) சேர்ந்த 101 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சீர்மைப்படுத்திய பகுதியில் இந்த கார்டன்ஸ் பை தி பே (Gardens By the Bay) எனப்படும் கடலோரத்தோட்டங்கள் அமைந்திருக்கிறது. 



 சிங்கப்பூர் தாவரவியல் தோட்டத்தில் (Botanical garden) சுற்றுலாப் பயணியரின் வருகை அதிகரித்துத் திணறிய போது நிரந்தரமாக தாவரவியல் கண்காட்சி போல ஓரிடத்தை அதற்கென அமைக்கும் திட்டம் உருவாகியது. இதுவும் கடலில் இருந்து கைப்பற்றிய நிலத்தில் அமைக்கப்பட்ட வளாகமே. இந்தத் தோட்டத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த கோணம் மரீனா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) எனும் ஆடம்பர விடுதியின் மேல்தளத்தில் இருந்து பார்ப்பதுதான். 57ஆவது மாடியில் இருந்து இதைப் பார்க்கும் பொழுது ஒரு மாபெரும் தும்பி பூந்தோட்டத்தில் ஒளியூடுருவும் இறக்கைகளை விரித்து அமர்ந்திருப்பது போல தோன்றுகிறது. அல்லது இரு அலைபிழைத்த கிளிஞ்சல்கள் அருகருகே கிடப்பது போல. மணலில் சிறு பொருள் ஒளித்து கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடக் குவிந்த கரங்கள் போல. எந்நொடியும் எழுந்து பறந்துவிடும் சாத்தியங்களோடு கடலருகே காத்திருக்கும் இருசிறகுகள் போல. 

View from Marina Bay Sands

இரண்டு மாபெரும் தாவரவியல் வளர்ச்சித் தோட்டங்கள், உலோக மரங்கள், நீர்ப்பரப்புகள், பல விதமான பாரம்பரிய தோட்டங்கள், கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தும் மேடைகள்,  நீர்வழிகளைக் கடக்கும் பாலங்கள், சிற்பங்கள் என விரிந்து பரந்த இடம் இது. 

Bayfront precinct
Planet Sculpture by Marc Quinn, UK


இந்தத் தோட்டத்தின் பல பகுதிகளில் பல சிற்பங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. பேஃப்ரன்ட் (Bayfront) ரயில் நிலையத்தில் இருந்து இங்கே நுழையும் இடத்தில் முதலில் கண்ணில் படும் ஒரு பிரமாண்டமான சிற்பம் Planet எனப்பெயர் பெற்ற குழந்தையின் சிற்பம். 9மீட்டர் நீளமும் 3 மீட்டர் உயரமும் கொண்ட இந்த 7 டன் எடை கொண்ட சிற்பம் மிகத் திறமையாக அக்குழந்தையின் கரம் மண் தொடும் புள்ளியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.         




ஒவ்வொரு துளி நிலமும் இங்கு பொன்னை விட விலை உயர்ந்தது. நகரின் அதி முக்கியமான முகப்புப் பகுதியில் பல கோடிகள் பொருட் செலவில் பசுமைக்கென இடம் உருவாக்கி இத்தகைய பரந்த பசுமை பாதுகாப்பு மையங்களை   உருவாக்கியவர்களை எண்ணி வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை. 2005-ல் பசுந்தோட்டத்துள் ஒரு நகரமாக சிங்கப்பூரை உருமாற்றுவதன் பகுதியாக கடற்கரையோரம் நிலம் கையகப்படுத்தபட்டு மாபெரும் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்பை சிங்கை பிரதமர் வெளியிட்டார். இதன் வடிவமைப்பிற்காக சர்வதேச அளவிலான போட்டி நடைபெற்று இங்கிலாந்தைச் சேர்ந்த வில்கின்ஸன் அயர் (Wilkinson Eyre) மற்றும் கிரேண்ட் அசோசியேட்ஸ் அதை வென்றது. 



இங்கு உள்ள பல பகுதிகளில் முக்கியமானவை மலர் குவிமாடம்(Flower Dome) மற்றும் மேகக் காடுகள்(Cloud Forest) எனப்படும் இரண்டு பசுங்குடில்கள். வெளியிலிருந்து காண்பதற்கு மாபெரும் கண்ணாடிச் சிறகுகள் போலத் தெரியும் இந்த கட்டிடங்கள் உள்நுழைந்ததும் நமை ஒரு மாபெரும் கண்ணாடிப் பேழைக்குள் மூடி வைத்துவிட்டது போலத் தோற்றமளிக்கிறது.


