Saturday, June 27, 2015

சற்குரு - தாத்தா - 11

சற்குரு - தாத்தா - 11

அடுத்த களம் - காற்றில் உப்பு மணக்கும் தூத்துக்குடி. ஆறாம் வகுப்பை அங்கே தொடர்வதென பேச்சு. அப்பா அஸ்ஸாம் வேண்டாமென்று, அலுவலகத்தில் மேல்மட்டத்தின் கீழ்மட்டங்கள் பொறுக்காமல், regional manager பதவியைத் துறந்து 30+ வருட அனுபவத்துடன் சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் PNB கிளை மேலாளராய்,  பதவியேற்பு. வீடு தூத்துக்குடியில். அந்த நாட்களில் அது ஒரு பங்களா. 26கிமீ அன்றாட பயணம் தூத்துக்குடியிலிருந்து - இன்று மிக எளிதாய்த் தோன்றும் இந்தத் தொலைவு, அன்று வெளியூர் பேருந்தில் ஒன்றரை மணி நேரப் பயணம். வீடுகளின் பின்புறம் private jacuzzi போல் தாமிரபரணி ஓடும் தோட்டங்கள் இருகரையிலும் கொண்ட ஆத்தூர் தாண்டியதும் வரும் இந்த சிற்றூர்.

மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி தாத்தாவுடன் பஸ் பயணம். எப்போது வரும் தூத்துக்குடி என அருப்புக்கோட்டை தாண்டியதுமே என் கேள்விகள். ஏறத்தாழ 100கிமீ இதே கேள்வியுடன் எப்படிப் போவது. எனவே 200மீட்டருக்கு ஒரு முறை வரும் 2, 4, 6, 8 என இலக்கமிட்ட கற்களைக் காட்டி இது ஏறக்குறைய ஒரு ஃபர்லாங்குக்கு ஒரு முறை வரும்.  இது ஒரு முறை முடிந்தால் 1 கிமீ என சொல்லிக் கொடுத்தார்கள். பின்னாளில் பழனி பாதயாத்திரையின் போது மட்டும் இந்தக் கற்களை யாரோ 1மைல்-க்கு ஒன்றாய் வைத்திருப்பதாய்த் தோன்றும். இன்றும் இதில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு ஒரு தியானமாய் பஸ்ஸில் பயணம் செய்வது சுகம்.

தூத்துக்குடி Holycross entrance exam - தாத்தா வழக்கமாய் கேட்பதினும் எளிய கேள்விகளே. Admission கிடைத்து பள்ளி தொடங்கி ஒரு வாரத்தில் அப்பா அலுவலகம் அருகே ஆறுமுகநேரிக்கே வீடு மாற்றம் என முடிவாகியது. எனவே மீண்டும் புதிய வீடு, புதிய பள்ளி, புதிய நண்பர்கள். ஆறாம் வகுப்பு - ஏழாவது பள்ளி.

உப்பளங்கள் - அலை அலையாய் மலை மலையாய் கண்ணுக்கெட்டியவரை. வெண்மை தோய் கரிப்பு மணிகளிடையே கரிய மனிதர்கள். ஊர் புதிது, சொல் புதிது. 'ஏல வயிறு பசிக்கு, அங்க என்ன செய்யுதே! ' என்று ஏச்சைப் போல் தொனிக்கும் தூத்துக்குடிப் பேச்சும், 'அவிய வரட்டும் பாத்துக்கிடுதேன், நீ இஞ்ச இரி' என்ற நாஞ்சில் தமிழுக்கும் கலப்பு மணம் அங்கு ஆறுமுகநேரி பகுதியில் உலவிய தமிழ். நேசமணி, கட்டபொம்மன் போக்குவரத்துக்கழகப் பயணங்கள் - தாத்தாவுடன்.

இங்கே தாத்தாவுடனான நேரங்கள் - இன்னும் உன்னதமாய், உரையாடல்கள் - இன்னும் தீவிரமாய். பின்னாளில் கேட்டாலும் கிடைக்கப் போவதில்லை என்ற உத்வேகம் போலும்.

கால்கள் புதையும் மணல்வெளி. நாற்புறத்திலும் நாளெல்லாம் சலசலக்கும் பனைமரங்கள். தாரங்கதாரா ஊழியர்கள் நிலம் வாங்கிக் கட்டிய பன்னிரண்டே வீடுகள் கொண்ட காலனி. இருபுறமும் ஒரு கிமீ செல்ல வேண்டும் - ஒரு தேங்காய்ச்சில் வாங்குவதற்கும் (அதற்குதான் அதிகம் சென்றிருக்கிறேன்) அம்மாவின் உழைப்பில் மணல் நான்கைந்து மாதங்களில் பசுமை போர்த்தியது.

மொட்டை மாடியில் அனுதினம் தியானம் . அலைபாயத் தொடங்கும் வயதின் மனது, கடிவாளம் சற்குரு கைகளில். விழிமூடி பார்வையைத் திறந்து வைக்கவும், பேச்சைக் குறைத்து மூச்சை அடக்கவும் பயிற்சி. சக்கரங்களும் அதன் விளக்கங்களும், இரு பெரும் நாடிகள் குறித்தும்,  ஓஜஸ் குறித்தும், அனுதினம், அன்றாடம், அருகிருந்த நாட்களில் எல்லாம் பாடம், தீட்சை. கூர் தீட்டப்படும் போது அம்புக்குத் தெரிவதில்லை அதன் இலக்கு. பின்னாளில் வாழ்க்கை நமைப் பின்னோக்கி இழுக்கும் தருணங்களில் முன்னோக்கி சீறி எழும் விசை உந்தித் தள்ள,  கூர்முனை தப்பாது சென்றடையும் அதன் இலக்கு. அன்று இடப்பட்ட வீரியமான விதைகள் இன்றளவும் குருவின் அருள் மழை படும் தோறும் துளிர்த்துக் கொண்டே இருக்கின்றன. புரியா வயதில் கிடைக்கும் புதையலைத் தொலைத்து விடாதிருக்க பல மனப் பயிற்சிகள். To register, recall and recollect at appropriate time. மனித மனதிற்கு அந்தத் திறன் உண்டு; அதனை மேம்படுத்திக் கொள்வதும், கண்டு கொள்ளாது இழப்பதும் நம் கைகளில். ஒரு தலை சிறந்த வீரனுக்கு, 'உனக்குக் கிடைத்த அதி உன்னதமான ஞானம் தேவையான தருணத்தில் மறந்து போகும்' என்ற குரு சாபத்தினும் வலிய பிரம்மாஸ்திரம் ஏதுமில்லை கர்ணனை வீழ்த்தியது.

