Tuesday, June 9, 2015

சற்குரு - தாத்தா - 7

சற்று அதிகம் personal நினைவுகளும், உறவுகள் குறித்த குறிப்புகள் நிறைந்த பதிவு இது. தொடர்ந்து படிப்போருக்கு ஒரு தொடர்ச்சி இருக்கும் பொருட்டு share செய்கிறேன்.

அப்பாவின் பிறந்த தினம் இன்று - ரவி அப்பா.
அப்பா பிறந்த 1951 மே 29 தினத்தை நினைவுகூறக் கூடிய யாருளர் இன்று. தாத்தா மற்றும் அம்மாச்சியிடம் கேட்டுப் பார்க்கலாம்.
தாத்தா, அப்பாவைப் பற்றிய சிறு வயது நினைவுகளில் அதிகம் குறிப்பிடுவது - very soft and gentle, obedient என்ற பார்வையில்தான். பெருமாள் கோவில் தெருவில் (இன்றைய aarathy hotel பின்புறம்)வீட்டுக்கு அருகில் PSS bus வந்து திரும்புமாம். இரண்டு வயது நிரம்பிய ரவி அப்பாவும் அவர்களை விட இரண்டு வயது மூத்த செல்லத்தையும் வாசலில் அமர்ந்திருப்பார்களாம். பஸ் அருகில் வந்ததும் ஆர்வத்தில் அப்பா வாயில் விரலோடு 'ஸ்..' என எழுந்து நின்று விட, அத்தை 'வேண்டாம் தம்பி, விழுந்துடுவ' என சொன்னதும் அப்பா அப்படியே உட்காரந்து கொள்வார்களாம். ஒவ்வொரு பஸ் திரும்பும் போதும் இது நடக்குமென, தாத்தா புன்னகையோடு விவரிப்பார்கள்.
மேற்கொண்டு பெருமாள் கோவில் வீதி கதைகள் அப்பாவின் எழுத்திலேயே கேட்கலாம்..
"அழும்தொறும் அணைக்கும் அன்னை - அறிவிலாது ஓடி
விழும்தொறும் எடுக்கும் அப்பன்
தொழும்தொறும் காக்கும் தெய்வம்
சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை" - கானகந்தர்வன் யேசுதாஸ் குரலில் இப்பாடல் கேட்கும் போதெலாம் நெஞ்சம் நிறைந்து தளும்பும்.
இறையும் குருவும் இவ்விதமே..
அஸ்ஸாம் தவிர்த்த எனது ஐந்தாம் வகுப்பின் எஞ்சிய நாட்கள் தாத்தாவுடன் கண் விழிக்கும் நேரமெல்லாம் இருக்கும் தினங்கள் ஆயிற்று
உறவுகள் தொடர்கதை - உணர்ந்தது இக்காலத்தில்தான். வழக்கமாய் பார்த்துப் பழகிய உறவுகளைத் தவிர யாரிடமும் பழகாத தொட்டாற்சுருங்கி நான் அப்போது.(மனசாட்சி: இப்போது மட்டும் என்னவாம்?? சற்று அதிகமானோரைத் தெரியும் அவ்வளவுதான்)
பாட்டியின் மறைவை ஒட்டி பல தினங்கள் அம்மை நகரில் இருந்தபோதுதான் பல பெயர்களுக்கு எனக்கு முகங்கள் அறிமுகம். மருதுபாண்டியன் அண்ணனை நன்கு தெரியும், அண்ணன் மதுரையில் படித்துக் கொண்டிருந்த போது தாத்தா சொன்னது - உங்கள் அனைவருக்கும் மூத்தவன். அண்ணன்!! Sorry கோபிண்ணா.. "என்னைத் தெரியுமா" என அம்மையநாயக்கனூர் மாடி அறையில், தோடி ராகம் படம் பார்த்துக்கொண்டிருந்த போது அரையிருளில் நீங்கள் கேட்ட போது, எனக்கு நிஜமாய் உங்களைத் தெரியாது. இது போன்ற அறியாமைக்கு அதிகம் திட்டு வாங்கியிருக்கிறேன் தாத்தாவிடம்.. வேகவேகமாய் நடந்து வரும் செண்பக அத்தானை நன்கு தெரியும். ஆனால் அவர்கள் வீடும் அம்மையநாயக்கனூரில் அரசமரத்துக்கு எதிரிலிருந்த சாரதி மாமா வீடுதான் என்பது எங்களுக்கு ஆச்சரியமான செய்தி. வானதி அத்தாச்சி வீடு அது!!!
மதுரையில் இருந்த காலத்தில் யாரேனும் வீட்டுக்கு வருகிறார்கள் என்றால் quiz ஒன்று நடக்கும் எனக்கு. பேந்தப் பேந்த விழித்ததுதான் அதிகம். ஒருமுறை தாத்தா தன் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் போது, 'தங்கப்பாண்டியன் வீட்டருகில்' எனக் குறிப்பிட, 'யாரது?' என்று கேட்டுவிட்டேன். பழியாய் வந்ததே கோபம் தாத்தாவிற்கு. தாத்தாவையும் தெரியவில்லை, அம்மை நகரையும் தெரியவில்லை. அன்றுமுதல் குலவரலாறு விலாவரியாய் பாடம் நடத்தப்பட்டது எனக்கு!!
இதற்கும் சில வருடங்களுக்கு முன்னால்-ஒரு சின்ன flashback: தாத்தாவுக்கும் எனக்குமான secret..இன்று என் எழுத்து வாயிலாய் மனம்திறக்கையில் அப்பாவும் தாத்தாவும் பெரியம்மாச்சியும் மேலிருந்து புன்னகை புரிவதாய் அகக்காட்சி. மாயை அகன்ற அரன் உலகன்றோ அவர்களுடையது -
"பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
படும்பொழுது நீங்கிஅது விடும்பொழுதிற் பரக்கும்
மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும்
அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும்" தாத்தா சொல்லிக்கொடுத்த பாடல்...
அது ஒரு பொங்கலுக்கு முன்தினம்.
சில வருடங்கள் ஷண்முக பவனமும் செல்வ நிலையமும் மௌனம் சாதித்த காலம். போக்குவரத்தின்றிப் போனதால், என் தாய்க்குத் தாயாகி எனக்கும் தாலாட்டுப் பாடிய மாதரசி - another great legend - சௌந்தரம் அம்மாச்சி - பெரியம்மாச்சி என்னைப் பார்க்கவேண்டும் என, தாத்தா ரகசியமாய் அங்கு அழைத்துப்போனது; மிகத் தெளிவாய் அந்த மாலையின் விளக்கேற்றும் வேளையின் இருளோடு நினைவில் அச்சேறி இருக்கிறது. அருகில் பார்த்ததில்லையே தவிர, தாத்தா அதிகம் குறிப்பிடும் நபர் பெரியம்மாச்சி.தாத்தா பலமுறை அங்குள்ளோர் அனைவர் குறித்தும் சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். As usual I was blank, the moment I entered there.. பெரியம்மாச்சி தழுவி உச்சிமுகர்ந்த சேலை வாசமும், கன்னத்தை கைகளால் அழுத்தி முத்தமிட்ட பத்மாத்தையும், வேலேந்திய முருகனும் that scene is etched in memory forever..
அங்கிருந்த ஒரு சில நிமிடங்கள் அந்த முருகனையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன்.. அவர் கையிலிருப்பது சக்திவேலா (வீரவேலா, தாரைவேலா, விண்ணோர் சிறை மீட்ட தீரவேலா எனப் பெருத்த சந்தேகம்) எனத் தெற்குப் பக்கத்து வாசற்படியில் அமர்ந்து அம்மாச்சியிடம் பேசிக் கொண்டிருந்த தாத்தாவிடம் கேட்டதும் நினைவிருக்கிறது. மீண்டும் வீடு நோக்கி நடக்கும் போது, தாத்தா கண் கலங்கியிருந்தது (மனதின் வேதனை நானறியேன்), கூரைப்பூ வாங்கிக்கொண்டு போகும் போது, கடையில் கூட்டமென சொல்லிவிடலாம் என்றார்கள், நான் அதுவரை அறிந்திராத கம்மிய குரலில். அண்ணனின் அந்த ரகசியம் பெரியம்மாச்சியும் இறுதி வரை காத்தார்கள். TVS ஆஸ்பத்திரியில் இறுதித் தறுவாயில், அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு பெரிய அம்மாச்சியைப் பார்க்கச் சென்ற போது, "சிறு வயதிலேயே பிரித்துச் சென்று விட்டீர்களே, பார்க்காத குழந்தைக்கு எப்படி நினைவிருக்கும்?" எனக் கேட்டு என் தலையை வருடியதை நினைக்கும்போது, அந்த அண்ணன் தங்கையின் புரிதலும் பகிர்தலும் உணர முடிகிறது. தாத்தாவின் வழிகாட்டுதலில் பின்னாட்களில் ஷண்முக பவனம், மனம் திறந்து லேசாக்கும் தனிப்பட்ட புனித ஸ்தலமாகவே இருந்தது.
மீண்டும் ஐந்தாம் வகுப்பு தினங்கள் - தாத்தா அப்பத்தாவுடன் - பாலா, செண்பகவல்லி அத்தை அனைவருடன். பெரியவர்களின் மனத்துயரங்கள் எல்லாம் புரியாத வயது. 'துன்பம் நிறைந்து வந்த போதும் மனம் சோர்ந்து மதிமயங்க மாட்டேன்' - மேல் ஸ்தாயியில் அத்தை தழுதழுக்கும் போது, அத்தையின் குரலை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருப்பேன். ஜெய ஜெய 'பாலா' சாமுண்டேஸ்வரியும், ஓம் நமோ 'நாராயணா'வும் பாடச் சொல்லி பாலா ஒருபுறம் நேயர் விருப்பம் கேட்க, அருகிலோ திண்ணையிலோ அமர்ந்தபடி 'வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்', போன்ற வரிகளில் நெக்குருகி கண்ணீர் வடிய அமர்ந்திருக்கும் தாத்தா. அழுகை புரியவில்லை எனினும், தவத்தை கலைத்தலாகாதென அன்றும் புரிந்தது.
நல்ல அழுகை, நல்ல ஸ்னானம் - லா.ச.ரா சொல்ல, அனுபவத்தில் மேலும் புரிந்தது.
சில அனுபவங்கள் அனைவருக்கும் நிகழும்போதிலும், அவற்றிலிருந்து பெறப்படும் தரிசனங்கள், அவரவர் தீட்சண்யத்தைப் பொறுத்ததே. நமக்கு எவ்வளவு கொள்ளளவோ அவ்வளவுதான்.

முந்தைய பதிவு (6)

அடுத்த பதிவு (8)

2 comments:

  1. சில அனுபவங்கள் அனைவருக்கும் நிகழும்போதிலும், அவற்றிலிருந்து பெறப்படும் தரிசனங்கள், அவரவர் தீட்சண்யத்தைப் பொறுத்ததே. நமக்கு எவ்வளவு கொள்ளளவோ அவ்வளவுதான். - முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  2. சம்பவங்கள் ஒன்றாயினும் அனுபவங்கள் வேறு !

    ReplyDelete