Tuesday, May 15, 2018

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

கல்கியில் தொடங்கி, சுஜாதாவில் கால்வைத்து பலதரப்பட்ட எழுத்துகளை மேய்ந்து கொண்டிருந்த பதின்பருவத்து வாசிப்புகளில் பாலகுமாரன் எழுத்துக்களில் கண்டது புது மின்னல். அவரது படைப்புகளில் நான் வாசித்த முதல் கதை அகல்யா. பள்ளிக்கு பாரதி வேடமிட்டு வரும் பல குழந்தைகளைக் கண்டு உணர்ச்சி மேலிடும் சிவசுவையும், அம்மாவையும், அகல்யாவையும் வாசித்து இவர் எழுத்தைத் தொடர ஆரம்பித்த நாட்கள். வரிசையாக நூலகத்தில் இரும்பு குதிரைகள், மெர்குரிப் பூக்கள், பச்சை வயல் மனது, அப்பம் வடை தயிர்சாதம், என் கண்மணித் தாமரை, என்னுயிர்த் தோழி, உள்ளம் கவர் கள்வன், என் மனது தாமரைப்பூ, என்றென்றும் அன்புடன், திருப்பூந்துருத்தி, முதிர்கன்னி, பந்தயப்புறா, அப்பா, ஆனந்த வயல், முன்கதைச் சுருக்கம் என்று மூச்சிரைக்க வாசித்த பொழுதுகள். பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்கு உடையாரும் கடிகையும் காட்டுவது வேறொரு அருள்மொழியை.

அவரது கதையின் மனிதர்கள் குறிப்பாகப் பெண்கள் ரத்தமும் சதையுமாக நாம் வாழ்வில் காணக்கூடியவர்களாகவும், எனில் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் தீர்மானங்களும், நாம் அந்தரங்கக் கனவுகளில் மட்டுமே காணக் கூடியதாகவும் இருக்கும்.அவரது ஆரம்பகாலக் கதைகளில் ஆண்-பெண் உறவுகளின் தத்தளிப்புகளே பெரும்பான்மையானவை. அவற்றின் கொந்தளிப்பில் திகைத்து நிற்பவர்களுக்கு அவரது எழுத்து பெரும் வழித்துணை அல்லது தன் அகம் காட்டும் கண்ணாடி. இந்த மைய முடிச்சை மிக நன்கு கையாளத் தெரிந்தவர் பாலகுமாரன்.

பூமியில் வேரூன்றி விண்ணில் கிளைபரப்பும் விருட்சங்களாக அவர் கதைகள் இருந்தன. வணிக எழுத்து இலக்கிய எழுத்து எனும் எல்லைகளைத் தாண்டி, அவரது எழுத்தெனும் உச்சாணிக் கிளையிலமர்ந்து வானைக் காணும் கனவைக் கிளர்த்தியவை அவரது எழுத்துகள்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இளையராஜாவின் பல பாடல்கள், குறிப்பிட்ட தருணத்தையோ, மனிதர்களையோ நினைவுபடுத்தும். அதுபோலத்தான் பாலாவின் எழுத்துக்களையும் நினைக்கத் தோன்றுகிறது. அவரது பெரும்பாலான கதைகளையும் நாவல்களையும் வாசித்து அவரது நடையும் கதைப்போக்கும் பழகிப் போய் பிற எழுத்துகளுக்குக் கடந்து போன பிறகும் அவரது பல வரிகள் மனதில் நிரந்தரமாக இருக்கின்றன, பல இனிய நட்புகளையும் சிநேகங்களையும் நினைவுபடுத்திக் கொண்டு. நாம் அவரது கதைகளை வாசிக்கும் போது ஒப்பிட்டு நாம் மனதில் நினைத்த சில மனிதர்களோடும் நினைவுகளோடும் சேர்ந்தே நினைவில் நிற்கிறார் பாலகுமாரன்.

பந்தயப்புறா என்று நினைக்கிறேன், "மாறுதல் நேரத்து மயக்கம் இது. உனக்கு மயக்கமில்லை. உன் எண்ணம் தொலைதூரம். உன் வழி நெடும் பயணம், பற, பற, மேலே... மேலே.." அக்கதையை வாசித்த இறுக்கமான பொழுதிலிருந்து இன்று வரை இந்த வார்த்தைகள் என்னுடன் இருக்கின்றன. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..

இன்று அவரது மறைவுச் செய்தி கேட்டு அவரது எழுத்துகளை மனதுள் மீட்டிக் கொண்டிருக்கும் பல்லாயிரம் வாசகர்களுடன் சேர்ந்து வணக்கங்களுடனும் பிரார்த்தனைகளுடனும் - சுபா

No comments:

Post a Comment