குருவருள் இருப்பின் திருவருள் சேரும்.

-ஆறுமுகநேரி தொடரும்-

முந்தைய பதிவு (10)

அடுத்த பதிவு (12)


Thursday, June 25, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர் - 4

அமுதுக்கும் தமிழென்று பேர் - 4

முத்தமிழின் ஓர் இயலாய் திரையிசைத் தமிழும் இடம்பெறும் தகுதியை சில கவிஞர்கள் தம் கவித்திறத்தால் ஏற்படுத்தினார்கள் (past tense intended with some sense)

அப்பாவின் பழைய recordல் 'சாரசம் வசீகரக் கண்கள் சீர்தரும்' கேட்டுவிட்டு அண்ணன் கேட்ட கேள்வி - "அப்பா இது என்ன language?". அன்றைய தமிழுக்கே இந்த கதி.

இன்று வரும் பாடல்களில் பலவும் அஜீரணத்தை ஏற்படுத்தி விடுகின்றன. (அதாரு அதாரு உதாரு உதாரு என்ற பாடலை எதேச்சையாய் கேட்ட அன்று கண்ணதாசனும் பட்டுக்கோட்டையாரும் பாடிய அதே தமிழுக்காய் சிறிது கண்ணீர் சிந்தினேன்) அதைப் பற்றியும் தனியே அரம் பாடலாம் என்றிருக்கிறேன். அரம் பாடுதல் - சங்கத் தமிழில் இதுவும் ஒருவகைப்பாடல்,பாடியே பாட்டுடைத் தலைவனையோ/பொருளையோ அழிப்பது, இதுபற்றிய சுவையான செய்திகள் வேறொரு நாள் பேசலாம்.

இன்றைய பாடல்களில் நல்ல தமிழ் தப்பிப்பிழைத்தாலும் தமிழறியா நாக்குகளில் சிதைந்து வெளிவருவதை 'பர்ருவாயில்லை' என்று கேட்க எனக்குப் பக்குவம் போதவில்லை. அதனால் எடுத்த முடிவு - பாடல் வரிகள் மிக நன்றாக இருக்கிறதென நம்பத் தகுந்த வட்டாரங்கள் சூடம் ஏற்றி சத்தியம் செய்தால் அன்றி நான் பாடல்கள் கேட்பதில்லை.

காவியத்தமிழை மக்களுக்கு எளிமையாய் எடுத்துச் சென்ற சிறந்த ஊடகம் திரைப்படம். அவற்றில் காவியநயத்தை எளிமையாய் வடித்துத் தந்த சில பாடல்களை இன்று பார்க்கலாம்.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மறைவுக்குப் பின் பாரிமகளிரின் கையறு நிலை குறித்த சங்கப்பாடல்:

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே"


Literalஆக மொழி பெயர்த்தால்
"அந்த நாள் அந்த வெண்ணிலா...
எங்கள் தந்தையும் இருந்தார் எங்கள் குன்றும் இருந்தது
இந்த நாள் இந்த வெண்ணிலா...
பகைவர் எங்கள் குன்றைக் கைப்பற்றினர்; எங்கள் தந்தையும் இல்லை...."

இதனை "அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகில்" என்று காதலின் குரலாய் குழைத்துக் கொடுத்தார் கவியரசர்.

பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல், செல்போனில் காதல் என காதல் தோல்வி கதாநாயகன் முரளி சில காலம் தமிழ் சினிமாவை வதைத்து எடுத்ததுண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நாவுக்கரசர் கூறும் பக்தியாய்க் கணிந்த காதலைப் பாருங்கள்:

"முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

தலைவி தலைவனைக் குறித்து அறியத் தொடங்கி, மெல்ல மெல்லத் தன்வயம், சுயம் இழக்கிறாள். தலைவன் இங்கு சிவன்(சாட்ஷாத் சிவபெருமான்தான்) சங்க இலக்கியத்தில் பெயர் சுட்டுதல் மரபன்று - hero, heroine என்றால் தலைவன், தலைவிதான்.

இந்தப் பாடலை மிகப் பொருத்தமாக எடுத்தாண்டது கல்கி - நவீன தமிழ்க் காவியங்களில் ஒன்றாகிய 'சிவகாமியின் சபதத்தை', இந்த தேவாரப் பாடலுடன் 'தலைவன் தாள்' சரணடைந்து முடித்திருப்பார்.

இதனைத் திரையிசையில்

"அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்" - என்று மீண்டும் கவியரசர் (மீண்டும் MGR!!)

திருக்குறளில் கவிதையாய் ஒரு குறள் வரும் -
"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்."

கவியரசர் வரிகளில் இதை அழகாய்,
"உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே" என்று PBS குரலில்.. இனிமை.

