Tuesday, February 20, 2018

துலாமுனை நடுக்கங்கள்

எனது தந்தை 40+ வருடங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இன்று நாட்டை உலுக்கியிருக்கும் ஒரு மிகப்பெரிய மோசடியின் தருவாயில் இந்தப் பதிவை தலை நிமிர்ந்தே எழுதுகிறேன்.




அப்பாவின் வேலை பற்றிய சிறு குறிப்பு. வேலையில் இருந்த வரை இரவு பகல் பாராது உழைத்தவர். கணக்கில் புலி, வேலையில் சிம்மம். மதுரை மற்றும் பல கிளைகளில் தூண் எனப் பெயர் பெற்றவர். இது தேய்வழக்கல்ல, அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து காலை ஏழு மணி வரை கணக்கு வழக்குகள் பார்ப்பதும், விடுமுறை நாளன்று வேறு இடையூறுகள் இருக்காதென்று அலுவலகம் சென்று வேலை பார்ப்பதும் பலநாள் வாடிக்கை. இந்த வழிமுறைகள் இன்று காலாவதியாகி பணிபுரியும் நிறுவனத்துக்கு விசுவாசமாய் இருப்பது என்பதே கேலிக்குறியதாகிவிட்டது வேறு விஷயம். இத்தைகைய மாபெரும் இயந்திரங்களை நகர்த்தும் முகமறியா பல்சக்கரங்களில் ஒருவராக இருந்து மறைந்தவர்.

இன்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் செய்திகளையும் கேலிச் சித்திரங்களையும் பார்க்க நேர்ந்திருந்தால் எவ்வளவு வலியும் வேதனையும் அடைந்திருப்பார் என்று முதலில் தோன்றியது.
முதற்பார்வைக்கு அவ்வண்ணமே தோன்றுகிறதென்றாலும் உண்மையில் அப்பாவின் நிலைப்பாடு இதில் என்னவாக இருந்திருக்கும்! கடந்த இரண்டு மூன்று தினங்களாக இந்த மோசடி, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும் பல சட்டக இடைவெளிகளையும் ஓட்டைகளையும் ஊடகங்களில் வாசித்துக் கொண்டிருந்த அதே பொழுதுகளில் ஆழுள்ளம் இதை யோசித்துக் கொண்டிருந்தது.

அப்பா குறிப்பிடும் சில சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

அப்பா வேலை பார்த்த வங்கிக் கிளை, ஒரு வணிக முதலீட்டாளருக்குக் கொடுத்திருந்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும் அவர் கடனைத் திருப்பி அடைக்காததால் வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது. அந்த வழக்கில் அப்பா வங்கியின் ஒரு சாட்சியாக செல்ல வேண்டியிருந்தது. குறிப்பிட்ட ஒரு தேதியில் வங்கி மேற்படி நினைவூட்டல் அறிவிப்புக் கடிதம் அனுப்பி விட்டதென சொல்லவேண்டும். ஆனால் உண்மையில் வங்கி அந்தத் தேதியில் அறிவிப்பை அனுப்பவில்லை, தாமதாகவே அனுப்பியிருந்தது. அதை அப்பா வங்கியின் வழக்கறிஞரிடம் எடுத்துச் சொன்ன போது, "அதை உள்ளபடி நீதிமன்றத்தில் சொன்னால் வழக்கு கடன் பெற்றவருக்குச் சாதகமாகத் தீர்ப்பாகி விடும். எனவே நீங்கள் உங்களை இந்தத் தேதியில் அனுப்பப்பட்டதா எனக் கேட்கும் போது, ஆம் என்று மட்டும் சொல்லுங்கள்" என்று பயிற்றுவித்தார்கள். எனில் அப்பா நீதிமன்றத்தில் விசாரணையின் போது உண்மையில் தாமதமாகவே கடிதம் அனுப்பப்பட்டது என்று கூறி, அதனால் வங்கிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது

