Wednesday, June 10, 2020

ஆயிரம் மலர்களின் எடை


வானொலி மட்டுமே திரைப்படங்களோடு வீடுகளுக்குத் தொடர்பாக இருந்த காலத்திலேயே மிகப் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. பின்னர் 90களில் சன்டிவி தொடங்கி பல்வேறு அலைவரிசைகள் பெருகி அனைத்திலும் 24 மணிநேரமும் திகட்டத் திகட்ட திரைநிகழ்ச்சிகள் வந்த பிறகும் இப்பாடல் வானொலியோடு 0மட்டுமே மனதில் பதிந்திருக்கிறது. இப்பாடலின் காட்சியை பார்த்தது வெகு நாட்களுக்குப் பிறகே. அதுவரை மனது வரைந்த கற்பனையிலேயே பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மிகவும் குழந்தைப்பருவத்தில் இப்பாடலை வெளிச்சம் நிறைந்த ஒரு பொன்னொளிர் காலைப் பொழுதில் கேட்ட நினைவு. அந்த பொன்பொழுதாகவே இப்பாடல் நினைவிலிருக்கிறது.


Springtime - Art by Claude Monet, French painter


கண்ணதாசன் இதற்குப் பாடல் எழுதிய வேகத்தை இளையராஜா விவரிக்கும் ஒரு காணொளியை சமீபத்தில் பார்த்தேன். இசை கேட்ட நிமிடம் தெறித்து உதிர்ந்த வரிகள்.

'எழுதிச் செல்லும் விதியின் கை' என்ற உமர்கய்யாம் மொழிபெயர்ப்பில் கவிமணி தேசிக விநாயகம் எழுதிய சொற்பிரயோகம் ஒரு திரையிசைப்பாடலில் வந்தமரச் செய்கிறார் கண்ணதாசன்.

படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: ஜென்சி, எஸ்.பி.ஷைலஜா, மலேசியா வாசுதேவன்
———————

ஆயிரம் மலர்களே
மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
சொல்லுங்கள்
ஆயிரம் மலர்களே மலருங்கள்

வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ ராகங்கள் நூறு
பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ
(ஆயிரம் மலர்களே)

கோடையில் மழை வரும்
வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும்
விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும்
பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ
யார் சேர்த்ததோ
(ஆயிரம் மலர்களே)

பூமியில் மேகங்கள்
ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே சாயாத குன்றும்
காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல்
தாயாகுமோ
(ஆயிரம் மலர்களே)

ஆயிரம் மலர்கள் ஒருமித்து மலர்வதைப் பார்ப்பது எப்படி இருக்கும். சிறு குழந்தைகள் தன்னிடமிருக்கும் பொம்மைகளின் எண்ணிக்கையை மிகையாக்கிச் சொல்ல தான் அறிந்த பெரிய எண்ணைக் கொண்டு சொல்வது வழக்கம். என்கிட்ட அஞ்சு கார் பொம்மை இருக்கே என்பது போல.. ஐந்து அக்குழந்தைக்கு கோடிகள் போல ஒரு பெரிய எண். அப்படித்தான் இந்த ஆயிரம். ஆயிரம் என்பது முடிவிலி எனப் பெருகும் எண்ணிக்கையின் ஒரு அடையாளம் மாத்திரமே. கவிமனம் புவியெங்கும் மலர் விரிக்க அந்த ஆயிரம் என்ற எண் போதும்.




சென்ற வருடம் நியூஸிலாந்து சென்ற போது தொடர்ந்து பதினைந்து நாட்கள் ஆயிரமாயிரம் பொன்மலர் பூத்துக் குலுங்கிய வழிகளினூடே பயணம் செய்தபோது ஒரு கனவு வந்தது. ஒரு நீண்ட மிகப்பெரிய மலைச்சரிவு, மலை முழுவதும் பள்ளத்தாக்கு முழுவதும் மஞ்சள் நிறப் பூக்கள். இலைகளின் பச்சை கூடக் கண்ணுக்குப் படாத பொன்பரப்பு. அச்சரிவெங்கும் பொன்பூசிய ஒளியின் மீது ஆங்காங்கே மேகத்தின் நிழல்கள் ஓவியம் வரைந்து கொண்டிருந்தன. மேகங்கள் போல மிதந்து அக்காட்சியைக் கண்ட அக்கனவு வெகு துல்லியமாக மனதில் இருக்கிறது. ஆயிரம் மலர் மலரக் கண்ட தருணம்.

பாடல் தொடக்கத்தில் ஜென்சியின் முதல் ஹம்மிங்கிலேயே ஒரு பறவை வானவெளியில் சஞ்சரித்துவிட்டு பறந்திறங்கும் உணர்வு. தொடக்க இசையில் பொன்மலர்களால் வண்ணம் கொண்ட ஒரு மலைச்சரிவு கண்முன் வருகிறது. பழைய உணர்வுகளை மீட்டெடுக்கும் ஒரு மலரும் நினைவுகளுக்கான இசை. முதல் சரணத்துக்கு முந்தைய இசையில் வரும் புல்லாங்குழலில் மனதை ஏதேதோ செய்துவிடுகிறார் ராஜா. 'வானிலே வெண்ணிலா' என ஜென்சி கொஞ்சுவது போல மனப்பறவையை மெல்ல அழைத்துச் செல்கிறார். இன்னுமா இயல்பாக இருக்கிறாய் என்பது போல இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் வயலின் இசை மனதைக் கரைக்கத் தொடங்குகிறது. காற்றில் ஏற்கனவே உதிர்ந்த மலரொன்று வழியில் கிளையொன்று ஏந்திக் கொள்ள தொடுக்கி நிற்கிறது.
'வசந்தகாலம் மாறலாம், எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ'வில் கீழிறங்கிய பறவை கிளையில் வந்தமர அந்த மலர் மண் நோக்கி உதிர்கிறது.
ஒருதுளிக் கண்ணீரை, ஒரு விசும்பலை, ஒரு பெருமூச்சை 'நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ'வில் யார் சேர்த்தது கவியா இசையா!

இறுதிச் சரணத்துக்கு முன்பாக வரும் குழல் இசையில் வீழ்ந்து கிடக்கும் மலரை மெல்ல வருடிகிறது காற்று. மலேசியா வாசுதேவன் "பூமியில் மேகங்கள்" என்று தொடங்க மலரை அலகிலேந்திக் கொண்டு மீண்டும் விண்ணேகுகிறது பறவை. மலரென மலர்ந்தது மண்ணும் விண்ணும் காற்றும் நீரும் சுடரும் இயைந்த ஒன்றல்லவா. அதையே இசையாக்கியிருக்கிறார் இளையராஜா. என்றோ மலர்ந்த ஒன்று, அன்றலர்ந்தது போலிருப்பதன் ரகசியம். என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றாகும் ரகசியம் அதுவேதான்.

"மலையின் மீது ரதி உலாவும் நேரமே" என்ற வரியில் மலர்நிறை மலைச்சரிவு பறவையின் பார்வையில் விரிகிறது, ஆயிரம் மலர்கள் மலர்ந்து நிற்கும் அம்மலர்வெளியின் நினைவாக உதிர்ந்த ஒற்றைப் பூவோடு நம் கண்ணிலிருந்து மறைகிறது அப்பறவை.

https://youtu.be/5VjTqg2JaZM

1 comment:

  1. உணர்வுகளை வார்த்தையில் காணும் சுகமே தனிதான். அருமை.

    ReplyDelete