மற்றுமொரு பாடல் - கல்லூரித் தமிழ்ப் பாடத்தில் படித்த பாடல்
"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடங்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே" - மீண்டும் நாவுக்கரசர் தேவாரம் - கவியரசர் வரிகளில் சாரமாய் வடித்து,
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா"

கண்ணதாசன் பல பாடல்களைக் காப்பியடித்தார் என்று யாரேனும் அவசரமாய் முடிவெடுத்துவிடும் முன், இவையெல்லாம் காப்பியங்களை பாமரருக்கும் எடுத்துச் சொல்லும் முயற்சியாய் அவர் எடுத்தியம்பிய ஓரிரு வரிகள் மட்டுமே. அவர் எழுதிய காவியங்கள் கணக்கில்லாதது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் இந்தப் பாடலையே எடுத்துக் கொள்ளலாம் - இப்பாடலின் சரணத்திலேயே இரு வரிகள்-
"உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்கண்ணா-இதை
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம்விலகும் கண்ணா".

நாம் பலரும் அறிந்திருக்கும் கர்ணன் படப்பாடல்கள் - ஒவ்வொன்றும் இலக்கியத் தரம் வாய்ந்ததே.
"மணநாள் மன்னன் உனைக்கண்டு மதிமயங்குகிறானே", "வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன்" இதுபோல ஒவ்வொரு பாடலிலும் கவியரசர் அதில் எடுத்தாண்ட சொல்லாட்சியை வியக்காமல் தமிழை ரசிக்க முடியாது.

இதில் வரும் "வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்
வைப்பவன் கர்ண வீரன்" பைபிள் மத்தேயு அதிகாரம் எனில் என்னே அவர் வீச்சு.

மத்தேயு - நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது

தர்மம் குறித்து இதனினும் தெளிவாய் சொல்லவும் கூடுமோ!!

இன்னும் நூற்றுக்கணக்கான பாடல்கள் சொல்லலாம் கவியரசர் பெருமை சொல்ல. எனின் இந்த இணையிலாப் பாடலோடு இந்தப் பதிவை முடிக்கிறேன். மேலும் பல பாடல்கள், மேலும் பல கவிஞர்களோடு தொடர்வோம்.

"ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!"


Thursday, June 18, 2015

சற்குரு - தாத்தா - 9

சற்குரு - தாத்தா - 9



கற்றதும் பெற்றதும் ஆயிரம் உண்டுகாண்-நீ

உற்றதும் உணர்ந்ததும் உணர்ந்திடச் செய்ததும்

சுற்றமது உயர்ந்திட சுப்பன்வழி வந்ததும்

பெற்றவரின் அருளை - நின்கருணை நிதியெனவே

உற்றாரும் உடையாரும் உய்த்திட ஈந்ததும்

செற்றம் செருக்கடக்க படைமுனையில் நின்றதும்

குற்றமற குருவாகி குலம்காத்து நின்றதும் 

கற்றவரின் கருத்தினிலே கருவாகிக் கலந்ததும்

மற்றவரும் போற்றிடவே வாழ்வாங்கு வாழ்ந்ததும்

பற்றதுவும் நீங்கிவிட மாயையாம் பவவினைகள்

அற்றதும் அகன்றதும் அரனடியை சேர்ந்ததும்

கற்றாவின் மனம்போலக் கசிந்துருகி யாம் மனத்-துணுக்

குற்றதும், "துயர்வேண்டாம்! உடனிருக்கும் 

வெற்றிவேல்! துணையிருக்கும் சக்திவேல்!!

தொற்றிவரும் துயரனைத்தும் விட்டகலும் வேல்முனையில்! அவனைப்

பற்றிடுக பாடிடுக பகல்விடியும் இருள்முடியும்!!"என

முற்றிலும் பயம்விலக்கி எமையாளும்

பெற்றவனே உற்றவனே கொற்றவனே 

சிற்றறிவுக்கெட்டியவரை சிறுவிரலால் எழுதுகிறோம் - சீரியநின் சிறப்பை...

முந்தைய பதிவு (8)

அடுத்த பதிவு (10)

Tuesday, June 9, 2015

சற்குரு - தாத்தா - 8

சற்குரு - தாத்தா - 8
இனிதே தொடர்ந்தது செல்வநிலைய வாசம். ஐந்தாம் வகுப்பின் மீதமிருந்த மூன்று மாதங்கள் தெரு முனையில் உள்ள தூய அந்திரேயா சர்ச் பள்ளியில். உண்மையில் கல்வியென்னவோ குருகுலவாசமாய் வீட்டில் தாத்தாவிடம்தான். தாத்தாவின் பார்வையில், பாடப்புத்தகத்தில் உள்ளதைப் படிப்பது கல்வியே அல்ல. அது ஒரு outline, பாடத்திட்டத்தின் உருவெளிக்கோடு. உண்மையான பாடம், புத்தகங்களுக்கு வெளியே, அன்றாட வாழ்விலும், பரந்த புறவுலகின் நிகழ்வுகளிலிருந்துமே பெறப்படுகிறது.

இன்னும் சிறு வகுப்பிலேயே(2ஆம் வகுப்பில்), தாத்தாவிடம் படிக்கிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, பாடங்களைத் தாண்டி parts of speech, phonetics என்று என்னென்னவோ தாத்தாவிடம் படித்து விட்டு, வகுப்பின் பாடங்களை எழுதவோ revise செய்யவோ இல்லாதது கண்டு அம்மாவுக்கு ஒரே கலக்கம். தாத்தா ஊருக்குச் சென்ற பின் அம்மா களமிறங்கி என்னைத் தேர்வுக்குத் தயார் செய்தார்கள். தாத்தா எப்போதும் ஆயத்தம் செய்தது வாழ்க்கைக்கான கல்விக்கு. Scienceஇல் evaporation குறித்த பாடம், அதைப் பற்றி விஸ்தாரமாக விளக்கிவிட்டு, phonetics நடத்தினார்கள் தாத்தா. e-va-po-ra-tion 5 syllable word, இப்படி அந்த வயதுக்குக் கடினமான ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்து எத்தனை syllable என்று சொல்வது, அந்த வார்த்தைக்கு எவ்விடத்தில் stress and pause போன்ற பாடம்.

