Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, April 17, 2021

இரவு

இருளை அருந்தியபடி

திசையழித்து வழிந்தோடும் பால்

மிதக்கும் சில வெள்ளெறும்புகள்

தலைகீழ் வான்வெளியில்

ஓயாமல் தலைமோதும் அலைகள்

கடல் நோக்கி சென்று

மீளாத சுவடுகளை 

உற்று நோக்குகிறது இரவு



Friday, April 16, 2021

காலாதீதம்

ஒற்றைக் காலின் தடங்களை
இழுத்துக் கொண்டு 
கடல் மீளும் நுரை

அடுத்த அலைவரக்
காத்திருக்கும்
எஞ்சும் மறுகால் பதிவுகள் 

பின்வாங்கிச் செல்லும் 
வெண்விளிம்பின் குரூரம்
இயலா நடையின் அறுதடம்  

அலைகளுக்கிடையே
காலாதீதங்களில் நிற்கும்
ஒற்றைப் பாதங்களின் தவம்




Tuesday, March 21, 2017

கருங்குருவி

காட்டுப் பூக்கள் படர்ந்த முள்மரத்தில்
வந்தமரும் கருங்குருவி
யாரும் பாடாத கருப்பொருள்கள்
சேகரித்து சிறுகூடு நெய்கிறது
ஓடுடைத்து வெளிவரலாம்
அடைகாத்ததனைத்தும்

Sunday, November 20, 2016

தவம்

தன்னிடத்தில் தனித்தே
மலர்ந்திருக்கும் தாமரைகள்
வீழ்ந்தும் எழுந்துவரும் சூரியன்
வரம்தரவே பயணம் அனைத்தும்
வரம்பெறக் காத்திருத்தலே போதும்


Thursday, September 22, 2016

சாபவிமோசனம்

கடுமொழி மோனத்துக்
கனன்ற சொல்லொன்று
புடமிட்டுத் தகத்தக்க
புள்ளொன்றால் கலைந்ததவம்
புலன்மறுத்த சித்தனவன்
கல்லென்று சபித்திட்டான்
கடுஞ்சொல்லால்
தவம் இழந்தான்.
காடுறையும் காலம்
கல்லாய் உறைந்திட
கூர்முனைகள் மழுங்கிட
உருட்டியது காலநதி.
உருவமிலி உருவேறி
பூசனைக்கு வந்தமர்ந்த
யுகங்கடந்த கல்தன்னை
பூசித்த முனிவனின்
யாசித்த கரங்களில்
கல்உறையும் புள்தருமோ
சாபவிமோசனம்

Monday, July 18, 2016

அலைபிழைத்த கிளிஞ்சல்கள்



இந்த நொடி -
இவ்விடத்தில் இருக்கிறேன் நான்.
இந்த நொடி -
அந்த நொடி இறந்தகாலம்
இந்த நொடி -
அவ்விடம் புவிநகர்ந்து போக
இந்த நொடி -
அந்த நான் இருக்கிறேனா!!

கடந்துபோன
காலம் அது இறந்த காலம்
தொடர்ந்து வரும்
நான் இங்கே என்னஆனேன்
இறந்திறந்து பிறக்கிறது
கணங்கள் தோறும்
முதலுமிலி முற்றுமிலி
முடிவிலி என்பார்

மாலை முதல்
இரவு வரை பறந்ததாலே
நித்தியக் கனவுறுமோ
ஈசல் கூட்டம்
நேற்று முதல்
இன்றுவரை பார்த்ததாலே
நாளைவரை நம்புகிறோம்
நமதே என்று

Wednesday, February 10, 2016

இலையுதிர மனமதிர..

ஏதோ நினைவுகளில்
மரத்தின் பெருமூச்சு
சருகாய் உதிர்கிறது
கண்ணீரோடு எழுந்து சென்ற
யாரோ ஒருவனுக்கு
ஆறுதல் சொல்ல
முகவரி சுமந்த முதிர்இலைகள்
மெல்லப் புரள்கின்றன
அவன் காலடித் தடம்தேடி..
துரத்திப் பிடிப்பவை என்றுமே
தொலைந்த இடம்தாண்டி
வெகுதொலைவு சென்றிருக்கும்
அடுத்த கவலைக்கு அவசரமாய் அவன்நடக்க
மிதித்த காலடியில்
நொறுங்குகிறது சருகு
இன்னொரு பெருமூச்சை
உதிர்க்கிறது மரம்