Wednesday, July 29, 2015

சற்குரு - தாத்தா - 14

ஒவ்வொரு மறைவும் உணர்த்திக் கொண்டே இருந்தும், மறந்து விடும் மனித மனம் - நிலையிலா வாழ்வில் நம் நிலை யாதென்று. ஒரு போர்க்களம் பார்த்துவிட்டால், மரணத்தோடு கணம்தோறும் வாழ்ந்தாக வேண்டிய நாட்களில் ஒருமுறை வாழ்ந்து விட்டால், ஒருவேளை உயிரின் மதிப்பு புரிந்துவிடக்கூடும்.

மாபெரும் மனிதர்களை இழந்திருக்கும் இத்தருணம், வாழ்வு குறித்த - பயனுள்ள வாழ்வு குறித்த  பல கேள்விகள் அனைவருக்கும் மனதுக்குள்  எழும்பி இருக்கிறது. அதை சற்றே உற்றுநோக்கி மனதுக்குள் விடை தெளிதல் நலம். இல்லையெனில் இயற்கையின் கொடையாக ஞாபக மறதி இருக்கிறதே - அன்றாடக் கவலைகளுக்கு சீக்கிரம் திரும்பி விடுவோம்.

சிற்றலை கரை கடத்தி மீண்டும் அமைதி கொள்ளும் குளம்.

அடிமேல் அடியென அப்பாவின் மறைவுக்குப் பின், மாமாவின் மறைவு... பொதுவாக சமீபத்திய மாதங்களில் பல துறை ஆளுமைகள் அமரர் ஆகி இருக்கிறார்கள். (ஜெயகாந்தன், பாலச்சந்தர், MSV, அப்துல் கலாம் வரை) இறப்பும் இழப்பும் நம் மனதை பண்படுத்தவில்லையெனில், வாழ்வு நமக்கும் பிறர்க்கும் கனியாத காயாய் கசந்துபோக நேரும்.

--------------------

எழுத விழைந்த கதைக் களமும் மரணத்தை சுவாசித்த ஒரு பெரும் போர்ச்சூழல்தான்

1942 - மலேயாவில் கோலாலம்பூர் அருகே ஒரு சிறிய ரயில்வே நிலையம்.  நாடாள்பவர் யாராயினும் உயிர்வாழ உத்தரவாதமின்றி மக்கள் அலைக்கழியத் தொடங்கிஇருந்த காலம்.

நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்ய, அனைவரது பெருமூச்சுக்களையும் சேர்த்து வெளிவிட்டு வந்து நின்றது ஒரு புகைவண்டி. திடுமென போர் விமானங்களின் வருகையைக் குறிக்கும் எச்சரிக்கை சங்கு ஒலித்ததும், அனைவரும் அருகிருந்த பதுங்குகுழிகளுக்குள் பாய, ரயில் பிரயாணிகளுக்கு அலறுவதற்கும் அவகாசம் இன்றிப் போனது - அடுத்த வினாடி பலருக்கும் சுவாசம் நின்றுபோனது - குண்டுகள் ரயில் மீது விழ பெருநாசம். அன்று உயிர் இழந்த நூற்றுக்கணக்கானோரில் ஒருவர் என் ஆசிரியையின் தந்தை . சில நூறடிகளுக்குள் குழியில் பதுங்கித் தப்பியவர்களில் ஒருவர் தாத்தா . ஆசிரியையிடம் பேசும் போதே இருவர் உணர்வுகளும் பின்னோக்கிப் பாய்கிறது. தாத்தாவைப் பார்த்து, தான் பார்க்க இயலாது போன தன் தந்தையை பார்த்தாய் கண்கலங்கிய தமிழ் ஆசிரியை.

அன்று இரவு, எத்தனையோ முறை தாத்தா கூறக் கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்டேன் தாத்தா கடல் கடந்த கதை, உற்றாரைப் பிரிந்து, உலகப் போர் நாட்களில் நிலையாமையை மட்டுமே நித்தமும் பார்த்த கதை. ஆங்கே தன்னிகர் இல்லாத் தலைவர் 'நேதாஜி' யின் INA படையில் இணைந்த கதை.

சாரங்கள் சதமல்ல எனத் தெரியும் தருணம், சாரம் அறுத்தும் எழுந்து நிற்கும் கோபுரங்களாய், மனிதர்கள் வேரறுந்த மண்ணில் வான் நோக்கி உயர்ந்த கதை. உற்றார் யாருமில்லை, பெற்ற மகன் காண வழி இல்லை, நாளை நான் உண்டா, நாளை என ஒன்றுண்டா - எதற்கும் பதில் இல்லை - எனும் போது வாழ்வை இரு விதமாய் கழிக்கலாம். இருப்பது ஒரு வாழ்க்கை, எப்போதும் அறுந்து விழக்கூடிய கத்தி தலை மேல்.

அஞ்சிக் கொண்டும், அஞ்சாதது போல் வாழ்வைக்  கட்டற்று மனம் போல் வாழ்வது ஒரு வகை. தோன்றிடின் பயனுற வாழ்வதும், வீழின் விதையென வீழ்வதும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நிகழும் நிகழ்வைக் கர்ம பூமியாய்க் கொண்டு களம் புகுவது இரண்டாம் வகை.