அது போல மூன்றாம் வகுப்பில் fractions பள்ளியில் தொடங்கிய புதிதில் "1/6 என்றால் என்ன அர்த்தம், என்ன புரிந்தது உனக்கு?" என்று தாத்தா வினவ, நான் கிளிப்பிள்ளை போல பள்ளியில் சொல்லிக் கொடுத்ததைச் சொன்னேன். 1 is numerator, 6 is denominator என்று. அப்படி என்றால், என்று மேலும் கேட்க ஒரே குழப்பம். 'ஒரு முழுமையை 6 பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு பகுதி' என்றெல்லாம் தாத்தா விளக்க ஒன்றுமே புரியவில்லை. கணிதத்தில் மட்டும் இப்படி எல்லாம் புரியாது விழித்தால் பொறுமை இழந்து விடுவார்கள் தாத்தா. தாத்தா, அப்பா இருவருமே இதில் ஒன்றுதான். கணிதம் அவர்களுக்குப் புரியும் வேகத்தில் நமக்குப் புரியவில்லை என்றால், இதில் புரியாமல் இருக்க என்ன இருக்கிறது என்ற கோபம் வந்துவிடும். குரலை உயர்த்தி தாத்தா "என்ன புரியல உனக்கு?" என்று கேட்டதும் எனக்கு மொத்தமாய் ஒன்றுமே புரியாதது போலிருந்தது. பிறகு மீண்டும் பொறுமையை வரவழைத்துக் கொண்டு பல உதாரணங்கள் கொடுத்து புரிய வைத்தார்கள்.

ஐந்தாம் வகுப்பின் பாடத்திட்டத்தில் scriptures என்ற பைபிள் பாடங்கள் இருந்தன. அதுவரை எனக்கு கிறித்தவ வரலாற்றில் அறிமுகம் இல்லை. தாத்தா அதுவரை கற்பித்ததெல்லாம் ஆங்கிலமும், அறிவியலும், கணிதமும், தாத்தாவுக்கு மிகவும் பிடித்தமான சமூக அறிவியலும்தான். பைபிள் மிகவும் போரடிக்கிறது என்று நான் கூறியதும், அதிலும் தொடங்கியது தாத்தாவின் தீட்சை.

Sermon on the Mount என்ற மலைப்பிரசங்கம் பகுதியை மிகவும் அருமையாக விவரித்தார்கள். பொதுவாய் பிரபலமான "ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு", "வருத்தப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் அடைவார்கள்" எல்லாம் இந்த மத்தேயு அதிகாரத்தில்தான் வரும். வீரமாமுனிவர் (இவரது இயற்பெயர் Constantine Joesph Beschi இத்தாலியர்) போன்றோர், ஐரோப்பா விட்டு புதிய நிலங்களில் கால்பதித்து, இங்குள்ள மொழியையும் கற்று, வேதாகமங்களை மொழிபெயர்ப்பும் செய்ய முனைந்தது ஒரு பிரம்மப் பிரயத்தனமே. "Taste and see that Lord is good" ஐ மொழி'பெயர்த்து' "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்" என்றெல்லாம் ஒருவிதமான புதிய தமிழிலிருக்கும் 'புதிய ஏற்பாடு'ஐ எனக்குப் பரிசாக வழங்கி தினம் ஒரு அதிகாரம் வாசிக்கச் சொல்லி, உலக மதங்களின் உயர் கருத்துக்கள் எல்லாம் ஒன்றையே போதிக்கின்றன என்று தாத்தா சொன்னார்கள். Thou, Thee, walketh, maketh என்று பைபிள் ஆங்கிலமும் அப்படித்தான் இருக்கும்.

தாத்தாவின் YSS பாடங்கள் குறித்தும் அப்பியாசங்கள் குறித்தும் அறிமுகம் நேர்ந்தது இந்த காலகட்டத்தில்தான். அதில் வரும் குட்டிக் கதைகள் எனக்கும் walking போகும் போது சொல்வார்கள். குழந்தைக்கு செரிமானம் ஆக வேண்டுமென பக்குவமாய் சாதம் குழைய வைத்துத் தரும் அன்னை போல, மிக ஆழமான கருத்துக்களை எல்லாம் எளிதில் ஜீரணிக்கக் கூடிய விதத்தில் வழங்கிய தனிப்பெருங்கருணை தாத்தாவுடையது. தாடித் தாத்தாவின் குடில் ஒன்று இருந்தது அப்போது இன்றைய வெங்கட்ராமன் நகர் இருக்கும் இடத்தில். செல்வ நிலையத்திற்கும் கீழக்குயில்குடி ரோட்டிற்கும் இடையில் இருந்த ஒரு கண்மாய் நோக்கிப் போகும் வழியில் சுற்றிலும் பூச்செடிகள் அமைத்து நடுவில் இருக்கும் அந்தக் குடில். அங்கே அமர்ந்து ஏதேதோ ஹிந்தி பண்டிட் பேசுவதை எல்லாம் புரிந்தும் புரியாமலும் கேட்டு விட்டு, எங்கள் நடை தொடரும் பொழுதில் இந்தப் பேச்சுக்கள் தொடரும். "நேற்று எங்க நிறுத்தினோம் சொல்லு பார்க்கலாம்?" என்று கேட்டு எனக்கு என்ன புரிந்திருக்கிறது என்று recap கேட்டு விட்டு தொடர்வார்கள்.

அப்படி ஒருநாள் மாலைநேர நடையின் போது மேலக்குயில்குடி சாலையில் நடந்து கொண்டே பைபிளில் படித்தது குறித்து "யாரவது அடித்தால் மறுகன்னத்தைக் காட்டுவது எல்லாம் எப்படித் தாத்தா முடியும்?" என்றதற்கு, அங்குள்ள சர்ச் அருகே புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு, அஹிம்சையின் பலத்தை, அஹிம்சைக்குத் தான் உச்சகட்ட மனபலமும், ஆன்ம பலமும் தேவையென்பதையும் விவரித்து, காந்தியின் சத்தியாக்கிரகத்தின் சக்தியை விளக்கினார்கள்.

