Monday, May 25, 2026

ஆகுல நீர பிற

அருமணி - அது நிகழ்ந்து(சர்வாங்காசனம்) ஏறத்தாழ மூன்று வருடம் (ஆகஸ்ட் 2023) ஆகிறது.

இன்று (மே 2026) மீண்டும் ஒரு சிறு நகர்வு, சிரசாசனத்தில் நிற்பது, அதுவும் சுவற்றின் பிடிமானத்தோடுதான். அதிலும் ஓரிரு வினாடிகளே சாத்தியமாகி இருக்கிறது . இன்னும் பல படிகள் இதில்  இருக்கிறது. ஆனால் தலைகீழாக சிரசாசனத்தில் நிற்பது இப்பிறவியில் நிகழச் சாத்தியமா என மனம் வியந்ததே அதிகம். குருவருளால் இன்று கைகூடியது.






புறவயமான கண்கூடான மாற்றங்களையே நாம் அடையாளமாக, மைல்கற்களாக கொள்கிறோம். ஆனால், பயணம் என்பது அன்றாடம் சின்னஞ்சிறு அடிகளாக நடந்து கொண்டே இருப்பதில்தான் நிகழ்கிறது.

ஒவ்வொரு முறையும் மலையேற்றத்தில் நமை உடைக்கும் ஒரு கட்டம் வரும். இவ்வளவு தான், இதற்கு மேல் ஒரு அடியும் சாத்தியமில்லை என மனம் அரற்றும்.  மூச்சை ஏற்க முடியாமல் நுரையீரலும், வலியைத் தாளாமல் கால்களும் இற்றுப் போனது போன்ற ஒரு நிலை. அதிலிருந்து நமை விடுவித்து முன்னகர்த்த மேலிருந்து ஒரு கரம் தேவைப்படும். அது எந்த வடிவிலும் வரலாம். அது நமை தொட்டு மீட்கும் வரை பிரயத்தனத்தை, பயணத்தைக் கைவிடாதிருப்பது மட்டுமே நாம் செய்யக் கூடியது. 

அதுபோல கடந்த சில காலமாக இந்த யோகப்பயணம்  மலையேற்றமாக மாறி வருகிறது.  சாண் ஏறாவிட்டாலும் முழம் சறுக்கும் தருணங்களே  அதிகம். ஏற்றமா இறக்கமா எனப் புரிபடாத பாதைகளின் வழி பயணம். 

யோகத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் கற்பதற்கு என்ன இருக்கிறது என சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார். மரபார்ந்த யோகத்தை முறைப்படி 12 வருடங்கள் கற்பதற்கு பாடத்திட்டம் இருக்கிறது. அதனினும் முக்கியமாக முதலில் கற்றவற்றை அன்றாட வாழ்க்கை முறையாக மாற்றுவதற்கே சில வருடங்கள் நீடித்த இடைவிடாத பயிற்சி தேவையாகிறது. அதன் பலன்களை அனுபவித்து உணர்ந்த பிறகே அடுத்த கட்டத்திற்கு வாயில் திறக்கிறது. புதிது புதிதாக எதையோ கற்றுக் கொண்டே இருப்பதே கல்வி எனும் பிரமை உடைவதற்கே  காலம் ஆகிறது.  'நிற்க அதற்குத் தக' என கல்வியை நம் முன்னோர் வகுத்திருந்தாலும் யோகத்தில் அதன் பொருள் 'இடையறாது நீடித்து நிற்க அதற்குத் தக' என்றாகிறது. உடல், பிராணன், மனம், சித்தம் என அடுக்குகள் நுண்மையாகிக் கொண்டே செல்வதால், எந்த ஒரு பயிற்சியும் ஒரு சில நாட்களில் முழுவதுமாய் கைவருவதில்லை. உதாரணமாக, முதல் கட்டப் பயிற்சியிலேயே அறிமுகமாகி, சில வாரங்களில் நன்றாக செய்வதாக நாம் எண்ணிக் கொள்ளக்கூடிய ஏகபாத பிரணாமாசனத்தை எடுத்துக் கொண்டால் ஐந்து வருடப் பயிற்சிக்குப் பிறகு அது தரும் பலன் அதற்கு முன்னர் வருவதில்லை. பயிற்சிகளும் அதன் விளைவுகளும் உடல் சார்ந்தது மட்டுமல்ல.

மேலும் ஒரு ஆசனத்தை மிகச் சரியாக செய்து விடுவதும் உடலை செம்மைப்படுத்துவதும் யோகத்தின் அறுதி நோக்கமல்ல. நம் மனதையும் நம் வாழ்க்கைப் பாதையை உருவாக்கும் குணங்களையும் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதும், அவற்றை எவ்விதம் மாற்றுவது, என்னவாக உருமாற்றுவது, எப்படிக் கடந்து செல்வது என யோகம் கற்பிக்கிறது.

பலருக்கும் எளிதாகவே வாய்த்து விடக்கூடிய இந்த சிரசாசனத்திற்காக இவ்வளவு எழுதவில்லை. நாம் கண்ணால் பார்த்துவிடக்கூடிய ஒரு கருவியாக இங்கு உடல் உள்ளிருப்பதை வெளிக்காட்டுகிறது. உள்ளே ஒன்றைத் தலைகீழாக்குவதும், கட்டுடைப்பதும் அறிவாலோ, உணர்வுகளாலோ,  வார்த்தைகளாலோ நிகழ்வது அல்ல. ஒவ்வொரு தளத்திலும் மாற்றம் நிகழ வேண்டி இருக்கிறது. உடலின் நிலை மாறுவதைக் காட்டிலும் மனப்பாங்குகள், மன அமைப்புகள் மாற்றமடைய பல மடங்கு முயற்சியும் சிரத்தையும் தேவைப்படுகிறது. இன்னும் ஆழ்மனமும் அதைத் தாண்டிய ஞானமும் என செல்திசை நீள்கிறது.

ஒவ்வொரு சிறு அறிதலும், அதனால் அடையும் மிகச் சிறிய மாற்றமும், அத்தனைக்கு அத்தனை அரியதாக இருக்கிறது. பிறவிப் பழக்கங்கள், நாட்பட்ட விருப்பு வெறுப்புகள், பழகிப்போன பயங்கள், அடையாளம் காணவே இயலாமல் உள்ளே ஒளிந்திருக்கும் அகங்காரத்தின் வண்ணப்பூச்சுகள், என ஒவ்வொன்றையும் உணர்வதற்கே பல முறை ஒவ்வொரு சில்லாக உடைத்தெறிய வேண்டி இருக்கிறது. 

அதனையே யோகம் செய்கிறது; நல்லாசிரியரும் செய்கிறார். இதன் வழியே நாம் உணரச் சாத்தியமான அனைத்து ஏற்றத் தாழ்வுகளிலும் அவரது கரம் உடன் வருகிறது.  


"நன்றும் வரலாம் தீதும் வரலாம்

நண்பன் போலே கண்ணன் வருவான்"

எனக்கு மிகப் பிடித்த கண்ணன்  பாடலின் வரிகள் இவை. கண்ணன் என் சற்குரு என்றான் பாரதி. நல்லாசிரியனாய் நண்பனாய் சற்குருவாய் உடன் வருவது கண்ணன் என்றே அகம் உணர்கிறது.

இந்த அனுபவங்களால் உணரப்படுபவற்றை யோகம் உத்தேசிக்கும் பயனாக ஆகும்வரை தொடர்ந்து பயில்வது, அதன் வழியே ஒரு சிலவற்றை ஸ்திரமாக்குவது, வேறு சிலவற்றைத் தலைகீழாக்குவது, ஒரு சிலவற்றை இல்லாமலாக்குவது, பகீரதப் பிரயத்தனம் என்று சில சமயங்களில் மலைப்பு ஏற்படுகிறது. அது நிகழ சிறிதேனும் வாய்ப்பிருக்கிறது என இன்று சிரசாசனம் உணர்த்தியதால் இந்தப் பதிவு. 

மனத்துக்கண் நிகழாமல் சொற்களாக நின்று விடுபவை யாவும், குறள் சொல்வது போல 'ஆகுல நீர பிற' - வெற்று ஆரவாரம்தான். அவ்விதம் வெற்று ஆரவாரமாக தேங்கிவிடாது, ஆழமும் அதன் சிகரமும் காணும் பயணம் குருவருளால் தொடரட்டும்.




Friday, March 27, 2026

Measuring Dream by Dream

கனவைக் கனவால் அளத்தல்: https://www.jeyamohan.in/222948/

Jeyamohan's foreword on 'Everyday Yogi' - Translated by Subhasree Sundaram 

In 1989, when I was working in Palakodu, in Dharmapuri district, Pavannan, Tamilavan, P. Krishnasamy, and others organized a literary meet in Bangalore. They invited me, and I attended. It was not a crowded gathering; we sat and talked in the verandah behind a public building in Cubbon Park, Bangalore. Only eight people had come. “Even that is a lot,” they said.


H. S. Shivaprakash had come as the special guest for that event. Even then, he was a literary star in Kannada. In Karnataka, a hundred people would gather wherever he spoke. Yet he had come all the way to address those eight listeners. He spoke with great enthusiasm and assurance about modern literature and religious dogmatism. After the event, he himself said, “Let’s go somewhere, find a restaurant, and continue our conversation.” We walked, found a place, and talked some more; only in the evening did we finally part.


From that day on, H. S. Shivaprakash became a presence that captivated my soul. When he spoke that day, I witnessed in him a certain creative audacity and fearlessness that I had seen only in figures like P. K. Balakrishnan in Malayalam, and in Jayakanthan in Tamil—personalities that both exhilarate and draw one inward. In those days, I stood in awe of such upright artists. That day, what radiated from Sivaprakash was the modernist creator’s resistance to tradition—parody, a scornful irony toward convention, a piercing insistence on presenting his intellectual logic in its entirety, and a rare gift for selecting and preserving words for their own intrinsic value. I have heard him speak on many stages since then. I have traveled to Bangalore and Chennai three times just to listen to him. I have often marveled at how his personality completely envelops the venues where he speaks.


H. S. Shivaprakash is regarded as one of the foremost modern writers in Kannada literature. His contributions to poetry and drama are widely acknowledged, and he is known across India for his literary works in English as well. He has also served in significant roles within literary institutions of the Central Government.


In general, it is very rare for modern literary writers to write on subjects grounded in spirituality or meditation. Some are indeed interested in and trained in those traditions, yet they often feel that foregrounding such inward individuality would compromise the persona of the modern literary writer. Hence they too present only the image generally constructed here as that of a modern writer—one shaped, in the modernist period, by a negative view of history and by a distrust of the individual. Many creators of that period presented themselves as exponents of this outlook, even when, in their private lives, they remained theists.


H. S. Shivaprakash is a person of integrity in his inner quest. He possesses a distinctive fearlessness in articulating his ideas, which is why he is continually engaged in diverse debates. Having begun as a modernist, he later turned toward philosophical inquiry rooted in Indian and Saiva traditions, undertaking the study of yoga and meditation. This brief book is a record of that journey.


In this work, we witness a modernist writer crossing the limits that shaped him through an inner quest. H. S. Shivaprakash’s journey through the Saiva traditions of Karnataka, and the diverse paths of sādhana within them, may offer guidance to those engaged in such disciplines. For readers without that orientation, the work can still resonate deeply as the record of an artist’s inward journey.


In this book, H. S. Shivaprakash does not appear as one who simply accepts beliefs and rituals. Rather, he emerges as a thinker who continually observes and examines all that he knows with a keen logical intellect. This is the journey of a yogi whose path is shaped by intellectual self-assurance.


When a modern literary mind encounters the Indian contemplative tradition of meditation, it does not perceive many of the obstacles that others experience. First, it readily distinguishes the inner journey from religious belief and ritual. Second, it approaches profound archetypes and myths in their true grandeur, without simplifying them through worldly explanation. The literary artist’s inward journey is, in a sense, a measuring of dream by dream. Language—bounded and shaped—is the dream that becomes the instrument of measure; the boundless dream-space called the universe becomes that which is measured.


Yet such a mind arrives at two kinds of understanding. On the one hand, it stands astonished before its own depth. A mind that once regarded words as the sole expression of reality falls silent before what lies beyond words, withdraws to its familiar realm of language, tracing the contours of its own boundary. On the other hand, it redefines all that it has known until then—logically and symbolically.


This book, presenting the metaphysical journey of a modern writer, may be regarded as a new arrival in Tamil. Subhasree Sundaram has translated it in a language of effortless grace. My felicitations to her.

Tuesday, March 17, 2026

இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்

இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள் - கவிஞர் எழுத்தாளர் பெருந்தேவி, எழுத்து பிரசுரம்

'இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்' இன்றுதான் வாசித்தேன். மிகப் பிரமாதமான சிறுகதைத் தொகுதி. 




யோக குருஜி சௌந்தர் கட்டுரையை  வாசித்துதான் இத்தொகுதி குறித்து அறிந்து கொண்டேன். 

ஒரு சிறுகதைத் தொகுப்பில் ஒவ்வொரு சிறுகதையுமே தன்னளவில் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இனிமையான வியப்பு. முதலாவதாக தலைப்பை வாசித்ததும் என்ன ஒரு விசித்திரமான தலைப்பு என எண்ணம் வந்தது. ஆனால் அதுதான் மிகச்சரியாக இவ்வரிசைக் கதைகள் அனைத்தையும் தொட்டுச் செல்லும் சரடு.


ஓவியங்களில் இரு பிரதான வண்ணங்கள் மெல்ல மெல்ல மயங்கி ஒன்று கலக்கும் மென்மையான ஒரு வண்ணமயக்கம் போல வாழ்வின் தொட்டுணரமுடியாத ஒரு பகுதியைத் தொட்டுச் செல்லும் கதைகள். அந்த இரு வண்ணங்கள் சில கதைகளில் நிதர்சனம்- எதிர்பார்ப்பு என்றாகின்றன, சில கதைகளில் வரையறை-மீறல்கள் என்றாகின்றன, சில கதைகளில் அன்றாட உண்மையும் அமானுடமும் ஆகின்றன. ஆனால் அந்த இரண்டும் கலந்துபிரியும் மயக்கங்களே அழகு.


இத்தொகுதியின் கதைகளை இரு வகைமைகளாக மனம் தொகுத்துக் கொண்டது. 


முதல் வகைமை, நெருக்கமான உறவில் இருக்கும் இரு நபர்களுக்கிடையேயான கடக்க இயலாத மனத்தொலைவுகள்.


நீண்ட தாம்பத்ய வாழ்வின் எல்லையில் நிற்கும் கணவன்-மனைவி முதல் (தாம்பத்யம்), திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன இளம் தம்பதி வரை (கேள்விக்கென்ன பதில்), கணவன்-மனைவி உறவுகளில் இதுவரை புனைவுகளில் தொட்டுக்காட்டப்படாத சில நுண்மைகள் தீட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக கணவன் மன்னிக்கப்படவேண்டுமா என்று யாரோ/தன் மனமே எழுப்பும் ஒரு கேள்வி இளம் மனைவியின் மனதில் எழுப்பும் சஞ்சலங்கள். சந்தேகம் எனும் இடத்தில் இருந்து அவை உறுதியான நம்பிக்கைத் துரோகம்தான் என மனம் முடிவெடுக்கும் வேகம். அவ்விதம் கடத்தியது வேறு யாரும் இல்லை எனக் கொண்டால், மனதின் வீர்யம் விஸ்வரூபம் எடுக்கிறது. 

சிறுதுளிக்கும் உயிர்கொடுத்து பேணி எடுத்து பெரிதாக்கி விடும் ப்ரக்ருதி, பேரியற்கை! தாம்பத்யம் சிறுகதையில் மனைவி கண்டுகொள்ளாமல் விடும் தவறுகளை அக்கறையின்மை என அடையாளும் காணும் கணவனின் மனம். அவளைத் துன்புறுத்துவதற்காக அவன் தன் முன்பாகவே குடிப்பதை அக்கறை என நம்பிக் கொள்ள விழையும் மனைவியின் அகம். அதற்கும் இதற்கும் - அன்பென உணரப் படுவதற்கும், அல்லவென உணர்வதற்கும் இடைப்பட்ட தூரம் அதிகமில்லை போலும்! Fragile beings we are!


மயானக் கொள்ளையின் அம்மன் கதையில் தன் கண்ணைக் கணவனிடம் கொடுத்து மண்ணாகிப் போனவளிடம், கணவனால் வீடு கொள்ளை போன நிலையில் செயலற்று நிற்பவள், வேண்டிக் கொள்ளாது வந்துவிட்ட நினைவும் ஒன்றாகிக் கலக்கின்றன. நீண்ட நாள் நினைவில் நிற்கக் கூடிய சித்திரம்.


நினைவின் நிறம் இரண்டு, தாம்பத்யம் - இரண்டு கதைகளும் அனுமானத்திலேயே மனதளவில் வளர்ந்து செல்லும் விலகலை சொல்கின்றன. நினைவின் நிறம் இரண்டு கதையில், தன் சித்தத்தின் நினைவு மீட்டல் மீதே அவள் மனம் கொள்ளும் சந்தேகம் குறித்த வரி மிக கச்சிதமாக இக்கதையை சொல்கிறது. விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள் கதையின் கணவன் எவ்விதமாவது தன்னை மனைவியின் மனதில் நிறுவிக் கொள்ள விழையும் விசை - தமிழில் மிகப் புதிய அழகான கதை இது!


