Tuesday, October 27, 2015

சற்குரு - தாத்தா - 17

சற்குரு - தாத்தா - 17

இரண்டாம் உலகப் போர் முழுத்தீவிரமடைந்தது.

1941 - 1946 இந்தக் காலகட்டத்தை மூன்று தளங்களில் பார்க்கவேண்டியிருக்கிறது.

1. உலகமெங்கும் பரவிக்கொண்டிருந்த, உயிருக்கு உத்தரவாதமற்ற போர்ச்சூழல், அதில் பதைபதைப்புடன் வாழ்வு, இதற்கிடையே மகாத்மா காந்தி, நேதாஜி போன்ற தலைவர்களின் தலைமையில் விடுதலை வேட்கை கொண்டு சுகவாழ்வைத் துறந்து விடுதலைப் போராட்டக் களமிறங்கிய ஆயிரமாயிரம் இளைஞர் கூட்டம் என்ற உலகளாவிய சமூகச் சூழல்.

2. உற்றார் உறவினரைப் பிரிந்து, இறப்புக்கும் இருப்புக்கும் இடையில் இடையறாது தவித்து, இருள் கவிந்திருக்கும் நிகழ்காலம் எதிர்காலத்தையும் விழுங்கிவிடுமோ? உயிர் தப்பி ஊர்சேர வழிவகை ஏதும் உண்டா? பிழைத்திருக்கும் நாள்வரை பிழையாதிருப்பேனா? என வினாக்களே வினாடிகளாக தவித்திருந்த புலம்பெயர் மனிதர்களின் வாழ்வு.

3. பெற்ற தாய் தந்தையும், உடன்பிறந்தாரும், கட்டிய மனைவியும், பெற்ற மக்களும் ஒவ்வொரு நாள் விடியலிலும் 'இன்று ஏதேனும் சேதி வாராதா நலமாயிருக்கிறார் என்று, இன்ன தேதியில் வருகிறேன் என்று' என எதிர்பார்த்து, மேற்கே கதிரவனோடு எதிர்பார்ப்பும் மறைய, நாட்களை நரகமெனக் கழித்த உறவுகளின் நிலை.

அனைத்தையும் சுமந்து கொண்டு புவி நித்தம் தன் பயணம் மேற்கொண்டுதானிருந்தது விடியலை நோக்கி..

1941-மலேயா அதிதீவிரமான போர்த்தாக்குதலுக்கு உள்ளாயிற்று. அதுவரை ஆங்கிலேயர் வசமிருந்த மலேயா மீது ஜப்பானியர் வான்வழித்தாக்குதல் தொடங்கினர்.

மலேயாவின் போர் வரலாற்றில் முக்கியமான தினங்கள் - டிசம்பர் 1941. ஜப்பானியப் படை மலேயாவைக் கைப்பற்றத் தொடங்கியது. கிழக்கு கடற்கரையில் கோட்டாபாருவில்(kota bahru) தொடங்கிய ஜப்பானியர் ஊடுருவல் 11-டிசம்பர் பினாங்கைத் தொட முயற்சித்தது.

நித்தமும் அநித்தியமாகிக் கொண்டிருந்த சூழலிலும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அன்றாடங்களில் புதிதாய் சேர்ந்திருந்த வாடிக்கை - மரணத்தை எண்ணி பதைத்தவாறு பதுங்கு குழிகளில் உயிரைத் தஞ்சமடைவது.

அந்த டிசம்பர் 1941-ல் 25வயது நிரம்பிய தாத்தாவும்(தாத்தா என்ற சொல் ஏற்படுத்தும் வயதான அகத்தோற்றத்தை மாற்றிக் கொள்ளவே வயது குறிப்பிடுகிறேன் - 25 வயதே ஆன அய்யாத்துரை) அவரது நண்பரும் பினாங்கிலிருந்து கோலாலம்பூர் சார்ட்டர்ட் வங்கி சென்றிருந்தார்கள். கடைப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு வங்கியில் நின்று கொண்டிருந்தார்கள். அபாய சங்கு ஊதிற்று.