நேதாஜி என்ற தன்னிகரற்ற தலைவருடன் நேரடி களவீரராக கடமையாற்றிய தாத்தாவிடம் இருந்து, காந்தியத்தின் ஆணிவேர் பாடங்கள் குறித்து அறிந்தேன். காந்தியையும், நேருவையும், சுபாஷ் சந்திர போஸையும் காழ்ப்புணர்ச்சி கொண்ட இன்றைய தலைவர்களோடு ஒப்பிட்டு, எத்தனையோ சதித்திட்டங்கள் குறித்த செய்திகள் இன்று ஊடகங்களில் வலம் வருகின்றன. அன்று களத்திலிருந்த வீரர்களுக்கு, இவர்களெல்லாம் தேசவிடுதலை என்னும் மாபெரும் இலக்கிற்கு அடிகோலிய ஆதர்ச மூர்த்திகள். கருத்துக்களில் வழிமுறைகளில் பேதங்கள் இருப்பினும், அன்றைய மனங்களில் தலைவர்கள் குறித்த, அவர்களின் கீழ்மையான உள்நோக்கங்கள் குறித்த அனுமான விமர்சனங்கள் இல்லை.

மீண்டும் மறுகன்ன விவாதம்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்" என்ற குறளையும் அடிக்கடி தாத்தா குறிப்பிடுவாரகள். அதனையும் சொல்லி அது நடைமுறையில் மிகவும் சாத்தியமான கருத்தே என்று கூறி வாழ்வில் பயன்படுத்திய சில தருணங்களையும் சொன்னார்கள். உடன் பணிபுரிவோர் சில சமயங்களில் கீழான செயல்களில் ஈடுபடும் போதும், நாம் நமது நற்குணங்களில் இருந்து விலகத் தேவை இல்லை, அவர்களுக்கும் நன்மையே செய்து வர நாளடைவில்மனம் திருந்தியதையும் குறிப்பிட்டார்கள். இன்று இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்யும் பொறுமையும், அவர்கள் எக்காரணம் கொண்டேனும் நாணுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லாது போனதோ?

அடுத்த வாரம் பள்ளியில் scriptures போட்டி வைக்க, தாத்தாஉடன் பேசியதெல்லாம் எழுத, முதற்பரிசு scriptures இல். அன்றிலிருந்து இன்று வரை, உயிர் உள்ளளவும்,
"நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே"
என்று அனுதினம் தாத்தாவின் அருளை சொல்லாத நாளில்லை.

எந்த ஒரு செயலும் முயற்சி செய்து பாராது முடியாதென்று சொல்வது தாத்தாவுக்கு அறவே பிடிக்காத விஷயம். ""Success often comes to those who dare and act" - தாத்தா அடிக்கடி அழுத்திச் சொல்லும் வாசகம்.

அனுதினம் அதிகாலை (எனக்கெல்லாம் 5.30 மணிக்கு தான் சுப்ரபாதம்) எழுந்து, குளித்து, கோலமிட்டு, யோகாசனம் செய்வதற்கு அமர வேண்டும். மார்கழி மாதமெனில் பச்சைக் கற்பூரம் மணக்கும் இளம் சூடான சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் தாத்தாவின் கையில் இருந்து கிடைக்கும். அப்படி ஒரு நாளில் பாலகனான பாலா செய்த தகராறு, "என்னை மட்டும் ஏன் தினமும் குளிக்க சொல்கிறீர்கள்? தாத்தாவெல்லாம் குளிப்பதும் இல்லை பல் துலக்குவதும் இல்லை" என்பது. சூரியனும் காணாது காலைக் கடன் அனைத்தும் தாத்தா முடித்துவிட்டால் பாலா என்ன செய்ய முடியும். நியாயமான கேள்வி. மேலும் தாத்தாவிடம் கற்ற யோகாசன பாடம் எல்லாம் வாசலில் நின்று உரத்த குரலில் பாடம் எடுப்பார் 3 வயது பாலா. திரிகோனாசனம் செய்வதற்கு தாத்தா "கை நேர்கோட்டில் இருக்க வேண்டும், பார்வை மேல்நோக்கி இருக்கும் கையைப் பார்க்க வேண்டும் எனப் பாடம் நடத்த, பாலாவும் அதே போல "எங்க, மேல பாருங்க நேர மேல பாருங்க" என்று சத்தமாய் வாசலில் நின்று குரல் கொடுக்க, தெருவில் போவோர்கள் எல்லாம் மேலே அண்ணாந்து வேப்பமரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வார்கள். தாத்தாவுடன் விதண்டா வாதம் செய்ய உரிமை பெற்ற ஒரே நபர் என்ற பெருமை பாலாவையே சேரும்

முந்தைய பதிவு (7)

அடுத்த பதிவு (9)
smile emoticon

சற்குரு - தாத்தா - 7

சற்று அதிகம் personal நினைவுகளும், உறவுகள் குறித்த குறிப்புகள் நிறைந்த பதிவு இது. தொடர்ந்து படிப்போருக்கு ஒரு தொடர்ச்சி இருக்கும் பொருட்டு share செய்கிறேன்.