கணவன்-மனைவி மட்டுமன்றி தாய்-மகன், தந்தை-மகன் என்ற உறவின் இடுக்குகளையும் இரு கதைகள் அடையாளம் காட்டுகின்றன.ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி - அம்மா எனும் வரையறை தரும் எதிர்பார்ப்பு, அதற்கு அப்பாலிருக்கும் ஒரு பெண் என்ற பிம்பத்தை பொருத்திக் கொள்ள இயலாத மகனின் தவிப்பு. "அம்மா எப்போதும் அம்மா வயதுதான்" - எவ்வளவு உண்மை! 


அப்பாவுக்குச் சென்னை பிடிக்கவில்லை - அப்பாவின் மீதான மகனின் எதிர்பார்ப்பு செலுத்தும் வன்முறை எனலாம். இத்தொகுப்பிலேயே மிக உறுதியாக மண்ணில் காலூன்றி நிற்கும் கதை. 



இரண்டாவது வகைமைக் கதைகளை, 'இங்கு இவ்விதமாக' எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டவற்றுக்கும், 'அங்கு (ஒருவேளை) அவ்விதமாக இருக்கலாம்' என அனுமானிக்கப்பட்டவற்றுக்கும் இடையில் நடப்பவை என்று சொல்லலாம். இம்மை மறுமை போல..


பாப் சாந்தி, மழை நிற்கப்போவதில்லை, பெயராய்ப் பின்தொடர்தல், பத்தொன்பதாம் நூற்றாண்டுக்காரி வரை, போன்ற கதைகள். நாம் கட்புலன்களால் அறிவதாலேயே உண்மை என உணரும் அனுபவங்களுக்கும், அவற்றை மீறிய காரணத்தாலேயே அமானுடமென நினைக்கும் அனுபவங்களுக்கும் இடையிலான அறியமுடியாமைகள் மீது மிகச் சிறப்பாக நெய்யப்பட்டிருக்கின்றன.


பாப் சாந்தியில், ஒருபுறம் அறியாத, அழையா விருந்தாளியை, நம்மிடம் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச சமூக சம்பிரதாயங்களுடன் உபசரித்துக்கொண்டே மறுபுறம் மனம் எழுப்பிக் கொள்ளும் சந்தேகங்கள், தயக்கங்கள், கணக்குகள் என கதை நகர்ந்து கொண்டிருக்கையில், திடீரென கத்தியோடு பாயும் பாப் சாந்தி போல கதையின் தளம் யதார்த்தத்தில் இருந்து மனப்பிறழ்வுக்கும் அமானுடத்துக்கும் இடைப்பட்ட தளத்துக்குத் தாவுகிறது. மிக அழகான கதை.


எஞ்சியது சிறுகதை - உண்மையிலேயே இவ்விரண்டு வகைமையிலும் இல்லாது எஞ்சிய ஒன்று. நம் நினைவின் அடுக்கில் மிக உன்னதமாக வளர்ந்து விட்ட ஒன்று காலப்போக்கில் முற்றிலும் வேறொன்றாக மாறியிருக்கும் நிதர்சனம். 


இத்தொகுதியின் இறுதிச்சிறுகதையில் 'மிஸஸ் தெரஸா பேயாக இருக்க வாய்ப்பில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது' என வருவது போல, இந்த புரிபடாத அமானுடத்தன்மைகளும் உணர்வுமயக்கங்களும் இல்லையென்று ஆனால், ஒற்றைநிறம் கொண்ட வெற்று வாழ்வில் பெரும் சலிப்பே எஞ்சும் எனத் தோன்றுகிறது. 


சிறப்பான அழகான புதிதான கதைகளுக்காக ப்ரியமும் நன்றியும்.







Wednesday, February 25, 2026

பற்று விடற்கு

குருஜி சௌந்தரிடம் 2021ல் முதற்கட்ட யோகப் பயிற்சிகள் துவங்கியது. அன்றாட யோக சாதனா துவங்கி மூன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. எத்தனையோ விதங்களில் உடலும் மனமும் பிராணனும் மாற்றமடைந்து  வருகின்றன. இப்பயணத்தில் என்னுள் நிகழும் அனைத்தையும் விலகி நின்று உணர்வதும் எழுதுவதும் இன்று எனக்கு சாத்தியமல்ல. ஆனால் முன்னர் ஒரு முறை யோக சாதனா தொடங்கிய பின்னர் அச்சத்தை எதிர்கொள்வதில் நிகழ்ந்த மாற்றத்தைப் பற்றி 'அருமணி' என ஒரு பதிவு எழுதியிருந்ததை நேற்று வாசித்தேன். 


இன்றைய நிலையில் அதன் மற்றொரு பரிமாணம், என் கவனத்துக்கு வந்தது. என்னைப் பல இடங்களில் முன்னேற விடாமல் தடுப்பது அச்சம்தான் என்பது புரிதலில் முதல் நிலை. அதனினும் நுண்ணிய ஒரு தடை அல்லது இயல்பு உள்ளே இருக்கிறது, மிக மெல்லியது; ஆனால் வலுவானது சிலந்தி இழையைப் போல. அதைத்தான் சில மாதங்களாக உணர்ந்து வருகிறேன். இப்போது  இது மேலெழுந்து வருகிறது.


முதல் நிகழ்வு:

2006லேயே சிங்கையில் ஒரு முறை சில மாதங்கள் நீச்சல் பயிற்சி எடுத்திருக்கிறேன். பின்னர் 2019-21 வரை பல முறை பயிற்சியாளரை வைத்தும், நண்பர்களுடனும், தனித்தும், சிங்கையில் வீட்டு வளாகத்திலேயே இருந்த நீச்சல் குளத்திலும், ஆழம் அதிகமற்ற தோழி இல்லத்து நீச்சல் குளத்திலும், தேசிய விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் பாதுகாப்பு நிறைந்த நீச்சல் அரங்குகளிலும் முயன்றிருக்கிறேன். எப்போதும் ஒரு கட்டத்தில் பயிற்சி நின்றுவிடும். நீச்சலுக்கான மூச்சுப் பயிற்சி, கை கால்களுக்கான பயிற்சி, மிதக்கும் பயிற்சி, எழுந்து நிற்கும் பயிற்சி என அனைத்தையும் பெற்று விடுவேன். ஆனால் தனியாக தரையில் காலை உதைத்து உந்தித் தள்ளி நீருள் இறங்கும் போது பதட்டம் கவ்வி விடும். கைகளில் மிதவையை வைத்துக் கொண்டு சில பல அடிகள் நீந்துவதற்கே நீண்ட காலம் ஆனது. நீந்தும்போதே, தேவையெனில் எழுந்து நீரில் மிதக்க வராதோ என்று பதற்றமாக இருக்கும்.

என் அச்சத்தைப் போக்க, பயிற்சியாளர் முதலில் நீரில் வான் பார்த்து மிதக்கக் கற்றுக் கொடுத்தார். மிக அற்புதமான உணர்வு அது. எந்த முயற்சியும் இல்லாமல் உடல் இறகு போல உணரும் முதல் சில கணங்கள். மிதக்கும் மேகங்களைப் பார்த்தபடி உடலும் உணர்வும் இலகுவாகும் போதே,  திடுக்கென, மூழ்கினால், பற்றிக் கொள்ளக் கைகளில் ஏதுமில்லையே என எண்ணம் தோன்றும். அடிபட்டு மல்லாக்கக் கிடக்கும் கரப்பான்பூச்சி கூட அப்போது ஒரு முறை நினைவு வந்திருக்கிறது. சென்ற வரியை வாசிக்க ஆகும் கணத்திலும் குறைவான வினாடிகளில், இந்த எண்ணம் தோன்றியதுமே, நீருள் சற்றே உடல் தடுமாறும், காதில் நீர் புகும், மூச்சுத் திணறி அதிர்ந்து, கைகால் உதறி வெளியே வந்து விடுவேன், பயிற்சியாளர் உதவியுடன்தான்!. எனவே தனியாக இருக்கும் போது மிதப்பதை பயிற்சி செய்யும் துணிவே வராது. இடுப்பளவு நீரே நிரம்பிய குளத்திலும் இதே கதைதான். இதன் பயனாக நான் சந்தித்த விளைவைத்தான் இரு வருடங்கள் முன்னர் அருமணியில் எழுதியிருந்தேன்.  


இரண்டாவது:

மூன்றரை வருட சாதனாவிற்குப் பிறகும் உடல் நெகிழாத சில ஆசனங்களை, சில வாரங்களாக அன்றாடம் அவதானித்துக் கொண்டிருந்தேன். புகைப்படங்கள் எடுத்துப் பார்ப்பேன். குருஜியிடம் அனுப்பி கேட்பேன்.


உதாரணமாக ஹாலாசனம், பர்வதாசனம். உடலை முற்றிலும் உயரே தூக்கி கால்களை பின்புறம் கொண்டு சென்று விரல் நுனியால் தரையில் தொடும் பயிற்சி ஹாலாசனம். சர்வாங்காசனத்தில் நிற்பதற்கே அச்சம் இருந்து, அது முதன் முதலாக கைவரத் தொடங்கிய அன்று 'அருமணி' எழுதினேன். இப்போது அதன் அடுத்த கட்டமான ஹாலாசனம்  திணறுகிறது. கால்கள் பின்புறம் தரையிலிருந்து ஒரு சாண் மேலே வரை செல்லும்.  சற்றே முயற்சி செய்து இடுப்பை தோள்பட்டைக்கு நேராக மேலே கொண்டு வந்தால், கீழே தொட்டுவிடலாம், ஆனால் அப்போது அடிவயிற்றில் ஒரு கலக்கம் வரும், கால்களை மீண்டும் கீழே கொண்டு வந்துவிடுவேன். இதுவே இரண்டரை வருடங்களாக நடக்கிறது. பர்வதாசனத்தில் சின்னஞ் சிறு முன்னேற்றங்கள். ஆனால் குதிகால் தரையில் பதியாது,  கால்கள் முழங்காலில் வளைந்துதான் நிற்க முடியும். 

பர்வதாசனம்


பர்வதாசனம் - சரியான நிலை

நன்றி - சாரதா, பொதிகை யோகம் இன்று 

 


இவ்விரண்டு ஆசனங்களிலும் எந்தெந்த விஷயங்கள் முன்னேற வேண்டும் என அவதானித்த போது, உடல் ரீதியாக சில விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக பின் தொடையின் தசைநார்களின் இறுக்கம் ஏற்கனவே தெரிந்த ஒன்று. அதனால் ஹாலாசனத்தில் இடுப்புப்பகுதி தோள்பட்டைக்கு மேல் செல்வதில் தடை. கீழ் முதுகு அந்த அசைவைத் தடுப்பதை உணர முடிந்தது. அதே போல பர்வதாசனத்திலும் பின்தொடை இறுக்கமும் கெண்டைக்கால் இறுக்கமும் கால்களைத் தடுப்பது தெரிந்தது. 

இவற்றை சரி செய்வதற்கான பல உதவிப் பயிற்சிகளும் ஆசிரியர் பரிந்துரைத்திருக்கிறார், அவற்றையும் செய்தே வருகிறேன்.

இவை உடல்ரீதியான தடைகள் மட்டுமே. நீடித்த பயிற்சியின் விளைவாக உடல் பல இடங்களில் நெகிழ்வுத்தன்மை அடைந்திருக்கிறது. ஆனாலும் மேலே குறிப்பிட்ட ஆசனங்களில் வேறு சில கூறுகள் இருக்கின்றன.


மூன்றாவது:

ஒரு சில மாதங்களாக இடுப்பில் ஒரு வலி இருந்து கொண்டே இருந்தது. தரையில் கால் மடித்து அரை மணிநேரத்துக்கு அதிகமாக அமரும் போது இடுப்பில் தொடங்கி முன் தொடைப் பகுதி வரை வலி ஒன்று உருவாகும், வெகுநேரம் பிறகு நீடிக்கும். நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ, வேலைகள் செய்வதோ, வேறு ஆசனங்கள் செய்வதோ,  எப்போதும் வலி இருப்பதில்லை. அமர்ந்த நிலை மட்டும்தான். ஆசனம் என்ற சொல்லின் பொருளே இருக்கைதான், இருத்தல்தான். எனவே அதை சரி செய்வதற்கான யோகப் பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன். ஃபிஸியோ உதவியும் எடுத்துக் கொள்கிறேன். இந்த வலிக்கான  எத்தனையோ பயிற்சிகள் எடுத்தும், பலன் இல்லை. 


சென்ற வாரம் நெஞ்சுக்கூட்டுப் பகுதியை விரிவடைய வைப்பதற்கான ஒரு பயிற்சி செய்தபோது திடீரென இந்த இடுப்பு வலி சரியானது. மீண்டும் மீண்டும் வலி வரும் போதெல்லாம் இப்பயிற்சி வலியை சரி செய்தது. மார்புப் பகுதியை விரிவடையச் செய்கையில் இடுப்பில் எந்த சிறு அசைவும் பாதிப்பும் உணர முடியவில்லை. ஆனால் வலி சரியானது.


அந்த வலி ஏற்படாமல் இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டுமென இப்போது புரிந்து விட்டது. தரையில் கால்களை மடித்து அமரும் போது சிறிது நேரத்தில் மிக மெல்லிய கூன் விழுகிறது. மனதால் உணரக்கூடிய ஒரு சிறு சரிவு. அதை அவதானித்து சரி செய்து கொண்டே இருந்தால், அந்த இடுப்பு வலி வருவதில்லை. ஒரு மணி நேரம் அமர்ந்தாலும் வருவதில்லை. எத்தனையோ முறை ஆசிரியர் சொன்ன விஷயம்தான். கூன் போடுகிறேனா என பார்க்கச் சொல்வார். ஆனால் மிகச்சிறிய அந்தக் கூனை நானே உணரவும் வெகு காலம் பிடித்தது.


அவதானிப்பு:


இவை மூன்று விஷயங்களும் உணர்த்துவதை இப்போதைய நிலையில இவ்வாறு விளங்கிக் கொள்கிறேன்.


பொதுவாக சம்மனம் இட்டு தரையில் அமர முடியாத அளவு உடல் விறைப்பாக இறுக்கமாக இருப்பவர்களிடம் குருஜி சௌந்தர் சொல்வது ஒன்று உண்டு. மனதின் இறுக்கம் உடலிலும் தெரிகிறது என்பார். வாழ்வை, அது தரும் எதிர்பாரா மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாத மன இறுக்கங்கள். இறுகிப்போன உடலில் இறுகிப்போன மனம், தடைப்பட்ட பிராணன். அது நினைவு வந்தது. எனக்கு முதுகு ஓரளவு நெகிழ்வுத்தன்மை அடைந்திருக்கிறது, வேறு ஆசனங்களில் அது தெரிகிறது. ஆனால் சில இடங்களில் உடல் செல்ல சாத்தியமான அளவுக்கு கூட, அதை விட்டுக்கொடுக்க உள்ளே ஒன்று மறுக்கிறது. 


முதலாவதில், நீச்சலில் ஏற்படும் பதற்றம், நீரில் மூழ்கி விடும் அச்சம் அல்ல; கைகளிலும் கால்களிலும் இருக்கும் பற்றுக்கோலை விட்டுவிட்டு நீருக்கு எனை ஒப்புக் கொடுக்க மறுக்கும் ஒன்று. இது மேலோட்டமாகத் தோன்றும் அச்சத்தை விட சற்று நுண்ணிய, மேலும் ஆழமான பாதுகாப்பு உணர்வு. இரண்டாவது, அதே போல, சற்றே கடினமான ஆசனங்களில் உடல் பாதுகாப்பெனத் தான் உணர்ந்த ஒன்றை விட்டுக் கொடுக்க மறுக்கிறது. மூன்றாவது, தனை மறந்து அமரும் போது உடல் மெல்ல சரிந்து ஒரு கோணலுக்கு உட்படுகிறது. நேர் நிலை இன்னும் உடலின் இயல்பாகவில்லை.


"சுகம் ஸ்திரம் ஆசனம்" என்கிறார் பதஞ்சலி.  இலகுவாகவும் நிலைத்தும் எதில் நீடித்து இருக்க முடிகிறதோ அந்த நிலையே ஆசனம். தொடர் பயிற்சிகளினால் உடலில் ஸ்திரம் உருவாகி வருகிறது. ஆனால் அது சுகமாக மாறவேண்டும் என்றால் அந்தந்த ஆசனத்தின் நிலைகளுக்கு உடல் இயல்பாக ஒப்புக் கொடுக்க வேண்டும். இப்போது பயிற்சிக்குக் கட்டுப்பட்டு வளையும் உடல், தன்னியல்பாக அந்த நிலைகளில் அமைய வேண்டும்.


Control எனப்படும் கட்டுப்பாட்டின் மூலமாக அடையும் ஸ்திர நிலையில் இருந்து Being என்னும் அதுவாக மாறும் நிலைக்கு  நகர வேண்டும். இன்றைய நிலையில் அன்றாடத்தை ஓர் ஒழுங்கில் வகுத்துக் கொண்டு பின்பற்றுவது வருகிறது. ஆனால் அதை நான் உள்ளூர ஒரு முயற்சியினால் அடைகிறேன். அது என் இயல்பாகவில்லை. எனவே நீரோட்டத்தில் ஒழுகிச் செல்ல முடியவில்லை. நீர், தடையை உடனே உணர்த்திவிடும் தன்மை கொண்டது. எனவே நீச்சலில் அகம் தன்னைக் காட்டியிருக்கிறது. சித்தத்தை, மனதின் செயல்பாட்டை உடல் காட்டிக் கொண்டே இருக்கிறது.


