Friday, June 5, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர் - 3

"தேனூறும் தேவாரம் இசைப் 
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே 
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் 
அதில் உலகம் மறந்து போகும்" - இன்னிசை ராஜாவின் இசையில் இப்பாடல் திகட்டாத தீஞ்சுவை.

தமிழின் இனிமையும் வளமையும் உணரத் திரைப்படங்களே பெரும் பங்கு வகித்தது. திருவிளையாடல் படத்தின் வசனம் அப்பாவின் tape recorder-இல் பல முறை அந்த "ற்றொயிங்ங்ங்" இசையோடு கேட்டு முதல் காதல். 

"சொற்சுவை பொருட்சுவை அனைத்தும் கூட்டி 
சுந்தரத் தமிழினிலே பாட்டிசைத்து 
செந்தமிழ்க் கவி பாடும் புலவன் நான்" என்ற வசனம் பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடம் பாராட்டுப் பெறுவதற்காக பேசியது. இது போன்ற படங்களின் வசனங்கள் பேசி விட்டாலே மனதுக்குள்  தமிழ்ப் புலமை வந்துவிட்டாதாய் ஒரு பூரிப்பு வந்துவிடும். பின்னர் மேலும் மேலும் என்று மனம் பித்துக் கொள்ளும். "அங்கம் புழுதிபட", "சங்கறுப்பது எங்கள் குலம்" எல்லாம் புரிய இன்னும் சில வருடங்கள் ஆனது. 

ஆனால் இந்த "ஞானப் பழத்தைப் பிழிந்து" பாட்டில் ஔவைப் பாட்டி பாடும் அடுத்த வரி புரிய வெகு காலம் ஆயிற்று!!

பத்தாம் வகுப்பில் "திருவிளையாடற் புராணம்" பாடத்தில் படித்த போது, சங்கத் தமிழ் பாடலாகிய 
 
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே

என்ற பாடலை ஜனரஞ்சகமாய் அனைவரிடமும் கொண்டு சேர்த்த சிவாஜி கணேசனையும் ஏ.பி.நாகராஜனையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழின் செழுமைஅறிய சங்க காலம் தொடங்கி இன்று வரை நடை பயில வேண்டும் தமிழோடு கரம் கோர்த்து.

பள்ளிப் பாடத் திட்டத்தின் ஊடேயும் தமிழின் நேர் நேர் தேமா, கருவிளம், கூவிளம், குற்றியலுகரம், லிகரம் போன்ற கடபுடா இலக்கணம்(இலக்கணமும் இனிமையே, அது குறித்து இப்போதே எழுதினால் வழக்கமாய் வாசிக்கும் 10 பேரும் நிறுத்தி விட்டால் என்ன செய்வதென்று அஞ்சி அந்த பக்கம் இப்போது செல்லவில்லை) தவிர சில ரசிக்கவேண்டிய இரட்டுற மொழிதல் போன்ற பாடல்களும் இருந்தன. 

இது போன்ற double meaning சிலேடையில் மன்னர் கவி காளமேகம். இவர் மதுரையை அடுத்த திருமோகூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று ஒரு செய்தி.

"நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த் தேன் பாயும் சோலைத் திருமலை ராயன் வரையில் பாம்பாகும் வாழைப் பழம் "

என்று இவர் பாம்பையும் வாழைப்பழத்தையும் குறித்து இரட்டுற மொழிந்தது பாடத்தில் இருந்தது. 

நஞ்சிருக்கும் - விஷமிருக்கும்தோலுரிக்கும் - பாம்பு தோல் உரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் -  சிவனின் சிரசில் இருக்கும் வெஞ்சினத்தால் பற்பட்டால் மீளாது - பாம்பின் பல் பட்டால் உயிர் மீளாது என்று படித்தவுடன் பாம்பைக் குறித்தே பாடுவது போலத் தோன்றினாலும்,.

நஞ்சிருக்கும் - நைந்துபோயிருக்கும் (பேச்சுவழக்கில்) நஞ்சிருக்கும்தோலுரிக்கும்_ சாப்பிடும் முன் தோல் உரிக்கப்படும்நாதர்முடி மேலிருக்கும் - அபிஷேகத்தின் போது சிவனின் சிரசில்  வாழைப்பழத்துக்கும் இடமுண்டுவெஞ்சினத்தால் பற்பட்டால் மீளாது - பல்லில் அரை பட்டால் மீளாது.


ஆகவே வாழைப்பழம் பாம்புக்கு நிகராகின்றது என்று முடிக்கிறார் இந்தக் கவி
.

இவரது பல பாடல்களில் இப்படி சிலேடையைக் காணலாம். 