அப்பாவின் பிறந்த தினம் இன்று - ரவி அப்பா.
அப்பா பிறந்த 1951 மே 29 தினத்தை நினைவுகூறக் கூடிய யாருளர் இன்று. தாத்தா மற்றும் அம்மாச்சியிடம் கேட்டுப் பார்க்கலாம்.
தாத்தா, அப்பாவைப் பற்றிய சிறு வயது நினைவுகளில் அதிகம் குறிப்பிடுவது - very soft and gentle, obedient என்ற பார்வையில்தான். பெருமாள் கோவில் தெருவில் (இன்றைய aarathy hotel பின்புறம்)வீட்டுக்கு அருகில் PSS bus வந்து திரும்புமாம். இரண்டு வயது நிரம்பிய ரவி அப்பாவும் அவர்களை விட இரண்டு வயது மூத்த செல்லத்தையும் வாசலில் அமர்ந்திருப்பார்களாம். பஸ் அருகில் வந்ததும் ஆர்வத்தில் அப்பா வாயில் விரலோடு 'ஸ்..' என எழுந்து நின்று விட, அத்தை 'வேண்டாம் தம்பி, விழுந்துடுவ' என சொன்னதும் அப்பா அப்படியே உட்காரந்து கொள்வார்களாம். ஒவ்வொரு பஸ் திரும்பும் போதும் இது நடக்குமென, தாத்தா புன்னகையோடு விவரிப்பார்கள்.
மேற்கொண்டு பெருமாள் கோவில் வீதி கதைகள் அப்பாவின் எழுத்திலேயே கேட்கலாம்..
"அழும்தொறும் அணைக்கும் அன்னை - அறிவிலாது ஓடி
விழும்தொறும் எடுக்கும் அப்பன்
தொழும்தொறும் காக்கும் தெய்வம்
சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை" - கானகந்தர்வன் யேசுதாஸ் குரலில் இப்பாடல் கேட்கும் போதெலாம் நெஞ்சம் நிறைந்து தளும்பும்.
இறையும் குருவும் இவ்விதமே..
அஸ்ஸாம் தவிர்த்த எனது ஐந்தாம் வகுப்பின் எஞ்சிய நாட்கள் தாத்தாவுடன் கண் விழிக்கும் நேரமெல்லாம் இருக்கும் தினங்கள் ஆயிற்று
உறவுகள் தொடர்கதை - உணர்ந்தது இக்காலத்தில்தான். வழக்கமாய் பார்த்துப் பழகிய உறவுகளைத் தவிர யாரிடமும் பழகாத தொட்டாற்சுருங்கி நான் அப்போது.(மனசாட்சி: இப்போது மட்டும் என்னவாம்?? சற்று அதிகமானோரைத் தெரியும் அவ்வளவுதான்)
பாட்டியின் மறைவை ஒட்டி பல தினங்கள் அம்மை நகரில் இருந்தபோதுதான் பல பெயர்களுக்கு எனக்கு முகங்கள் அறிமுகம். மருதுபாண்டியன் அண்ணனை நன்கு தெரியும், அண்ணன் மதுரையில் படித்துக் கொண்டிருந்த போது தாத்தா சொன்னது - உங்கள் அனைவருக்கும் மூத்தவன். அண்ணன்!! Sorry கோபிண்ணா.. "என்னைத் தெரியுமா" என அம்மையநாயக்கனூர் மாடி அறையில், தோடி ராகம் படம் பார்த்துக்கொண்டிருந்த போது அரையிருளில் நீங்கள் கேட்ட போது, எனக்கு நிஜமாய் உங்களைத் தெரியாது. இது போன்ற அறியாமைக்கு அதிகம் திட்டு வாங்கியிருக்கிறேன் தாத்தாவிடம்.. வேகவேகமாய் நடந்து வரும் செண்பக அத்தானை நன்கு தெரியும். ஆனால் அவர்கள் வீடும் அம்மையநாயக்கனூரில் அரசமரத்துக்கு எதிரிலிருந்த சாரதி மாமா வீடுதான் என்பது எங்களுக்கு ஆச்சரியமான செய்தி. வானதி அத்தாச்சி வீடு அது!!!
மதுரையில் இருந்த காலத்தில் யாரேனும் வீட்டுக்கு வருகிறார்கள் என்றால் quiz ஒன்று நடக்கும் எனக்கு. பேந்தப் பேந்த விழித்ததுதான் அதிகம். ஒருமுறை தாத்தா தன் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் போது, 'தங்கப்பாண்டியன் வீட்டருகில்' எனக் குறிப்பிட, 'யாரது?' என்று கேட்டுவிட்டேன். பழியாய் வந்ததே கோபம் தாத்தாவிற்கு. தாத்தாவையும் தெரியவில்லை, அம்மை நகரையும் தெரியவில்லை. அன்றுமுதல் குலவரலாறு விலாவரியாய் பாடம் நடத்தப்பட்டது எனக்கு!!
இதற்கும் சில வருடங்களுக்கு முன்னால்-ஒரு சின்ன flashback: தாத்தாவுக்கும் எனக்குமான secret..இன்று என் எழுத்து வாயிலாய் மனம்திறக்கையில் அப்பாவும் தாத்தாவும் பெரியம்மாச்சியும் மேலிருந்து புன்னகை புரிவதாய் அகக்காட்சி. மாயை அகன்ற அரன் உலகன்றோ அவர்களுடையது -
"பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
படும்பொழுது நீங்கிஅது விடும்பொழுதிற் பரக்கும்
மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும்
அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும்" தாத்தா சொல்லிக்கொடுத்த பாடல்...
அது ஒரு பொங்கலுக்கு முன்தினம்.
சில வருடங்கள் ஷண்முக பவனமும் செல்வ நிலையமும் மௌனம் சாதித்த காலம். போக்குவரத்தின்றிப் போனதால், என் தாய்க்குத் தாயாகி எனக்கும் தாலாட்டுப் பாடிய மாதரசி - another great legend - சௌந்தரம் அம்மாச்சி - பெரியம்மாச்சி என்னைப் பார்க்கவேண்டும் என, தாத்தா ரகசியமாய் அங்கு அழைத்துப்போனது; மிகத் தெளிவாய் அந்த மாலையின் விளக்கேற்றும் வேளையின் இருளோடு நினைவில் அச்சேறி இருக்கிறது. அருகில் பார்த்ததில்லையே தவிர, தாத்தா அதிகம் குறிப்பிடும் நபர் பெரியம்மாச்சி.தாத்தா பலமுறை அங்குள்ளோர் அனைவர் குறித்தும் சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். As usual I was blank, the moment I entered there.. பெரியம்மாச்சி தழுவி உச்சிமுகர்ந்த சேலை வாசமும், கன்னத்தை கைகளால் அழுத்தி முத்தமிட்ட பத்மாத்தையும், வேலேந்திய முருகனும் that scene is etched in memory forever..
அங்கிருந்த ஒரு சில நிமிடங்கள் அந்த முருகனையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன்.. அவர் கையிலிருப்பது சக்திவேலா (வீரவேலா, தாரைவேலா, விண்ணோர் சிறை மீட்ட தீரவேலா எனப் பெருத்த சந்தேகம்) எனத் தெற்குப் பக்கத்து வாசற்படியில் அமர்ந்து அம்மாச்சியிடம் பேசிக் கொண்டிருந்த தாத்தாவிடம் கேட்டதும் நினைவிருக்கிறது. மீண்டும் வீடு நோக்கி நடக்கும் போது, தாத்தா கண் கலங்கியிருந்தது (மனதின் வேதனை நானறியேன்), கூரைப்பூ வாங்கிக்கொண்டு போகும் போது, கடையில் கூட்டமென சொல்லிவிடலாம் என்றார்கள், நான் அதுவரை அறிந்திராத கம்மிய குரலில். அண்ணனின் அந்த ரகசியம் பெரியம்மாச்சியும் இறுதி வரை காத்தார்கள். TVS ஆஸ்பத்திரியில் இறுதித் தறுவாயில், அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு பெரிய அம்மாச்சியைப் பார்க்கச் சென்ற போது, "சிறு வயதிலேயே பிரித்துச் சென்று விட்டீர்களே, பார்க்காத குழந்தைக்கு எப்படி நினைவிருக்கும்?" எனக் கேட்டு என் தலையை வருடியதை நினைக்கும்போது, அந்த அண்ணன் தங்கையின் புரிதலும் பகிர்தலும் உணர முடிகிறது. தாத்தாவின் வழிகாட்டுதலில் பின்னாட்களில் ஷண்முக பவனம், மனம் திறந்து லேசாக்கும் தனிப்பட்ட புனித ஸ்தலமாகவே இருந்தது.
மீண்டும் ஐந்தாம் வகுப்பு தினங்கள் - தாத்தா அப்பத்தாவுடன் - பாலா, செண்பகவல்லி அத்தை அனைவருடன். பெரியவர்களின் மனத்துயரங்கள் எல்லாம் புரியாத வயது. 'துன்பம் நிறைந்து வந்த போதும் மனம் சோர்ந்து மதிமயங்க மாட்டேன்' - மேல் ஸ்தாயியில் அத்தை தழுதழுக்கும் போது, அத்தையின் குரலை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருப்பேன். ஜெய ஜெய 'பாலா' சாமுண்டேஸ்வரியும், ஓம் நமோ 'நாராயணா'வும் பாடச் சொல்லி பாலா ஒருபுறம் நேயர் விருப்பம் கேட்க, அருகிலோ திண்ணையிலோ அமர்ந்தபடி 'வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்', போன்ற வரிகளில் நெக்குருகி கண்ணீர் வடிய அமர்ந்திருக்கும் தாத்தா. அழுகை புரியவில்லை எனினும், தவத்தை கலைத்தலாகாதென அன்றும் புரிந்தது.
நல்ல அழுகை, நல்ல ஸ்னானம் - லா.ச.ரா சொல்ல, அனுபவத்தில் மேலும் புரிந்தது.
சில அனுபவங்கள் அனைவருக்கும் நிகழும்போதிலும், அவற்றிலிருந்து பெறப்படும் தரிசனங்கள், அவரவர் தீட்சண்யத்தைப் பொறுத்ததே. நமக்கு எவ்வளவு கொள்ளளவோ அவ்வளவுதான்.