மனதளவிலும் வேறு சிலவற்றுக்கு இந்த அவதானிப்பு அப்படியே பொருந்துகிறது.ஒழுக்கிற்கு ஒப்புக்கொடுக்க மறுப்பது ஒரு பாதுகாப்பின்மையின் விளைவு என்று தோன்றுகிறது. பழகிவிட்டவற்றிலிருந்து விலக மறுக்கும் மனம். பழகியவற்றின் சொகுசிலில் இருந்து விடுபடச் சொல்லி அதற்கான வாழ்வியல் மாற்றங்களை, கர்மயோகத்தை பல முறை குருஜி சொல்லியிருக்கிறார். 


அங்கும் இதே இயல்புதான் தடையாகிறது. சொகுசு என்பதற்கு ஆடம்பரம் என்றோ, வசதி என்றோ பொருள் அல்ல. பழகிப் போன வழக்கங்கள் அனைத்துமே சொகுசுகள்தான். அவை 'பிசுக்குகள்' என்றாலும், நம் தர்க்கம் அதனை வேறு வண்ணம் பூசி, அது வாழ்வுக்கு மிகத் தேவையான ஒன்று என்றே காட்டும். அப்பழக்கம் இல்லாவிட்டால் பாதுகாப்பு இல்லை என்று சொல்லும். எனவே அதை விட்டு விலக புத்தி துணியாது. 


ஆழ்மனதில் புதைந்து உறங்கிக் கொண்டிருக்கும் வாசனாவின் விதைகளுக்கு (விதைகள் - பற்று, அச்சம், கோபம், பொறாமை என எதுவாகவும் இருக்கலாம்) நாட்பட்ட பழக்கங்களே உரம். அந்தப் பழக்கங்களுக்கு ஒவ்வொரு முறை ஆட்படும் போதும், அந்த விதைகள் மீண்டும் செயல்களாகி கர்மங்களாக உயிர்கொள்கின்றன. மீண்டும் மீண்டும் களைகள் சேர்கின்றன. இந்த விதைகளை எரிப்பதே தவம் என நூற்றுக்கணக்கான முறை ஆசிரியர் சொன்ன சொல் காதில் ஒலிக்கிறது. 


திரௌபதியின் கதைதான். இறுகப்பற்றிய தன் கையை விடுவதற்கு பற்றற்றவனை பற்ற வேண்டும். கண்ணா என இருகரம் கூப்ப வேண்டும். என்றேனும் நிகழலாம். அதுவரை சாதனாவில் தொடர்வோம்.


குருவருள் துணை வருக!









Tuesday, December 2, 2025

அன்றாட யோகி

கன்னட எழுத்தாளர் ஹெ. எஸ். சிவபிரகாஷ் எழுதிய 'Everyday Yogi' (கன்னடத்தில் 'பத்தீஸ் ராகா')-ன் தமிழ் மொழிபெயர்ப்பு விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளியாகி இருக்கிறது. அச்சில் எனது முதல் நூல் - ஆசிரியர்கள் பாதங்களில் சமர்ப்பணம்.



2021-ல் கன்னட எழுத்தாளர் ஹெ. எஸ். சிவபிரகாஷ் எழுதிய "GURU: Ten Doors to Ancient Wisdom"-ன் தமிழாக்கத்தை (தமிழில் குரு - பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள் - ஆனந்த் ஸ்ரீனிவாசன்) வாசித்துவிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். https://www.jeyamohan.in/148348/. அதை யோகா குருஜி சௌந்தர் ஹெ.எஸ்.எஸ் அவர்களிடம் பகிர்ந்திருந்தார். 


2021 குரு பௌர்ணமி அன்று காலையில், கோவை அருகே நிகழ்ந்த கவிதை முகாமுக்கு லோகமாதேவியுடன் சென்று கொண்டிருக்கும் போது ஹெ.எஸ்.எஸ்-ன் அழைப்பு வந்தது. "குரு"வைப் பற்றிய சிறிய தொலைபேசி உரையாடல். அது குருபௌர்ணமி அன்று நிகழ்ந்ததை ஆசியாக உணர்ந்தேன். 


பின்னர் குருஜி சௌந்தர் பெங்களூர் வந்தபோது அவரை நேரில் சந்திக்க அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு முன்னர் 2020 ஜனவரியில் சென்னையில் நடந்த பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் ஹெ.எஸ். சிவப்பிரகாஷ் கன்னட இலக்கியம் குறித்தான மிகச் செறிவான உரை ஒன்றை ஆற்றக் கேட்டிருந்தேன். ஆனால் தனிப்பட்ட இந்த சந்திப்பில் அவரது ஆன்மீக அனுபவங்கள் குறித்த உரையாடல் அவரது மற்றொரு பக்கத்தை காட்டியது. Everyday Yogi அவரது ஆன்மீக வாழ்வின் சுயசரிதை. அந்தப் புத்தகத்தில் எழுதியதற்குப் பிறகான காலகட்டத்தின் சில அனுபவங்கள் குறித்து அன்று அவர் பகிர்ந்து கொண்டார். மனதுக்கு மிக அணுக்கமான நாள். அன்று குருஜி நான் செய்து கொண்டிருந்த மற்றொரு மொழிபெயர்ப்பு பற்றிக் குறிப்பிட்டதும் இதைத் தமிழில் மொழியாக்கம் செய்யுமாறு ஹெ.எஸ்.எஸ் சொன்னார். 


அடுத்த குரு பூர்ணிமை அன்று இதன் மொழியாக்கத்தைத் தொடங்கினேன். இப்புத்தகத்தில் ஸ்வாமி சத்யானந்தரிடம் அவர் தீட்சை பெற்ற பகுதியை மொழியாக்கம் செய்யும் போது நான் தீட்சைக்காக சத்யானந்த ஆசிரமம் செல்ல நேர்ந்தது. இதைத் தமிழில் எழுதிய மொத்த நாட்களும் எனக்கு தனிப்பட்ட அளவில் மிக முக்கியமான காலகட்டம். ஒவ்வொரு நாளும் குருவின் கரம் வழிநடத்திச் சென்றது. 


ஹெ.எஸ். சிவப்பிரகாஷ் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, பல யோகம் சார்ந்த, சாதனா சார்ந்த வார்த்தைகளை சரிபார்த்து ஆலோசனைகள் கூறி, உறுதுணையாக நின்று, இன்று இது நூலாக வெளிவருவதற்கு முதன்மையான காரணமாக இருந்த குருஜி சௌந்தருக்கு அன்பும் நன்றியும். 


விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு நன்றி!

நூலை வாங்க

Friday, March 7, 2025

ஆசிரியருடன்..

ஆசிரியருடனான பயணம் என்பது ஒரு ஆசி.  சொற்களாக பாடங்களாக ஆசிரியர்கள் அள்ளிக் கொடுப்பது ஒரு வகை கொடை எனில், உடனிருந்து அவரது அருகாமையில் உணர்வதும் கற்றுக் கொள்வதும் கணக்கிலடங்காதவை, வாழ்வுக்கானவை. பல நேரங்களில் அத்தகைய கல்வி நேரடியாக, புறவயமாக அறியமுடியாத நுண்மையில் மிக ஆழத்தில் நடைபெறுகிறது. பின்னர் ஒரு தருணத்தில் மேலெழுந்து வருகிறது.

இந்த மூன்று நாள் கன்னியாகுமரி பயணம்(விவேகானந்த கேந்திரம் நடத்திய 8ஆவது யோக சாஸ்திர சங்கமம்) உள்ளுக்குள் மிகச் செறிவாக இருந்தது.  அதை விரித்து, கடந்த மூன்று வருட பயணத்தையும் பார்க்கும் தோறும் எத்தனை எத்தனை அறிதல்களையும் அனுபவங்களையும் அள்ளித் தந்திருக்கிறது குருவருள் எனத் தெரிகிறது.





பொதுவாக, புதிய அறிவுபூர்வமான தர்க்கபூர்வமான ஓன்றை அறியும்போது ஒரு மகிழ்ச்சி பிறக்கும். அறிவுக்கான தேடல் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் இன்பம் இது. ஆனால் அதனினும் பேரின்பம் சில அறிதல்கள் நம்முள் முளை விட்டிருப்பதை உணரும் போதும் உள்ளார்ந்த மாற்றங்களை கவனிக்கும் போதும் கிடைக்கிறது. குறைந்தபட்சம் அத்தகைய விஷயங்களை மனம் தொடர்ந்து கவனித்து அடையாளம் கண்டு கொள்ளவாவது கற்றிருக்கிறது. 


உதாரணமாக, குருஜி சௌந்தருடனான பயணங்களில், அனைவரும் மிக,ஆனந்தமாக கேலியும் சிரிப்பும் கொண்டாட்டமுமாக ஒரு புறம் திகழும் போதே மறுபுறம் மிக ஆழமான தாக்கம் ஒன்றை யாரும் அறியாத வண்ணம் தனிப்பட நம்முள் ஏற்படுத்தி விடுவார். அது நாள்பட்ட தவறாக இருக்கலாம், நாமே அகங்காரம் என அறியாத அகங்காரமாக இருக்கலாம், அல்லது தப்பித்துக் கொள்ளுதல், தவிர்த்தல் போன்ற அகப்பழக்கங்களாக இருக்கலாம்.

அதை முகத்துக்கு நேராக உடைப்பது கூட அவரது வழக்கம் இல்லை. ஆனால் ஆசிரியர் அவராகத் திகழ்வதன் மூலமே அதை உணர்த்திவிடுகிறார். அதனால்தான் வகுப்பிலோ, இத்தகைய கூட்டான பயணங்களில் சொல்லப்படும் சொற்களும் அதில் உணரப்படும் விஷயங்களும், நமக்கே பிரத்யேகமான பாடமாக, அவர் இதன்மூலம் நமக்கான  செய்தியைதான் சொன்னார் என ஒவ்வொருவரும் உணரும் வண்ணம் ஏதோ ஒன்று உள்ளே சென்று விடுகிறது


உதாரணமாக இந்தப் பயணத்தில் அவரது ஞானத்தை, கனிவை நோக்கிக் கொண்டே இருந்தேன். ஆசிரியரிடம் வியந்து தீராத எத்தனையோ விஷயங்கள் அனைவருக்கும் இருக்கும். என்றும் ஒவ்வொரு நொடியும் புதிதாக விளங்கும் தன்மை கொண்டவர்கள் ஞான ஆசிரியர்கள். இந்த ஞானம் என நான் உணர்வது, புத்தகங்களை வாசிப்பதாலோ சொற்பெருக்கத்தாலோ வருவதல்ல. பல்லாண்டு ஒரு பாதையில் வாழ்ந்து அந்த சாதனையின் விளைவாக கனிந்திருப்பது, அதுவாகவே திகழும் அறிவு. எத்தனை உயரத்தில் தான் நின்றாலும் சுற்றி இருக்கும் யாரையும் கீழே குனிந்து நோக்கும் அதிகாரப் பார்வை இல்லாமல் அத்தனை குழந்தைகளையும் தன் தோளிலும் முதுகிலும் இடையிலும் ஏற்றிக் கொண்டு விளையாடும் தந்தையின் கனிவு. தேவையெனில் சரிசெய்து விடமுடியும் எனத் தெரியும் தந்தையர் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடத் தெரிந்தவர்கள். நன்மேய்ப்பர்கள்.




இது போன்ற ஒரு கனிந்த ஆசிரியரைப் பார்க்கும் போது, குழந்தையாய் தந்தையின் உயரத்தைக்கண்டு வியந்து நானும் ஒரு நாள் என் அப்பா போல வலிமையானவளாவேன் என்னும்  உறுதியும் வைராக்கியமும் ஏற்படுகிறது.


அப்படி சிரிப்பும் களிப்புமாக நடந்த இப்பயணத்தில் அவதானித்தவற்றில் சில:


கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, கேள்விகளே அற்ற, கேள்விகளை எழுப்பிக் கொள்ளக்கூடாத, சில இடங்கள் இருக்கின்றன. அந்த ஆதார மையங்களை அடையாளம் கண்டு கொள்வது ஓரு பேரறிவு. அத்தகைய அச்சில் நின்றே இங்குள்ள அனைத்தும் இயங்குகின்றன அவற்றில் எழுப்பப்படும் தர்க்கரீதியான ஐயங்களும் கேள்விகளும் அகங்காரத்தை பெருக்குவதையோ அமைதியின்மையை உண்டாக்குவதையோ அன்றி வேறேதும் செய்வதில்லை.


இதற்கு நேர்மாறாக பழக்கத்தினாலும் நமது வசதிகளுக்காகவும், சில பயனற்ற/பின்னிழுக்கும் விஷயங்களை எந்த விசாரமும் இன்றி நடைமுறைப்படுத்தி வைத்திருப்போம். சுற்றத்தையும் சமூகத்தையும் நமக்கு நாமே கூட மிக விரிவான சமாதானங்களுடன் அவற்றை நியாயப்படுத்தி வைத்திருப்போம். அத்தகைய சில கூறுகளை நிர்தாட்சண்யமாக கேள்வி கேட்க வேண்டிய அறிவும் மிகத்தேவையான ஒரு அறிவு.


அழைப்பு எழும் முன்னரே அல்லது அதை உணர்ந்தவுடனேயே சென்று முன் நிற்க வேண்டிய களங்கள் இருக்கின்றன, கர்மசேவைக்கான பல வாய்ப்புகள் அப்படித் தான் இருக்கின்றன.  நம்மைச் சுற்றி அப்படி ஓருயிர் தேவையோடு காத்திருக்கிறது அல்லது ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது என்று உணர்வதற்கான கண்களைத் திறந்து வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த அறிதலும் விழிப்புணர்வும் மிக முக்கியமானது. மற்றோர் உயிரை ஏதேனும் ஒரு வகையிலாவது தொடாத எந்தப் பயணமும் பொருளற்றது என ஆசிரியர் சொல்வதன் பிரத்யட்ச விளக்கம் இம்முறையம் நிகழ்த்திக் காட்டப்பட்டது, யாரோ ஒரு பெயரறியாத ஆட்டோ ஓட்டுனருக்கு அவரது வாழ்வுக்கு மிக முக்கியமான பயிற்சி ஆசிரியரால் கற்றுத்தரப்பட்டது.


அதே சமயம் நம்மைச் சுற்றிச்சூழ எத்தனை இரைச்சலாக இருந்தாலும் நாம் காதிலேயே வாங்கிக் கொள்ளக் கூடாதவை இருக்கின்றன, நம் காலடியும் படக்கூடாத அகங்கார வாயில்கள் சில இருக்கின்றன. அதை அடையாளம் கண்டு கொள்வதும் உடலால் அத்தகைய சூழலின் உள்ளே இருந்தாலும் மனதில் ஒரு துளியும் ஒட்டாமல் விலகிச் செல்வதும் பேரறிவு.


எந்த இடங்களில் வலிகளை, சிரமங்களை தாங்கிக் கொள்ளும் திதிக்ஷா தேவை என்பதும், எந்தெந்த விஷயங்களில் நாம் தேவையற்ற, நாம் உதறவேண்டிய எடைகளை சுமந்தலைகிறோம் என்பது குறித்ததுமான பகுத்து அறியும் அறிவு. 


உணர்வுகளாக மிகைப்படுத்திக் கொள்ளக்கூடாதவை, சொற்களாக விரித்து பெருக்கிக் கொள்ளக்கூடாதவை, வெளிப்படுத்தத் தேவையற்ற மிகை சொற்களும், மிகை உணர்ச்சிகளும் குறித்த பிரக்ஞை, எத்தகைய பெருமகிழ்ச்சியாக இருந்தாலும் அள்ளிச்சூடி ஆடிக்களித்து விட்டு அங்கேயே அவற்றை இறைக்கர்ப்பணித்து விட்டு அதிலிருந்து நகர்ந்து விடுதல், ஒரு கணமும் சோர்வுறாதிருத்தல், அதற்கான பிராணனை வளர்த்துக் கொள்ளுதல் என உடல், பிராணன், மனம், உள்ளுணர்வு என அனைத்துத் தளங்களுக்குமான பாடம் நடந்து கொண்டே இருந்தது, இருக்கிறது. அத்தனையும் 'ஆனந்தம்' என்ற ஒற்றை உணர்வாக உள்ளே நிறைந்திருக்கிறது.





Thursday, November 21, 2024

பிரியத்துக்குரிய யேசு - பால் சக்காரியாவின் யேசு கதைகள்

ஒரு இனிய மாலை நேரத்தில் வாசித்து முடித்துவிடக்கூடிய சிறிய மொழியாக்க சிறுகதைத் தொகுப்பு 'யேசு கதைகள்'. மிக அழகான கதைகளை அதன் 'ஸ்நேகம்' சிறிதும் குன்றாமல் தமிழில் கொணர்ந்த கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு அன்பும் நன்றியும்.


இத்தொகுப்பின் முதல் கதையான 'யாருக்குத் தெரியும்' சிறுகதை.

ஏரோது மன்னனின் ஆணைப்படி இரண்டுவயதுக்குட்பட்ட குழந்தைகளை வாள்முனையில் கொன்று குவித்து அந்த ரத்தக்கறையின் எடையுடன் விபசார விடுதியில் அடைக்கலமாகும் படைவீரனின் கதை. அவனுக்கும் அவ்விடுதியின் தலைவிக்குமான கூர்மையான உரையாடல் வழி விரிகிறது யேசுவின் பிறப்பின் செம்புலம். படைவீரர்களுக்கு யாரோடும் யுத்தமில்லை என்பதையும் கொலையின் அபத்தங்களையும் உணர்ந்துவிட்டவன். அவனுக்காக  இறைமைந்தனிடம் மன்னிப்பின் அடைக்கலம் கோருகிறது  அந்த விடுதியின் தலைவியான ஓர் அன்னையின் மனம்.


