Tuesday, December 29, 2015

சற்குரு - தாத்தா - 20

கார் பாலத்தைக் கடந்தது. சில நொடிகளில் வெடிகுண்டு தலை மேல் விழுந்தது போன்ற சத்தம். நெஞ்சம் காதில் படபடக்க நடந்தது என்ன என்று திரும்பிப் பார்த்தால் கடந்து வந்த பாலம் வெடித்துத் தகர்ந்திருந்தது.  மயிரிழையில் உயிர் பிழைத்த பதைபதைப்புடன்  புயல் வேகம் எடுத்தனர். அதே சமயம் அந்த ஆற்றின் ஆறு பாலங்களும் தகர்க்கப்பட்டிருந்தன. சில நிமிடங்கள் பின்தங்கியிருந்தால் வீடு சேர முடியாமல் அக்கரையிலும் சில நொடிகள் பின்தங்கியிருந்தால் உயிர் பிழைக்க முடியாமலும் ஸ்லிம் ஆற்றின் கரையில் இக்கதை முடிந்திருக்கக் கூடும். 

பினாங் நெருங்கிக் கொண்டிருந்தது. பேசிக் கொள்ளவும் முடியாத கலவரத்தில் இருவரும். அப்போது சாலையோரத்தில் ஒரு சக்கரம் அதிவேகமாய் காருக்கு முன்னால் ஓடுவதைப் பார்த்து வியந்.. சரேல் என  சறுக்கி கார் பக்கத்தில் இறங்கி   பாதியில் நின்ற வியப்பை உறுதிப்படுத்தியது - ஆம் அது அவர்களது காரின் சக்கரம்தான். 
விதியையும் வெல்லக்கூடும் வெல்வதாக விதியிருந்தால் - அப்படி பிழைப்பதாய் விதியிருக்கவே அந்நிய நாட்டு வீதியில் விதி முடியாமல் பினாங் சென்று சேர்ந்தனர்.

அதன் பிறகு தொடங்கியது ஓர் இருண்ட காலம். போரின் பேரிரைச்சலில் அனைவரும் மருண்ட காலம். வெள்ளையர் பினாங்கை விட்டு வெளியேறியது அறியாமல் பினாங்கை தாக்கத் துவங்கியது ஜப்பான். அடுத்த நாள் காலை, துறைமுக வணிக நகரமான பினாங்கின் பரபரப்பான காலை நேரம். பொதுமக்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. வழக்கம் போல் மொத்த வியாபாரத்திற்கு கூட்டம் நெரித்துக் கொண்டிருந்தது செட்டியார் வீதிகளிலும் அருகிலிருந்த சைனாடவுன் பகுதிகளிலும். (இன்றைய சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா, சைனா டவுன் போன்றே பினாங்கிலும் இவ்விரு மக்களும் வாழும் இடங்கள் அந்தந்த நாட்டின் அடையாளங்களோடு பினாங்கில் இருந்திருக்கின்றன, இருக்கின்றன.) காற்று வினோதமான பறவை ஒன்றைப் போல் ஒலிக்க, போர் விமானங்கள் வியூகம் அமைத்து வானில் வருவதைப் பார்க்க அனைவரும் வியப்போடு வானத்தைப் பார்த்திருக்கிறார்கள். காதை தீய்ப்பது போன்ற ஒலியுடன் மழை பொழியத் தொடங்கியது - குண்டு மழை. Carpet bombing (படம் இணைக்கபட்டுள்ளது) என்றழைக்கப்படும் தொடர் குண்டுகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சைனாடவுன் பகுதிக்கருகே விழுந்தன.  ரத்தக் களறியாய் சதைப் பிண்டங்களாய் மக்களை  விசிறியடித்துவிட்டு வந்த வேகத்தில் பறந்து சென்றன விமானங்கள்.