Flower Dome

மிதமான குளிர், கண்விரியும் பெரும் பரப்பளவில் நாம் அதிகம் கண்டிராத ஆயிரக்கணக்கான மரம், செடி வகைகள் நமை வந்து சூழ்கிறது. நான்கைந்து தளங்கள் உயரம் கொண்ட அந்த விதானம் ஒளி புகும் வண்ணம் முழுக்கவே கண்ணாடிகளால் ஆனது. வளைந்த எடைகுறைந்த எஃகினால் ஆன பசுங்குடில் அந்த மாபெரும் கூரையைத் தாங்கும் தூண்கள் ஏதுமன்றி இருப்பதாலேயே பாலை நிலம் அல்லது கடல் போன்ற விரிவெளியில் வளைந்த கூரையாய் விண் சூழ்ந்திருப்பதைப் போல இருக்கிறது. 

Flower Dome

வெப்பமான கோடையும் குளிர்ந்த ஈரமான குளிர் காலமும் கொண்ட புவியின் மத்தியதரைப் பகுதி காலநிலைக்கு நிகராக உருவாக்கப்பட்ட பசுங்குடில் இது. உலகின் பல தேசங்களில் இது போன்ற பருவநிலையில் வளரும் தாவரங்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. துவக்கத்தில் பாலையின் நூற்றுக்கணக்கான கள்ளி வகைகள் வரவேற்கின்றன. பாலையின் தாகமே ஒரு கொடிய அழகானது போல உடலெங்கும் முள் செறிந்த அழகழகான கள்ளிச் செடிகள். வட்ட வடிவில், பட்டை வடிவில், மலர் வடிவில், திருகு முள் போல, குடுவைகளைக் கழுவப் பயன்படுத்தும் பிரஷ் போல என விதவிதமான உருவங்களில் கள்ளிகள், ஆளுயரத்துக்கு மேற்பட்ட சில முட்செடிகள்.  எங்கெங்கோ முன்னோர்களைக் கொண்ட மரங்கள் அவற்றுக்கான சூழல் இங்கு உருவாக்கப்பட்டு இம்மண்ணில் குடியேற்றம் பெற்று நின்று கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இது சிங்கப்பூரையே குறிக்கிறது எனலாம். உலகெங்கும் இருந்து அரியவை தேர்ந்தெடுக்கப்பட்டு  காட்சிக்கு வைக்கப்பட்ட கண்ணாடி பேழை.  





பெரும்பாலை நிலக் கள்ளிகள்

தென்னிந்தியாவின் ஒரு ஊரைச் சேர்ந்த நானும் எங்கோ பல்லாயிரம் மைல்கள் தொலைவில் மெக்சிகோ தேசத்தின் பாலையில் நிற்கும் தாவர வகைகளும் இங்கு சிங்கையில் சந்தித்துக் கொள்ளும் இந்த கணத்தை அறிவியல் சாத்தியமாக்கி இருக்கிறது. ஏந்தப்பனை (Cycads) வகையைச் சேர்ந்த பெரிய டியூன் (Giant Dioon) எனப்படும் தாவரம் இவ்விதம் மெக்சிகோவின் பாலை மலைகளில் காணப்படும் ஒன்று. 170 மில்லியன் ஆண்டுகளாக இப்புவியில் இருக்கும் தாவரமாம். ஆண் பெண் என இரு வகைச் செடிகள் கொண்ட இத்தாவரம் பல நூறு ஆண்டுகள் உயிர்வாழ்வது. 

Dioon spinulosum (giant dioon)

அடிபெருத்த பெருங்குடுவைகளுக்கு சிறு கொம்புகள் முளைத்தது போல நிற்கும் ஆப்ரிக்காவின் மாபெரும்  பவோபாப் மரங்கள் (Baobab) அருகே மனிதர்கள் நிற்பதைப் பார்க்கும் போதும் இது போல இயற்கையின் மாபெரும் சாதனைகளின் முன் நேற்று முளைத்த மனிதர்கள் விசித்திரக் குள்ளர்கள் போல நின்று கொண்டிருப்பதை உணர முடிந்தது.  