"இத்தனை ஆயிரம் குழந்தைகளின் குருதியினூடேதான் ஒரு ரட்சகன் வருகிறானா?" என்னும் அவ்வீரனின் குமுறல் - வெண்முரசு நாவல் வரிசையின் நீலம் நாவலில், கண்ணனின் பிறப்பையொட்டி கம்சனின் வெறியாட்டத்தை கண்டு "இத்தனை குருதியில் பிறந்த அவனே இந்த யுகத்தின் அதிபன்...பொன்முடிகொண்டு பிறக்கவில்லை. பெரும்புகழ்கொண்டு பிறக்கவில்லை. பொல்லாப்பழிகொண்டு பிறந்திருக்கிறான்! பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்!" என வெடிப்புறும் வசுதேவரின் சன்னத வரிகளை நினைவுறுத்தியது. 


'அன்னம்மா டீச்சர் சில நினைவுக் குறிப்புகள்' மனதுக்கு மிக அணுக்கமான சிறுகதை. தன் முப்பத்து மூன்றாவது பிறந்தநாளில் இனி தனக்கு மட்டுமே வயதாகும் என்று, யேசுவைத் தம்பி என விளிக்கும் பாசமிக்க பெண். வீட்டில் அனைவருக்கும் மூத்த அக்காவாக சுமைதாங்கி பழகிய அவளுக்கு யேசுவுக்கும் ஒரு நொடியில் அக்காவாகி விட முடிகிறது.


இரக்கமற்ற ரட்சகன் மீது இரக்கப்பட அன்னையராலும் சகோதரிகளாலும் காதலிகளாலும்தான் இயல்பாக முடிகிறது. இச்சிறுகதைத் தொகுப்பின் மற்றொரு கதையில் வரும் வரிகள்: "தாயும், மனைவியும், காதலியும், சகோதரியும் தருவதை விடவும் ஒரு ஆத்ம பலத்தை வேறு யாரால் தந்துவிட முடியும்? அவர் பிதாவைத் தேடிப் போவதற்கிடையில் மாதாவையும் புரிந்துகொள்ள முயன்றிருக்கலாமே. அதற்கு பதில் அவன் தந்தைமையின் ஊடுவழிகளிலூடே முட்டி மோதி நடந்தபடி இருந்தார். தந்தை யாராக இருந்தால் என்ன? கருவறைதானே உண்மையில் அவன் தந்தை?" இவ்வரிகளே இச்சிறுகதைகளின் மையம் எனலாம், இக்கதைகள் அனைத்தின் வழியாக வெளிப்படும் பிரியத்துக்குரிய யேசுவைக் குறித்த ஒரு பெண்ணின் அங்கலாய்ப்பு.

அன்னம்மா டீச்சரின் மரணத்தருவாயில் அவளைத் தாங்கிக்கொள்வதற்காக வரும் தம்பி யேசு இக்கதைகளிலேயே மிக அழகானவன்.


போந்தியஸ் பிலாத்துவின் கடிதத்தின் வழியாக வெளிப்படும் யேசுவும் பெண்களால், அவன் மரணத்துக்கும் உயிர்த்தெழலுக்கும் முன்பே அடையாளம் காணப்பட்டு நேசிக்கப்படுபவன் ஆராதிக்கப்படுபவன். இக்கதைத் தொகுப்பின் வழி நாம் காணும் யேசு, யாதவகுல அழகனைப் போல பெண்களின் விழி வழி காணப்படுபவன். யேசுவே இக்குறுநாவலில் ஓரிடத்தில் சொல்வது போல தான் நேசிக்காத போதும் தன்னை நேசிக்கும் சிநேகிதிகளைக் கொண்டவன். அவனது மறைவுக்குப் பின்னர், மூன்றாம் நாளில் அவன் உயிர்த்தெழுவதற்கு முன்னரே அவன் வரக்கூடுமென அவனைக் காண அவனை ஆராதித்த  பெண்கள் பாலை மலைச்சரிவில் ரகசியமாக நடந்து செல்கின்றனர். அப்போது, 

"யேசு நிச்சயம் இந்த வழியில் வருவாரென உனக்கு எப்படித் தெரியும்?" என்ற ஒரு பெண்ணின் கேள்விக்கு மரியம் "எனக்கொன்றும் நிச்சயமாகத் தெரியாது. அவர் வருவார் என்று நான் நம்புகிறேன். அவ்வளவுதான். இன்று பார்க்கவில்லையென்றால் வேறு ஒரு நாளில், வேறு பாதையில் பார்ப்போம். அவர் எங்கேயிருக்கிறார் என்பது நமக்குத் தெரியாவிட்டால் கூட, நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டாமா? அவர் அறிந்திருப்பார் என்று நாம் நம்புவோம்." என்கிறாள். 


இறையும் குருவும் அனைத்தையும் அறிந்தே, கல்லும் கரடுமான பாதைகளில், பூமி நடுங்கும் வேளைகளில் நடக்கவைக்கிறார்கள். ஆனால் 'நாமிருக்கும் இடம் எதுவாயினும் அவர் அறிவார்' என்ற அந்த ஒற்றை நம்பிக்கையில்தான் குருதி சொரியும் பாதங்களுடனும், சறுக்கியும் விழுந்துமேனும் அவரை எதிர்நோக்கி  நடக்க முடிகிறது. 

ஒளியை நோககிய பாதையில் இருள் நிழல்கள் புறமுதுகே காண்கின்றன.


Sunday, August 4, 2024

அடுத்த பணி

மாஸ்டர் கிறிஸ்டியன் எழுதியதில் என்ன நிகழ்ந்தது?

மாஸ்டர் கிறிஸ்டியன் (நித்திய வழி) மொழிபெயர்ப்பு என்பது ’ஆசிரியரின் சொல்’ என்ற ஒற்றை விளக்கொளியில் நிகழ்ந்த பயணம். இது இலக்கியப் பணி என்பதை விட ஆன்மீகமான ஒரு பயிற்சி என்பதே உண்மை. எனவே இதை எழுதியதன் மூலம் கண்டடைந்த எதையும் இலக்கிய ரீதியான ஒரு அனுபவமாக என்னால் எண்ணிப் பார்க்க இயலாது.



எழுதிய விதத்தில், ஒன்றை சொல்வதென்றால், ஆசிரியர் அறிவுரையின்படி, ஒவ்வொரு பக்கமாக மொழிபெயர்க்கும் போதுதான் நானும் முதல் முறையாக அப்பக்கத்தை வாசித்தேன். அவ்வகையில் மூன்று வருடங்கள் வாசித்த நூல் இது. இவ்வளவு நிதானமாக ஒரு நூலை வாசித்த அனுபவமே எனக்கில்லை. அதனால் முதல்முறையாக ஒரு படைப்பை வாசிக்கும் போது அடையும் உணர்வெழுச்சியை அப்படியே எழுத முடிந்தது.


நமது குருகுலங்களில் மாணவனுக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விதமான பணி வழங்கப்படும். குறிப்பாக ஞான யோகத்தில் பயணிக்க விரும்பும் மாணவருக்கு, மாணவரின் மனம், அறிவு, வாசனா, படிநிலை எனப் பல விஷயங்களைப் பொறுத்து அப்பணி ஆசிரியரால் நிர்ணயிக்கப்படுகிறது. அது ஏதேனும் ஒரு எழுத்துப் பணியாகவோ, கீதை, உபநிடதம் போன்ற முக்கியமான நூல்களின் உரையாகவோ, மொழிபெயர்ப்பு பணியாகவோ, ஆசிரியர் கற்றுக் கொடுத்த ஒன்றை தொகுத்து எழுதுவதாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எழுதி முடித்த பின்னர் அப்படைப்பு என்னவாயிற்று என்பது இங்கு முக்கியமல்ல. அதை ஆசிரியர் அக்கணமே நிராகரிக்கலாம், அல்லது ஏற்றுக்கொண்டு அப்பால் எடுத்து வைத்துவிட்டு அடுத்த ஒரு பணியை, கல்வியை வழங்கலாம்; அது எத்தனை வருட உழைப்பைக் கோரியிருந்தாலும், முழு வாழ்வைக் கோரியிருத்தாலும் அதில் மாற்றமில்லை. அவ்வேலையின் வழியாக மாணவருக்கு நிகழும் அறிதல்களும் மாற்றங்களுமே அதன் முழுப்பயனும் ஆகிறது.


அவ்வகையில் மாஸ்டர் கிறிஸ்டியன் ஆசிரியர் ஜெயமோகன் உருவில் குரு நித்யா எழுதப் பணித்த ஒரு சாதனா - ஆசிரியர் சொன்ன பிறகு எந்நிலையிலும் பின்வாங்கக் கூடாத, பின்வாங்க எண்ணவும் இயலாத ஒரு அன்றாட நியதி. அதில் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் இணைந்திருத்தல். அது அத்தனை எளிதாக அமைந்து விடவும் இல்லை. எண்ணற்ற ஊசல்கள், அலைக்கழிப்புகள், எழுதாமல் இருக்க ஏற்புடைய காரணம் என நம்பச் செய்யும் வகையில் அத்தனை அத்தனை மயக்கங்கள், மாயைகள். இவை அனைத்திலும் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டதாகவோ இத்தடைகள் இல்லாமல் ஆகிவிட்டதாகவோ நிச்சயம் சொல்லமுடியாது. மூன்று வருடங்களில் எத்தனையோ மனத்தளர்வுகள், சுணக்கங்கள். இப்படி ஒவ்வொரு முறை தடையோ மனத்தளர்வோ ஏற்பட்ட பொழுதிலும், சாதனாவில் நிலைத்திருக்க வைத்தது யோகம் தான். யோகம்

என்ற சொல்லால் ஆசன, பிராணயாமப் பயிற்சிகளை மட்டும் குறிப்பிடவில்லை. யோகத்தை வாழ்வு முறையாக மாற்றிக் கொள்ளும் அனுபவத்தை சொல்கிறேன். அவ்விதம் மனம் தளரும் ஒவ்வொரு முறையும் ஆசிரியர் சௌந்தர் அனேக நூற்றுக்கணக்கான முறை வகுப்புகளில், உரையாடல்களிலும் சொன்ன சொல்லை இறுகப் பற்றிக் கொண்டேன் - ‘ச து தீர்க்க கால நைரந்தர்ய’ - நீண்ட காலம், தொய்வின்றி, பக்தியுடன் ஈடுபடும்போதுதான் சாதனா உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது என்ற பதஞ்சலி யோக சூத்திரம்தான் அது. சாதனாவைப் பொறுத்தவரையில் மூன்று வருடத்தை நீண்ட காலம் என சொல்ல இயலாது. இது ஒரு ஆரம்பம் என்ற வகையில் இப்பாதையில் நீடித்து முன் செல்வதற்கான அடித்தளம் எனக் கொள்கிறேன்.


இன்று (குருபூர்ணிமா  21-ஜூலை-2024) இப்பணி நிறைவுற்ற தருணத்தில் இது முழுமையாக குருவருள் என்று உணர்கிறேன். எழுதப் பணித்த குரு நித்யா/ஆசிரியர் ஜெயமோகன், எழுத்தெனும் யோகத்தில் இருந்து விலகாதிருக்க வழிகாட்டிய குரு சத்யானந்தர்/ஆசிரியர் சௌந்தர் அருளும் ஆசியும் வேண்டி பாதம் பணிகிறேன்!

***


ஆசிரியர் பாதங்களில் இதை சமர்ப்பித்ததுடன் என்னை இதில் இருந்து விலக்கிக் கொண்டு அடுத்த பணியை இன்று (ஆடி அமாவாசை - 4-ஆகஸ்ட்-2024)  கையில் எடுத்துக் கொள்கிறேன். (ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் அவர்களின் ‘Everyday Yogi’ மொழிபெயர்ப்பு)  அதுவும் நிறைவுடன் நிகழ குருவருளையம் இறையருளையும் நாடுகிறேன்.

Friday, April 26, 2024

விழித்திருக்கும் இரவு

பகலறியாத பாதைகளில்

இரவு நடமாடுகிறது

மணலில் கிடக்கும்

நேற்றின் பாதச்சுவடுகளில்

வெப்பம் ஏறுகிறது


யுகச்சிமிட்டலுக்குக் காத்திருந்த

அச்சிறு விண்மீன்

நீல வெளியுள்

மூழ்கி மறைகிறது


வானில் அலைகள் எழ

கடலில் விண்மீன்கள் மிதக்கின்றன

படகை செலுத்தியபடி

வலை விரிக்கிறான்

கொஞ்சமாய் துள்ளல்கள்


இன்னும் முடியவில்லை

வலைக்குள் துடிக்கும்

மீன்களின் இரவு

Tuesday, October 31, 2023

ஒரு பயணம்

செயல் தீவிரம் மிக்க, சோர்விலாத, நிறைவான, அழகான, மகிழ்ச்சியான ஒரு பயணம்.  

அக்டோபர் 14ஆம்தேதி முதல் 27 தேதி வரை இலங்கையில் யோகப் பயிற்சி வகுப்புகள் என்றதும் சில நாட்களாவது கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.  நவராத்திரி விடுமுறையை ஒட்டி அக்டோபர் 21 அன்றுதான் செல்ல முடிந்தது. முதல் ஒரு வாரத்திலேயே இரண்டு இடங்களில் ’மூன்று நாள் யோக சிபிரங்களும்’, இரண்டு இடங்களில் ’ஒரு நாள் பயிலரங்குகளும்’, ஒரு மஹாம்ருத்யஞ்சய யக்ஞமும் என மிகத் தீவிரமான பயணமாக நடந்து கொண்டிருந்தது இலங்கைப் பயணம். வகுப்புகளில் கலந்து கொண்ட சிலர் தங்கள் நட்பு/உறவு வட்டங்களில் மேலும் சிலருக்கு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்காக மேலும் சில நாட்கள் பயணத்தைத் தொடரச் சொல்லி கோரிக்கைகள். எனவே 30ஆம் தேதி வரை பயணம் நீட்டிக்கப்பட்டது. பயணத்தை நீட்டிப்பதற்கான முன்பதிவு மாற்றங்களை செய்துவிட்டு 21ஆம் தேதி  அன்று காலை கொழும்பு சென்று சேர்ந்தேன்.





அக்டோபர் 21 முதல் 29 வரை நடந்த அனுபவங்களே முதல் வரியில் குறிப்பிட்டது. ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி இரவு பத்து-பதினொரு மணி வரை செயல்களால் நிரம்பிய ஒன்பது தினங்கள். 

வழக்கமான பயணத்தில் இருந்து எவ்வகையில் இது வேறொரு அனுபவமாக இருந்தது என்பதையே தொகுத்துக் கொள்ள முயல்கிறேன்.

ஒரு பயணம் என்றதுமே மனதில் எழும் எதிர்பார்ப்புகள், அந்த இடம் தொடர்பான தகவல்களை வாசிப்பது, எங்கெங்கு செல்லலாம் எனத் திட்டமிடுவது என சில நாட்கள் கழியும். இந்த முறை அவை ஏதும் நிகழவில்லை. யோகப் பயிற்சிகள் சார்ந்த பயணம் என்பதாலும் மற்றொருவர் இட்டிருக்கும் திட்டத்தில் கலந்து கொள்ளவே செல்கிறேன் என்ற பிரக்ஞையாலும் எந்தத் திட்டமிடலும் இல்லாது பயணம் தொடங்கியது.


இருப்பினும் மனப்பழக்கம் அவ்வளவு எளிதில் விலகுவதில்லை. செல்வதற்கு இரு தினங்கள் முன்னர் சிவானந்தர் மேற்கொண்ட இலங்கைப் பயணம் குறித்து இணையத்தில் ஏதேனும் தகவல்கள் இருக்கிறதா என்ற தேடல் துவங்கியது.  ஸ்வாமி சிவானந்தர் 1950 செப்டம்பர் முதல் நவம்பர் வரை இந்தியா முழுக்கப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ரிஷிகேஷ் தொடங்கி, தில்லி, லக்னோ, ஃபைஸாபாத், பனாரஸ், பட்னா, கயா, ஹாசிப்பூர், கல்கத்தா, ராஜ்முந்த்ரி, கோவூர், விஜயவாடா, மெட்ராஸ், விழுப்புரம், சிதம்பரம், மாயவரம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, மதுரை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மன்னார், கொழும்பு, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பெங்களூர், மைசூர், ஹைதராபாத், பூனே, பாம்பே, அமல்ஸாத், பரோடா, அஹமதாபாத் சென்று ரிஷிகேஷ் திரும்பியிருக்கிறார். இந்த அனைத்து இடங்களிலும் உரை நிகழ்த்தியிருக்கிறார். அவை மொத்தமும் “இமயம் முதல் இலங்கை வரை (சுவாமி சிவானந்தரின் யாத்திரைச் சொற்பொழிவுகள்)”  SIVANANDA’S LECTURES: ALL-INDIA AND CEYLON TOUR IN 1950"   என்னும் தற்போது பதிப்பில் இல்லாத புத்தகத்தில் இருக்கிறது என்றறிந்து மேலும் மேலும் இணையத்தைத் தேடி புத்தகத்தின் மின்வடிவும் கிடைத்தது. 


