Friday, May 15, 2015

சற்குரு - தாத்தா - 3

வைகறையில் விழிப்பதெல்லாம் படு ஜோராய் நடக்கும் தாத்தாவோடு இருக்கும் வரை. ஈரோடு சென்றதும் செல்லம் கொஞ்ச ஆரம்பித்தால் அம்மா உபயோகப் படுத்தும் அஸ்திரம் தாத்தாவிடம் சொல்லவா என்பதுதான்.

சிறுமலரில் Petro  missஇடம் சேர்த்து விட்டு, "மிஸ்ஸூ எங்க வீடு சர்ச் கிட்ட இருக்கு மிஸ்ஸூ.. என்னை வீட்டுல கொண்டுபோய் விட்டுருங்க" என அழுது அமர்க்களமாய் பள்ளி செல்ல மாட்டேன் என ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த வயது அது. ஈரோடு சென்றும் தொடர்ந்தது பள்ளி நுழையாப் போராட்டம். அப்போது ஒருநாள் அம்மா குளித்துக்கொண்டிருக்க தபால்காரர் கொடுத்த கடிதத்தைப் பார்த்துவிட்டு "அம்மா தாத்தாவிடமிருந்து  letter" என்றதும், "எப்படித் தெரியும் உனக்கு தாத்தா கடிதம் என்று?" (பள்ளிக்கே போகவில்லையே) என அம்மா வினவ, inland letter இன் from addressஇல் ASA எனப் போட்டிருக்கே என பதில் சொன்னது நினைவிருக்கிறது.  ABCD விட  ASA நன்கு தெரியுமே.

விடுமுறைக்கு ஈரோட்டில் இருந்து மதுரைக்கு சிலசமயம், 'ஒரு பகல்நேர பாஸஞ்சர் வண்டியில்' வருவதுண்டு. ஆளில்லாமல் காலியாய் காவிரிக்கரையோரம் வரும், திருச்சி வந்து பின் பஸ்ஸில் வந்த நினைவு. இரவில் நாகமலைத் தெரு நாய்களுக்கு பயந்து கொண்டே அப்பாவோடு ஒட்டிக் கொண்டு செல்வநிலையம் நெருங்கும் போதே பட்டாம்பூச்சி பறக்கும் மனதில்.."பஸ்ஸில் வந்தீர்களா?" என தாத்தா என்னிடம் வினவ, நான் பெருமையாய் "trainஇல் வந்தோம், படுத்துக்கொண்டே" என சொல்ல, "உனக்கென்னம்மா? உங்க அப்பா உன்னை கூபேயில் அழைத்து வருவான்" என தாத்தா சொன்னார்கள். நாங்கள் வந்த பாஸஞ்சரைக் முதல் வகுப்புக் கூபே என எண்ணிய நாட்கள்.

விடுமுறைக்கு வந்துவிட்டால் தாத்தா,  வீட்டு இளநீர் தயாராய் இறக்கி வைத்திருப்பார்கள். ஒரு வாகான கட்டையை வைத்துக் கொண்டு அரிவாளால் தாத்தா இளநீர் சீவும் இலாவகம். அதற்கென உரிய சொம்பில் இளநீர் வடித்து இளவழுக்கை சேர்த்துக் கொடுப்பார்கள். தேவன் கொடுத்த தேவாமிர்தம்..

சிலநாட்கள் ஒரு சிறு பேனாகத்தியைக் கைக்கொண்டு தென்னை ஓலையிலிருந்து நறுவிசாக ஈர்க்குகளைப் பிரித்து எடுத்து துடைப்பம் ஒரு கலைப் பொருளாய் உருவாகும். கிழித்த ஓலைகளை சிறு சிறு கட்டுகளாக '8' வடிவில் கட்டி உலர்த்துவார்கள் வெந்நீருக்கென. எரியப்போகும், எறியப்போகும் பொருட்களில் கூட ஒரு ஒழுங்கு.

உலர்த்தும் வேட்டி, துண்டுகளின் இரு நுனியும் கச்சிதமாய் சமஅளவாய், உதறி உலர்த்தும் நேர்த்தியிலேயே சுருக்கங்கள் ஏதுமின்றி..இன்று washing machine விட்டு சுருங்கிய சும்மாடாய்த் துணிகளைப் பார்க்கும் போது ஆதங்கப் படுவதுண்டு(படுவதோடு சரி). சிறு சிறு விஷயங்களே மனிதரின் பெரிய குணங்களை எடுத்துக் காட்டும் என்பதற்கிணங்க, மனதின் ஒழுங்கும், கட்டுப்பாடும், நேர்மையும் -  கலைந்த கால்மிதியைப் பிரித்து நேராக்கிவிட்டே தாண்டுவது, படித்து முடித்த பின்னர் iron செய்தது போன்ற மடிப்புடன் இருக்கும் The Hindu பேப்பர்,  காலையில் வரும் திருவோடுகளுக்காக அலமாரியில் எப்போதும் தயாராய் வைத்திருக்கும் சில்லறைக் காசுகள், அலமாரிகளில் விரிக்கும் newspaperஇன் கச்சிதமான விரிப்பு (பின்னர் அருணாச்சலம் மாமாவிடம் இதைப் பார்த்திருக்கிறேன்) எனப்பல சிறுதுளிகளில் அந்த சூரிய ஒளி மின்னும்.

முந்தைய பதிவு (2) 

அடுத்த பதிவு (4)

No comments:

Post a Comment