Monday, October 5, 2015

ஏகாந்தம் ஏதுக்கடி


தன்னை சுமப்பதே கசக்கும் தனிமை - சிறியது;
தனைத்தான்அறியத் தளம்தந்து தன்னை மறக்கச் செய்யும்
ஏகாந்தம் - மிகப் பெரியது.

வெற்றிடத்தில் நாம் மட்டும் தனித்துக் கிடப்பதாய் சொல்லும் தனிமை. எல்லைகளற்று நாம் விரிந்து கிடப்பதாய் சொல்லும் ஏகாந்தம்.

நம்மை உண்டு, மனதை வதைத்து, நல்லியல்புகளை, நம்பிக்கைகளை, கரையான் போல மெல்ல அரிக்கும் தனிமை. அன்றாட அழுத்தங்களைக் கரைத்து நேர்மறை எண்ணங்களில், ஈடுபாடுகளில், சுயத்தை மறக்கும் ஏகாந்தம்.

குரல் இழந்த குருட்டுப் பறவை தனிமை. விட்டு விடுதலையாகி நிற்கும் மோனம் ஏகாந்தம். இருப்பினும் ஏகாந்த வரம் வாங்க தனிமையில்தான் தவம் வேண்டும்.
வரங்களே சாபங்கள் ஆகும் என்றால் இங்கே தவங்கள் எதற்காக என்றொரு கவிதை வரி உண்டு. ஏகாந்தம் இனிது -  துய்க்கத் தெரிந்து விட்டால்; தனிமையில் மனம் தன்னோடு சிநேகமாய் இருக்கத் தெரிந்துவிட்டால். இல்லையெனில் தனிமை பெரும் சாபம்.

'Go cashless' இந்த விளம்பர வாசகம் ஒவ்வொரு முறையும் முகத்தில் புன்னகை பூக்கச் செய்யும்.
Cashless state - positiveஆ negativeஆ? பணம் இல்லாதவனின் நிலை பொருளாதார வறுமை. பணத்தைப் பையில் சுமப்பதே ஒரு சுமையாகும் காலம் பொருளாதார செழுமை. செரிமானம் தாண்டிய செழுமை. மாதந்தோறும் கடன் வாங்க நேரிடும் மக்களுக்கு - மரக்கோடரி தொலைத்த விறகுவெட்டிக்குத் தங்க கோடாரி தந்து ஆசைகாட்டும் தேவதை போல - இரு முனைகளை இணைக்க முயலும் நடுத்தர வர்க்கத்திற்கு இரண்டு லட்சம் வரை கடன் தந்து ஆசை காட்டும் credit cardஜக் குறித்து சொல்லவில்லை. 'You need not carry cash' - என்ற marketing வாசகத்தைக் குறித்து சொல்கிறேன்.

அதேபோல ஆன்மாவின் வறுமை தனிமை. அதன் செழுமையே ஏகாந்தம். You can go 'I'less in solitude.

தனிமையிலிருந்து ஏகாந்தம் நோக்கிய பயணம் மேற்கொள்ள நம்  மனமென்னும் இருட்டறையை அன்பின் வெளிச்சத்திற்கும், அறிதலின் காற்றோட்டத்திற்கும் திறந்து வைக்க வேண்டும். அறிதல், கற்றல் - மனதை தூசு தட்டும். அறிதல் எதுவாயினும் இருக்கலாம். அறிவும் அதனால் வரும் சுகமும் போதை. நம் ஆர்வத்தைப் பொறுத்து கற்றலின் களம் இசையாகவோ இறையாகவோ ஏன் சுயமாகவோ கூட இருக்கலாம். கற்றலும் மறந்து, கற்றதோடு நாம் கரைய ஏகாந்தம் மட்டும் நின்றிருக்கும். 

இனிதாகும் எதுவும் எளிதல்ல - எனினும் கைவர அரிதுமல்ல.

"இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே" - ஔவையார்

No comments:

Post a Comment