இந்த அனைத்து இடங்களுக்கும்  ஸ்வாமி வெங்கடேசானந்தா என்பவர் உடன் பயணம் செய்து அங்கு ஆற்றிய உரைகள் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். அதில் கொழும்பின் விவேகானந்த சபை நூலகத்தில் சிவானந்தர் ஆற்றிய உரை குறித்தும், இலங்கை வானொலியில் அவர் ஆற்றிய உரை குறித்தும் வாசித்தேன். 





அதே கொழும்பு விவேகானந்த நிலையத்தில் நான் சென்று சேர்ந்த மறுதினம் குருஜி சௌந்தர் உரையாற்றுவதைக் காணக் கிடைத்ததை தற்செயல் என்று எவ்விதம் கொள்வது. 22ஆம் தேதி மாலை விவேகானந்த சபை நிர்வாகிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் நிறைந்த சபையில் யோக மரபு குறித்து ஆசிரியரின் உரையும் சில யோகப் பயிற்சிகளும் நடைபெற்றது. வாணி பூஜை என்ற பெயரில் அனைத்து கல்வி நிலையங்களிலும் நவராத்திரி விழா நடந்து கொண்டிருந்தது. அங்குள்ள நூலகத்தில்தான் சிவானந்தர் உரையாற்றியிருக்கிறார்.  காந்தி,  இந்திரா காந்தி, சரோஜினி நாயுடு, ராஜாஜி எனப் பலரும் வந்து சென்ற நூலகம். ம.ரா. ஜம்புநாதன் அவர்கள் மொழிபெயர்த்த யஜுர்வேதம், மெட்ஸ் ருடால்ஃப் எழுதிய 'A hundres years of British Philosophy', G அவினாஷ் பாண்ட்யா எழுதிய 'The Art of Kathakali' எனப் பல பழைய அரிய புத்தகங்கள் அங்கு இருந்தன. 






22ஆம் தேதி காலை இலங்கையின் வீரகேசரி இதழில் அதற்கு முந்தைய வாரம் நிகழ்ந்த யோக வகுப்புகள் குறித்த கட்டுரையும் வெளியாகியிருந்தது. அந்த ஒரு வாரத்திலேயே 150க்கும் மேற்பட்டவர்களை சத்யானந்தரும சிவானந்தரும் குருநித்யாவும் சென்றடைந்திருந்தார்கள். இந்த குருமார்களின் பெயர்கள் ஒலிக்காத ஒரு அவையும் இல்லை. 


மேலும் அன்று காலை ஆன்மீக சொற்பொழிவாளரும், இலங்கை கம்பன் கழகத்தை ஏற்படுத்திய முன்னோடியுமான இலங்கை ஜெயராஜ் அவர்களை சந்திக்க நேர்ந்ததும் மிக முக்கியமான நிகழ்வு. பெற்ற புகழ் எவ்விதத்திலும் தன்னைத் தீண்டாத மனிதர். மிகவும் நேரடியாக உரையாடத் தொடங்கினார். சைவ சித்தாந்த சாதகராகவும் விற்பன்னராகவும் இருப்பினும் திறந்த நோக்கோடு யோகம் குறித்தும் சாங்கியத்தை அடிப்படையாகக் கொண்ட யோகம் இறைபக்தியை எவ்விதம் உள்ளடக்குகிறது என்பது குறித்தும் குருஜியிடம் உரையாடினார். 



ஆன்மீகத்தில் இதுதான் அறுதியான வழிமுறை என்று ஏதும் இருக்க இயலாது; இவ்வுலகில் எத்தனை ஆத்மாக்களோ அத்தனை வழிபாட்டு முறைகள் என்ற கருத்தை சொன்னார். வழிபடுபொருள், வழிபாடு, வழிபடுபவன் மூன்றும் ஒன்றாதல் ஞானம் என்ற அவரது வரியை அறிதல்-அறிபடுபொருள்-அறிபவன் மூன்றும் ஒன்றாகும் நிலையே முக்தி என்ற அத்வைத வரியோடு வைத்து உணர முடிந்தது. 'ஒவ்வொருவருக்கும் அவர் கைக்கொள்ளும் தோத்திரமும் அதற்குரிய சாத்திரமும் இருக்க வேணும், அதுதான் எங்களுக்கு சைவமும், சைவ சித்தாந்தமும்' என்றார். ஒவ்வொரு சாதனாவுக்கும் (பயிற்சி முறைக்கும்) பின்னால் இருந்தாக வேண்டிய தத்துவம் குறித்து ஜெ ஆற்றிய குருபூர்ணிமா உரையை எண்ணிக் கொண்டேன். நிர்ஈஸ்வர சாங்கியம் - சஈஸ்வர சாங்கியம் தொடங்கி, இருபா இருபதின் அமைப்பு, அருநந்தி சிவாச்சாரியர் ,ஆன்மீகமாக சரியான பாதையில்தான் இருக்கிறோமா என்று எப்படி அறிவது, சிவானந்த-சத்யானந்த மரபு எனப் பல தளங்களில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீண்டது அவ்வுரையாடல். நாங்கள் அவரை சந்தித்த கொழும்பு கம்பன் கழகத்துக்கு எதிரிலேயே அவர் முயற்சியில் கட்டப்பட்ட ஆலயம் இருந்தது. முப்பெரும் தேவியரின் ஆளுயர சிற்பங்கள் கருவறையில் வீற்றிருக்க நாங்கள் சென்ற போது துர்காஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றைக் குறிக்கும் நான்கு தளங்கள் கொண்ட ஆலயம். சரியை தளத்தில் பூசைகள் நிகழும் தேவியர் கருவறை. சுற்றிலும் யோக ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி என அற்புதமான சிற்பங்கள் வீற்றிருக்கும் கருவறைகள். இரண்டாம் தளமான கிரியையில் அருவ வழிபாட்டுக்கான சிவம். யோகத்துக்கான மூன்றாம் தளத்தில் பல முக்கிய குருமார்களின் உருவப்படங்கள் நிறைந்த தியான மண்டபம்.  விரிவெளி நோக்கித் திறந்திருப்பது ஞானம். ஒளியும் காற்றும் ஊடாட கடலையும் வானையும் சட்டமிட்ட ஒரு சிறு மண்டபம் மட்டும் நான்காம் தளத்தில். நல்லதொரு அனுபவம்.

 

மறுதினம், சச்சிதானந்த மாதா என்ற இலங்கையைச் சேர்ந்த சிவானந்தரின் சிஷ்யைகளில் ஒருவரின் குருமரபில் வந்த வியாசா என்ற யோக ஆசிரியரின் நவீன யோகப் பயிலரங்கில் பிரத்யாஹாரப் பயிற்சிகள் குறித்த இரண்டு மணிநேர உரையும் பயிற்சியும் நடந்தது. 



ஒவ்வொரு அரங்கிலும், வகுப்பிலும், முதலில் உள்ளே வருபவர்களின் உடல்மொழி, முகத்தோற்றம் அனைத்தும் பயிற்சிக்கு பின்னர், தொடரும் கலந்துரையாடலுக்கு பின்னர் வேறொன்றாக உருமாறுவதைக் கண்கூடாகக் காணக் கிடைத்தது. ஆசிரியர் சௌந்தர் ஏற்கனவே நிலவி வரும் யோகம் குறித்த மாயைகளை, மூடநம்பிக்கைகளை, அதன் உள்ளீடற்ற நவீன வடிவை, மலர்ந்த முகத்துடன் உடைத்துப் போட்டுக்கொண்டே வந்தார். 


இப்பயணத்தின் மிகச் சிறந்த அனுபவம் என்பது மலையக கிராமத்துப் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த யோக வகுப்புகள். இப்பயணத்தை ஏற்பாடு செய்த ரிஷி(ரிஷாந்தன்) என்பவர் பயின்ற பள்ளி அது. அவர் அந்த கிராமத்தில் பிறந்து, கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றமையால் அரசாங்க உதவித்தொகை பெற்று இலங்கையின் முதன்மையான பொறியியல் கல்லூரி ஒன்றில் பயின்றதன் வாயிலாக வெளியுலக அனுபவம் பெற்று இந்தோனேசியாவில் வெற்றிகரமான பொறியியலாளராக இருப்பவர், இலக்கிய வாசகர். தியான, யோக மரபுகளில் அனுபவம் கொண்டவர். அவரும் அவரது உறவினர்கள் சிலரும் பள்ளி இறுதியாண்டு படிக்கும்(A Level, O Level) மாணவர்கள் 200பேருக்கு ஒரு மணிநேரம் யோகம் குறித்த அறிமுக வகுப்பாக இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்.




கொழும்பில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு சிற்றூர் பள்ளி - வெஸ்ட்ஹோல் வித்யாலயம். மரங்கள் ஊடாக மேகம் இறங்கி நின்ற சாலைகள். சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள். மலைகள் தாயினும் பரிந்து மடிகனிந்து நூற்றுக்கணக்கான அருவிகளாக பல இடங்களில் சலசலத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. வளைந்து நெளிந்தேறும் சாலையில் முன்னால் செல்லும் பேருந்தைத் பின்தொடர்ந்த பயணம். பள்ளி வாசலில் பேருந்து நிற்க ஐம்பது அறுபது பிள்ளைகள் வந்து இறங்கினார்கள். பேருந்தே அப்பள்ளி நிறுத்தத்தோடு காலியாகி விட்டது. இறங்கிய மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் பள்ளி வாயிலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். 



பெரும்பாலும் தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி. நான்கைந்து தலைமுறைகளாகியும் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லாத வாழ்க்கைத் தரம். வறுமை, கல்வியின் மீது அக்கறை காட்டக்கூடிய பெற்றோர் இல்லாத சூழலைச் சேர்ந்த குழந்தைகள், பதின்ம வயதுகளில் தடுமாறிவிடக்கூடிய வாழ்க்கைச் சூழல், அதிகபட்சம் வண்டி ஓட்டுனர் ஆவது, கடையில் வேலைக்குப் போவது போன்ற கனவுகளுக்கே அறிமுகம் உள்ள குழந்தைகள் என அங்குள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் பற்றி ரிஷியின் உறவினர் ஆசிரியை உமா மகேஸ்வரி பின்னர் உரையாடிய போது கூறினார்.   


அப்பிள்ளைகள் அறிந்தோ அறியாமலோ, அவர்களை அச்சூழலிருந்து கையேற்றி விடக்கூடிய கலைமகள் வீற்றிருக்கும் தலம் அப்பள்ளி. அவர்கள் கற்பிக்கப்பட்ட பழக்கத்தால் வணங்கிய வாணி ஒரு கணமிறங்கினாலும் அங்கிருந்து மற்றொரு ரிஷி உருவாகி வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது. குருஜி சௌந்தர் அம்மாணவர்களோடு ஒரு விளையாட்டில் தொடங்கி இயல்பாகச் சிரிக்கச் செய்து 'கல்பகவிருட்சம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் நான்கு யோகப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் நம்மூர் மாணவர்களோடு அந்த மாணவர்களின் ஒழுங்கையும், கவனக்குவிப்பையும், தீவிரத்தையும் ஒப்பிடவே முடியாது. அந்த ஒரு மணிநேரமும் மிக ஆழமாக ஒன்றிப் போயிருந்தனர். இது போன்ற இடங்களிலும் விழும் விதைகள் சிறுதுளி நீர் பட உயிர்த்தெழக்கூடியவை. இங்கு மேன்மேலும் இது போன்ற பெருஞ்செயல்கள் நிகழ வேண்டும், நிகழப்போகிறதெனத் தோன்றியது. அப்பள்ளியின் அதிபரும் ஆசிரியைகளும் எந்த ஒரு அதிகார பாவனைகளும் இன்றி மிகுந்த ஆர்வத்தோடு பயிற்சியிலும் பங்கேற்றனர். இதுபோன்று மேலும் பல வகுப்புகள் நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தனர்.


அங்கிருந்து கொழும்பு திரும்பியதும் இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினியின் தமிழ் அலைவரிசை நேத்ரா டிவியில் மரபார்ந்த யோகம் தொடர்பான ஒரு அறிமுக நேர்காணல் இருந்தது. இன்னும் இரு வாரங்களில் அது ஒளிபரப்பாகும். ஓரிரு தினங்களில் ஏற்பாடான நிகழ்வு அது. வழக்கமாக இரண்டு மூன்று வாரங்கள் முன்னதாகவே அந்நிகழ்வுக்கான விருந்தினர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுவிடுவார்கள், இவ்வளவு குறுகிய நாட்களில் ஏற்பாடானது அதிசயம்தான் என நிகழ்ச்சியின் இயக்குனர் கூறினார். குருவின் கையில் கருவி எனத் தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் போது பெருநிகழ்வுகள் தன்னைத் தானே நிகழ்த்திக் கொள்வதை அனுபவபூர்வமாக பார்க்க முடிந்தது.



அன்று மதியம் ஒரு அழைப்பு வவுனியாவில் இருந்து ஒரு நண்பர், அருள் என்பவர் அழைத்திருந்தார். எழுத்தாளர் சாருவின் வாசகர். இலங்கையின் முதல் யோகப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர். தான் பெற்ற அனுபவத்தைத் தன் மக்களுக்குக் கொண்டு செல்ல முடியுமா என்ற தவிப்பு கொண்டிருந்தார். பயணத்தில் இரு நாட்களே எஞ்சியிருந்த சூழலில் இது எப்படி சாத்தியம் என மலைப்பாக இருந்தது (எனக்கு). ஒரு நொடியும் தயங்காமல் ’நாளை அங்கு வந்து விடுகிறோம், காலையில் ஏற்பாடு செய்து விடுங்கள்’ என்றார் ஆசிரியர் சௌந்தர். எந்தப் பயண ஏற்பாடுகளும் அதுவரை இல்லை. குழந்தையை மற்றொரு ந்ண்பர் இல்லத்தில் விட்டுவிட்டு குருஜியும் அவர் மனைவியும், நானும் வவுனியாவுக்கு பேருந்தில் பயணமானோம். ஆறு மணிநேரப் பயணம். அதிகாலை மூன்று மணிக்கு வவுனியா. அருகே ஒரு குளங்கள் சூழ்ந்த அழகிய சிற்றூரில் மணிபுரம் மீனாட்சி ஆலயத்தில் எட்டு மணிக்கு யோகப் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்திருந்தனர். பதினைந்து பேர் கலந்து கொண்டனர். சிறப்பான உரையும் வகுப்பும். அதன் பின்னர் நிகழ்ந்த கலந்துரையாடலில் இலக்கிய வாசகர்களும் பயிற்சி மருத்துவர்களுமான மூவர் பேசினர். அவர்களுக்கான சொற்களை அவ்வுரையாடலில் இருந்து அவர்கள் பெற்றுக் கொண்டனர் எனத் தோன்றியது. சிவானந்தரும் ஒரு நவீன மருத்துவராக இருந்ததும், அப்துல் கலாம் சிவானந்தரை சந்தித்த முக்கிய தருணம் குறித்தும் பேச்சு வந்தது. அதன் பின்னர் 'உங்களைப் பற்றி ஜெ தளத்திலும், சாரு தளத்திலும் வாசித்த போது ஒரு மாபெரும் வணிக அமைப்பின் உச்சத்தில் இருப்பீர்கள் என எண்ணினோம். எப்படி இவ்வளவு எளிதாக அணுகக் கூடியவராக, கூப்பிட்ட மாத்திரத்தில் இங்கு வந்து எங்களோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் எதிர்பார்த்து வந்திருக்கக்கூடிய அளவு கூட்டமும் இங்கில்லை. உங்களை ஆதாயம் நோக்காது இயங்க வைப்பது எது?" என உளம் பொங்க அந்த இளம் மருத்துவர் குருஜியிடம் கேட்டார். 'வகுப்புக்கு வருபவர் ஒரே ஒருவர்தான் என்றாலும் ஓராயிரம் பேர் என்றாலும் வழங்கப்படுவது ஒன்றாகத்தான் இருக்கும். எனவே ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை' எனத் தொடங்கி ஆத்மார்த்தமான உரையாடல் ஒன்று அங்கு நிகழ்ந்தது.



இந்த பதினைந்து தினங்களில் நவீன யோக அரங்குகளில், மரபார்ந்த பள்ளிகளில், பொது அரங்குகளில், கிராமப்புறப் பள்ளிகளில், சிற்றூர்களில், கோவில்களில், இல்லங்களில், தன்னார்வ நிறுவனங்களில் என ஆறு வயது தொடங்கி அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை, ஆசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், யோக சாதகர்கள், யோக ஆசிரியர்கள், தொழில்முனைவோர் எனப் பலதரப்பினரிடையே, தமிழர்கள், சிங்களவர்கள் என்ற பாகுபாடின்றி ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 350க்கும் மேற்பட்டோரை யோகம் சென்றடைந்திருக்கிறது. பலரும் உள்ளூர ஒரு தொடுகையை, மாற்றத்தை உணர்ந்து குருஜியோடு உரையாடினர். இதில் ஒரு சிலரேனும் வாழ்நாள் சாதகர்கள் ஆகப்போகும் சாத்தியம் கொண்டவர்கள். 