இரண்டாவது சம்பவம்: கல்கத்தாவுக்கு பிராந்திய மேலாளராக பதவி உயர்வு கிடைத்துப் போன போது, மேல்தட்டில் நிகழும் பலவிதமான கீழ்த்தரமான ஊழல் நடவடிக்கைகளுக்குப் பணிந்து போகாமல் இருக்கவே, அசாம் மாநிலத்தின் குக்கிராமம் வரை பந்தாடப்பட்டதும் நடந்தது. வேலையே போனாலும் பரவாயில்லை என்று சில ஒழுங்கீனங்களுக்கு உடன்பட மறுக்கும் போது தண்ணியில்லாக் காடுகளுக்கும் யாரும் போக விரும்பாத ஒற்றை ஊழியர் மட்டுமே கையாளும் குக்கிராமக் கிளைகளுக்கும் பந்தாடப்படுவதும் இறுதி வரை நிகழ்ந்து கொண்டேதான் இருந்தது. 12ஆம் வகுப்புக்குள் பதினோரு பள்ளிகள் நான் பார்த்ததும் அதன் விளைவே 😊

ஓய்வு பெற்ற பின்னரும் கூட, அப்பா மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படதற்கான மருத்துவச் செலவுகளை காப்பீட்டுத் திட்டத்தில் திரும்பிப் பெற்றுக் கொள்ள ஓய்வு பெற்றோருக்கான திட்டம் வழியாக முயன்ற போது, மிகவும் மோசமாக அலைக்கழித்தது வங்கி. மருத்துவமனை ரசீதுகள் அனைத்தையும் அனுப்பிய பின்னரும், பலமுறை டில்லிக்குத் தொலைபேசியில் அழைத்தபின்னர், அவை எதுவும் வந்து சேரவில்லை என்று அலைக்கழித்தனர். ஓய்வு பெற்ற முதியவர்களை முடிந்தவரை அலைக்கழிப்பார்கள், அவர்கள் தாமாக காப்பீடு பெற முயற்சி செய்வதையும், தொடர்ந்து அதற்காக அலைவதையும் விட்டுவிடுவார்கள் என்று அவ்விதம் செய்கிறார்கள் என்று எண்ணிய அப்பா, சட்டபூர்வ அறிவிப்பொன்றை அனுப்பினார்கள். அடுத்த மாதமே பணம் வந்து சேர்ந்தது.

இதனால் எல்லாம், அப்பா தான் பார்த்தவேலை மீதும் வங்கி மீதும் இருந்த மதிப்பையும் நம்பிக்கையையும் இறுதிவரை இழக்கவில்லை. ஓய்வூதியத்துக்கு வாழ்வுச் சான்றிதழ் புதுப்பிபதற்கு வங்கி ஊழியரை வீட்டுக்கு வர முடியுமா எனக் கேட்கலாம் என்று அப்பாவின் இறுதி தினங்களில் ஒரு முறை கூறியதற்கு, வங்கி மேலாளருக்கு இருக்கக்கூடிய பணிச்சுமையை வலியுறுத்தி, எழுந்து அமரவே சிரமப்பட்ட தனது இறுதிக்கட்டத்திலும் நேரில் வங்கிக்கு செல்ல வேண்டும் என்று முனைப்பாக இருந்தார்கள்.

இவ்வளவு விரிவாக இதை எழுதக் காரணம், அப்பா இன்றிருந்தால், இத்தகைய ஊழல் பெருச்சாளிகள் என்றுமே இருந்தனர் என்பதையும் அதற்கு நடுவில்தான் நாம் நமது மனசாட்சிக்கு உட்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதே அப்பாவின் நிலைப்பாடாக இருந்திருக்கும். என்னை இந்த உயர் அழுத்த வங்கி வேலை வேண்டாம் என்று அப்பா பலமுறை அறிவுறித்தியது இதனால்தான். ஊழ் வலியது - மென்பொருள் பயணமும் ஒருவகையில் அங்குதான் எனைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது 😊

ஆனால் எங்குதான் இவர்கள் இல்லை! தனியாரோ, அரசுப்பணியோ, பெருநிறுவனங்களோ எல்லா இடங்களிலும் நீக்கமற இவர்கள் இருக்கிறார்கள். துலாமுள்ளை நிகர் செய்ய, அலுக்காமல் தங்கள் உண்மையையும் உழைப்பையும் தந்து நிகர் செய்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டு தரப்பும் என்றுமே உண்டு.