தர்மத்தைக் கையில் எடுத்துக் கர்ம பூமியில் களம்புக வாயில் அனைவருக்கும் திறந்தேதான் இருக்கிறது. சிறகு கொண்ட பறவை எல்லாம் வடதுருவம் வரை பறந்தா விடுகிறது!! மதிவேண்டும், மதிகிட்டும் விதி வேண்டும்.

அந்த களம் காண, காலம் தாத்தாவைக் கொண்டு சேர்த்த கதை:

தேடல் - மானுடனுக்குள் சுடர்விடும் அணையா நெருப்பு. கடல் கடந்து திரவியம் தேட இன்றொரு வாழ்வுமுறை IT. அன்றொரு வாழ்வுமுறை 'வட்டி'. நகரத்தார் எனும் பெருவணிகர் இல்லங்கள் நடத்திய கிழக்காசிய வாணிபம் - பர்மா, மலேயா, இலங்கை என பல தேசங்களில். நேர்மையும் காரியநேர்த்தியும், நிர்வாகத்திறனும் மிக்க இளைஞர்படையை கணக்குப் பிள்ளைகளாய் காரியமாற்ற இருகரம் நீட்டி இழுத்துக் கொண்டது இவ்வணிக வாழ்வு. வாழ்வை புதைகுழியில் ஆழ்த்தும் இன்றைய கந்து வட்டிக் கடைகள் அல்ல. வணிக நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நவீன வங்கிகளின் முந்தைய வடிவம் இந்த வட்டிக் கடை. நாடாறு மாதம் காடாறு மாதம் என உற்றாரை பெற்றாரை விட்டு வாழ்க்கை. இதன் வாயிலாய் தாய்மண்ணில் வருமானம் பெருக்கி வளம் கண்டது பலரது வாழ்வு.

19 வயதில் (1935) தன் மாமாவோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் சென்றார்கள் தாத்தா . கப்பல் வழி 4 நாள் பயணம் ரங்கூன் - அன்றைய பர்மாவின் தலை நகரம். பல குடும்பங்களின் பொருளாதாரத்தை உச்சியில் ஏற்றவும் அங்கிருந்து சறுக்கவும் செய்த தலைவிதி நகரம்.

முதல் திருமணம் 1938-ல்  தாத்தாவுக்கும் அவரது அத்தை மகள் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் நடந்தது.
நல்ல நிறமாயும், சின்னஞ்சிறு பெண் போல இருப்பார்களாம் - பிறர் சொல்லக் கேள்விதான். அதிகாலை காணும் அற்புதக் கனவு யாரோ அடித்து எழுப்பக் கலைவது போல விதியின் கருணையற்ற கரங்களில் கலைந்தது 5 மாதத்தில். முதற் புள்ளியிலேயே முற்றுப் புள்ளி கொண்டு நிறைவடைந்தது அந்தக் கவிதை.

மாமன் மகளை (சேது அப்பத்தாவை) மணந்தது அடுத்த வருடம் 1939. மிகச் சரியாக மூன்றே மாதங்களில் மருமகனை அழைத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள் பசளைத் தாத்தா.

இம்முறை சென்றது கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

அப்போது தெரியாது - யுத்தம் வருவதும், அடுத்த ஆறு வருடங்கள் கழியப் போவது யாருமற்ற வனவாசமும், உற்றார் உறவினரின் இடையறாத மனவாசமும் - இருப்பிடமும் தெரியாமல், இருப்புக்கும் இறப்புக்கும் இடையே நடந்த அஞ்ஞாதவாசமும் என்று.


சில தேதிகளும் குறிப்புகளும் - தாத்தாவின் குறிப்புகளில் இருந்து

28-ஜூன்-1935-ல் தன் மாமா ஸ்ரீமான் ராமநாத பிள்ளை அவர்களோடு கப்பல் ஏறி முதல் முறை ரங்கூன் பயணம் . கப்பல் வழி 4 நாள் பயணம், 1-ஜூலை-1935 ரங்கூன் .

1936-ல் மார்ச் மாதம் இந்தியா வருகை, டிசம்பர்  வரை (8 மாதம்) மதுரை வாசம்.

1936 டிசம்பர் ரங்கூன் சென்று 1938 மார்ச்-ல் அடுத்த வருகை. 

6-ஏப்ரல்-1938 தாத்தாவுக்கும் செல்லம்மாள் அப்பத்தாவுக்கும் திருமணம்.
(என்னைப் பல வருடங்கள் கழித்து, பெங்களூர்-ல் உமா அத்தை வீட்டில் பார்த்து சிவசாமி தாத்தா சொன்ன முதல் வார்த்தை செல்லம்மா அப்பத்தா போல இருக்கிறேன் என்பது, வேறு யாரும் அவர்கள் குறித்து விரிவாக சொல்லிக் கேட்டதில்லை).

12-செப்டம்பர்-1938 செல்லம்மாள் அப்பத்தா மறைவு.

சேது அப்பத்தாவை மணந்தது அடுத்த வருடம் 14-டிசம்பர்-1939.

கோலாலம்பூர் - சென்றடைந்த தினம் 1-மார்ச்-1940

முந்தைய பதிவு (13)

அடுத்த பதிவு (15)

No comments:

Post a Comment