Thursday, April 23, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர் - பாரதி

"நல்ல கவிதை என்பதற்கான வரையறை என்ன?" என்று கேட்டதற்கு கவிதையில் எழுதாத வரிகள் ( unwriiten lines) வாசகன் தானாக உணரும் வண்ணம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் எழுத்தாளர் சுஜாதா. சில கவிதைகள் எனக்குப்  புரியவில்லையே என்று சக நண்பர் வினவியபோது, அப்படியென்றால் அது உங்களைப் பொறுத்தவரை நல்ல கவிதையல்ல என்ற குறிப்பிட்டார். நல்ல கவிதை என்பது தனிமனிதன் சார்ந்த ரசனை/வாசிப்பனுபவம் என்ற சுஜாதாவின் கருத்து நியாயமாகப் படுகிறது.

இன்றைய நாளிதழ்களிலும் இணையத்திலும் வெளிவரும் காதலியின் தும்மல் விக்கல் குறித்த கவிதைகளுக்கிடையே unwritten lines இருக்கலாம், ரசிக்க நமக்கு முதிர்ச்சி போதவில்லை போலும். இப்படிப்பட்ட காளான் கவிஞர்களிடம் தமிழ்க் கவிதை படும் பாடு தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?

தமிழின் தகைமை முழுதாய்ப் புரியும் முன்னரே பள்ளிப்பிராயத்தில், தன் கவிதைகள் வாயிலாக என் உள்ளம் கவர் கள்வன் பாரதி. பலருக்கும் அப்படியே. அனைவரும் பாடங்கள் வழி கற்ற பாப்பாப் பாட்டைத் தவிர வீட்டில் அனுதினம் பாடிய 'முருகா முருகா' வழி அறிமுகம். மேற்பார்வைக்கு வெறும் பக்திப்பாடலாய்த் தோற்றமளிக்கும் இப்பாடலுக்குள் நுண்ணிய வரங்கள் கேட்டிருப்பான்.
"அடியார் பலர் இங்கு உளரே -
அவரை  விடுவித்தருள்வாய்" என  விடுதலை கேட்கும் அந்த வரிகள் மாயையிலிருந்து, அறியாமையிலிருந்து, அகங்காரத்திலிருந்து என பலவிதமான அடிமைத்தளைகளில் இருந்து கேட்பதோடு அன்று அந்நியரிடம் அடிமைப்பட்டிருந்த அனைவருக்காகவும் கேட்ட வரம் அது.

வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பாட்டியின் (தாத்தாவின் அம்மா) மறைவையொட்டி பெருங்குடை விரித்த கல்லாலமர விழுதுகளென அனைவரும் பலதினங்கள் எங்கள் ஊரானஅம்மைநகரில் கூடியிருந்த நாட்களில் ஒரு நாள்; நம் மின்சார வாரியம் கடைக்கண் மூடியிருந்த ஒரு மாலையில், பிள்ளைகள் அனைவரையும் கட்டி மேய்க்கும் பொறுப்பேற்ற என் தமக்கை பாடலும் ஆடலுமாய் சொல்லிக் கொடுத்த 'காணி நிலம் வேண்டும்', பாரதி மேல் காதலேற்படுத்திய முதற்பாடல். சில நாட்களில், மாமா வீட்டில் பாரதியார் கவிதைகள் புத்தகம் பார்த்து மயங்கி நின்றபோது, மாமா பாரதி குறித்துக் கூறிய வார்த்தைகள் பசுமரத்தாணியாக மனதில் பதிந்தது.