இங்கு காணக்கிடைக்கும் அனைத்துத் தாவரங்கள், மரங்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு தாவரவியலைக் கற்றிருந்தால் மட்டுமே ஓரளவு சாத்தியம். எனவே நினைவில் நின்ற வித்தியாசமான சில வகைகள் குறித்து மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். 

ஆஸ்திரேலிய நிலத்தைச் சேர்ந்த தாவரங்கள் முற்றிலும் கண்ணுக்குப் புதியவையாக இருக்கின்றன. தலை முடியை வெட்டிக் கொள்ள அடம்பிடிக்கும் சிறுவனைப் போல கொத்துக் கொத்தாக முடி வளர்ந்தவை, கம்பி மத்தாப்பில் தீமலர்களுக்கு பதிலாக பச்சைப் புல்லாய் விரிந்து அப்படியே உறைந்தது போல நிற்கும் புல் மரங்கள்(Xanthorrhea glauca - Grass Tree). இவையும் 600 வருடங்கள் வாழக்கூடியவை.  மிகவும் மெதுவாக வளரும் இம்மரங்கள் கிழக்கு ஆஸ்திரேலியாவின் மணற்பாங்கான பகுதிகளில் வளர்பவை. இதன் அடிமரங்கள் ஆஸ்திரேலியாவில் நிகழும் காட்டுத்தீயில் எரிந்து விடாது உயிர்த்தெழும் தன்மை கொண்டவை. இவை அங்கு வாழும் பழங்குடியினருக்கு உணவும், உடையும், ஆயுதங்கள்  செய்வதற்கும் உதவியிருக்கின்றன.  

Xanthorrhea glauca - Grass Tree

அக்கினிப் பிரவேசத்தில் பிழைக்கும் அடிமரம்


சிலேவின்(Chile) தேசிய மரமாகிய குரங்குப் புதிர் மரம் (Araucaria araucaria - Monkey Puzzle Tree) பெயரின் காரணமாக ஈர்த்தது. ஊசியிலை மரமாகிய இதன் கிளைகள் முழுவதும் நெருக்கமாக இலைகள் அடுக்கி வைக்கப்பட்டது போல இருக்கிறது. இம்மரங்கள் பிரிட்டனில் அறிமுகமான போது இம்மரங்களில் எவ்விதம் ஏறுவதென குரங்குகளுக்குப் புதிராக இருக்கும் என ஒருவர் சொன்னதால் இதற்கு இப்பெயராம். ஆசான் ஜெயமோகன் அவர்களின் 'சாவி' சிறுகதையில் ஒரு புதிய அறிதலின் இன்பத்தில் சிக்கிக்கொள்ளும் குரங்கின் நிலை நினைவு வருகிறது. ஒரு குரங்குக்கு அறிய முடியாத புதிர் ஒன்றைக் கொடுத்தால் அதில் சிக்கிக் கொண்டு தவித்துத்தான் போய்விடுமெனத் தோன்றுகிறது.  இதன் இலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்பட்டிருப்பதன் விந்தையே ஒரு புதிரின் ஈர்ப்பை உருவாக்குகிறது. பைன் மர விதைகளைப் போல இதன் விதைகளும் உணவில் பயன்படுகின்றன.   

Araucaria araucaria - Monkey Puzzle Tree
இலைகள் 

பூக்களின் முனை(Cape Floristic Region) என்றழைக்கப்படும் தென்னாபிரிக்காவின் தென்முனை யுனெஸ்கோ அமைப்பால் பாதுக்கப்படவேண்டிய பாரம்பரிய நிலமாக அறிவிக்கப்பட்டது. இங்கு வளரும் 69% சதவிகித தாவரங்கள் உலகில் வேறெங்கும் வளராதவை. அதில் சில வகைகளை இங்கு வளர்த்திருக்கிறார்கள். இவை கடும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை. இவற்றில் பல தாவரங்களின் விதைகள் உறுதியான வெளிப்புறத்தோலால் பாதுகாப்பாக இருக்கும். அதீத வெப்பநிலையில் உருவாகும் காட்டுத்தீ இவற்றை எரித்த  பிறகு இவ்விதைகள் வெளிப்பட்டு புதிதாக அனைத்தும் மலரத் தொடங்கும். வெந்து தணிந்த காட்டில் மலரும் மலர்கள். கடுகு இலைகளைப் போன்ற தன்மை கொண்ட இலைகளில் பல வண்ண மலர்கள், முற்றிலும் மாறான இரு வேறு நிறங்கள் கொண்ட மலர்கள்.