முந்தைய பதிவு (6)

அடுத்த பதிவு (8)

Friday, June 5, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர் - 3

"தேனூறும் தேவாரம் இசைப் 
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே 
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் 
அதில் உலகம் மறந்து போகும்" - இன்னிசை ராஜாவின் இசையில் இப்பாடல் திகட்டாத தீஞ்சுவை.

தமிழின் இனிமையும் வளமையும் உணரத் திரைப்படங்களே பெரும் பங்கு வகித்தது. திருவிளையாடல் படத்தின் வசனம் அப்பாவின் tape recorder-இல் பல முறை அந்த "ற்றொயிங்ங்ங்" இசையோடு கேட்டு முதல் காதல். 

"சொற்சுவை பொருட்சுவை அனைத்தும் கூட்டி 
சுந்தரத் தமிழினிலே பாட்டிசைத்து 
செந்தமிழ்க் கவி பாடும் புலவன் நான்" என்ற வசனம் பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடம் பாராட்டுப் பெறுவதற்காக பேசியது. இது போன்ற படங்களின் வசனங்கள் பேசி விட்டாலே மனதுக்குள்  தமிழ்ப் புலமை வந்துவிட்டாதாய் ஒரு பூரிப்பு வந்துவிடும். பின்னர் மேலும் மேலும் என்று மனம் பித்துக் கொள்ளும். "அங்கம் புழுதிபட", "சங்கறுப்பது எங்கள் குலம்" எல்லாம் புரிய இன்னும் சில வருடங்கள் ஆனது. 

ஆனால் இந்த "ஞானப் பழத்தைப் பிழிந்து" பாட்டில் ஔவைப் பாட்டி பாடும் அடுத்த வரி புரிய வெகு காலம் ஆயிற்று!!

பத்தாம் வகுப்பில் "திருவிளையாடற் புராணம்" பாடத்தில் படித்த போது, சங்கத் தமிழ் பாடலாகிய 
 
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே

என்ற பாடலை ஜனரஞ்சகமாய் அனைவரிடமும் கொண்டு சேர்த்த சிவாஜி கணேசனையும் ஏ.பி.நாகராஜனையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழின் செழுமைஅறிய சங்க காலம் தொடங்கி இன்று வரை நடை பயில வேண்டும் தமிழோடு கரம் கோர்த்து.

