Wednesday, May 23, 2018

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

செல்வநிலையத்து வேம்புக்கும் அது பொருந்தும்.மதுரையில் செல்வநிலையம் வீட்டு வாசலில் நின்ற 42 வயதான இரு வேப்பமரங்களில் ஒன்று இன்று விழுந்துவிட்டது. வீடுகட்டப்பட்ட போது தாத்தாவால் வீட்டின் இருபுறமும் நட்டுவைக்கப்பட்டவை. வீட்டின் அடையாளமே வாசலில் இருபுறமும் நிற்கும் வேம்புதான்.

அவை மரமல்ல. நினைவுகள், ஆழ்மனப் படிமங்கள், உணர்வுகள், இன்றளவும் எனது கனவுகளின் நிலத்தின் பிரிக்க முடியாத துணை. தாத்தாவோடு சேர்ந்தேதான் இம்மரம் நினைவில் இருக்கிறது. இரு புறமும் இரண்டு நெட்டிலிங்க மரங்களும் பல வருடங்கள் இருந்தன. அது வெட்டப்பட்ட போதும் ஒரு வெறுமை எழுந்தது. எனில் இது வேறு உணர்வு.

பொதுவாக சில மாதங்களுக்கு ஒரு முறை, விரிந்து கரம் விரித்த மரத்தின் கிளைகளை மின்சாரவாரியம் வெட்டிவிட்டுச் சென்றதும் முடி வெட்டிய குழந்தை போல சில நாட்கள் இருக்கும். அதையே அதிகமாக வெட்டிவிட்டால் ஏதோ ஒரு வெறுமை மனதில் தோன்றும். அதில் வாழும் அணில், வெட்டப்பட்ட கிளையில் பத்து முறை ஏறி இறங்கி நம்மிடம் ஏமாற்றத்தைத் தெரிவிக்கும்.

வீடற்ற எதிர்மனை வாசலில் குழாயடி வந்த பிறகு, வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்கள் பலருக்கும் வேப்பமரத்தடி இறையைப் போல இளைப்பாறுதல் தந்தது. நெடு வழி மேய்ச்சல் செல்லும் கறவைப் பசுக்கள், பழம் விற்பவர்கள், துணி தேய்க்கும் வண்ணான், தெருவில் விளையாடும் சிறுவர்கள், அனைவருக்கும் அது ஒரு ஆசுவாசம்.

பொம்மைகளை இறைத்து விளையாடும் குழந்தை உறங்கியதும் தாய் வீட்டை ஒழுங்குபடுத்த முனைய, விழித்தெழுந்ததும் வீடு முழுதும் களம் பரப்பும் சிறு குழந்தை போலத்தான் இம்மரங்கள்.
முதற்கதிர் எழுவதன் முன்னம் தாத்தா எதிர் மனை வாசல் வரை வேப்பமரம் உதிர்த்தவற்றை பெருக்கி அள்ள, அரைமணி நேரத்தில் வாசல் நிறைத்து இலையாய், பூவாய், பழமாய் கொட்டிச் சிரிக்கும்.

தவழ்ந்ததும், நடந்ததும், படித்ததும், பேசியதும், கனவுகள் கண்டதும், கண்ணீர் விட்டதும், வீட்டுக்கு வந்தவரை தெருமுனை திரும்பும் வரை வழியனுப்ப நின்றதும், வருபவரை எதிர்பார்த்து கால்கடுக்க காத்திருந்ததும், தொலைதூர அன்பை சுமந்து வரும் கடிதங்கள் வந்து சேர்வதும் அனைத்தும் அதன் அடியில்தான். கோலத்தின் முதற் கீற்றை இழுத்துவிட்டு அண்ணாந்து பார்க்கும் போது தெரியும் வேம்பின் கிளைவழி இறங்கும் ஒளிக்கீற்று வழியாகவோ, அது உதிர்க்கும் முதல் இலையை கை அகற்றும்போதோ, நான் வைத்த புள்ளிக்கு நிகர் புள்ளியென ஒற்றை வேப்பம் பூவை அது உதிர்க்கும்போதோ கோலம் கைவழி உயிர் பெறும்.

நட்பென வந்த உறவுகளோடு விடை பெற மனமில்லாது, கிளம்பியபின்னர் பல மணித்துளிகள் அதனடியில் நின்று பேசிவிட்டு, உள்ளிருந்து பெரியவர்களின் குரல் கேட்டதும், மனமின்றி வாசற்கதவை மூடும் போது தாழ் விழும் இடத்தில் நான்கு வேப்பம்பூக்கள் அமர்ந்திருக்கும், அதன் மேல் தாழிட மனமிலாது அதை உதிர்த்துவிட்டு உள்ளே செல்ல அந்த நினைவுகளோடு வேம்புமனமும் கலந்தே உள் நிறையும்.

விசும்பின் கீழுள்ள அனைத்தையும் தாத்தாவோடு திண்ணையில் அமர்ந்து பேசியதனைத்தையும் கேட்டது அந்த மரங்கள்தான். வானொலியை சன்னமாக இசைக்கவிட்டு அப்பாவோடு அமர்ந்திருந்ததும் அங்குதான். அனைத்து சகோதர சகோதரியரும் அங்கமர்ந்து பேச உள் திண்ணையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, கிளிகள் கிள்ளைமொழி பேசிக் கூச்சலிடுவது போல இருக்கிறது என அப்பா ரசிப்பதையும் அந்த வேம்புதிர் வாசல் கண்டிருக்கிறது. யாருமற்ற தனிமையின் பெருமூச்சுக்களும் அங்கு அந்தக் காற்றில் கலந்தே இருந்தது.

உணர்ச்சிவசப்பட்ட எழுத்து போலத் தோன்றலாம், அங்கு வாழும் அணில்களுக்கும் குருவிகளுக்கும் இது நிச்சயம் புரியும்.

மிகச் சாதாரண ஒரு மழைக்காற்றில் தூரோடு இன்று சாய்ந்திருக்கிறது. பலத்த காற்று இப்போதுதான் வீசத் தொடங்கியிருக்கிறது மனதுள், நினைவுகளின் சுழற்காற்று.

No comments:

Post a Comment