தென்னாப்பிரிக்க இருவண்ண மலர்கள் 

பனை குடும்பத்தைச் சேர்ந்த ஐரோப்பாவின் பல வகையான மரங்கள், ஈச்ச மரங்கள், சிலேவின் நீல ஊசிப் பனை(Blue Needle Palm), சிலேவின் கள் பனை(Jubaea chilensis - Chile wine palm) போன்றவையும் ஒரு பகுதியில் இருக்கின்றன. சிலேவில் இந்த கள் பனையின் பதநீரும் கள்ளும் மிகவும் புகழ் பெற்றது. இதில் காய்க்கும் ககிடோ (Coquito) காய்கள் மிகச் சிறிய தேங்காய் போல இருக்கின்றன. இது அப்படியே நேரடியாகவும் பழக்கூழாக பதப்படுத்தப்பட்டும் உண்ணப்படுகிறது.  

Jubaea chilensis - Chile wine palm


Coquito



ஆலிவ் எண்ணை, ஆலிவ் காய், ஆலிவ் பச்சை என பல விதமாக அனுதினம் சொன்னாலும்  கட்டையாய் குட்டையாய் உடலெங்கும் முடிச்சுகளும் பிளவுகளுமாய் வேர்க்குவை வெளித்தெரிய நின்ற மரம்தான் ஆலிவ் மரம் என்று இதற்கு முன் தெரியாது. ஆனால் மேற்புறம் அழகான பச்சையும் அடியில் வெளிறிய பச்சையுமாய் இதன் இலைகள் இம்மரத்தை அழகாக்கி விடுகின்றன. ஒரு நவீன ஓவியம் போல இம்மரம் மனதில் பதிந்து போனது.    
Olive Tree

சுற்றிலும் பல நூறு அறியாத் தாவரங்களுக்கிடையே வெகு நேரம் உலவிய பிறகு கீழிறங்கும் பகுதிக்கு வந்தால் அழகாய் இருப்பதன்றி வேறேதும் வேலையில்லாத பல்லாயிரம் மலர்கள். ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறை அங்கு உள்ள மலர்களின் அமைப்பு மாற்றப்பட்டுவிடும். இதைத்தவிர Floral Fantasy என ஒரு தனித்த அரங்கும் கொய்மலர்களுக்கென்றே இங்கு இருக்கிறது.   
2016ல் அம்மாவுடன்







முதல் முறை சென்ற போது  உலகின் பல பகுதிகளில் இருந்தும் வந்த ரோஜாக்களால் ஆன மலையாக இருந்தது. கையகலத்தை விடப் பெரிய ரோஜாக்கள், சிறு மாத்திரை அளவேயுள்ள பூக்கள், நீல நிற ரோஜாக்கள், என வெளியேறிய பின்னும் விழிநிறைத்த ரோஜா மலர்கள்.  மற்றொரு முறை வண்ணங்களின் தேவதைகள் குடிகொள்ளும் ட்யூலிப் மலர்களின் அணிவகுப்பு இருந்தது. 



இம்முறை தற்காலிக ஜப்பானியக் குடில்களுக்கு இடையே, இதை விட வண்ணம் ஏறினால் கூட எடைதாளாது விழுந்துவிடும் என்பது போன்ற இளம்செந்நிற சகுரா மலர்வனம் தயாராகிக் கொண்டிருந்தது. வண்ணங்கள் மனதில் அதற்கேற்ற எண்ணங்களை உருவாக்கி விடுகின்றன. அவ்வளவு நேரம் நின்றிருந்த அதே வளாகத்தின் இளங்குளிர்  இந்த இளஞ்செந்நிற மலர்களினூடாக நடக்கும்போது பனிநனைந்த வெளியில் நடப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்தியது. 