வெடிகுண்டு வானில் இருந்து விழும் சத்தம் கேட்டால் அருகில் எங்கோ விழுகிறது; சத்தம் கேட்காவிட்டால் நம் தலைமேல் விழுகிறது - அதை சொல்லவும் உயிரோடு இருக்க மாட்டோம் என்பதெல்லாம் அப்போது உணர்ந்த பாடங்கள்.

ஆட்சி செய்வது ராமனோ ராவணனோ நாம் நம் வயிற்றை கவனிப்போம் என்றிருந்த, உலக அரசியலின் போக்கை சிறிதும் உணரமுடியாது இருந்த சராரசரி மக்களின் தலையில் வீழ்ந்தது பேரிடி. எங்கோ செய்தித்தாள் நிகழ்வாய் இருந்த போர், அயல்நாடுகளில் நடந்த போர், அண்டை வீட்டானாய் நிகழ்ந்த போர் அவர்கள் வீட்டுக்குள் குடியேறி வீட்டையும் தகர்த்து அனைவரையும் வெளியில் இழுத்துப் போட்டு கோரமாய் சிரித்தது.

முந்தைய பதிவு (19)


அடுத்த பதிவு (21)

Thursday, December 10, 2015

பாரதி போற்றுதும்



அதிசயம் பாரதிசயம்* பார்!!  பாரதிர** வரும் முரசவன்பா
மறந்தனள் தன்னிடம் பூவினிலேயென அமர்ந்தனள் பாரதி*** நாவினிலே
பொழிந்தனன் பாரதி கவிமழையை அடிமைத்தனமும் கீழ்நிலையும்
விதியெனநம்பாரதிவிரைவாய்**** மதியொடு களம்புகத்தான் துணிந்தார்
இயற்றினன் காவியக் காதல்பா ரதிமதனும்தான்***** மயங்கிடுவார்
போற்றினான் கண்ணனை பலஉருவாய்; ஏற்றினான் பெண்மையை விழித்தெழவே;
தூற்றினான் பொய்மையை அழிந்தொழிய; மாற்றினான் மடமையை சிறுமதியை;
ஆற்றினான் பெருந்தொண்டு மாந்தர்க்கு; போற்றுவோம் நாம்பெற்ற பாரதியை

*அதிசயம் பார்+அதிசயம் பார்
** பார்+அதிர வரும முரசு அவன் பா
***பாரதி - கலைமகள், சரஸ்வதி
**** விதியென நம்பார்+அதிவிரைவாய்
***** காதல்பா+ரதிமதனும் தான் 

Tuesday, December 8, 2015

சற்குரு - தாத்தா - 19


இன்றைக்கு சரியாய் 74 வருடங்களுக்கு முன்னர் டிசம்பர் 8 நள்ளிரவில், Pearl harbour தாக்குதலுக்கு ஒரு மணி நேரம் முன்னர் மலேயாவின் மேற்கு கரையில் கால்பதித்திருந்தது ஜப்பானியப் படை. மிக சில மணித்துளிகள் போருக்குப் பின் அவ்விடத்தைக் கைப்பற்றியது ஜப்பான். அங்கிருந்த பிரிட்டிஷ் படை, ஜப்பானியப் படையின் உண்மையான நிலையைவிட அதிகம் முன்னேறி விட்டதாய்  கிடைத்த தவறான உளவு செய்தியின் அடிப்படையில், தங்கள்  Lt. Col. Hendricks என்ற கமாண்டரைக் கொன்றுவிட்டு முழு செயல்பாட்டில் இருந்த விமான தளத்தையும், ஆயுதங்கள், எரிபொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறி இருந்தது. அடுத்த சில தினங்களில் ஆங்கிலேயப் படையின் கவனம் முழுதும் pearl harbour பக்கம் திரும்பியிருக்க 11 டிசம்பர் பினாங்கில் வெள்ளோட்டம் பார்த்தது ஜப்பானியப் படை. விமானப் படை ஜப்பானியரின் பலமாய் இருந்தது. ஜப்பானியரை எதிர்க்கப் போதிய படையும் ஆயுதங்களும் இன்றி, பினாங்கை நிராதராவாய் எதிரிகள் தாக்குதலுக்கு விட்டுவிட்டு பொதுமக்களுக்கு எந்த அறிவிப்புமின்றி வெளியேறியது பிரிட்டிஷ் படை. 