முதல் முறை "காணி நிலம் வேண்டும்" கேட்ட பொழுதில் தோன்றிய அகக்காட்சி அவ்வயதுக்கு உரியதாய் இருந்தது. வெவ்வேறு காலகட்டத்தில் நினைக்கும்தோறும் வேறு வேறு உருவகங்கள். (அந்தப் பாடலைக் கீழே இணைத்திருக்கிறேன்)

கலையெனப்படுவது யாதெனக் கேட்பின் ரசிகனின் மனவளத்திற்கேற்ப கற்பனாசக்தியின் எல்லைகளுக்கேற்ப விரியும் பாங்குடையது எனலாம். சிறந்த கலை ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு உருப்பெறும். சில மிகச்சிறந்த புத்தகங்கள் திரைப்படமாக வரும்போது, புத்தகம் அளவு சிறப்பாக இல்லை எனக் கருதப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இன்று நாம் உடல் நலம் தொலைத்து, தொலைதூரம் திரிந்தலைந்து வாழ்வின் பெருநோக்கங்களில் ஒன்றாய் ஊர்க்கோடியில் வாங்கும் 3BHK வீடு பேறு அல்ல பாரதி கேட்டது.  தனது வேண்டுதலை ஓர் அழகிய காட்சியாக நம் மனக்கண் முன் விரிக்கிறான். "காணி நிலம்" (லௌகீகமாய் practicalஆகக்  கணக்கு போடவேண்டுமா - 1 காணி 132 சென்ட் அல்லது 1.32 ஏக்கர் - இன்றிருந்தால் shopping mall + multiplex கட்டிவிடலாம்.) - அவனும் அதில் ஒரு மாளிகையை கட்டித் தரும்படி கேட்கிறான் பராசக்தியிடம்.  அருகே ஒரு கேணி - இந்நீர் நிறைந்தூறும் கேணியருகே தென்னை மரங்கள் ஒன்றிரண்டல்ல - பத்து பன்னிரண்டு.

என்ன ஒரு வசந்தமான கோரிக்கை - தென்னங்காற்றும் நிலவொளியும்  நிறையும் வீடு. பகல் முழுதும் உழைத்த களைப்புத்தீர இரவில் அமைதி கொள்ள, சித்தம் மகிழ்ந்திட முத்துச்சுடரொளியாய் நிலவு முகம் காட்டும் முற்றம். வானையும் நிலவையும் வாழ்வில் தொலைத்த நமக்கு இன்று இந்த காட்சியைக் கண்முன் கொண்டு வருமளவேனும் நினைவில் இவை இருக்கிறதா? கத்தும் குயில் - தொலைவில் இருக்கும் தன் துணையை அழைக்கும் குயிலின் குரல் கூவலாக இருக்காது கத்துவது போல்தான் தொனிக்கும், அந்தக் குயிலின் குரல் காதில் விழவேண்டும்.

இங்கு சங்க இலக்கியங்கள் போல அந்த நிலப்பரப்புக்கு உரிய மரங்களையும் பறவைகளையும் பாடலில் கொணர்ந்து பரிபூரணமாக காட்சியாய் கண்முன் விரிக்கிறான். பாட்டுக் கலந்திடவே பத்தினிப் பெண் - மகாகவிஞன் அல்லவா - பாட்டை ரசிக்கும் முதல் ரசிகையாய் ஒரு பெண். அவர்கள் கூட்டுக் களியினிலே பிறக்கும் உன்னதமான கவிதைகள். இந்த உன்னதங்கள் கலைந்துவிடாதிருக்கக் காவலாய் பராசக்தியை அழைக்கிறான். இவையனைத்தும் நீ தந்துவிட, என் பாட்டுத் திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திடல் வேண்டும் என்கிறான். அவனது கவிதைகளுக்காக பராசக்தி இதற்கு மேலும் தரலாம்.


"வீடென்று எதை சொல்வீர்
அது அல்ல எனது வீடு" - மாலன் கவிதை நினைவுக்கு வரும் ஒவ்வொரு முறையும். பாரதியின் தாக்கம் இல்லாத நல்ல தமிழ்க்  கவிஞர்கள் இல்லை எனலாம்.