தனிப்பட்ட முறையில், இப்பயணம் தொடங்கிய போது எனக்கு மனதோரத்தில் ஒரு சில தயக்கங்கள் இருந்தன. புதிய மனிதர்களோடு தங்குவது, பயணிப்பது,  பயணத்தில் நான் ஆற்றக்கூடியது என ஏதுமில்லையே, அவர்களுக்கு நான் ஏதேனும் சிரமம் கொடுத்து விடுவேனோ என்பது போன்ற தயக்கங்கள், வழக்கமான மனப்பிசுக்குகள். ஆனால் களத்தில் இறங்கிய பின் 'நான்' எங்கும் எழவேயில்லை. வெறும் சாட்சியென பெருநிகழ்வுகள் அருகே இருந்திருக்கிறேன். மாணவியென ஆசிரியர் காலடியில் அமர்ந்திருக்கிறேன். பயணத்தின் செயல்தீவிரத்துக்கு ஒப்புக் கொடுத்து ஓடியதில் எந்தத் தயக்கங்களும் தலை தூக்கவே இல்லை. எல்லையற்ற நிறைவு ஒன்றை மனம் உணர்கிறது. அது ஏனென்று எண்ணிப் பார்த்ததில் ஒன்று தோன்றியது. பெரும்பாலும் இதுவரை மகிழ்ச்சி என்பது தன்னடையாளம் சார்ந்ததாக, ஆணவநிறைவு சார்ந்ததாக தன்னை முன்னிறுத்தியதாக இருந்திருக்கிறது. அறிவு சார்ந்த செயல்களில் கூட, கற்றலில் கூட நுண்ணியதான ஆணவ நிறைவொன்றை மனம் எதிர்பார்க்கவே செய்கிறது.  தன்னடையாளங்களில்லாத மகிழ்ச்சியை உணர வாய்ப்பும் அனுபவமும் எளிதில் அமைவதில்லை. பயணங்களில், கலையில் கரைந்து போவதை இதுபோன்ற ஒரு ஆனந்த அனுபவமாக இதற்கு முன்னர் சிலமுறை உணர முடிந்திருக்கிறது.  ஆனால் எல்லா அடையாளங்களையும் துறந்த மகிழ்ச்சி இது. இங்கு தொழில்சார்ந்தோ, திறன் சார்ந்தோ, எந்த அடையாளங்களும் இல்லை. பெருஞ்செயல் ஒன்றில் கரைந்து போய் தன்முனைப்பு ஏதுமின்றி மகிழ்ந்திருந்த நாட்கள் இவை. எனவே உடல், ஆற்றல், மனம், உள்ளுணர்வு என அனைத்து தளங்களிலும் ஆனந்தத்தை தொட்ட பயணம்.  ஒன்றரை வருட யோகப் பயணம் இந்தப் பயணத்தை சாத்தியமாக்கியிருக்கிறது. 

இது தவிர இப்பயணம்  ரிஷி-மிராண்டி, குணா - பிரேமினி, உமா, பிரசான், அருள் போன்ற தன்னல எதிர்பார்ப்புகள் இல்லாத இணை மனங்களை, சில வாழ்நாள் நட்புகளை பெற்றுத் தந்திருக்கிறது.  இவர்கள் அனைவரும் இந்த நாட்களில் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் பெரும் உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். சிரமங்களையும் அசௌகரியங்களையும் பொருட்படுத்தாது முகமலர்ச்சியோடு அனைத்துக் காரியங்களிலும் உடன் நின்றிருக்கிறார்கள். எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்திருக்கிறார்கள், அடைந்திருக்கிறார்கள்.

எல்லையற்றதொன்றை அனுபவமாக அளித்துக் கொண்டே இருக்கும் ஆசிரியர் சௌந்தருக்கு நன்றி! 


1950களில் சிவானந்தர் தொடங்கிய பயணம். அன்று அவர் சொற்களை விதைத்துச் சென்ற நிலம். அன்று அச்சொற்களை உள்வாங்கிய ஆத்மாக்கள் அதன் வழிவந்தோரென இன்றும் அந்நிலத்தில் தாகத்துடன் காத்திருக்கக் கூடும். சிறுதூறல் எனத்தொடங்கியிருக்கும் இது பெருமழையென நனைக்கட்டும். சிவமும்  சத்யமும் நித்யம் தழைக்கட்டும்.


நவநாதசித்தர் ஆலயம் என்ற ஒரு மலைச் சிற்றூர் ஆலயத்துக்கு செல்லும் வாய்ப்பும் ஒரு நாள் அமைந்தது. நாவலப்பிட்டியவில் இருந்து மிக மோசமான சாலைகள் வழி, எழிலான காட்சிகள் உடன்வர ஒன்றரை மணி நேரப் பயணம். சித்தர் ஒருவர் ஜீவசமாதியான தலம். முருகன் ஆலயமும் அருகில் சித்தர் சமாதியும். அங்கு அமர்ந்து ஜபமாலையோடு ஆளுக்கொரு புறம் தியானத்தில் அமர்ந்திருந்தோம். கண் மூடி அமர்ந்திருக்கையில் இரு தேயிலைத் தோட்டப் பெண்கள் அங்கு வந்தனர். ஆலயப் பூசகரிடம் 'அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்களுக்குக் கற்றுத் தந்தால் நாங்களும் செய்வோம் அல்லவா?' என்றார் ஒரு பெண். 'சும்மா இரு, என அடக்கிய மற்றவளை அமர்த்தி, 'ஏன் நமக்குக் கத்துக் கொடுத்தால் நாமும் செய்யலாமே' என்று மீண்டும் சொன்னாள். குருஜி கண்விழித்துப் பார்க்கும் முன்னர் சிறிது தொலைவு சென்றுவிட்டனர். அந்தப் பெண்ணிடம் அடுத்த முறை நிச்சயம் அவருக்கு கற்றுக் கொடுப்பதாக சொல்லுமாறு கோவில் பூசகரிடம் குருஜி சொன்னார். 


தலையில் துணி கட்டியபடி தோட்ட வேலையிலிருந்து வீடு திரும்பும்  தோற்றம். வாழ்க்கையே போராட்டமாக இருக்கக்கூடிய சூழல். விஜயதசமி அன்று ஒரு சித்தர் முன்னிலையில், ஒரு ஆசிரிய மரபின் முன் எனக்கு தீட்சை கிடையாதா எனக் கேட்டு விட்டுப் போயிருக்கிறாள். அவளுக்கு உறுதியாகக் கதவு திறக்கும். அப்படி ஏதோ ஒரு பிறவியில் கேட்டதன் பலன்தான் இன்று இப்படி ஆசிரியருடன் அமரும் அனுபவம் வாய்த்திருக்கிறது. சிவானந்தரையும் சத்யானந்தரையும் சில கணங்களேனும் உணர நேர்ந்திருக்கிறது.

இதை எழுதுவதும் கூட இந்த நொடி வரை யாரிடமும் பகிர்ந்து கொள்வதற்காக இல்லை. யாருக்கேனும் இவ்வனுபவங்கள் என்றேனும் பயன்படலாம் என்ற உள்ளுணர்வால் இதைப் பதிவிடுகிறேன்.

Wednesday, August 9, 2023

அருமணி

சென்ற வருட எகிப்து பயணத்தின் போது செங்கடல் பகுதியில் பவளப்பாறைகளையும் ஆழ்கடல் உயிரிகளையும் காண ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்கு நீச்சலோ ஸ்க்யூபா டைவிங்கில் முன்னனுபவமோ பயிற்சியோ தேவையில்லை. நம்மோடு தேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள், ஸ்க்யூபா டைவர்கள் இருப்பார்கள். படகில் நம்மை பவளப்பாறை பகுதிக்கு அழைத்துச் சென்று, அதற்கான உபகரணங்களையும் பாதுகாப்பு ஆடைகளையும் அணியச் செய்து, நீரில் இறங்கச் செய்வார்கள். அங்கு நீரில் மிதந்தபடி கடலாழத்தைக் காண வேண்டியதுதான் திட்டம்.


ஒரு பெரிய விசைப் படகில் அனைவரும் பயணம் செய்தோம். பச்சையும் நீலமுமான கடல் வெளி. ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு எங்களைப் போலவே வேறு சில படகுகளும் ஒரு இடத்தில் குழுமியிருந்தன. அனைத்துப் படகுகளும் சற்றே விரிந்த வட்டமாக நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு படகில் இருந்தும் ஸ்க்யூபா டைவர்களும் தேர்ந்த நீச்சல்காரர்களும் முதலில் கடலில் இறங்கினர். நாம் பயணித்த படகிலிருந்து சற்றே விலகி நடுப்பகுதியில் கைகளைக் கோர்த்துக் கொண்டு முகத்தை கடலாழத்தை நோக்கி வைத்துக் கொண்டு நீரில் மிதந்தபடி ஆழுலகைக் காண வேண்டியதுதான். அணிந்திருக்கும் மிதவை ஆடைகளால் நாம் நீரில் மூழ்க வாய்ப்பில்லை. வாயில் நுழைத்துக் கொண்டிருக்கும் ஸ்க்யூபா சுவாசக் குழாய் வழியாக மூச்சை வெளியே விடுவதற்கு மட்டும் சற்றுப் பழகிக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுப்பது வழக்கம் போல நாசித் துவாரங்கள் வழியே நடக்கலாம். அதெல்லாம் முதல் சில நிமிடங்களில் பழகி விட்டது. நீரில் இறங்குவதற்கு படகிலேயே ஒரு ஏணி இருக்கும். நீச்சல் தெரிந்தவர்களும் துணிச்சல் உள்ளவர்களும் நேரடியாகக் கடலில் குதிக்கலாம், மற்றவர்கள் அந்த ஏணியைப் பற்றி மெதுவாக இறங்கலாம். நீரில் குதித்ததும் நம்மை நீச்சல் வல்லுனர்கள் பற்றிக் கொண்டு ஏற்கனவே மிதந்து கொண்டிருப்பவர்களுடன் கைகளைப் பிணைத்துக் கொள்ள அழைத்துச் செல்வார்கள். இதுதான் திட்டம்.


அந்த நிமிடமும் வந்தது. ஒருவர் பின் ஒருவராக உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும், அச்சத்துடனும், ஆர்வத்துடனும் என்னுடன் வந்த பத்து பேர் இறங்கி விட்டனர். அவரவர் இயல்புக்குத் தக்கபடி கூச்சலிட்டுக் கொண்டோ, சிரித்துக் கொண்டோ, புகைப்படங்கள் எடுக்க கைகளை ஆட்டியபடியோ குழு கடலில் அணி வகுத்தது. நான் ஒவ்வொருவரையாக அனுப்பி விட்டு இறுதி ஆளாக மிக மெதுவாக ஏணியில் கால் வைத்து நீரில் இறங்கினேன். உடலின் பாதிப் பகுதி கடலுக்குள். சிங்கையில் நீச்சல் கற்றுக் கொள்ள முயற்சி செய்தது நினைவுக்கு வந்தது. அது பல ஆண்டுகள் பல முறை முயற்சியாக மட்டுமே நீடித்த ஒன்று எனது நீச்சல் முயற்சி. நீரில் மிதக்கவும், ஒரு சில அடிகள் நீச்சல் அடிக்கவும் பயின்றிருந்தேன். ஆனால் அப்போதும் கரையை விட்டு நீருள் பாயும் தருணம் ஒரு பெரிய அச்சம் வந்து கவிந்து விடும். மிக மெதுவாக அதை வெல்ல முயன்று கொண்டிருந்தேன். முழு வெற்றி கிட்டவில்லை. அது போல இதோ ஒரு தருணம். 


 நீரைக் காணும் போதெல்லாம், அது ஆறோ, கடலோ, அருவியோ அதில் இறங்கிவிடும் ஆர்வம் கட்டின்றி இருப்பதால் எல்லா இடங்களிலும் நீரில் இறங்கி விடுவதும் வழக்கம்தான். பயணங்கள் செய்யவும் எங்கோ அறியா நிலமொன்றில் அறியா கடல் ஒன்றில் இறங்கும் வரை வாழ்க்கை வாய்ப்புகளை அருளியிருக்கிறது. கடலுள் பாதி காற்றில் பாதியாய் நிற்கிறேன். இறங்கு இறங்கு என டைவரின் குரல். மெதுவாக காலை படிகளில் இருந்து விலக்கி நீரில் மிதக்க முயற்சிக்கிறேன். ஏணியைப் பற்றியிருக்கும் கை மேலும் இறுக்கமாக ஏணியைப் பற்றுகிறது. உடன் வந்தவர்களும் என் பெயர் சொல்லி உற்சாகப் படுத்துகின்றனர். கடலில் மிதக்கிறேன். ஆனால் படகின் பிடியை விடவில்லை. கையை விட்டால் மூழ்க மாட்டேன். மிதவை உடை இருக்கிறது. தேர்ந்த நீச்சல்காரர்கள் ஒரு அடி தொலைவில். பெரிய டைவர்கள் குழுவே அங்கே இருக்கிறது. ஒரு கணம் பிடியை விடவேண்டும், உடலை உந்தித் தள்ள வேண்டும். என் குழுவை அடைந்து விடுவேன். முடியவில்லை. அந்த தருணத்தின் அரிய தன்மை நன்கு தெரிகிறது. இவ்வளவு தொலைவு வந்துவிட்டேன். இதுதான் அந்தக் கணம். ஆனால் அங்கேயே மிதந்தபடி கண்களை நீருள் விரிக்கிறேன். வண்ணமயமாய் கடலாழம். கண்ணில் படும் அந்த ஆயிரம் வண்ணங்களுக்கு மீன்கள் என்று பெயர். பல வண்ணப் படிவங்கள். ஆழம். வெகு ஆழம். விட்டுவிடு என ஒரு குரல். கனத்த உலோக உருண்டை போல அடிவயிறு ஆழத்தை உணர்கிறது. அடுத்த கணம் நீரில் இருந்து ஏணியில் மேலறி நின்று விட்டேன். சுற்றிலும் இருப்பவர்களின் ஏமாற்றக் குரல்கள் என்னுடைய உள்ளாழத்தின் ஏச்சை விடக் குறைவுதான். அரியதொன்றை அச்சத்திற்கு முன் கைவிட நேர்ந்த நாள்.


சிறு வயதின் நினைவுத் துணுக்குகள். பல்வேறு நினைவுகள் அச்சத்தால் ஆனவை. பயணங்களில் நெடிதுயர்ந்து உடன் வரும் மலைத்தொடர்கள் குறித்த அச்சம். மிகச் சிறு வயதில் நீண்ட பெருங்கடல் ஒன்றை இருள்மாலைப் பொழுதில் முதன்முதலாய் கண்ட ஒரு திகைப்பின் கணம் பயம் என்றே உள்ளே பதிவாகி இருக்கிறது. விளக்கு ஏற்றுவதற்கு தீக்குச்சியைப் பற்ற வைக்க, சைக்கிளில் ஏறி அமர, புதிய நபர்களை சந்திக்க, புதிதாக வாங்கிய சுடிதார் என்னும் ஆடையைத் தலை வழியாக அணியும் போது மூச்சு முட்டுமோ என, தீபாவளி நாளின் வெடிகளும் மத்தாப்புகளும் (ஆம் கம்பி மத்தாப்பு உட்பட) என, தெரு என்பதே நாய்களின் குரைப்பால் ஆனது என, என் அச்சத்தின் கணக்குகள் எண்ணிக்கையைத் தோற்கடிப்பவை.

'அட மக்குக் கழுதை' என தாத்தா கடிந்து கொண்ட தருணங்களும் இதுபோன்ற பயங்கள் தொடர்பானவைதான்.


எனக்கு ஏழெட்டு வயதில் தாத்தா யோகப் பயிற்சிகள் தொடங்கினார்கள். பத்மாசனம், த்ரிகோணாசனம் தொடங்கி பல்வேறு ஆசனங்கள். சர்வாங்காசனம் வரை எல்லாம் இனிதாகச் சென்றது. சர்வாங்காசனம் தொடங்கியதும் வந்தது பிரச்சனை. படுத்துக் கொண்டு காலை மெதுவாகத் தூக்கி உடலை ஒட்டுமொத்தமாக கைகளில் தாங்கிக் கொண்டு நிற்க வேண்டும். உடலில் தோள்பட்டையும் கழுத்தும் தலையும் தவிர அனைத்தும் மேலே காற்றில். எனக்கோ சாய்வுநாற்காலியில் பின்னால் சரிவது கூட பயம். அதனால் இதை செய்ய முடியாது என்றேன். தாத்தா விடுவதாக இல்லை. காலைத் தூக்க வேண்டிய பயிற்சி எனப் புதிதாக சுடிதார்-பைஜாமா வேறு. அதை அணிவதே பெரும் பிரயத்தனம். தினமும் பயிற்சி ஆரம்பித்து சர்வாங்காசனம் வந்ததும் கண்ணீரும் கம்பலையுமாகி விடுவேன். 'காலைப் பிடித்துக் கொள்கிறேன், விழமாட்டாய்' என்ற தாத்தாவின் உத்தரவாதங்களும் என்னை ஆற்றவில்லை. வானோக்கி உயர்ந்த கால்களுடன், உறுதியான உடலுடன் தாத்தா தினமும் சர்வாங்காசனத்திலும், சிரசாசனத்திலும் தலைகீழாக நிற்பதைப் பார்க்கும் போது ஆர்வமாக இருக்கும். ஆனால் நான் செய்ய எண்ணி காலைத் தலைக்கு மேல் உயர்த்தும் போது அடிவயிறு நடுங்கிவிடும். ஒரு முறை கூட செய்ய முடியவில்லை. நாலைந்து வாரங்களுக்குப் பின் அம்முயற்சி கைவிடப்பட்டது. அரியதொன்று தொடராது நின்று போன தருணம்.



