Monday, June 8, 2020

கதை விரியும் காலம்

மனம் கவர்ந்த இசை வரிசையில் இன்று வரும் பாடல், இந்த ஒரு பாடலுக்காக மட்டுமன்றி அந்தப் பாடகருக்காக, அந்த முன்னோடி கலைஞருக்கான சமர்ப்பணமாக என்னுடைய தேர்வு.

அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகரான புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா (P. U. Chinnappa). அவரது பல பாடல்கள் - பார்த்தால் பசி தீரும் (மங்கையர்க்கரசி), காதல் கனிரசமே (மங்கையர்க்கரசி), சாரசம் (கிருஷ்ண பக்தி), நடையலங்காரம் (குபேர குசேலா), நமக்கினி பயமேது (ஜகதலப்பிராதபன்), எல்லோரும் நல்லவரே (கிருஷ்ணபக்தி) போன்ற பாடல்கள் அனைத்தும் வீட்டில் ஒலித்துக் கொண்டே இருக்கும். எம்.கே.டியுடைய பாடல்களும் அப்பாவுக்கு பிடிக்குமென்றாலும் பி.யூ.சின்னப்பாவின் பல்துறை திறமையை அப்பா மிகவும் விரும்பி ரசிப்பார்கள். பி.யூ.சி நடித்த உத்தம புத்திரன் தமிழிலேயே முதல் முறையாக இரட்டையர் வேடம் கொண்ட படம். பின்னர் ஜகதலப்பிரதாபனில் ஐவராக ஒரு பாடல் காட்சியில் சின்னப்பா தோன்றுவார். இதுவே திருவிளையாடல் படத்தில் வரும் 'பாட்டும் நானே' பாடலுக்கு முன்னோடி.

"சாரசம் வசீகர கண்கள் சீர்தரும்" பாடல் ஒரு முறை வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்க, 'இது என்ன மொழிப் பாடல் அப்பா?' என்று விடுமுறைக்கு வந்திருந்த அண்ணன் கேட்டார். அன்றிருந்த மொழியும், இசை முறையும் இன்று பலரும் புரிந்து கொள்ளவியலாது விலகி வெகுதூரம் சென்றிருக்கிறோம். எனில் அவற்றை அறிந்து கொள்வது நமது திரையிசைப் பயணத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மிக முக்கியமானது. அந்தக் காலகட்டத்தின் முக்கியமான பதிவு இப்பாடல்கள்.

மேலே சொன்ன அனைத்துப் பாடல்களுமே ராகங்களின் அடிப்படையில் அமைந்தவை. அதிலும் மங்கையர்க்கரசி படத்தில் வரும் 'காதல் கனிரசமே' பாடல் மதுரை மணி ஐயர் பாடி மிகவும் புகழ்பெற்ற 'நாத தனுமனிஷம்' என்ற தியாகையர் கிருதியின் அதே மெட்டில் அமைந்தது. சித்தரஞ்சனி என்னும் நிஷாதாந்தி(நிஷாதம்+அந்தி) ராகத்தை எடுத்துக் கொண்டு விரிவான கற்பனா ஸ்வரங்களோடு ஒரு இசைக் கச்சேரியே புரிந்திருக்கிறார் சின்னப்பா. இந்த ராகத்தில் நிஷாதத்துக்கு மேல் பாடக்கூடாது. எனவே மந்த்ர ஸ்தாயியும் தார ஸ்தாயியும் கிடையாது. மத்திய ஸ்தாயி நிஷாதத்துக்குள்ளேயே அனைத்து கற்பனா ஸ்வரங்களும் பாடப்பட வேண்டும். மதுரை மணி ஐயரின் பல கச்சேரிகளின் நாததனுமனிஷம் கேட்டிருக்கிறேன். வேறு பலர் பாடியும் கேட்டதுண்டு. எனில் இந்த ராகத்தில் சாத்தியமான மிக விரிவான ஒரு இசைக்கோர்வையை இந்தத் திரைப்பாடலில் சின்னப்பா பாடியிருக்கிறார்.

1949-ல் வெளிவந்த கிருஷ்ணபக்தி படத்திலிருந்து ஒரு பாடல் இன்றைய தேர்வு.