இன்னொரு தளத்தில் பார்த்தால் துய்ய நிறத்தினதாய் பராசக்தி கட்டும் மாளிகை அவனது ஆன்மாவுக்கானது.கீழ்மைகள் நிறைந்த இவ்வுலக வாழ்விலிருந்து தனித்து ஏகாந்தமாய் அவனிருக்க ஓர் இல்லம்.அனுதினம் அல்லலுற்று அவதியுறும் சித்தத்தை குளிரவைக்கும் தென்றல், கற்பனைகளின் ஊற்றுக்கண்ணாய் உடனிருக்க சகி. வையம் முழுதையும் காத்திட விழையும் அவன் ஆவலில் பிறக்கும் கவிகள். என்ன ஒரு வரம்!!

பாடத்திட்டம் தாண்டி திரைப்பாடல்கள் வழி மேலும் சில பாடல்கள் அறிமுகம். மணமகள் படத்தில் இடம்பெற்ற "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" - வில்
"உச்சிதனை முகந்தால் - கருவம் ஓங்கி வளருதடீ
மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ" எனும் வரிகளை கண்ணீர் துளிர்க்காமல் கேட்க முடிவதில்லை. மேலும் பாடலின் சரணம் கண்ணம்மாவிடம் சரணடையும் இடம் - "உன் கண்ணில் நீர் வழிந்தால் - என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடீ " - கேட்கும் போதெல்லாம் மெய்சிலிர்க்கும் பாடல் அனுபவம்.

'பாரதி' - "எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்" என்று எழுத்தை வணங்கிய மகாகவி.
பிரம்மன் பன்னிரண்டு சரியாய் பயிலாப் பிழையால், பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் குறிஞ்சிப்பூ.

பாப்பாப் பாட்டு முதல் பரசிவ வெள்ளம் வரை பாய்ந்த மாகங்கை. விரிசடை பாய்ந்து மண்ணிறங்கிய கவிதைப் பிரவாகத்தில் அவனது ஊணுடல் தாங்கிய மானிடத் துயரும் இன்னல்களும் கசடுகளாய் அடித்துச் சென்றது போலும். வளமான வண்டலாய்த் தேங்கிய அவருடைய எழுத்துக்களில், வரலாற்று ஆய்வாளர் காட்டும் ஏழ்மையும் நொய்மையும் எங்குமில்லை. அன்றாட அரிசி பருப்புக் கவலைகள் எல்லாம் விட்டு விடுதலை ஆகி நிற்க முடிந்த சிட்டுக்குருவி.. அல்லது விடுதலையாக விரும்பிய கவிக்குருவி. எந்த நிலையிலும் அவரது வாழ்வின் கசடுகள் எண்ணத்திலும் எழுத்திலும் எதிரொலிக்காதிருந்த காரணம் நன்மையில் நல்லியல்புகள்மேல் அவருக்கிருந்த அபார நேர்மறை நம்பிக்கை (optimism) எனலாமா?மண்ணில் வீழ்ந்ததனால் மறைந்து மாய்ந்து விடாமல் கதிரென முளைத்தெழுந்த வீரியமான விதை எங்கள் பாரதி.

பிறிதோர் சொல் அவர் சொல்லிய சொல்லை வெல்வதற்கு இல்லை எனும் வண்ணமே அனைத்துக் கவிதைகளும் இருக்கும். இவ்வண்ணம் இன்பமாய் வாழ வழி சொல்லும் கவி இங்கு தவம் இயற்றச் சொல்கிறார். தவம் என்பது தன்னலம் அற்றுப் போதல், ஒருமுகமாய் உள்நோக்குதல்..

"செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை யெய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்த லியல்பு"

இவர் கூறும் தவம் அன்பு பழகுதல். தவம் என்றுமே எளிதன்றே..  கலக மானிட பூச்சிகள் சூழப் பறந்தாலும் கலையாதிருப்பது தவம்.

இவ்வன்பு சக மானிடர் மேல் மட்டுமல்ல..
"வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்; மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்" என நம்மை நாம் நேசிக்கும் அளவுக்கு அனைத்துயிரையும் நேசிப்பதே இவர் சொல்லும் தவம்.