வாங்கும் ஊதியத்துக்கு உண்மையாக உழைப்பதும், எதிர்மறை மனிதர்களை, நமது இயல்பு, அல்லது சூழல் மற்றும் சார்ந்திருப்போர் முதலிய புறக்காரணிகளைப் பொறுத்து தவிர்த்தோ, தகர்த்தோ அவரவர் தன்னறத்தையும் நெஞ்சுறுதியையும் பொறுத்து எதிர்கொண்டே நாம் எந்த ஒரு வேலையையும் பார்க்க வேண்டியிருக்கிறது. பணம் அதிகமாகப் புழங்கும் துறைகளில் அழுத்தமும் அசிங்கமும் அதிகம். மிக சமீபத்தில் தங்கை ரம்யா தன்னுடைய அலுவலகத்தில் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு பெரிய மேல்மட்ட ஊழலை வெளிக்கொணர்ந்து மேலிடம் வரை எடுத்துச் சென்று நேருக்கு நேர் மோதி வென்றது. அன்றைய தினம் தந்தையின் இருப்பு இன்றும் தொடர்வது என்ற எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

இதனால் எலலாம் நமக்குக் கிட்டுவது மன உளைச்சலும் பல சமயங்களில் நமது வேலையே இழப்பதும்தான். பிழைக்கத்தெரியாதவர் என்ற பெயர் உட்பட எல்லாம் கிடைக்கும்.

பிழைப்பு என்பது வெறும் வயிற்றால் நிரப்பப்படுவதாக அனைவருக்கும் இருப்பதில்லை, அதை மீறிய ஒன்று, வெறும் வசதிகளாலும் அதிகாரத்தாலும் நிரப்ப முடியாத ஒன்று, நம்மில் சிலருக்கேனும் முக்கியமாக இருப்பதால்தான் பிழைக்கத் தெரியாவிடிலும் பிழை இழைக்கத் தெரியாதவர்களாக இருப்பதில் முனைப்புக் கொள்கிறோம்.இது என்றென்றும் தொடரவிருக்கும் ஒரு சரடு. எனவே தந்தையர் வழி நடப்பதில் பெருமையே.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே -- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே -- அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே -- இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ -- இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ? "

#என்தந்தைஎன்ஆதர்சம்

இந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பான பல இணையப் பகடிகள் சிரிப்பை வரவழைத்தாலும், நானும் சில சமயங்களில் அது போன்றவற்றை நண்பர்களுடன் பகிர்ந்தாலும், ஆழத்தில் உணர்வது இதுதான்:
நமது முதல் மந்திரிகளையும், எம் எல் ஏ- க்களையும், பிரதமரையும் உட்பட அனைவரையும் அவர்கள் நமக்கு எதிர்நிலைக் கொள்கைகள் உடையவர்களாயிருப்பினும் ஏதோ ஒரு வகையில் நமது பிரதிநிதிகள்தான் என்ற பிரக்ஞையின்றி பகடியெனும் பகிர்வுகள் மூலம் வரையறையின்றி சமூக ஊடகங்களில் பகிரும் வழக்கம் இன்று பலருக்கும் இருக்கிறது. அது, பிடிக்காத நடிகர் அல்லது தலைவர் சுவரொட்டியில் சாணியடிப்பது போலத்தான், நம்முள் ஒரு கீழ்மை நிறைவு கொள்வதன்றி பயன் இல்லை. எனது வீடு குப்பையாக இருக்கிறது என நாமே உரக்க ஊருக்குச் சொல்வதுதான். நம்மால் முடிந்த இடங்களைத் தூய்மை செய்வோம். வீட்டு எல்லையை விஸ்தரித்து குழாயடி வரை சுத்தம் செய்த தாத்தாவும் இதைத்தான் வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.

அதே போலத்தான் இந்த ஊழல் ஒரு அலை, கூடிய சீக்கிரம் இந்த ஊழலை மறந்து அடுத்த ஊழல் நோக்கி நகர்ந்து விடுவோம். எனில் பல்சக்கரங்களை நகர்த்துபவர்களின் சத்தியத்தால் இந்த தேசம் முன்னகர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இந்தப் பதிவை எழுதத் தூண்டிய தம்பி ராஜேஷ்க்கு நன்றி

1 comment:

  1. மிக நல்ல பதிவு ....நன்றி ராஜேஷ்க்கும்

    ReplyDelete