பாடல்:

https://youtu.be/pl0SXSfceoo

இது கதாகாலட்சேபம் [கதை+காலம்+ஷேபம் (செலவிடுதல் சமஸ்கிருதச் சொல்) = கதை விரியும் காலம் ] என்ற கலையை திரையிசையில் ஆவணப்படுத்திய மிக முக்கியமான பாடல்.கோவில்களிலும், கச்சேரி மேடைகளிலும் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த பல ராகங்களை வீடுகளுக்கு கொண்டுவந்து, கட்டற்ற மதயானையை பழக்கி வீட்டு முற்றத்தில் நிறுத்திய முன்னோடி இசைக் கலைஞர்களுக்கு ஒரு வணக்கமாக இந்தப் பாடல் இன்றைய தெரிவு. கதாகாலட்சேபம் என்பது ஹரிகதை, காலட்சேபம் என்றும் குறிப்பிடப் படுகிறது. காவியங்களையும் புராணங்களையும் இசை மற்றும் உரைநடையாகக் கதை சொல்லும் முறை. கதைகளிடையே பல துணைக்கதைகளைக் கூறுதல், கர்னாடக சங்கீத ராகங்களில் அமைந்த புகழ்பெற்ற கீர்த்தனை வரிகளையோ அல்லது அந்த ராகத்தில் வேறு பதங்களையோ அமைத்துப் பாடுதல், பல வகைப்பட்ட இசை வடிவங்களைக் கையாளுதல், தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மராட்டி, சமஸ்கிருதம் எனப் பல மொழிகளின் பாடல்களைப் பாடுவது, சுவாரஸ்யமாக நிகழ்வினைக் கொண்டு செல்லும் குரல் ஏற்ற இறக்கங்கள் மற்றும் உடல்மொழி என ஒரு நிகழ்த்துகலையாகவே கதாகாலட்சேபம் இருந்திருக்கிறது. இவற்றிலேயே கதாபிரசங்கம், பிரவசனம் போன்ற மேலும் சில வகைகளும் இருக்கின்றன.

அப்பாவின் இளமைப் பருவத்தில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலை அடுத்த வீதியிலேயே வீடு. அங்கு நடைபெற்ற பல காலட்சேப நிகழ்ச்சிகள் வழியாகவே மகாபாரதம் முழுவதும் அறிந்ததாக அப்பா சொல்வார்கள். மராட்டிய மண்ணில் ராமாயண மகாபாரதக் கதைகள் இவ்வண்ணம் கூறப்பட்டு தஞ்சை மராட்டிய மன்னர்கள் வழியே இங்கு தமிழகத்துக்கு வந்ததாக பேராசிரியர் அ.கா.பெருமாள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.hindutamil.in/news/literature/95192--3.html

மேலும் விரிவான சில கட்டுரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன

http://www.carnatica.net/harikatha1.htm

கிருஷ்ண பக்தியில் இடம்பெற்ற கதாகாலட்சேபப் பாடலை நண்பர் கணேஷுடைய தந்தை ஒரு முறை வரிகளை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டார்.  இன்று இணையத்தில் கிடைப்பது அப்பாடலின் முழு வடிவமன்று. அவரிடம் முழுமையான வடிவத்தின் ஒலித்தட்டு இருந்தது. மூன்று ட்ராக்குகள் நீளமுள்ள பாடல் அது. அதைக் கேட்டு எழுத முற்பட்ட போதுதான் இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு இதன் சுவையும் செறிவும் தெரிந்தது. இணையத்தில் உள்ள படமாக்கப்பட்ட பாடலுக்கும் ஒலித்தட்டு வடிவத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நான் ஒலித்தட்டைக் கேட்டு எழுதியதையே இணைத்திருக்கிறேன். அதன் காணொளி வடிவத்தையே இணைத்திருக்கிறேன்.



பாடல் 'ஸர்வத்ர கிருஷ்ண நாம சங்கீர்த்தனம்' என்று மோகனத்தில் தொடங்குகிறது. 'பூவையர் கற்பின் பெருமை' எனத் தொடங்கும் பகுதி கமாஸ் ராகத்தில் அமைந்தது. அதன் சொற்கட்டும், பாடல் சங்கதிகளும் வெவ்வேறு நடையும், மிக செறிவான, அதே நேரம் துள்ளலான பகுதி.