அன்பைப் பாசமாக, கனிவாக, காதலாக, பக்தியாக, நட்பாக காட்டத் துடித்த பாரதி, கண்ணனைத் தனது  தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், அரசனாய், சீடனாய், சற்குருவாய், குழந்தையாய், காதலனாய், காதலியாய், கண்ணம்மாவாய், குலதெய்வமாய், ஆண்டானாய் பார்த்த பித்தன்.
அவரது கண்ணன் பாடல்களைப் பற்றி மட்டுமே பல பக்கங்கள் பேசிடலாம்.

தமிழுக்கு இன்முகம் காட்டிய இந்தக் கவிராஜன், பன்முக ஒளிபடைத்த பளீர் வைரம்.

இன்கவி அங்கே குறைகிறதென்று என்று இறைவன் இளமையிலேயே அவரை தன் புறம் அழைத்துக்கொண்டான். சாகாவரம் பெறுவதன் வழியை மொழிந்துவிட்டு 39 வயதில் அமரரானார்  மாகவி
"அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்"

ஆம் பாரதிக்கும் அவர் கவிதைகளுக்கும் சாவென்பது இல்லாமல் அழிந்தே போயிற்று!!

காணி நிலம் வேண்டும் பாடல்

காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் - அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் - அங்கு
கேணி அருகினிலே தென்னைமரம்
கீற்றும் இளநீரும்

பத்துப் பனிரெண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர்போலே நிலாவொளி
முன்பு வர வேணும் அங்குக்
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதிற் படவேணும் என்றன்
சித்த மகிழ்ந்திடவே நன்றாயிளந்
தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டு தரவேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப்
பாலித்திட வேணும்.

10 comments:

  1. பாரதியை இப்படி அணு அணுவாக அலசி ஆராய்ந்து ரசித்திட்ட ரசிகை சுபாவை அனவரதம் வாழ்த்துவம்.
    "காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன், என்றன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்" என்று பாடியதால் கோபம் கொண்ட காலன் கஜவுருவில் வந்து பாரதியையே மிதித்து அவன் காலத்தை முடித்து விட்டான் போலும்.
    கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாரதியை நேரில் காட்டிய சுப்பையாவை ரசித்தாயா?

    ReplyDelete
  2. ஆம் அப்பா. எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - என விழிவிரித்து மிடுக்குடன் சொல்லும் S.V.சுப்பையா எட்டயபுரத்து சுப்பையாவை கண்முன் நிறுத்துவதை பலமுறை ரசித்திருக்கிறேன்..

