Monday, January 4, 2021

மண்வீணைக் கம்பி



ஒவ்வொருவருக்குள்ளும் பசுமைமாறா இடம் ஒன்று இருக்கும். வளர்ந்த வீட்டின் திண்ணை, கிணற்றடி, மொட்டைமாடி, முதுகு பட்டுக் காய்ப்பேறிய சில சுவற்றுத் தடங்கள், குளக்கரை, குட்டிச்சுவர்கள், அன்றாடம் நடந்த சில சாலைகள், காத்திருந்த சில பேருந்து நிறுத்தங்கள் என ஏதோ சில இடங்கள், சில வழிகள் என்றைக்குமாய் மனதில் மாறாமல் இருக்கும். அந்த வழியின், இடத்தின் ஒவ்வொரு திருப்பமும் மேடு பள்ளமும், ஒவ்வொரு மரமும் செடிகொடியும், நாம் அறிந்தவையாகத் தோன்றும். அவ்வழி என்பது வழியாக மட்டுமல்லாது உடன் வந்த ஒரு உறவின், நட்பின் இருப்பாக உணர்வதனாலேயே அது ஞாபக அடுக்கில் மணம் மாறாமல் இருக்கும். ஆனால் அது சென்ற காலத்தின் ஒரு துளியாக அங்கேயே உறைந்து விட்ட ஒரு கணம். அதன் பின்னர் காலம் நிகழ்த்தும் பற்பல மாற்றங்கள் அந்தத் துளியை தொடுவதில்லை. 


நிகழ் தருணமெனும் சூரியனை மறைக்கும் ஒரு கடந்தகால மேகம் போதும், அது பொழியும் சிறு மழை போதும், மனதுள் உறங்கும் அந்த நினைவின் விதை முளைவிட்டு இரு பசுஞ்சிறகு கொள்ள.

அந்த இடமும் வழியும் அதனோடு இயைந்த உறவும் முற்றிலும் அடையாளமின்றி மாறிய பின்னரும் உள்ளுறையும் ஒரு நினைவில் அவை பசுமையாய் நீடுவாழும். கணந்தோறும் மாறிக் கொண்டே இருப்பவற்றை மாற்றமின்மையில் நிறுத்திவைக்கும் மாயையின் கருவிக்கு மனமென்று பெயர்.




அப்படி ஒரு கால்பட்டுத் தேய்ந்த நடைவழியைப் பற்றிய ஒரு பாடல். அவ்வழி நடந்த இருவரைப் பற்றிய வெளிப்படையான குறிப்புகள் ஏதுமின்றியே அதைக் குறிப்பால் உணர்த்துவதன் எளிமையாலேயே அழகாகும் பாடல். வழியைப் பாடி, காலடியைப் பாடி, அந்த உறவைப் பாடும் பாடலாகிறது.

சென்ற வருடம் கேட்ட பாடல்களிலேயே மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று. இப்பாடலின் இசையும் ராகமும் (ஸ்ரோதஸ்வினி) அந்த நினைவோட்டத்துக்கு அழகு சேர்க்கிறது. கேரளத்து செருதோனி ஆற்றங்கரைப் பகுதிகள் நீர்மை மின்ன பதிவாகியிருக்கிறது.




படம்: பூழிக்கடகன்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ஆன் ஆமி
கவிஞர்: ரஃபீக் அகமத்
இசை: ரஞ்சித் மேலெபட்

மலையாளப் பாடல் வரிகள்:

பொன்வெயிலின் கசவாய்
பொடிமழையுடெ நொரியாய்
மண்வீணக்கம்பி போலே ஒரு வழி
அதில் புழபோலே ஒழுகுண்ணு களிச்சிரி

ஆ வழியில் சரள்வழியில்
ஆளொழியும் சந்த்யகளில்
ஆரோருமோரார்த்த நேரங்களில்
ஆ வழியில் சரள்வழியில்
ஆளொழியும் சந்த்யகளில்
ஈரந்நிலாவின்டே நாளங்களில்

ஈ புழையுடெ குளிரலையில்
பூவிதழுகள் போலே
நாமொழுகியதோர்க்குன்னு
பூமருதும் ஞானும்

(பொன்வெயிலின்)

ஈ வழியில் நடவழியில்
காலடிதன் பாடுகளில்
பூமூடி இலமூடி
மாய்ஞ்செங்கிலும்
ஈ வழியில் நடவழியில்
காலடிதன் பாடுகளில்
ராவோடிப் பகலோடி
மாய்ஞ்செங்கிலும்
ஆத்ய மழத்துள்ளி வீன்னு
புழையிளகும் நேரம்
ஓர்மைகளில் நிறையுன்னு
மண்மனமும் நீயும்
(பொன்வெயிலின்)

தமிழில் எனது சிறுமுயற்சி:

பொன்வெயிலின் பட்டிழையாய்
சிறுதூறலின் சிற்றிழையாய்
மண்வீணைக்கம்பி போல ஒரு வழி
அதில் நதி போல ஒழுகிவரும் புன்னகை

அவ்வழியில், சரள்வழியில்
ஆளில்லா அந்திகளில்
யாரோடுமில்லாத நேரங்களில்..

அவ்வழியில், சரள்வழியில்
ஆளில்லா அந்திகளில்
குளிர்கொண்ட நிலவொளியின் நாளங்களில்..

இந்நதியின் குளிரலைகளில்
பூவிதழ்கள் போலே
நாம் ஓடிய நினைவுகளில்
பூ மருதமும் நானும்..

(பொன்வெயிலின்....)

இவ்வழியில் நடைவழியில்
காலடியின் சுவடுகளில்
பூமூடி இலைமூடி
மறைந்திருந்தாலும்..

இவ்வழியில் நடைவழியில்
காலடியின் சுவடுகளில்
இரவுகளும் பொழுதுகளும்
கடந்திருந்தாலும்..

முதல்மழையின் துளிவிழுந்து
நதி சிலிர்க்கும் நேரம்..
நினைவுகளில் நிறைகிறது மண்மனமும் நீயும்..

(பொன்வெயிலின்....)

பொன் வெயிலிலும் பொடி மழையிலும் சரிகையென மின்னும் சிறுவழி. அவ்விருவர் கால்களன்றி அதிகம் யாரும் நடந்திராத வழி. சரளை பாவிய அவ்வழியில் உதிர்ந்து மூடிய இலைகளும், மலர்களும், காலைகளும், மாலைகளும், குளிர்நிலவொளியும், ஏகாந்தமும் மட்டுமே அறிந்த பாதை.


மனதில் ஒட்டிக் கொண்டது மண்வீணைக் கம்பி போல ஒரு வழி எனும் வரி. மண் எனும் வீணையில் காலடிகள் மீட்ட, இசை எழுப்பிய கம்பி போன்ற சிறுவழி எனலாம். இசைக்க சாத்தியமில்லாத ஒரு மண்வீணை, அதில் ஒரு மீட்ட முடியாத கம்பி, எக்கணமும் இல்லாதாகிவிடக்கூடிய ஒன்றின் நுண்மையை உணர்த்தும் படிமமாகவும் பொருள்கொள்கிறது. அவரவர் நடைவழிக்குத் தக்கபடி..

https://youtu.be/YtBke3ys2_U








2 comments:

  1. Goose bumps Subha. அழகிற்கு அழகு சேர்கிறது உன் கட்டுரை.

    ReplyDelete
  2. மண்வீணைக் கம்பி போல ஒரு வழி எனும் வரிக்கு இணையானது...அதுதான் மனஓடை

    ReplyDelete