இதில் கதையின் நாயகன் பக்திமான் வேடம் பூண்ட வேடதாரி பாகவதர். கதை கேட்க வரும் ஒரு அழகிய தேவதாசியைப் பார்த்து அவள் அழகில் மயங்கி அவளுக்கு வலை விரிக்கிறார். அதற்கான அனைத்து சொல் விளையாட்டுக்களையும் இப்பாடலில் நிகழ்த்துவார். அதற்கென்றே கேள்விகளைக் கேட்க சொல்லித் தன் சீடனை தயார்படுத்துகிறார். பகவான் நாம சங்கீர்த்தனையில் பக்த கோடிகள் மெய்மறந்திருக்க தனியாவர்த்தனத்தின் போது அங்கவஸ்திரத்தால் திரையிட்டு குடம் நிறைய பால் குடிக்கிறார். மிகவும் சீண்டக்கூடிய ஒரு பகுதியை அனாயாசமாகப் படமாக்கியிருக்கிறார்கள். இப்பாடல் முழுமையாக ஒரே முறையில்(single take) அவர் பாடி நடித்து படமாக்கப்பட்டதாக ஒரு செய்தியும் இருக்கிறது.



கேதாரம் ராகத்தில் அமைந்த 'மறுமுறை நீ இந்த' சரணம் தொடங்குகிறது. மரா மரா என்று சொல்லச் சொல்ல ராமா என்றாவது போல தாசீ தாசீ என்ற சொல்ல சீதா சீதா என்றாகுமென்று அடுத்த சரணம் கல்யாணியில் தொடங்குகிறார். பிறகு காபி (செங்கமலம் என்ற), சிந்து பைரவி (சீரமைத்த தமிழ்ப்பாட்டின்), ஜோன்புரி (கலையிலும் அழகிலும்) என்று வேறு வேறு ராகங்களில் உலவி சுருட்டி ராகத்தில் சுபமங்களம் பாடி முடிக்கிறார். இதில் 'சீரமைத்த தமிழ்ப்பாட்டின்' அதிவேகமான சொற்பிரயோகங்கள், எழுதுவதற்கு பல முறை கேட்க வேண்டியிருந்தது.

இதே படத்தில் இடம் பெற்ற 'சாரசம் வசீகரக் கண்கள்', 'பேச வெட்கம் ஏனோ', கலைமகள் தேவகுமாரி - பாடல்களும் ராகமாலிகையில் அமைந்தவைதான்.

இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் உடுமலை நாராயண கவியின் இவ்வரிகளை ஒருமுறையேனும் முழுமையாகக் கேட்டுப் பாருங்கள்.

இப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற பாடல்கள்:

1. காதல் கனிரசமே (மங்கையர்க்கரசி)
https://youtu.be/NcZagAqgx9k

2. சாரசம் (கிருஷ்ண பக்தி)
https://youtu.be/4EM0z0T8GAI

3. நமக்கினி பயமேது (ஜகதலப்பிராதபன்)
https://youtu.be/nb7R5X95Snc

4. நடையலங்காரம் (குபேர குசேலா)
https://youtu.be/PCUfzYXoYMY

5. எல்லோரும் நல்லவரே (கிருஷ்ணபக்தி)
https://youtu.be/pLcSeAnZD3M

6. பார்த்தால் பசி தீரும்(மங்கையர்க்கரசி)
https://youtu.be/Uyr_uzdVy0c



Sunday, June 7, 2020

நினைவுகளின் இசை

சில திரைப்பாடல்கள் அதன் சொற்களால் சாகாவரம் பெறுவதுண்டு. இசையமைப்பால், பாடகரின் குரலால், நடிகரின் நடிப்பால், படமாக்கப்பட்ட விதத்தால் என்று ஒரு பாடலை நாம் விரும்புவதற்கு எத்தனையோ காரணிகள். எனில் என்றும் இனியவை என உள்ள பல பாடல்கள் அவற்றோடு இணைந்த பழைய நினைவுகளால் இனிப்பவையே. அப்பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் முன்னெப்போதோ கேட்ட பொழுது நிகழ்ந்தவை, உடன் இருந்த நபர், அன்றிருந்த மனநிலை அல்லது அப்போது கண்ணில் பட்ட காட்சியோ, நுகர்ந்த வாசனையோ கூட நினைவில் வரும்.


