Thursday, June 25, 2015

அமுதுக்கும் தமிழென்று பேர் - 4

அமுதுக்கும் தமிழென்று பேர் - 4

முத்தமிழின் ஓர் இயலாய் திரையிசைத் தமிழும் இடம்பெறும் தகுதியை சில கவிஞர்கள் தம் கவித்திறத்தால் ஏற்படுத்தினார்கள் (past tense intended with some sense)

அப்பாவின் பழைய recordல் 'சாரசம் வசீகரக் கண்கள் சீர்தரும்' கேட்டுவிட்டு அண்ணன் கேட்ட கேள்வி - "அப்பா இது என்ன language?". அன்றைய தமிழுக்கே இந்த கதி.

இன்று வரும் பாடல்களில் பலவும் அஜீரணத்தை ஏற்படுத்தி விடுகின்றன. (அதாரு அதாரு உதாரு உதாரு என்ற பாடலை எதேச்சையாய் கேட்ட அன்று கண்ணதாசனும் பட்டுக்கோட்டையாரும் பாடிய அதே தமிழுக்காய் சிறிது கண்ணீர் சிந்தினேன்) அதைப் பற்றியும் தனியே அரம் பாடலாம் என்றிருக்கிறேன். அரம் பாடுதல் - சங்கத் தமிழில் இதுவும் ஒருவகைப்பாடல்,பாடியே பாட்டுடைத் தலைவனையோ/பொருளையோ அழிப்பது, இதுபற்றிய சுவையான செய்திகள் வேறொரு நாள் பேசலாம்.

இன்றைய பாடல்களில் நல்ல தமிழ் தப்பிப்பிழைத்தாலும் தமிழறியா நாக்குகளில் சிதைந்து வெளிவருவதை 'பர்ருவாயில்லை' என்று கேட்க எனக்குப் பக்குவம் போதவில்லை. அதனால் எடுத்த முடிவு - பாடல் வரிகள் மிக நன்றாக இருக்கிறதென நம்பத் தகுந்த வட்டாரங்கள் சூடம் ஏற்றி சத்தியம் செய்தால் அன்றி நான் பாடல்கள் கேட்பதில்லை.

காவியத்தமிழை மக்களுக்கு எளிமையாய் எடுத்துச் சென்ற சிறந்த ஊடகம் திரைப்படம். அவற்றில் காவியநயத்தை எளிமையாய் வடித்துத் தந்த சில பாடல்களை இன்று பார்க்கலாம்.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மறைவுக்குப் பின் பாரிமகளிரின் கையறு நிலை குறித்த சங்கப்பாடல்:

"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர் எம்
குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே"


Literalஆக மொழி பெயர்த்தால்
"அந்த நாள் அந்த வெண்ணிலா...
எங்கள் தந்தையும் இருந்தார் எங்கள் குன்றும் இருந்தது
இந்த நாள் இந்த வெண்ணிலா...
பகைவர் எங்கள் குன்றைக் கைப்பற்றினர்; எங்கள் தந்தையும் இல்லை...."

இதனை "அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகில்" என்று காதலின் குரலாய் குழைத்துக் கொடுத்தார் கவியரசர்.

பார்க்காமலே காதல், சொல்லாமலே காதல், செல்போனில் காதல் என காதல் தோல்வி கதாநாயகன் முரளி சில காலம் தமிழ் சினிமாவை வதைத்து எடுத்ததுண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நாவுக்கரசர் கூறும் பக்தியாய்க் கணிந்த காதலைப் பாருங்கள்:

"முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

தலைவி தலைவனைக் குறித்து அறியத் தொடங்கி, மெல்ல மெல்லத் தன்வயம், சுயம் இழக்கிறாள். தலைவன் இங்கு சிவன்(சாட்ஷாத் சிவபெருமான்தான்) சங்க இலக்கியத்தில் பெயர் சுட்டுதல் மரபன்று - hero, heroine என்றால் தலைவன், தலைவிதான்.

இந்தப் பாடலை மிகப் பொருத்தமாக எடுத்தாண்டது கல்கி - நவீன தமிழ்க் காவியங்களில் ஒன்றாகிய 'சிவகாமியின் சபதத்தை', இந்த தேவாரப் பாடலுடன் 'தலைவன் தாள்' சரணடைந்து முடித்திருப்பார்.

இதனைத் திரையிசையில்

"அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்" - என்று மீண்டும் கவியரசர் (மீண்டும் MGR!!)

திருக்குறளில் கவிதையாய் ஒரு குறள் வரும் -
"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்."

கவியரசர் வரிகளில் இதை அழகாய்,
"உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே" என்று PBS குரலில்.. இனிமை.

மற்றுமொரு பாடல் - கல்லூரித் தமிழ்ப் பாடத்தில் படித்த பாடல்
"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடங்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே" - மீண்டும் நாவுக்கரசர் தேவாரம் - கவியரசர் வரிகளில் சாரமாய் வடித்து,
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா"

கண்ணதாசன் பல பாடல்களைக் காப்பியடித்தார் என்று யாரேனும் அவசரமாய் முடிவெடுத்துவிடும் முன், இவையெல்லாம் காப்பியங்களை பாமரருக்கும் எடுத்துச் சொல்லும் முயற்சியாய் அவர் எடுத்தியம்பிய ஓரிரு வரிகள் மட்டுமே. அவர் எழுதிய காவியங்கள் கணக்கில்லாதது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் இந்தப் பாடலையே எடுத்துக் கொள்ளலாம் - இப்பாடலின் சரணத்திலேயே இரு வரிகள்-
"உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்கண்ணா-இதை
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம்விலகும் கண்ணா".

நாம் பலரும் அறிந்திருக்கும் கர்ணன் படப்பாடல்கள் - ஒவ்வொன்றும் இலக்கியத் தரம் வாய்ந்ததே.
"மணநாள் மன்னன் உனைக்கண்டு மதிமயங்குகிறானே", "வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன்" இதுபோல ஒவ்வொரு பாடலிலும் கவியரசர் அதில் எடுத்தாண்ட சொல்லாட்சியை வியக்காமல் தமிழை ரசிக்க முடியாது.

இதில் வரும் "வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்
வைப்பவன் கர்ண வீரன்" பைபிள் மத்தேயு அதிகாரம் எனில் என்னே அவர் வீச்சு.

மத்தேயு - நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது

தர்மம் குறித்து இதனினும் தெளிவாய் சொல்லவும் கூடுமோ!!

இன்னும் நூற்றுக்கணக்கான பாடல்கள் சொல்லலாம் கவியரசர் பெருமை சொல்ல. எனின் இந்த இணையிலாப் பாடலோடு இந்தப் பதிவை முடிக்கிறேன். மேலும் பல பாடல்கள், மேலும் பல கவிஞர்களோடு தொடர்வோம்.

"ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!"


No comments:

Post a Comment