நான் சில வருடங்கள் முன்னர் தனித்த பயணங்கள் தொடங்கியதும் அச்சங்களை எதிர்கொள்ளத்தான். அதிலும் முதல் பயணமே இமயத்தில் தொடங்கியது மலை குறித்த வசீகர அச்சத்தை எதிர்நோக்கத்தான். ஆம் வசீகரிப்பவை அனைத்தின் ஆழத்திலும் அச்சம் உறைகிறது. அறியமுடியாமை தரும் அச்சம். முடிவின்மை தரும் அச்சம். பேரழகு, பேரியற்கை, முற்றமைதி, கடல் ஆழம், காரிருள், வன்பாலை, விரிபனி என அனைத்து வசீகரங்களும் அச்சத்தின் அடிநாச் சுவையோடு தித்திப்பவையே . மறுக்க முடியாத, மறுக்க ஒன்னாத அழைப்புகள் அனைத்தும் அச்சத்தின் ஆடை அணிந்தே முன்னே வருகின்றன. நிலையாமையும் உட்பொருளில்லாமையும் அச்சத்தை அளிப்பவைதான். அவை முன்னோக்கி நகர உதவுபவை. மேலும் ஆழமானவை. அவை குறித்துப் பேசும் அனுபவம் இன்றில்லை. 


இன்று எதற்காக அச்சங்கள் அனைத்தும் மேலெழுந்து வருகிறது?

 

நாளையுடன் குருஜி சௌந்தரிடம் யோக ஆசிரியப் பயிற்சி தொடங்கி ஒரு வருடமாகிறது. சென்ற இரு வாரங்களாக சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹாலாசனம். அதைப் பார்த்ததும் சர்வமும் நடுங்கி விட்டது. வகுப்பில் கயிறு கொண்டு முயற்சித்த போது வரவில்லை. படிப்படியாக சுவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடங்கச் செய்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்போது இந்தத் தருணம் அமைந்திருக்கிறது. ஆம், இன்று சர்வாங்காசனம் சித்தியாயிருக்கிறது. ஹாலாசனம் முயற்சி செய்ய முடிந்திருக்கிறது. பலருக்கும் இவை மிக எளிதாக முதல் நாளே இயல்வதுதான். எனவே நான் சொல்ல வருவது ஆசனசித்தி குறித்தல்ல. அச்சத்தை வெல்லும் சிறு சிறு படிகள் குறித்து. அச்சம் விலக்கத்தை அளிக்கிறது. சந்தேகத்தை வளர்க்கிறது. அச்சத்தை வெல்லும் போது அனைத்தும் இனிமையாகிறது. அருமணியைக் காத்து நிற்கும் நாகமென அரியவற்றின் முன் அச்சம் காவலிருக்கிறது.





இங்கு நடந்திருப்பது உடல் சார்ந்த ஒன்று மட்டுமல்ல. இந்த ஒரு வருட அனுபவத்தில், யோகம் என்பதும் அதன் அனுபவ ரீதியான விளைவுகளும் கால் பங்கு மட்டுமே உடல் சார்ந்தது என சொல்லலாம். பாதிப் பங்கு மனம் சார்ந்தது. எத்தனை எத்தனை தயக்கங்கள், சந்தேகங்கள். மீதிப்பகுதி ஆழ்மனம் சார்ந்தது. பிறவிகடந்த வாசனைகளாகவும், மரபணு வழியாகவும் தொடர்ந்து வரும் எண்ணற்ற தடைகள், அச்சங்கள். அதன் ஒரு சிறு தளையை முதன் முறையாக குருவருளால் தாண்ட முடிந்த இத்தருணம் என்னளவில் ஒரு சிறு மைல்கல். இது சாத்தியம்தான், இதுவே வழி என ஒரு உறுதிப்பாடு.


இந்த ஒரு வருட யோகப் பயணம் எத்தனை எத்தனை விதமாக இந்த அச்சங்களை உருமாற்றி உள்ளே வைத்துக் கொண்டிருக்கிறேன் எனக் காட்டியிருக்கிறது. வெளியேற வேண்டியவை, உடனிருக்க வேண்டியவை என அச்சத்தை வகை பிரித்துக் காட்டியிருக்கிறது. என் ஆற்றல்கள், திறமைகள், எல்லைகள் என அனைத்தையும் வகுப்பவையும் அச்சங்கள்தான். அவற்றை நேர்மையாக எதிர்கொள்ள சாதனா கற்றுத் தருகிறது.



இப்பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் வழிநடத்தி முன்னே அழைத்துச் செல்லும் ஆசிரியர் சௌந்தருக்கு இந்த தருணத்தில் உள்ளே எழும் நன்றிப் பெருக்கை உளமார சமர்ப்பிக்கிறேன். அச்சத்தின் காரணமாக தயங்கித் துவண்ட அனைத்து தருணங்களிலும் உடன் நின்ற நண்பர் சௌந்தருக்கு அன்பும் பிரியமும். என் ஊசல்களைப் புரிந்து கொண்டு, தொடர்ந்து ஊக்கமளிக்கும் நண்பர்களுக்கு என் முழுமையான அன்பு.


இந்நாள் மேலும் உறுதியாக சாதனாவில் அமையச் செய்கிறது. யோகம் என்னும் அறுபடா பொன்னிழையில் நீளும் ஒரு சரடென இந்நாள்.





    




Thursday, February 16, 2023

ஆடிடும் குழைகள்



நூற்றுக்கணக்கான முறை கேட்ட ஒரு பாடல் சில சமயம் மிகப் புதிதாக வந்து திறந்துகொள்ளும். இன்று அது நிகழ்ந்தது.

இருள் பிரியாத அதிகாலை. புத்தம் புதிதாக ஒளி நிறைத்துக் கொள்ளவிருப்பதை அறியாமல் இன்னும் இருள் சூழ்ந்திருக்கிறது.  

'கண்ணா.. கண்ணா..' என பித்துக்குளி முருகதாஸ் குரலில் 'அலைபாயுதே கண்ணா' இசைக்கத் தொடங்குகிறது. 'உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்..' என மெல்லிய வண்டின் ரீங்காரம் போல முரல்கிறது குரல்.

மீண்டும் மீண்டும் மீண்டும்.. முறையீடு, கெஞ்சல், விண்ணப்பம், கதறல்.  இது வெறும் காதல் அல்ல, கூடல் நிமித்தமான ஊடல் அல்ல. 

நிலைபெயராத ஒன்றின் முன், நிலைத்திருக்கும் வகையறியாது இன்னும் இன்னுமென அலைபாயும் ஒன்றின் மன்றாட்டு. காலம் அறியாத பிரம்மாண்டத்தின் முன், அதிலிருந்து சிதறிய ஒரு  சிறுதுகளின் கதறி மனமுருகும் விண்ணப்பம். பேரிருப்பின் பகுதியாக இருந்து தனித்து விடப்பட்ட துளிப்பிரக்ஞை, அந்த இருமையின் இரு வேறு எல்லைகளில் நிற்பது தாங்கவியலாது தன் வேதனையை சொல்கிறது. 


மீண்டும் மீண்டும் கண்ணா கண்ணா எனக் கெஞ்சுகிறது.


நீயோ நிலைபெயராதவனாயிருக்கிறாய்

நானோ அலைபாய்பவளாக இருக்கிறேன் 

அலைபாய வைப்பதும் உனக்கு ஆனந்த இசைதான் 

காலங்கள் அற்ற கடுவெளியில் நின்றென்

மனதை அலைப்புறச் செய்கிறாய்


நிலவு தெளிந்திருக்கிறது

கண்களோ மயங்குகிறது


அலைகளின் மீது கதிரொளி 

அதுவும் எனைப்போல 

அலைப்புறுவதாக மயக்குகிறது

அந்த விண்கதிரோ 

உன்னிரு கழல்களென நிலையானது.


அகமெனும் வனத்தில்

தன்னுள் தானே தனித்திருந்த போதினில்  

வந்தெனைச் சேர்ந்து

இன்றைய பிரிவின் துயரை

நானறியச் செய்தவனே 


கண்ணா கண்ணா என்ற

எனது அத்தனை கதறலும்

உனது இசைக்கு ஆடும்

காதின் அழகிய குழைகளென எண்ணிக்கொண்டாயோ!

உன்னுள் கலந்துவிட்ட பிறரோடு நீ களித்திருக்க

என்நிலையை இவ்விதம் வைத்திருப்பது நியாயமோ!!


கண்ணா.. கண்ணா..என அந்த இசை எங்கும் சுழல்கிறது,  அலைப்புறும் இக்குரல் கனிவு கொண்ட அவன் இசையில் ஒரு ஸ்வரமாகி மறைகிறது. 


https://youtu.be/TPnbrBoDvDc


Saturday, April 17, 2021

இரவு

இருளை அருந்தியபடி

திசையழித்து வழிந்தோடும் பால்

மிதக்கும் சில வெள்ளெறும்புகள்

தலைகீழ் வான்வெளியில்

ஓயாமல் தலைமோதும் அலைகள்

கடல் நோக்கி சென்று

மீளாத சுவடுகளை 

உற்று நோக்குகிறது இரவு



Friday, April 16, 2021

காலாதீதம்

ஒற்றைக் காலின் தடங்களை
இழுத்துக் கொண்டு 
கடல் மீளும் நுரை

அடுத்த அலைவரக்
காத்திருக்கும்
எஞ்சும் மறுகால் பதிவுகள் 

பின்வாங்கிச் செல்லும் 
வெண்விளிம்பின் குரூரம்
இயலா நடையின் அறுதடம்  

அலைகளுக்கிடையே
காலாதீதங்களில் நிற்கும்
ஒற்றைப் பாதங்களின் தவம்




Friday, April 2, 2021

சிங்கை குறிப்புகள் - 23 - அஞ்சிறைத் தும்பி

சிங்கையை ஒரு பறவைப் பார்வையில் பார்க்க நேர்ந்தால் கணநேரமேனும் கவர்ந்து பார்வையை நிறுத்திவிடும் அழகு இந்தக் கடலோர அஞ்சிறைத் தும்பிக்கு உண்டு. சிங்கை கடல்முகப்பை பசுமையால் அலங்கரிப்பவை வளைகுடா பூந்தோட்டங்கள்.  கிழக்கு, தெற்கு, மையத் தோட்டங்களோடு(Bay East, Bay South, Bay Central) சேர்ந்த 101 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சீர்மைப்படுத்திய பகுதியில் இந்த கார்டன்ஸ் பை தி பே (Gardens By the Bay) எனப்படும் கடலோரத்தோட்டங்கள் அமைந்திருக்கிறது. 



 சிங்கப்பூர் தாவரவியல் தோட்டத்தில் (Botanical garden) சுற்றுலாப் பயணியரின் வருகை அதிகரித்துத் திணறிய போது நிரந்தரமாக தாவரவியல் கண்காட்சி போல ஓரிடத்தை அதற்கென அமைக்கும் திட்டம் உருவாகியது. இதுவும் கடலில் இருந்து கைப்பற்றிய நிலத்தில் அமைக்கப்பட்ட வளாகமே. இந்தத் தோட்டத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த கோணம் மரீனா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) எனும் ஆடம்பர விடுதியின் மேல்தளத்தில் இருந்து பார்ப்பதுதான். 57ஆவது மாடியில் இருந்து இதைப் பார்க்கும் பொழுது ஒரு மாபெரும் தும்பி பூந்தோட்டத்தில் ஒளியூடுருவும் இறக்கைகளை விரித்து அமர்ந்திருப்பது போல தோன்றுகிறது. அல்லது இரு அலைபிழைத்த கிளிஞ்சல்கள் அருகருகே கிடப்பது போல. மணலில் சிறு பொருள் ஒளித்து கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடக் குவிந்த கரங்கள் போல. எந்நொடியும் எழுந்து பறந்துவிடும் சாத்தியங்களோடு கடலருகே காத்திருக்கும் இருசிறகுகள் போல. 

View from Marina Bay Sands

இரண்டு மாபெரும் தாவரவியல் வளர்ச்சித் தோட்டங்கள், உலோக மரங்கள், நீர்ப்பரப்புகள், பல விதமான பாரம்பரிய தோட்டங்கள், கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தும் மேடைகள்,  நீர்வழிகளைக் கடக்கும் பாலங்கள், சிற்பங்கள் என விரிந்து பரந்த இடம் இது. 

Bayfront precinct
Planet Sculpture by Marc Quinn, UK


இந்தத் தோட்டத்தின் பல பகுதிகளில் பல சிற்பங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. பேஃப்ரன்ட் (Bayfront) ரயில் நிலையத்தில் இருந்து இங்கே நுழையும் இடத்தில் முதலில் கண்ணில் படும் ஒரு பிரமாண்டமான சிற்பம் Planet எனப்பெயர் பெற்ற குழந்தையின் சிற்பம். 9மீட்டர் நீளமும் 3 மீட்டர் உயரமும் கொண்ட இந்த 7 டன் எடை கொண்ட சிற்பம் மிகத் திறமையாக அக்குழந்தையின் கரம் மண் தொடும் புள்ளியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.         




ஒவ்வொரு துளி நிலமும் இங்கு பொன்னை விட விலை உயர்ந்தது. நகரின் அதி முக்கியமான முகப்புப் பகுதியில் பல கோடிகள் பொருட் செலவில் பசுமைக்கென இடம் உருவாக்கி இத்தகைய பரந்த பசுமை பாதுகாப்பு மையங்களை   உருவாக்கியவர்களை எண்ணி வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை. 2005-ல் பசுந்தோட்டத்துள் ஒரு நகரமாக சிங்கப்பூரை உருமாற்றுவதன் பகுதியாக கடற்கரையோரம் நிலம் கையகப்படுத்தபட்டு மாபெரும் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்பை சிங்கை பிரதமர் வெளியிட்டார். இதன் வடிவமைப்பிற்காக சர்வதேச அளவிலான போட்டி நடைபெற்று இங்கிலாந்தைச் சேர்ந்த வில்கின்ஸன் அயர் (Wilkinson Eyre) மற்றும் கிரேண்ட் அசோசியேட்ஸ் அதை வென்றது. 



இங்கு உள்ள பல பகுதிகளில் முக்கியமானவை மலர் குவிமாடம்(Flower Dome) மற்றும் மேகக் காடுகள்(Cloud Forest) எனப்படும் இரண்டு பசுங்குடில்கள். வெளியிலிருந்து காண்பதற்கு மாபெரும் கண்ணாடிச் சிறகுகள் போலத் தெரியும் இந்த கட்டிடங்கள் உள்நுழைந்ததும் நமை ஒரு மாபெரும் கண்ணாடிப் பேழைக்குள் மூடி வைத்துவிட்டது போலத் தோற்றமளிக்கிறது.


Flower Dome

மிதமான குளிர், கண்விரியும் பெரும் பரப்பளவில் நாம் அதிகம் கண்டிராத ஆயிரக்கணக்கான மரம், செடி வகைகள் நமை வந்து சூழ்கிறது. நான்கைந்து தளங்கள் உயரம் கொண்ட அந்த விதானம் ஒளி புகும் வண்ணம் முழுக்கவே கண்ணாடிகளால் ஆனது. வளைந்த எடைகுறைந்த எஃகினால் ஆன பசுங்குடில் அந்த மாபெரும் கூரையைத் தாங்கும் தூண்கள் ஏதுமன்றி இருப்பதாலேயே பாலை நிலம் அல்லது கடல் போன்ற விரிவெளியில் வளைந்த கூரையாய் விண் சூழ்ந்திருப்பதைப் போல இருக்கிறது. 

Flower Dome

வெப்பமான கோடையும் குளிர்ந்த ஈரமான குளிர் காலமும் கொண்ட புவியின் மத்தியதரைப் பகுதி காலநிலைக்கு நிகராக உருவாக்கப்பட்ட பசுங்குடில் இது. உலகின் பல தேசங்களில் இது போன்ற பருவநிலையில் வளரும் தாவரங்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. துவக்கத்தில் பாலையின் நூற்றுக்கணக்கான கள்ளி வகைகள் வரவேற்கின்றன. பாலையின் தாகமே ஒரு கொடிய அழகானது போல உடலெங்கும் முள் செறிந்த அழகழகான கள்ளிச் செடிகள். வட்ட வடிவில், பட்டை வடிவில், மலர் வடிவில், திருகு முள் போல, குடுவைகளைக் கழுவப் பயன்படுத்தும் பிரஷ் போல என விதவிதமான உருவங்களில் கள்ளிகள், ஆளுயரத்துக்கு மேற்பட்ட சில முட்செடிகள்.  எங்கெங்கோ முன்னோர்களைக் கொண்ட மரங்கள் அவற்றுக்கான சூழல் இங்கு உருவாக்கப்பட்டு இம்மண்ணில் குடியேற்றம் பெற்று நின்று கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இது சிங்கப்பூரையே குறிக்கிறது எனலாம். உலகெங்கும் இருந்து அரியவை தேர்ந்தெடுக்கப்பட்டு  காட்சிக்கு வைக்கப்பட்ட கண்ணாடி பேழை.  





பெரும்பாலை நிலக் கள்ளிகள்

தென்னிந்தியாவின் ஒரு ஊரைச் சேர்ந்த நானும் எங்கோ பல்லாயிரம் மைல்கள் தொலைவில் மெக்சிகோ தேசத்தின் பாலையில் நிற்கும் தாவர வகைகளும் இங்கு சிங்கையில் சந்தித்துக் கொள்ளும் இந்த கணத்தை அறிவியல் சாத்தியமாக்கி இருக்கிறது. ஏந்தப்பனை (Cycads) வகையைச் சேர்ந்த பெரிய டியூன் (Giant Dioon) எனப்படும் தாவரம் இவ்விதம் மெக்சிகோவின் பாலை மலைகளில் காணப்படும் ஒன்று. 170 மில்லியன் ஆண்டுகளாக இப்புவியில் இருக்கும் தாவரமாம். ஆண் பெண் என இரு வகைச் செடிகள் கொண்ட இத்தாவரம் பல நூறு ஆண்டுகள் உயிர்வாழ்வது. 