மேலும் "த"கர வர்க்க எழுத்துக்களாலேயே அமைந்த பாடல், "க"கர வர்க்கத்திலேயே எழுதிய பாடல் எல்லாம் இவரிடம் உண்டு.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதிதுத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதிதித்தித்த தித்தித்த தாதெது தித்தித்ததெத்தாதோ தித்தித்த தாது.

இது ஒரு வண்டைப் பார்த்துப் பாடுவதாக அமைத்திருக்கிறார்.

தத்தித் தாது ஊதுதி - தாவிச் சென்று பூவின் மகரந்தத்தைஊதி உண்கிறாய் 
தாது ஊதித் தத்துதி - மகரந்தத்தை ஊதி உண்ட பின் மீண்டும் தாவிச் செல்கிறாய்
துத்தித் துதைதி - துத்தி என்று ரீங்கரித்தபடியே அடுத்த பூவிற்குச் செல்கிறாய்
துதைது அத்தா ஊதி - அப்பூவையும் நெருங்கி மகரந்தத்தை உண்ணுகிறாய்
தித்தித்த தித்தித்த தாதெது - இரண்டிலும் தித்திப்பான இருந்த மகரந்தம் எது?
தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது - தித்திப்பான பூ எது? அழகான பூவின் இதழ் எது?


காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக் காக்கைகுக் கைக்கைக்கா கா  
சரியாக வாசிக்க முடிந்தால் comment போடவும், அர்த்தம் கூறுகிறேன் ;)

மேலும் இவர் ஒரு பாடலில்  
கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்பெண்டீர் தமைச் சுமந்த பித்தனார்-எண்டிசைக்கும்மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்அக்காளை ஏறினாராம்.

அக்காளை தங்கையை எல்லாம் என்னவோ பண்ணி விட்டார் ஈசன் என்று சிவனைக் கண்டபடி ஏசி பெண்பித்தன் எனச் சொன்னது போலத் தொனிக்கும் இப்பாடலின் உண்மையான கருத்து 

கடம்ப வனத்து ஈசனார் உடலில் பாதியை உமைக்கும், தலையை கங்கைக்கும் அளித்திருக்கும் பித்தர். எட்டுத் திசைகளிலும் புகழ் மிக்க தன் கைகளிலே நெருப்பை ஏந்தி இருக்கிறார் 
காளை மாட்டை வாகனமாகக் கொண்டவர்.

இன்னும் இவர் பாடல்கள் சொல்லிக் கொண்டே போகலாம். மோர் கொடுத்த ஆய்ச்சியர் மேல் பாடிய வஞ்சப் புகழ்ச்சிப் பாடல், உணவு சமைக்க தாமதமாக்கிய சத்திரக்காரன் மேல் கோபமாகப் பாடிய பாடல் என..

"23ஆம் புலிகேசி" படத்தில் "நீ மன்னரைப் பார்த்து சற்றும் இடைவெளி இல்லாமல் திட்டினாயே" என்ற பகுதி சமீபத்திய படங்களில் இது போன்ற தமிழ் நகைச்சுவையை மீண்டும் தூசி தட்டும் முயற்சி.

Lighter side of Tamil - இன்றைய பதிவில்.. அடுத்த பதிவில் வேறொரு சுவையோடு சந்திக்கலாம் 

2 comments:

  1. சுபா! என்னால் "காக்கைக்கா....." பாடலை வாசிக்க முடிந்தது. அர்த்தம் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  2. தொடர்ந்து வாசித்து கேள்வியும் கேட்டமைக்கு நன்றி ஸ்ரீதேவி
    காக்கைக்கா காகூகை [காக்கைக்கு ஆகா கூகை] - காகத்திற்கு கூகை (ஆந்தை) ஆகாது, இரவில் அது காக்கையை வெல்லும்
    கூகைக்கா காகாக்கை [கூகைக்கு ஆகா காக்கை] - கூகைக்கு காகம் ஆகாது, பகலில் இது கூகையை வெல்லும்
    கோக்குக்கூக் காக்கைக்குக் [கோக்கு கூ காக்கைக்கு] - கோ [மன்னன்] கூவை [உலகை/ நாட்டை] காக்க வேண்டுமாயின்
    கொக்கொக்க [கொக்கு ஒக்க] - கொக்கை போல இருக்க வேண்டும், அஃதாவது கொக்கு தனக்கு இரையாக மீன் சிக்கும் வரை காத்திருப்பதை போல மன்னவன் சரியான நேரம் பார்த்து செயலாற்ற வேண்டும், அவ்வாறு இல்லையென்றால்,
    கைக்கைக்கு காக்கைக்கு - கைக்கைக்கு [பகையிடமிருந்து] காப்பதற்கு
    கைக்கைக்கா கா [கைக்கு ஐக்கு ஆகா] - ஐக்கு [தலைவனுக்கு] கைக்கு ஆகா [செய்ய இயலாது]

    ReplyDelete