இதில் ஒரு மணி நேரம் சுற்றி விட்டு இரண்டாவது பசுங்குடிலான மேகக்காடு சென்ற போது அது முற்றிலும் வேறு விதமான உலகமாயிருந்தது. அதே போன்ற நான்கைந்து தள உயரம் கொண்ட கண்ணாடிக் கூரைக்குக் கீழே  மழைமாறாக் காடொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். 

Cloud Forest - மேகக் காடு

மத்தியில் உயர்ந்து நிற்கும் மலை போன்ற அமைப்பை மழைக்காட்டுத் தாவரங்களும் கொடிகளும் முற்றிலும் மூடியிருக்கின்றன. 



கடல்மட்டத்திலிருந்து 1000மீ முதல் 3500மீ வரை உயரம் கொண்ட மழைக்காட்டின் பசுமைச் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். நாம் உள்ளே நுழையும் இடத்தில் அந்த மையக்கட்டுமானத்தின் மேல்தளத்தில் இருந்து செங்குத்தாக கீழே குதிக்கும் அருவி, அதிலிருந்து சிதறிப் பரவும் நீர்த்திவலைகளால் அக்கூடம் நனைந்திருக்கிறது. 



ஓயாத மழையால் நீர் நீர் என ஒவ்வொன்றும் ஒலிக்கும் காடொன்றுக்குள் புகுந்து விட்டதான மயக்கு. அந்த மையக் கட்டிடத்தைச் சுற்றிச் சுழன்று ஏறிச் சென்று மூன்று தளங்கள் படியிலும் மின்தூக்கியிலுமாக ஏறிச் சென்றால் அருவி பொழியும் இடத்துக்கு அருகில் நின்று அந்த மழைக் காட்டை ரசிக்கலாம். 




அங்கிருந்து விரிந்து செல்லும் உலோகக் கரங்களில் உயரத்தில் நடந்தவண்ணம் இதன் பேருருவை உள்வாங்கலாம். சர்க்கஸ் கூடாரத்தில் அந்தரத்தில் கயிறு கட்டி நடப்பது போல முதல் முறை இந்த உலோக நாகங்களில் நடப்பது ஒரு சிறு பதற்றத்தைத் தருகிறது. அந்தக் கட்டுமானத்தின் உயரமும் விஸ்தீரணமும் அங்கு நடக்கும் போதுதான் முழுமையாய் புலனாகிறது. 




இவற்றைப் பார்த்த பிறகு அங்குள்ள சிறப்பு உலோக மரங்களைக் காணலாம்,  மலாய் தோட்டம், சீனத் தோட்டம், ஜப்பானியத் தோட்டம், இந்தியத் தோட்டம், பனைகளின் உலகம், தாவரங்களின் உலகம் போன்ற ஏதொவொரு பூங்காவில் அந்தந்த தோட்டங்களில் வளரும் மரங்களைக் குறித்து அறியலாம்.  தாவரவியல் ஆர்வலர்களுக்கு ஒரு நாள் முழுவதும் செலவிடக் கூடிய அளவு தோட்டங்களும் தாவரங்களுமாக பசுமை நிறைந்த பகுதி. 

Super Tree Grove


வான் நோக்கி மலர்ந்த சூப்பர் ட்ரீஸ் (Super trees) எனப்படும் உலோக மரங்கள், சூரியனை நோக்கி சிரிக்கும் சூரியகாந்தி போல இவை வானகாந்திகள். விண் அருள்வதை ஏந்திக் கொள்ளக் காத்திருக்கும் பதினெட்டுக் குவளை மலர்கள் .



 அவற்றை இணைத்துக் கொடி போல சுருளவிழும் இணைப்புப் பாலம். அதில் நடந்தபடி இந்த பரந்து விரிந்த பூங்காவையும் அருகில் நிற்கும் சிங்கையின் விண் தொடும் கட்டிட வரிசைக்குப் பின் மறையும் அந்தி வெயிலையும் பார்க்கும்போதுதான் நாம் ஒரு பரபரப்பான நகருள்தான் இன்னும் இருக்கிறோம் என்பது நினைவுக்கு வருகிறது. 




சிறிதும் பெரிதுமாக நிற்கும் இந்த செயற்கை மரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள், கொடிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பசுஞ்செடிகள் படர்ந்திருப்பதாக கணக்கு.



இரவில் இந்த மரங்கள் வண்ண ஒளி நிறைந்து மாயாலோகம் போலாகிவிடுகிறது. 



