Sunday, May 8, 2016

சற்குரு - தாத்தா - இறுதிக்கனல்

21 மார்ச் 1946: கப்பல் கரை சேர்ந்தது.

கண்ணீர் பொங்க நிலத்தை முத்தமிட்டனர் கரைசேர்ந்த பலரும்.
ஆனந்த வெள்ளத்தில் நீந்தி மதுரையிலிருந்து வந்திருந்த தோழர்களுடன் தாத்தா மதுரை நோக்கிய ரயில் பயணம் மேற்கொண்டார்கள். கொடை ரோட்டில் ரயில் நிலையத்திலேயே உற்றார் உறவினர் வரவேற்பு. 'மதுரைக்குள் நம் வீடு வரை பேருந்து செல்கிறது' என்றெல்லாம் நவீன மாற்றங்களை நண்பர்கள் உற்சாகமாய் கூறிக் கொண்டே வந்தார்கள். தன் முகம் பாராது வளரும் மகனைக் காண, மன எழுச்சியோடு விரையும் தந்தை. 

ஆறு வயது மகன் சிவசுந்தரவேலனுக்கு,  தந்தை போல இந்திய தேசிய ராணுவ உடை தைத்து அணிவித்து அனைவரும் காத்திருந்தனர். வாசலில் வந்து இறங்கியதும் தாய் தந்தையும் தம்பி தங்கையரும் பழனி மலை தெய்வத்துக்கும், குலதெய்வக் கருப்பனுக்கும் நன்றி சொல்லிக் கண்ணீர் விட, முதன் முதலாய் அதுவரை கண்டிராத மகன் நேதாஜியின் ராணுவ உடையில் முன் வந்து, வீர வணக்கம் செலுத்தி, 'ஜெய்ஹிந்' என்று முதல் வணக்கம் சொன்னான். மகனை ஆரத்தழுவிக் கொண்டு மண்ணில் விண்ணைக் கண்டார்கள் அந்த மகான்.


மிகச் சரியாக 48 வருடங்களுக்குப் பிறகு:
20 மார்ச் 1994: கப்பல் கரை சேர்ந்தது.

குலம் விளங்க மூத்த மகனாய்ப் பிறந்து, தம்பி தங்கையர் குடும்பங்களுக்கு எல்லாம் உற்ற துணையாய் திகழ்ந்து, நாட்டுக்கென களப்பணியில் முன் நின்று, சுற்றத்துக்கென, சமூகத்துக்கென, நட்புக்கென, பெயரறியா சகபயணிகளுக்கென, மனம் விரிந்த மலர், தன் பணி முடிந்தது என அமைதி கொண்டிருந்தது. எண்ணற்ற சுழல்களையும், சூறாவளிகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து வந்த கப்பல் கரை சேர்ந்து விட்டது.

மயானத்தில் இறுதிச் சடங்குகளும் முடிந்து பூவுடலைத் தீ உண்ணத் தரும் தருணம்.  தகவலறிந்து மதுரை INA கிளையிலிருந்து  மிகவும் வயதான தளர்ந்த ஒரு முதியவர் நேராக மயானக் கரை வந்து சேர்ந்தார். தடுமாறி நடந்து வந்து, இராணுவ வீரர்களுக்கே உரிய இறுதி அஞ்சலிக்காக தேசியக்கொடி ஒன்றைக் கொண்டு வந்து தாத்தா உடலின் மீது போர்த்தினார். தன் கால்களைச் சேர்த்து, உடலை விரைத்துக் குரலை உயர்த்தி வீர முழக்கமிட்டார். அந்தத் தளர்ந்த உடலுக்குள் அவ்வளவு திடமான ஜீவன் இருப்பதை நடுக்கமற்று உயர்ந்த அவர் குரல் உணர்த்திற்று. கூடியிருந்தோர் அனைவரையும் அவர் குரல் உலுக்கியது - 'ஜெய்ஹிந்'. 

அதுவரை ஒரு துளியும் கலங்காதிருந்த மூத்த மகன் சிவசுந்தரவேலன், தனது தந்தைக்கும் தனக்குமான முதல் முழக்கம் வானதிர முழங்கவே உடைந்து அழுதார்.

காற்றில் அந்த நெருப்பு வீரவணக்கத்தையும்  அனைவரது அஞ்சலியையும் ஏற்றுக் கொண்டு உயர எழுந்தது.

இன்றும் அனைவரது வாழ்விலும் இருள் சூழ்ந்த பாதைகளில் ஒளியேற்றிக் கொண்டுதானிருக்கிறது அந்த அருட்ஜோதிதெய்வம். தன்னலம் கருதாத அன்பினில், இளம் தலைமுறையை வழிநடத்தும் ஆசிரியர் மனதினில், விளம்பரங்கள் தேடாத கருணையில்,  பிறர் வாழ சிறு உதவியேனும் செய்யும் உள்ளங்களில், நேர்மை தவறாத மாண்பினில், நேர்மறை எண்ணங்கள் விதைக்கும் மனங்களில், நம்பிக்கை தளராத இறையாண்மையில் மிளிர்கிறது அந்த அருட்ஜோதி தெய்வம்.

மறுபடி மரணம்
மறுபடி ஐனனம்
இடையினில் இருளினில்
தேடல்தான் பயணம்..

சிலர் வழிகாட்டுவார்
பலர் நடைபோட்டிட -
சிலர் பலராகவே
அவர் வலிதாங்குவார்

பிறன் நலம்வாழ்ந்திடத்தன்
பிறவியை மாற்றுவார்
முள்முடி தாங்கியும்
முகமலர் காட்டுவார்

விறகொடு எரிவது
உடலது தானே
உடன்வரப் போவது
அவனருள் தானே

மண்ணொடு கலந்தபின்
எஞசுவதென்ன
மனதொடு கலந்திடும்
நினைவுகள்தானே

வெற்றுத் தாளொடு
பிறந்தவர் நாமே
எழுதுவோம் பாக்களை
அன்பொடு தினமே

தாளது ஒருதினம்
அவன்தாள் சேரும்
எழுதிய கவிதைகள்
மனதிடை வாழும்

அன்பது சிவமாம்
அன்பது தவமாம்
வாழ்வை நீட்டும்
அன்பின் கரமாம்..

அன்பே சிவம்! அன்பே சிவம்!!

முந்தைய பதிவு (34)
(நிறைவு)

No comments:

Post a Comment