சிறுவயதில் வீட்டில் வானொலி அதிகாலை முதலே தொடங்கி விடும். அதிகாலை மங்கல இசை தொடங்கி, முதல் செய்தி வாசிப்பு, கர்நாடக இசை நிகழ்ச்சிகள், பக்திப் பாடல்கள், இடையிடையே பல நிலையங்களில் செய்திகள், செய்திச் சுருக்கங்கள் நடுநடுவே நான்கைந்து திரைப்படப்பாடல்கள், என காலை நேரத்தில் பள்ளி கிளம்புவது வரை ரேடியோ ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.அப்பா அலுவலகம் கிளம்பும் போது அமைதியாகிவிடும். அந்த ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ அப்பா மட்டுமே கையாளும் ஒன்றாகவே இருந்தது. அம்மா கூட அதைத் தொட்டு நினைவில்லை. தொலைக்காட்சி வந்த பிறகும் கூட வானொலியில் பாடல் கேட்பதற்கான ஆசை அப்படியேதான் இருந்தது. பல நேரங்களில் புதிய பாடல் பாடத் தொடங்கியதுமே அப்பா அதை மாற்றி விடுவதோ அல்லது வானொலியை நிறுத்தி விடுவதோ நடக்கும். ஆனால் அப்பா விரும்பிக் கேட்கும் அனைத்துப் பாடல்களும் என்னுடைய ரசனைத் தேர்விலும் இடம்பெற்றுவிட்டதால் எந்தப் பாடல் வைத்தாலும் மகிழ்ச்சிதான்.

விவ்த்பாரதியின் தொடக்க இசை, 'ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப்பாய் வானிலை மோசமாக இருக்கும் நாட்களில் கரகரவென வரும் நிக்ழ்ச்சிகள் என வானொலி நிகழ்ச்சிகளோடு கலந்ததே பள்ளி நாட்களின் நினைவுகள்

அப்பா பல நேரம் ரயில், பேருந்து பயணங்களிலும் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவோடுதான் பயணம் செய்வார்கள். வேலை மாற்றலாகி அசாமில் சிலகாலம் இருந்த போது சென்னை வானொலியின் தென்கிழக்காசிய சேவை மட்டுமே அங்கு தமிழ் கேட்க ஒரே வழி என்று அப்பா சொன்னது நினைவிருக்கிறது. புதிய இடத்தின் வசதிக் குறைவுகளில் வானொலி கேட்க இயலாததும் சேர்ந்திருந்தது.

எட்டாவது படிக்கும் போது முதல் முறையாக நானாக ட்யூன் செய்து சிலோன் ரேடியோவுக்கு மாற்றி வைத்த போது அப்பா ஒன்றும் சொல்லவில்லை எனக் கண்டு கொண்டேன். செய்தி நேரமாக அல்லாதிருந்தால் தடையில்லை என்பது புரிந்ததும் வானொலியை இறுகப் பற்றிக் கொண்டேன். அன்று முதல், பள்ளி நேரம், படித்த நேரம் போக கிடைத்த நேரமெல்லாம் வானொலிக்காயிற்று. அவற்றுள் அதிகமும் விரும்பிக் கேட்டது இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் என்ற அறிவிப்போடு வரும் சிலோன் ரேடியோ. திரையிசைப் பாடல்களை அத்தனை விதமாக வழங்க முடியுமென்பதே பெருவியப்புதான். பழைய பாடல்கள், ஒரே ராகத்திலான பாடல்கள், ஒவ்வொரு பாடலோடும் தொடர்புடைய அரிய தகவல்களை சொல்லி அதன் பிறகு பாடல்கள் என விதம்விதமாக தொகுப்புகள். வானொலியில் பாடல்களை அடிக்கடி விரும்பிக் கேட்கும் பல நேயர்களின் பெயர்கள் - ராஜதானிக்கோட்டை சித்தன், மலர்க்கொடி, யாழ்ப்பாணம் தணிகை வேலன், மட்டக்களப்பு சுபாஷிணி, அம்மம்மா, அப்பப்பா என்ற உறவுகளின் வரிசை கூட இன்றும் மனதிலிருக்கிறது. சில சமயம் நாற்பது ஐம்பது நொடிகள் கூட பெயர்ப் பட்டியல் நீளும். இசைப்பூங்கொத்து,
பொங்கும் பூம்புனல், நெஞ்சில் நிறைந்தவை, இசையும் கதையும், இரவின் மடியில் என நினைவில் நிற்கும் பல நிகழ்ச்சிகள்.