முந்தைய பதிவு (16)

அடுத்த பதிவு (18)

Monday, October 5, 2015

ஏகாந்தம் ஏதுக்கடி


தன்னை சுமப்பதே கசக்கும் தனிமை - சிறியது;
தனைத்தான்அறியத் தளம்தந்து தன்னை மறக்கச் செய்யும்
ஏகாந்தம் - மிகப் பெரியது.

வெற்றிடத்தில் நாம் மட்டும் தனித்துக் கிடப்பதாய் சொல்லும் தனிமை. எல்லைகளற்று நாம் விரிந்து கிடப்பதாய் சொல்லும் ஏகாந்தம்.

நம்மை உண்டு, மனதை வதைத்து, நல்லியல்புகளை, நம்பிக்கைகளை, கரையான் போல மெல்ல அரிக்கும் தனிமை. அன்றாட அழுத்தங்களைக் கரைத்து நேர்மறை எண்ணங்களில், ஈடுபாடுகளில், சுயத்தை மறக்கும் ஏகாந்தம்.

குரல் இழந்த குருட்டுப் பறவை தனிமை. விட்டு விடுதலையாகி நிற்கும் மோனம் ஏகாந்தம். இருப்பினும் ஏகாந்த வரம் வாங்க தனிமையில்தான் தவம் வேண்டும்.
வரங்களே சாபங்கள் ஆகும் என்றால் இங்கே தவங்கள் எதற்காக என்றொரு கவிதை வரி உண்டு. ஏகாந்தம் இனிது -  துய்க்கத் தெரிந்து விட்டால்; தனிமையில் மனம் தன்னோடு சிநேகமாய் இருக்கத் தெரிந்துவிட்டால். இல்லையெனில் தனிமை பெரும் சாபம்.

'Go cashless' இந்த விளம்பர வாசகம் ஒவ்வொரு முறையும் முகத்தில் புன்னகை பூக்கச் செய்யும்.
Cashless state - positiveஆ negativeஆ? பணம் இல்லாதவனின் நிலை பொருளாதார வறுமை. பணத்தைப் பையில் சுமப்பதே ஒரு சுமையாகும் காலம் பொருளாதார செழுமை. செரிமானம் தாண்டிய செழுமை. மாதந்தோறும் கடன் வாங்க நேரிடும் மக்களுக்கு - மரக்கோடரி தொலைத்த விறகுவெட்டிக்குத் தங்க கோடாரி தந்து ஆசைகாட்டும் தேவதை போல - இரு முனைகளை இணைக்க முயலும் நடுத்தர வர்க்கத்திற்கு இரண்டு லட்சம் வரை கடன் தந்து ஆசை காட்டும் credit cardஜக் குறித்து சொல்லவில்லை. 'You need not carry cash' - என்ற marketing வாசகத்தைக் குறித்து சொல்கிறேன்.

அதேபோல ஆன்மாவின் வறுமை தனிமை. அதன் செழுமையே ஏகாந்தம். You can go 'I'less in solitude.

தனிமையிலிருந்து ஏகாந்தம் நோக்கிய பயணம் மேற்கொள்ள நம்  மனமென்னும் இருட்டறையை அன்பின் வெளிச்சத்திற்கும், அறிதலின் காற்றோட்டத்திற்கும் திறந்து வைக்க வேண்டும். அறிதல், கற்றல் - மனதை தூசு தட்டும். அறிதல் எதுவாயினும் இருக்கலாம். அறிவும் அதனால் வரும் சுகமும் போதை. நம் ஆர்வத்தைப் பொறுத்து கற்றலின் களம் இசையாகவோ இறையாகவோ ஏன் சுயமாகவோ கூட இருக்கலாம். கற்றலும் மறந்து, கற்றதோடு நாம் கரைய ஏகாந்தம் மட்டும் நின்றிருக்கும். 

இனிதாகும் எதுவும் எளிதல்ல - எனினும் கைவர அரிதுமல்ல.

"இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே" - ஔவையார்