பள்ளிப் பாடத் திட்டத்தின் ஊடேயும் தமிழின் நேர் நேர் தேமா, கருவிளம், கூவிளம், குற்றியலுகரம், லிகரம் போன்ற கடபுடா இலக்கணம்(இலக்கணமும் இனிமையே, அது குறித்து இப்போதே எழுதினால் வழக்கமாய் வாசிக்கும் 10 பேரும் நிறுத்தி விட்டால் என்ன செய்வதென்று அஞ்சி அந்த பக்கம் இப்போது செல்லவில்லை) தவிர சில ரசிக்கவேண்டிய இரட்டுற மொழிதல் போன்ற பாடல்களும் இருந்தன. 

இது போன்ற double meaning சிலேடையில் மன்னர் கவி காளமேகம். இவர் மதுரையை அடுத்த திருமோகூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று ஒரு செய்தி.

"நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த் தேன் பாயும் சோலைத் திருமலை ராயன் வரையில் பாம்பாகும் வாழைப் பழம் "

என்று இவர் பாம்பையும் வாழைப்பழத்தையும் குறித்து இரட்டுற மொழிந்தது பாடத்தில் இருந்தது. 

நஞ்சிருக்கும் - விஷமிருக்கும்தோலுரிக்கும் - பாம்பு தோல் உரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் -  சிவனின் சிரசில் இருக்கும் வெஞ்சினத்தால் பற்பட்டால் மீளாது - பாம்பின் பல் பட்டால் உயிர் மீளாது என்று படித்தவுடன் பாம்பைக் குறித்தே பாடுவது போலத் தோன்றினாலும்,.

நஞ்சிருக்கும் - நைந்துபோயிருக்கும் (பேச்சுவழக்கில்) நஞ்சிருக்கும்தோலுரிக்கும்_ சாப்பிடும் முன் தோல் உரிக்கப்படும்நாதர்முடி மேலிருக்கும் - அபிஷேகத்தின் போது சிவனின் சிரசில்  வாழைப்பழத்துக்கும் இடமுண்டுவெஞ்சினத்தால் பற்பட்டால் மீளாது - பல்லில் அரை பட்டால் மீளாது.


ஆகவே வாழைப்பழம் பாம்புக்கு நிகராகின்றது என்று முடிக்கிறார் இந்தக் கவி
.

இவரது பல பாடல்களில் இப்படி சிலேடையைக் காணலாம். 

மேலும் "த"கர வர்க்க எழுத்துக்களாலேயே அமைந்த பாடல், "க"கர வர்க்கத்திலேயே எழுதிய பாடல் எல்லாம் இவரிடம் உண்டு.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதிதுத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதிதித்தித்த தித்தித்த தாதெது தித்தித்ததெத்தாதோ தித்தித்த தாது.

இது ஒரு வண்டைப் பார்த்துப் பாடுவதாக அமைத்திருக்கிறார்.

தத்தித் தாது ஊதுதி - தாவிச் சென்று பூவின் மகரந்தத்தைஊதி உண்கிறாய் 
தாது ஊதித் தத்துதி - மகரந்தத்தை ஊதி உண்ட பின் மீண்டும் தாவிச் செல்கிறாய்
துத்தித் துதைதி - துத்தி என்று ரீங்கரித்தபடியே அடுத்த பூவிற்குச் செல்கிறாய்
துதைது அத்தா ஊதி - அப்பூவையும் நெருங்கி மகரந்தத்தை உண்ணுகிறாய்
தித்தித்த தித்தித்த தாதெது - இரண்டிலும் தித்திப்பான இருந்த மகரந்தம் எது?
தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது - தித்திப்பான பூ எது? அழகான பூவின் இதழ் எது?


காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக் காக்கைகுக் கைக்கைக்கா கா  
சரியாக வாசிக்க முடிந்தால் comment போடவும், அர்த்தம் கூறுகிறேன் ;)

மேலும் இவர் ஒரு பாடலில்  
கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்பெண்டீர் தமைச் சுமந்த பித்தனார்-எண்டிசைக்கும்மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்அக்காளை ஏறினாராம்.

அக்காளை தங்கையை எல்லாம் என்னவோ பண்ணி விட்டார் ஈசன் என்று சிவனைக் கண்டபடி ஏசி பெண்பித்தன் எனச் சொன்னது போலத் தொனிக்கும் இப்பாடலின் உண்மையான கருத்து 

கடம்ப வனத்து ஈசனார் உடலில் பாதியை உமைக்கும், தலையை கங்கைக்கும் அளித்திருக்கும் பித்தர். எட்டுத் திசைகளிலும் புகழ் மிக்க தன் கைகளிலே நெருப்பை ஏந்தி இருக்கிறார் 
காளை மாட்டை வாகனமாகக் கொண்டவர்.

இன்னும் இவர் பாடல்கள் சொல்லிக் கொண்டே போகலாம். மோர் கொடுத்த ஆய்ச்சியர் மேல் பாடிய வஞ்சப் புகழ்ச்சிப் பாடல், உணவு சமைக்க தாமதமாக்கிய சத்திரக்காரன் மேல் கோபமாகப் பாடிய பாடல் என..

"23ஆம் புலிகேசி" படத்தில் "நீ மன்னரைப் பார்த்து சற்றும் இடைவெளி இல்லாமல் திட்டினாயே" என்ற பகுதி சமீபத்திய படங்களில் இது போன்ற தமிழ் நகைச்சுவையை மீண்டும் தூசி தட்டும் முயற்சி.

Lighter side of Tamil - இன்றைய பதிவில்.. அடுத்த பதிவில் வேறொரு சுவையோடு சந்திக்கலாம்