வீசும் தென்றலிலே பேசும் வெண்ணிலவே (பிரேம பாசம்), எங்குமே ஆனந்தம் (பலே ராமன்), மானும் மயிலும் ஆடும் சோலை (அபூர்வ சகோதரர்கள்), ஜாலி லைஃப் ஜாலி லைஃப் (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி), சின்னப் பெண்ணான போதிலே (ஆரவல்லி) போன்ற
பல அரிய பழைய பாடல்கள் இலங்கை வானொலி நிலையத்தில் மட்டுமே கேட்டவை.

அப்படி வானொலியின் நினைவுகளால் இனிக்கும் ஒரு பாடல் 1982-ல் வெளிவந்த தணியாத தாகம் என்ற படத்தில் ஏ.ஏ.ராஜ் என்ற இசையமைப்பாளர் இசையில் வந்த "பூவே நீ யார் சொல்லி" என்ற பாடல்.

அதிகம் கவனம் பெறாது போன இந்த ஏ.ஏ.ராஜ் என்ற இசையமைப்பாளர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் சில காலம் முன்னர் எழுதிய பதிவு.
https://m.jeyamohan.in/42900/#.Xty3b1PmidM

ஜானகியும் மலேசியா வாசுதேவனும் மாற்றி மாற்றி பூ....வே நீ என்ற வார்த்தைகளில் நிற்கும் போது பூவில் நின்றாடும் காற்றென ஒரு முறையும், பூவில் சிக்கிய சிறுவண்டின் சிறகடிப்பென ஒரு முறையும், அந்தரத்தில் நின்று தேன் அருந்தும் தேன்சிட்டின் சிறகடிப்பென ஒரு முறையும், மலர்மீது தெளித்த சிறுதூறலென ஒரு முறையும் ஒலிக்கிறது. பாடல் அமைப்பு, இடையே ஒலிக்கும் சிதார் இசை, அனைத்துமே இன்றும் மிகப் புதிதாக இருக்கிறது. அனுதினம் பூத்தாலும் புதியதெனவே தோன்றும் மலர்போல.

யார் சொல்லி யாருக்காக மலர்கின்றன இசையும் கவியும் மலர்களும்!!


https://youtu.be/rcFVgGJL0qg

Saturday, June 6, 2020

காத்திருத்தல்


ஜி.ராமனாதன் இசைக்கே உரிய தபலா தாளத்துடன் பாடல் தொடங்குகிறது. பி. லீலாவின் கணீர் குரலில் உத்தமபுத்திரனில்(1958) இடம்பெற்ற இப்பாடல் அனைவரையும் காத்திருப்பவனின் காத்திருப்பு பற்றியது.



பத்மினியின் நளினமான அசைவுகளுடன் நடனம் துவங்குகிறது. பின்னர் கண்ணனாக லலிதா வந்திணைந்து கொள்கிறார். சுந்தரம் வாத்தியார் எழுதிய பாடல் வரிகள்.

கண்ணன் காத்திருக்கிறான், குழலிசைக்கிறான், குறும்பு செய்கிறான், இசை கேட்கிறான், தாவி வந்து ஆவியைப் பற்றுகிறான். அவள் வீணையாகிறாள், அவன் பற்றும் தயிர்க்குடம் ஆகிறாள், அவனே ஆகிறாள்.

"கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக்
கடைக்கணித்து ஆங்கே ஒருத்திதன்பால்
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு
உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப்
புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை" என்பது பெரியாழ்வார் திருமொழி.

கோபியர் கொஞ்சும் சல்லாபன் - பலர் அவனுக்காகக் காத்திருக்க அவன் தனக்காகவென்றே காத்திருக்கிறான் என்ற பெண்மையின் பேதைமையில் திளைக்கிறாள். கனிந்து உருகிக் கண்ணுறங்காமல் காத்திருக்கும் தன்னுடைய நோயையும் அவன் மேலேற்றி அவனுக்காக உருகுகிறாள்.

காற்று தொட்டுவிட ஆடும் மலர்க்கிளையென கண்ணன் நினைவு தொட்டுவிட ஆடுகிறாள். அவள் ஆடும் அரங்கம் அரசனுடையதல்ல, அவளுடன் அவன் மட்டுமே உள்ள அந்தரங்கம்.

"காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே
காத்திருப்பான் கமலக் கண்ணன்!
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்

ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
பூத்த மென்மலர் போலப்
புனிதமான வனிதை ராதை வருகையைக் - காணக்
காத்திருப்பான் கமலக் கண்ணன்

கோபியர் கொஞ்சும் சல்லாபன் - வேய்ங்
குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம்காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்

தாவிப் பிடிப்பான்...தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு - அங்கு
காத்திருப்பான் கமலக் கண்ணன்

வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
வீணைஇசைக்கச் சொல்லி வேண்டுவான் - சிலநேரம்
வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்

பாடுவான்... அதற்கவள் ஆடுவாள்
பல நேரம் பாதம் நோகுமே
என்று பரிவுடன் காதல் இன்பமே
தந்த நாயகன் - வந்து

காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக் கண்ணன் !"

‐------

விழிகள் காணும் இவ்வாடலுக்குப் பின் இருக்கும் விழியறியாப் பேராடலைக் காண ஜி.ராமநாதனின் இசை கைபிடித்து அழைத்துச் செல்கிறது. "கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து" என்ற வரியை இரண்டாவது முறை பாடிய பிறகு "காத்திருப்பான்" என்ற பதம் வேறொரு சங்கதியில் அமைய மனம் மேலெழும்பி விடுகிறது. "வேய்..ங்குழலிசை" அமுதூட்டும் என்ற நெளிவில் அந்தக் காற்றாகிக் குழலை நிறைக்கிறது. இருவரும் இயைந்து ஒன்றை ஒன்று நிரப்பும் நடன அசைவுகளின் ஒன்றிணைவின் போது அதில் இல்லாமலாகிறது தன்னுணர்வு. தாவிப் பிடிப்பான் என்ற தாவலில், வீணை இசைக்கச் சொல்லி என்ற நடனஅசைவில், கண்ணன் கழுத்தணிந்த மாலையாகி துள்ளுகிறது மனம்.
பூத்தவிழ் மலர், முங்கியெழும் ஆறு, வீணைத் தந்திகளில் உறையும் நாதம் அனைத்திலும் அவன் ஆடல்.

இருத்தல் இன்மை என்ற இருமை அற்ற ஓரிடத்தில் காத்திருப்பான் கமலக்கண்ணன் - கருநீலக்கடல்வண்ணன். ஆறுகள் அனைத்தும் அங்கு சென்று சேர்வதற்காகவே மலை விட்டிறங்குகின்றன, வழி தேடி அலைகின்றன, பல மலைகள் கடந்து பெரு வழி நடந்து அவனைக் கண்டடைகின்றன. வழியில்தான் அத்தனை வேகமும், சுளிவும், சுழலும், பொழிதலும், விரிந்து பரவி, ஒடுங்கி அடங்குதலும். அதுவே நடனம் அதுவே இசை. பயணமே இலக்கின் பயனாகிவரும் இப்பெருவாழ்வு.

அவன் ஆடும் தீராப் பேராடல் ஒன்றில் ஆட்படுவதே எல்லா ஆடலும் என்ற அறிதல் தரும் இன்பம் பாடல் முடிந்து வெகுநேரம் மனதில் எஞ்சுகின்றது.

இப்பாடல் ஒரு அழகான ராகமாலிகை - சாரமதியில் தொடங்கி, ஜோன்புரி , திலங் என்று பயணித்து 'வேடிக்கையாய் செய்வான் அலங்காரம்' என்ற வரியில் மோகனம் ஆகிறது. இப்பாடலின் பாவத்துக்குரிய ராகத் தேர்வு, பொருத்தமான இசைக் கருவிகளின் பயன்பாடு, பத்மினி-லலிதாவின் நடனம் (பி.எஸ். கோபாலகிருஷ்ணன் நடன அமைப்பு) பி.லீலாவின் குரல், அனைத்தையும் ஒன்றினைக்கும் ஜி.ராமனாதனின் இசை எல்லாம் சேர்ந்து தன்னிலை மறக்கச் செய்கிறது. வெறும் பாடலாகக் கேட்கும் அனுபவத்தை விட நடனத்தோடு இப்பாடல் தரும் காட்சியனுபவமே கூடுதல் சிறப்பு.