உண்மையில் ஆங்கிலேயப் படையினரின் அளவைக் குறைவாய் மதிப்பிட்டிருந்தது ஜப்பானியப் படை. எனில் அதன் ஜெனரல் யமஷிட்டோ பின்னாளில் தெரிவித்தது போல் அந்த அறியாமையே அவர்களது பலமாயிருந்தது அப்போது. அதே போல ஜப்பானியர் படை பலத்தை அதிகமாய் நினைத்த அறியாமையே ஆங்கிலேயரின் பலவீனமாய் இருந்தது.

இவை இன்று சரித்திரமாய் காலவரிசைப்படுத்தி படிக்க முடிகிறது. அன்று சரித்திரம் நிகழ்ந்து கொண்டிருந்த போது எத்தகவலும் தெரியாமல், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போன்ற நிலைதான்.

மீண்டும் பினாங் நெடுஞ்சாலைக்கு வருவோம்:

என்ன நிகழ்கிறது என விளங்காது எதிர் வரும் படைகளைப் பார்த்து திகைத்த வண்ணம் இருவரும் விரைந்து கொண்டிருந்தனர். ஜப்பானியர் படை ஊடுருவி விட்டதோ எனப் பார்த்தால், எதிரே சென்றது அனைத்தும் union jack கொடி சுமந்த வெள்ளையர் படை. 'என்ன நடக்கிறது இங்கே!!
எங்கே செல்கிறது இப்படை!!' வியப்பு, பயம், ஆர்வம் மேலிட நம்மவர்களின் நான்கு விழிகள். 

'யார் இந்த இரு இளைஞர்கள்? சாவை எதிர்நோக்கி பினாங் நோக்கி ஆர்வமாய் விரையும் இவர்கள் யார்? நம் படை செல்வதைக் கண்டும் ஒற்றையாய் தனித்து செல்பவர்கள்!!' அதே வியப்பு பல நூறு கண்களில் படையினர் தரப்பில்..

ஆபத்தின் வாடை கலந்திருந்தது காற்றில்.

வழியில் ஒரு நதியைக் கடக்க வேண்டும்.  இந்த ஆற்றைக் கடந்துதான் கோலாலம்பூர் இருந்த மலேயாவின் தெற்குப் பகுதியிலிருந்து பினாங் மாகாணம்  நுழைய முடியும். சில மைல் தொலைவுகளில் ஆறு இடங்களில்  பாலங்கள் இருந்தன.  இவற்றில் ஏதேனும் ஒன்றில் கடக்க வேண்டும் பினாங் சென்றடைய. அவற்றில் ஒன்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தது கார். 

அப்பாலங்களைக் கடந்து கோலாலம்பூர் நோக்கி பிரிட்டிஷ் படை முழுவதும் கடந்ததும், ஜப்பானியர் படை பின்தொடர்வதைத் தடுப்பதற்கும் காலதாமதப் படுததுவதற்கும் ஆறு பாலங்களையும் வெடிகுண்டு போட்டு தகர்க்க முடிவு செய்து கடந்து கொண்டிருந்தது பிரிட்டிஷ் படை.

கடைசிப் படைவாகனமும் கடந்து முடிக்கவும் தாத்தாவின் கார் பாலத்தில் நுழையவும் மிகச் சரியாக இருந்தது. நிமிடங்களின் பிடியில் ஊசலாடிக் கொண்டிருந்தது உயிர் - இதை அறியாமல் பாலத்தில் நுழைந்தது கார். 

முந்தைய பதிவு (18)


அடுத்த பதிவு (20)