    ReplyDelete
  3. தமிழை பற்றி எழுதும்போது பாரதியை சிலாக்கிகாமல் இருக்க முடியாது. இளம் வயதில் பள்ளியில் நாளைய பாரதம் என்ற தலைப்பில் நான் கவிதை வாசிக்க வேண்டும் என்று பிரயத்தன பட்ட போது இதோ நான் இருக்கிறேன் என்று ஒரு புயலாக என் மனதில் நுழைந்தவன் அந்த மகாகவி. சிந்து நதியின் .. என்று சிவாஜி பாடும் போது அந்த நடிப்பையும் மீறி அதில் இருந்த கவிதையும் அந்த பிரம்மாண்டமான தொலை நோக்கும் சிந்தனையும்.. நீ சொன்னது போல் சிலிர்ப்பான அனுபவங்கள்! மீசை முளைக்க தொடங்கிய போது பாரதியின் தாக்கம் இல்லாமல் இருந்தது இல்லை. காணி நிலம் வேண்டும் பாடல் பற்றி நண்பரான கருப்பையா மாமாவிடம் நிறைய பேசியது உண்டு. மிகவும் தாக்கமாய் தீர்த்த கரைதனிலே,நல்லதோர் வீணை, .. என்று வறுமையின் நிறம் சிகப்பில் மிகவும் அழகாக காட்சி படுத்தப்பட்டபோது எப்படி இது மாதிரி எல்லா நேரத்திற்கும், காலத்திற்கும் ஒருவனால் எழுத முடியும்.. என யோசிக்கும் போது .. ஆஹா இவன் ஒரு மஹா கலைஞன் .. going beyond time, space and situations என்று பிரமிப்புதான் மிஞ்சும்.
    காதலாய் மனதில் உறுதி வேண்டும் என்று யேசுதாஸ் மாதிரி பாடிய காலங்கள் உண்டு. சந்தங்களை அதனோடு சார்ந்த இசையை மொழியை எல்லா வற்றிற்கும் மேலாக சமூகத்தை அடுத்த நிலைக்கு பாரதியை தவிர யாரும் கொண்டு செல்லவில்லை என்பது என் கருத்து.
    காட்சிப்பிழை.. என்ன ஒரு அற்புதமான ஒரு வார்த்தை ஜாலம்! சொல்லின் ஆக்கம், மொழியின் ஆட்சி, கவிதையான புனைவு, சொல்ல வந்த விஷயத்தின் கரு ..அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் சொன்ன ஒரு மிக சிறந்த இலக்கியவாதி!
    காலச் சக்கரத்தில் என்னை பயணம் செய்ய வைத்த உனக்கு என் நன்றி.. !
    ஓடை எப்போதும் சலசலகட்டும்.. !

    ReplyDelete
    Replies
    1. பாரதி பற்றிய பேச்சினிலே
      புதுக்கவிதை பிறக்குது மூச்சினிலே...
      வாசித்து உங்கள் ரசனையையும் அழகாய் பதிவிட்டமைக்கு நன்றி..

      Delete
  4. பாப்பா பாட்டு பாடி சிறுவர் சிறுமியருடன் பந்தம் கொண்டவர். சிறுவராய் இருக்கையில் கொண்ட பந்தம் என்றும் மறக்காது. எனவே பாரதி அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர். இவரை படிக்க உரை தேவையில்லை யாருடைய உதவியும் தேவை இல்லை. எல்லோர்க்கும் எளியவர், பட்டி தொட்டி வரை தமிழை கொண்டு சேர்த்த பெருந்தொகை.
    பாருக்குள்ளே நல்ல நாடு பாடி ,பாரத தேசம் என்று பெயர் சொல்லுவர், ஆடுவோமே பல்லு பாடுவோமே என பல பாடல்கள் பாடி - விடுதலை தினம் கொண்டாடியிருப்போம்.
    தீராத விளையாட்டு பிள்ளை பாடி நடனம் ஆடியிருப்போம்.
    செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாடி கோலாட்டம் ஆடியிருப்போம்.
    முருக,முருகா....ஓம் சக்தி,ஓம்சக்தி ஓம் பாடி பக்தி செய்திருப்போம்.
    பாஞ்சாலி சபதம் பாடமாய் படித்தேனும் பாரதம் வாசித்திருப்போம் .
    மனதில் உறுதி வேண்டும் என்று பாடி திடம் கொண்டிருப்போம்.
    பதுவே [நிற்பதுவே] பாடும் பிள்ளையின் மழலை ரசித்திருப்போம்.
    பாரதி நம் வாழ்வில் இடம் பிடித்த மகாகவிதான்.
    உன்னோடு சேர்ந்து நாங்களும் ரசிகின்றோம் பாரதியின் நினைவுகளை பகிர்கின்றோம் அவர் பாடல்களை.

    ReplyDelete
    Replies
    1. பதுவே பாடிய மகன் பாரதி படிக்கிறாரா?☺

      Delete
  5. அமுதுக்கும் தமிழென்று பேர் - பாரதி - அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் Subhasree Sundaram

    ReplyDelete
  6. அருமையாய் எழுதப் பட்டிருக்கிறது..! பாராட்டுகள் Subhashree Sundaram..1

    ReplyDelete