கண்ணனைப் பற்றித்தான் எத்தனையெத்தனை காவியங்கள், பாடல்கள். ஆழ்வார்கள் தொடங்கி பாரதி, கண்ணதாசன், வாலி வரை தமிழிலேயே கண்ணனைப் பாடிய கவிஞர்களின் நிரை. இந்திய மனம் தனது மகத்தான கற்பனைகள் அனைத்தையும் கண்ணன் மேல் சூடி அழகு பார்த்திருக்கிறது.
எங்கும் நிறைந்த ஒன்று குழந்தையென வருகிறது, குறும்பு செய்கிறது, கன்னியரின் கனவுகளை நிறைக்கிறது, அன்னையரின் அமுதம் சுரக்கச் செய்கிறது, களம் நின்று அறம் காண்கிறது, ஆழி மீது அறிதுயில் கொள்கிறது, ஆட்டுவிக்கிறது, ஆட்கொள்கிறது. என்றுமெனக் காத்து நிற்கிறது.

எனக்குப் பிடித்த கண்ணன் பாடல்கள் பல இருக்கின்றன. அக்கடலின் ஒரு துளி இன்றைய தேர்வு.

https://youtu.be/aXM8E7zud8E

Friday, June 5, 2020

காலையெனும் கவிதை




ஒவ்வொரு அதிகாலையும் ஒரு தொடக்கம். புவியின் முன் அனுதினுமும் முதல் விளக்கேந்தும் புலரி. விண்ணொளி எழ, இரவின் ஐயங்களும் சஞ்சலங்களும் விலகுகின்றன.


பயணங்களில் எப்போதும் தவறவே கூடாத பொழுதுகள் அதிகாலையும் அந்திமாலையும். இயற்கை மனிதனோடு பேசுவதற்காகக் காத்திருக்கும் பொழுது அது.  இமயத்தின் பனிமுகடுகளில் சூரியன் முதல் திலகம் தீட்டியவுடன் அடுக்கடுக்காக அத்தனை மலைகளும் மங்காப்பொன் சூடக் கண்டது இறையெழுந்த தருணங்களில் ஒன்று.

அதிகாலை குறித்த இளம் பருவத்து நினைவுகள் தாத்தாவோடு பிரிக்க முடியாதபடி பின்னப்பட்டவை. ஆதித்ய ஹ்ருதயம் சொல்லியபடி, வட்டத் திகிரியென சூரியன் கண்களுக்குள் சுழல்வது வரை அதிகாலைக் கதிரைப் பார்க்கச் சொல்வார்கள் தாத்தா. வேம்பின் ஊடாக சூரியன் தொலைவில் உதிப்பதைப் பார்த்து நின்ற காலைகள். தூக்கத்தில் விடியலைத் தவற விட்ட நாட்களில் கூட நேரடியாக வீட்டின் உள்ளே கரங்களை நீட்டி முகம் காட்டும் கதிரோன். சன்னல் வழியே உள்நுழைந்த சாய்ந்த ஒளித்தூண்களில் தெரியும் நுண்துகள்களைப் பற்ற முயன்றபடி வெகுநேரம் அமர்ந்திருந்தது குழந்தைப்பருவத்தின் ஆழப்பதிந்த நினைவுகளில் ஒன்று.

பல அதிகாலைகள் நினைவில் எழுகின்றன. விடிவதற்கு முன் வாசல் முழுவதும் வண்ணங்கள் வரையும் மார்கழி மாதத்து அதிகாலை. தேர்வுக்காக படிக்க எழுந்தமர்ந்து தூக்கத்துடன் போராடும் காலைகள், பழனி நடைபயணத்தில் முதற்கதிர் மண்தொடுவதைப் பார்த்தபடி நடந்த காலைகள், சீர்காழியின் குரலோடு விடியும் அதிகாலைகள், பள்ளி நாட்களின் பதட்டமான காலைகள். பரபரப்பு மட்டுமேயான நகர வாழ்க்கையில் கூட அதிகாலைகள் காணக்கண்ணிருப்போருக்காக வெகு அழகாகவே விடிகின்றன. ஒவ்வொரு நாளையும் புதிய முகம் கொண்டே கிழக்கு வரவேற்கிறது.


ஆயிரம் கரங்கள் நீட்டும் அன்னையாய் அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தையாய் வெய்யோனைப் பாடியவர் கண்ணதாசன். நானிலம் உளநாள் மட்டும் நிற்கும் பாடல். எனில் இன்றைய பதிவு காலையைக் குறித்தது, தலைவனைப் பற்றியதல்ல தலைவியைப் பற்றியது - உஷை எனும் தலைவி.