இதன் சூழலியல் மேம்பாட்டு முயற்சிகளும் எரிபொருள் சிக்கனத்திற்காக கையாளும் உத்திகளும் குறிப்பிடத்தக்கவை. இத்தோட்டத்தில் உதிரும் இலைகளையும், சிங்கப்பூரின் மற்ற பூங்காக்களில் உதிரும் சருகுகள் மற்றும் உலர் கழிவுகளையும் கொண்டு இயங்கும் சிறிய அனல் மின் நிலையம் ஒன்றும் இங்கிருக்கிறது. இதில் உற்பத்தி ஆகும் மின்சக்தி ஓரளவு பசுங்குடிலின் குளிரூட்டும் மின்தேவைகளுக்குப் பயன்படுகிறது. இதில் வெளியேறும் சாம்பல் இத்தோட்டங்களுக்கு உரமாகப் பயனாகிறது. நிலத்துக்கு அடியில் ஓடும் குளிர்ந்த நீரோடும் குழாய்கள் மூலம் இரு பசுமைக் குடில்களும் மேலும் எரிபொருள் சிக்கனத்தோடு குளுமையாக வைக்கப்படுகின்றன. இந்த சூப்பர் மரங்கள் கட்டுமானத்தில் சூரியத் தகடுகளும் மழை நீர் சேகரிப்புக் கலன்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன.  இதில் இருப்பதிலேயே உயர்ந்த மரத்தின் மேலே  ஒரு உணவகம் இருக்கிறது.

இதையெல்லாம் விட தனிப்பட்ட முறையில் இது எனக்கு மனதில் பசுமை நிறைத்த தலம்.  சிங்கையில் வாழ்ந்த நாட்களின் நினைவுகளில் மிக முக்கியமான வரம் போன்ற தருணம் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களை நேரில் சந்தித்தது. 2016ல் சிங்கையில் நிகழ்ந்த காவிய முகாமுக்குப் பிறகு மாலையில் இரு தினங்களும் இந்தியாவில் இருந்து வந்த நண்பர்கள் சிங்கை சுற்றிப் பார்க்கக் கிளம்பவே நானும் இணைந்து கொண்டேன். பார்த்த முதல் நாளே அணுக்கமாகி விட்ட பல நண்பர்கள். அருமையான மாலைப் பொழுது. அந்த மாலையில் அனைவரோடும்  இந்தக் கடலோரத் தோட்டங்களுக்கு சென்றோம். அதற்கு முன்னும் பின்னும் பலமுறை போயிருந்தாலும் அந்த மாலை மிக அழகானதும் மனதுக்கு மிக அணுக்கமானதும் ஆகும்.  



தாவரக்கூட்டங்களிடையே நடந்தபடி, நாளை ஒரு வேளை மானுடன் தனது புவி வீட்டின் தாவரங்களை எடுத்துக் கொண்டு சென்று விண்வெளியில் விதைத்துப் பாதுகாக்க வேண்டுமென்றால், இது போல ஒரு உயிர் வளியை சமநிலையில் பேணிக்கொள்ளும் தற்சார்பு கொண்ட  பசுங்குடில் அமைக்க வேண்டியிருக்கும் என்றால், அதற்கான முன்மாதிரி இந்த மாபெரும் கனவுலகம் என்பதெல்லாம் பேசியபடி நடந்த ஆசானைப் பின்தொடர்ந்து கொண்டே புதிய கண்களோடு இவற்றைப் பார்க்க நேர்ந்தது. அதுவரையிலான கண்ணோட்டத்தில் சிங்கையில் கடற்கரை முதல் காடு வரை அனைத்துமே செயற்கையாய் உருவாக்கப்பட்டிருப்பதை ஒரு குறையெனக் கண்டுகொண்டிருந்த எனக்கு அது ஒரு பெரிய திறப்பாக அமைந்தது.  


அன்று வியப்பில் சிறகு விரித்த அஞ்சிறைத் தும்பி இன்றும் கொங்குதேர் வாழ்வில் கண்ணால் கண்டதை மொழிந்து கொண்டிருக்கிறது.

முந்தைய பதிவு:

சிங்கை குறிப்புகள் - 22 - தேயும் கோப்பியும் தேயாத நினைவுகளும்