Dioon spinulosum (giant dioon)

அடிபெருத்த பெருங்குடுவைகளுக்கு சிறு கொம்புகள் முளைத்தது போல நிற்கும் ஆப்ரிக்காவின் மாபெரும்  பவோபாப் மரங்கள் (Baobab) அருகே மனிதர்கள் நிற்பதைப் பார்க்கும் போதும் இது போல இயற்கையின் மாபெரும் சாதனைகளின் முன் நேற்று முளைத்த மனிதர்கள் விசித்திரக் குள்ளர்கள் போல நின்று கொண்டிருப்பதை உணர முடிந்தது.  

இங்கு காணக்கிடைக்கும் அனைத்துத் தாவரங்கள், மரங்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு தாவரவியலைக் கற்றிருந்தால் மட்டுமே ஓரளவு சாத்தியம். எனவே நினைவில் நின்ற வித்தியாசமான சில வகைகள் குறித்து மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். 

ஆஸ்திரேலிய நிலத்தைச் சேர்ந்த தாவரங்கள் முற்றிலும் கண்ணுக்குப் புதியவையாக இருக்கின்றன. தலை முடியை வெட்டிக் கொள்ள அடம்பிடிக்கும் சிறுவனைப் போல கொத்துக் கொத்தாக முடி வளர்ந்தவை, கம்பி மத்தாப்பில் தீமலர்களுக்கு பதிலாக பச்சைப் புல்லாய் விரிந்து அப்படியே உறைந்தது போல நிற்கும் புல் மரங்கள்(Xanthorrhea glauca - Grass Tree). இவையும் 600 வருடங்கள் வாழக்கூடியவை.  மிகவும் மெதுவாக வளரும் இம்மரங்கள் கிழக்கு ஆஸ்திரேலியாவின் மணற்பாங்கான பகுதிகளில் வளர்பவை. இதன் அடிமரங்கள் ஆஸ்திரேலியாவில் நிகழும் காட்டுத்தீயில் எரிந்து விடாது உயிர்த்தெழும் தன்மை கொண்டவை. இவை அங்கு வாழும் பழங்குடியினருக்கு உணவும், உடையும், ஆயுதங்கள்  செய்வதற்கும் உதவியிருக்கின்றன.  

Xanthorrhea glauca - Grass Tree

அக்கினிப் பிரவேசத்தில் பிழைக்கும் அடிமரம்


சிலேவின்(Chile) தேசிய மரமாகிய குரங்குப் புதிர் மரம் (Araucaria araucaria - Monkey Puzzle Tree) பெயரின் காரணமாக ஈர்த்தது. ஊசியிலை மரமாகிய இதன் கிளைகள் முழுவதும் நெருக்கமாக இலைகள் அடுக்கி வைக்கப்பட்டது போல இருக்கிறது. இம்மரங்கள் பிரிட்டனில் அறிமுகமான போது இம்மரங்களில் எவ்விதம் ஏறுவதென குரங்குகளுக்குப் புதிராக இருக்கும் என ஒருவர் சொன்னதால் இதற்கு இப்பெயராம். ஆசான் ஜெயமோகன் அவர்களின் 'சாவி' சிறுகதையில் ஒரு புதிய அறிதலின் இன்பத்தில் சிக்கிக்கொள்ளும் குரங்கின் நிலை நினைவு வருகிறது. ஒரு குரங்குக்கு அறிய முடியாத புதிர் ஒன்றைக் கொடுத்தால் அதில் சிக்கிக் கொண்டு தவித்துத்தான் போய்விடுமெனத் தோன்றுகிறது.  இதன் இலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்பட்டிருப்பதன் விந்தையே ஒரு புதிரின் ஈர்ப்பை உருவாக்குகிறது. பைன் மர விதைகளைப் போல இதன் விதைகளும் உணவில் பயன்படுகின்றன.   

Araucaria araucaria - Monkey Puzzle Tree
இலைகள் 

பூக்களின் முனை(Cape Floristic Region) என்றழைக்கப்படும் தென்னாபிரிக்காவின் தென்முனை யுனெஸ்கோ அமைப்பால் பாதுக்கப்படவேண்டிய பாரம்பரிய நிலமாக அறிவிக்கப்பட்டது. இங்கு வளரும் 69% சதவிகித தாவரங்கள் உலகில் வேறெங்கும் வளராதவை. அதில் சில வகைகளை இங்கு வளர்த்திருக்கிறார்கள். இவை கடும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை. இவற்றில் பல தாவரங்களின் விதைகள் உறுதியான வெளிப்புறத்தோலால் பாதுகாப்பாக இருக்கும். அதீத வெப்பநிலையில் உருவாகும் காட்டுத்தீ இவற்றை எரித்த  பிறகு இவ்விதைகள் வெளிப்பட்டு புதிதாக அனைத்தும் மலரத் தொடங்கும். வெந்து தணிந்த காட்டில் மலரும் மலர்கள். கடுகு இலைகளைப் போன்ற தன்மை கொண்ட இலைகளில் பல வண்ண மலர்கள், முற்றிலும் மாறான இரு வேறு நிறங்கள் கொண்ட மலர்கள்.





தென்னாப்பிரிக்க இருவண்ண மலர்கள் 

பனை குடும்பத்தைச் சேர்ந்த ஐரோப்பாவின் பல வகையான மரங்கள், ஈச்ச மரங்கள், சிலேவின் நீல ஊசிப் பனை(Blue Needle Palm), சிலேவின் கள் பனை(Jubaea chilensis - Chile wine palm) போன்றவையும் ஒரு பகுதியில் இருக்கின்றன. சிலேவில் இந்த கள் பனையின் பதநீரும் கள்ளும் மிகவும் புகழ் பெற்றது. இதில் காய்க்கும் ககிடோ (Coquito) காய்கள் மிகச் சிறிய தேங்காய் போல இருக்கின்றன. இது அப்படியே நேரடியாகவும் பழக்கூழாக பதப்படுத்தப்பட்டும் உண்ணப்படுகிறது.  

Jubaea chilensis - Chile wine palm


Coquito



ஆலிவ் எண்ணை, ஆலிவ் காய், ஆலிவ் பச்சை என பல விதமாக அனுதினம் சொன்னாலும்  கட்டையாய் குட்டையாய் உடலெங்கும் முடிச்சுகளும் பிளவுகளுமாய் வேர்க்குவை வெளித்தெரிய நின்ற மரம்தான் ஆலிவ் மரம் என்று இதற்கு முன் தெரியாது. ஆனால் மேற்புறம் அழகான பச்சையும் அடியில் வெளிறிய பச்சையுமாய் இதன் இலைகள் இம்மரத்தை அழகாக்கி விடுகின்றன. ஒரு நவீன ஓவியம் போல இம்மரம் மனதில் பதிந்து போனது.    
Olive Tree

சுற்றிலும் பல நூறு அறியாத் தாவரங்களுக்கிடையே வெகு நேரம் உலவிய பிறகு கீழிறங்கும் பகுதிக்கு வந்தால் அழகாய் இருப்பதன்றி வேறேதும் வேலையில்லாத பல்லாயிரம் மலர்கள். ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறை அங்கு உள்ள மலர்களின் அமைப்பு மாற்றப்பட்டுவிடும். இதைத்தவிர Floral Fantasy என ஒரு தனித்த அரங்கும் கொய்மலர்களுக்கென்றே இங்கு இருக்கிறது.   
2016ல் அம்மாவுடன்







முதல் முறை சென்ற போது  உலகின் பல பகுதிகளில் இருந்தும் வந்த ரோஜாக்களால் ஆன மலையாக இருந்தது. கையகலத்தை விடப் பெரிய ரோஜாக்கள், சிறு மாத்திரை அளவேயுள்ள பூக்கள், நீல நிற ரோஜாக்கள், என வெளியேறிய பின்னும் விழிநிறைத்த ரோஜா மலர்கள்.  மற்றொரு முறை வண்ணங்களின் தேவதைகள் குடிகொள்ளும் ட்யூலிப் மலர்களின் அணிவகுப்பு இருந்தது. 



இம்முறை தற்காலிக ஜப்பானியக் குடில்களுக்கு இடையே, இதை விட வண்ணம் ஏறினால் கூட எடைதாளாது விழுந்துவிடும் என்பது போன்ற இளம்செந்நிற சகுரா மலர்வனம் தயாராகிக் கொண்டிருந்தது. வண்ணங்கள் மனதில் அதற்கேற்ற எண்ணங்களை உருவாக்கி விடுகின்றன. அவ்வளவு நேரம் நின்றிருந்த அதே வளாகத்தின் இளங்குளிர்  இந்த இளஞ்செந்நிற மலர்களினூடாக நடக்கும்போது பனிநனைந்த வெளியில் நடப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்தியது. 

இதில் ஒரு மணி நேரம் சுற்றி விட்டு இரண்டாவது பசுங்குடிலான மேகக்காடு சென்ற போது அது முற்றிலும் வேறு விதமான உலகமாயிருந்தது. அதே போன்ற நான்கைந்து தள உயரம் கொண்ட கண்ணாடிக் கூரைக்குக் கீழே  மழைமாறாக் காடொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். 

Cloud Forest - மேகக் காடு

மத்தியில் உயர்ந்து நிற்கும் மலை போன்ற அமைப்பை மழைக்காட்டுத் தாவரங்களும் கொடிகளும் முற்றிலும் மூடியிருக்கின்றன. 



கடல்மட்டத்திலிருந்து 1000மீ முதல் 3500மீ வரை உயரம் கொண்ட மழைக்காட்டின் பசுமைச் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். நாம் உள்ளே நுழையும் இடத்தில் அந்த மையக்கட்டுமானத்தின் மேல்தளத்தில் இருந்து செங்குத்தாக கீழே குதிக்கும் அருவி, அதிலிருந்து சிதறிப் பரவும் நீர்த்திவலைகளால் அக்கூடம் நனைந்திருக்கிறது. 



ஓயாத மழையால் நீர் நீர் என ஒவ்வொன்றும் ஒலிக்கும் காடொன்றுக்குள் புகுந்து விட்டதான மயக்கு. அந்த மையக் கட்டிடத்தைச் சுற்றிச் சுழன்று ஏறிச் சென்று மூன்று தளங்கள் படியிலும் மின்தூக்கியிலுமாக ஏறிச் சென்றால் அருவி பொழியும் இடத்துக்கு அருகில் நின்று அந்த மழைக் காட்டை ரசிக்கலாம். 




அங்கிருந்து விரிந்து செல்லும் உலோகக் கரங்களில் உயரத்தில் நடந்தவண்ணம் இதன் பேருருவை உள்வாங்கலாம். சர்க்கஸ் கூடாரத்தில் அந்தரத்தில் கயிறு கட்டி நடப்பது போல முதல் முறை இந்த உலோக நாகங்களில் நடப்பது ஒரு சிறு பதற்றத்தைத் தருகிறது. அந்தக் கட்டுமானத்தின் உயரமும் விஸ்தீரணமும் அங்கு நடக்கும் போதுதான் முழுமையாய் புலனாகிறது. 




இவற்றைப் பார்த்த பிறகு அங்குள்ள சிறப்பு உலோக மரங்களைக் காணலாம்,  மலாய் தோட்டம், சீனத் தோட்டம், ஜப்பானியத் தோட்டம், இந்தியத் தோட்டம், பனைகளின் உலகம், தாவரங்களின் உலகம் போன்ற ஏதொவொரு பூங்காவில் அந்தந்த தோட்டங்களில் வளரும் மரங்களைக் குறித்து அறியலாம்.  தாவரவியல் ஆர்வலர்களுக்கு ஒரு நாள் முழுவதும் செலவிடக் கூடிய அளவு தோட்டங்களும் தாவரங்களுமாக பசுமை நிறைந்த பகுதி. 

Super Tree Grove


வான் நோக்கி மலர்ந்த சூப்பர் ட்ரீஸ் (Super trees) எனப்படும் உலோக மரங்கள், சூரியனை நோக்கி சிரிக்கும் சூரியகாந்தி போல இவை வானகாந்திகள். விண் அருள்வதை ஏந்திக் கொள்ளக் காத்திருக்கும் பதினெட்டுக் குவளை மலர்கள் .



 அவற்றை இணைத்துக் கொடி போல சுருளவிழும் இணைப்புப் பாலம். அதில் நடந்தபடி இந்த பரந்து விரிந்த பூங்காவையும் அருகில் நிற்கும் சிங்கையின் விண் தொடும் கட்டிட வரிசைக்குப் பின் மறையும் அந்தி வெயிலையும் பார்க்கும்போதுதான் நாம் ஒரு பரபரப்பான நகருள்தான் இன்னும் இருக்கிறோம் என்பது நினைவுக்கு வருகிறது. 




சிறிதும் பெரிதுமாக நிற்கும் இந்த செயற்கை மரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள், கொடிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பசுஞ்செடிகள் படர்ந்திருப்பதாக கணக்கு.



இரவில் இந்த மரங்கள் வண்ண ஒளி நிறைந்து மாயாலோகம் போலாகிவிடுகிறது. 



இதன் சூழலியல் மேம்பாட்டு முயற்சிகளும் எரிபொருள் சிக்கனத்திற்காக கையாளும் உத்திகளும் குறிப்பிடத்தக்கவை. இத்தோட்டத்தில் உதிரும் இலைகளையும், சிங்கப்பூரின் மற்ற பூங்காக்களில் உதிரும் சருகுகள் மற்றும் உலர் கழிவுகளையும் கொண்டு இயங்கும் சிறிய அனல் மின் நிலையம் ஒன்றும் இங்கிருக்கிறது. இதில் உற்பத்தி ஆகும் மின்சக்தி ஓரளவு பசுங்குடிலின் குளிரூட்டும் மின்தேவைகளுக்குப் பயன்படுகிறது. இதில் வெளியேறும் சாம்பல் இத்தோட்டங்களுக்கு உரமாகப் பயனாகிறது. நிலத்துக்கு அடியில் ஓடும் குளிர்ந்த நீரோடும் குழாய்கள் மூலம் இரு பசுமைக் குடில்களும் மேலும் எரிபொருள் சிக்கனத்தோடு குளுமையாக வைக்கப்படுகின்றன. இந்த சூப்பர் மரங்கள் கட்டுமானத்தில் சூரியத் தகடுகளும் மழை நீர் சேகரிப்புக் கலன்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன.  இதில் இருப்பதிலேயே உயர்ந்த மரத்தின் மேலே  ஒரு உணவகம் இருக்கிறது.

இதையெல்லாம் விட தனிப்பட்ட முறையில் இது எனக்கு மனதில் பசுமை நிறைத்த தலம்.  சிங்கையில் வாழ்ந்த நாட்களின் நினைவுகளில் மிக முக்கியமான வரம் போன்ற தருணம் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களை நேரில் சந்தித்தது. 2016ல் சிங்கையில் நிகழ்ந்த காவிய முகாமுக்குப் பிறகு மாலையில் இரு தினங்களும் இந்தியாவில் இருந்து வந்த நண்பர்கள் சிங்கை சுற்றிப் பார்க்கக் கிளம்பவே நானும் இணைந்து கொண்டேன். பார்த்த முதல் நாளே அணுக்கமாகி விட்ட பல நண்பர்கள். அருமையான மாலைப் பொழுது. அந்த மாலையில் அனைவரோடும்  இந்தக் கடலோரத் தோட்டங்களுக்கு சென்றோம். அதற்கு முன்னும் பின்னும் பலமுறை போயிருந்தாலும் அந்த மாலை மிக அழகானதும் மனதுக்கு மிக அணுக்கமானதும் ஆகும்.  



தாவரக்கூட்டங்களிடையே நடந்தபடி, நாளை ஒரு வேளை மானுடன் தனது புவி வீட்டின் தாவரங்களை எடுத்துக் கொண்டு சென்று விண்வெளியில் விதைத்துப் பாதுகாக்க வேண்டுமென்றால், இது போல ஒரு உயிர் வளியை சமநிலையில் பேணிக்கொள்ளும் தற்சார்பு கொண்ட  பசுங்குடில் அமைக்க வேண்டியிருக்கும் என்றால், அதற்கான முன்மாதிரி இந்த மாபெரும் கனவுலகம் என்பதெல்லாம் பேசியபடி நடந்த ஆசானைப் பின்தொடர்ந்து கொண்டே புதிய கண்களோடு இவற்றைப் பார்க்க நேர்ந்தது. அதுவரையிலான கண்ணோட்டத்தில் சிங்கையில் கடற்கரை முதல் காடு வரை அனைத்துமே செயற்கையாய் உருவாக்கப்பட்டிருப்பதை ஒரு குறையெனக் கண்டுகொண்டிருந்த எனக்கு அது ஒரு பெரிய திறப்பாக அமைந்தது.  


அன்று வியப்பில் சிறகு விரித்த அஞ்சிறைத் தும்பி இன்றும் கொங்குதேர் வாழ்வில் கண்ணால் கண்டதை மொழிந்து கொண்டிருக்கிறது.

முந்தைய பதிவு:

சிங்கை குறிப்புகள் - 22 - தேயும் கோப்பியும் தேயாத நினைவுகளும்