காலையைக் கவிதையெனக் காணும் ஒரு பாடல். 2017ல் வெளிவந்த, மஞ்சு வாரியரின் அழகான நடிப்பில் 'உதாரணம் சுஜாதா' மலையாளத் திரைப்படத்தில் காயத்ரி வர்மா பாடிய "கசவு நொரியுமொரு புலரி".

ஸ்ரீரஞ்சனி ராகத்தின் ஒளியைக் காலைக்கு உரித்தாக்கிய இசையமைப்பாளர் கோபி சுந்தர். D. சந்தோஷ் எழுதிய வரிகள்.

https://www.youtube.com/watch?v=Hy6hKjk9CLc&feature=share

Kasavu njoriyum oru pulari…
Kalabham aniyum usha malari… பொன்பட்டுத் துகில் அணியும் ஓர் அதிகாலை
சந்தனத் திலகம் தீட்டும் அதிகாலை

Aalolam ilakum orithalile himakanam aruliya kathirukal oru puthu,
மெல்ல ஆடும் ஓரிதழில் பனித்துளிகள் அருளிய கதிரொளி

Aakaasham aruna niramaniyum asulabha surabhila yaamamaayi
Aa Ganga ozhuki ozhuki varum anupama niralaya kavyamaayi
வானம் சிவப்பை அணிந்துகொள்ளும் அழகான சுகந்தமான தருணமாக..
அந்த கங்கை ஒழுகி வரும் நிகரில்லாத வண்ணமய காவியமாக ..

Maarimukilin thoovalithu pozhinjeedumoru kanni paadam
Onnu viriyan innulayum ilam pookkal ivide
மழைமுகிலின் மென்தூறல் இப்பதியன்களில் விழ
மொட்டவிழக் காத்திருக்கும் இளம்பூக்கள் இங்கே

Pularoli aetho kanyayayi mizhi ezhuthunnarike
Poothu vidarum punyamithu pulari malaru thiriyum aria kathiroli
ஒரு கன்னி மைதீட்டுவது போல இக்காலை
பூத்து மலரும் நன்மை போல இந்த அதிகாலை

Aaraamam udaya radham anayum abhinava kisalaya gehamaayi
Aashaadam uyiril ithal aniyum athisaya sumadhura soonamaayi
சூரியனின் தேர் அருகணைய ஒளிக்கரங்கள் முளைத்தெழும் கதிர்களாகும்
ஆஷாட மாதம் அதிசய அமுதம் நிறைந்த மலராகும்


Ethu kuliril mungi ithal ulanjaadum oru panineer poovu,
onnu theliyan kaathirunnu veyil naalam ivide
இந்த குளிர்காலையில் உலைந்தாடும் பனிமலர்
கதிர் இந்த நாளைத் துலங்கிடக் காத்திருக்கிறது

Nira kathiretho thoovalaayi niram ezhuthum vazhiye,
kaattilulayum pulakamithu tharala lathika padarum aria pularoli
எழுகதிர் வண்ணத்தூரிகை கொண்டு வரைந்து செல்லும் பாதையில்
மெல்லிய கொடி மென்காற்றில் உலைவது போல ஒளி படர்கிறது

-------
ஒளியோடு நம்பிக்கையை நிறைக்கும் அழகான பாடல். அறையோடு அடைந்து கிடக்கும் இந்நாட்களில் கூட இசை வழியாக காலையின் புத்துணர்வை நிறைத்துவிட இந்த ஸ்ரீரஞ்சனியால் முடிகிறது.  பனித்துளிகள் புல்பரப்பில் உருளும் உணர்வைத் தரும் மலையாளத்தின் மனம் மயக்கும் சொற்கட்டுகள்.

எனக்குப் பிடித்த மற்றும் சில அதிகாலைப் பாடல்கள்


1. Pavanarachezhuthunnu kolangal - இசை: S.பாலகிருஷ்ணன்
கவிஞர்: பிச்சு திருமலா
திரைப்படம்: வியட்நாம் காலனி
ராகம்: மாயமாளவகௌளை
https://youtu.be/Gh3NBwBW0Tg

2. Brahma kamalam sreelakamakiya - இசை: ஜான்சன்
திரைப்படம்: சவிதம்
கவிஞர்: கைத்தப்பரம்
ராகம்: மலயமாருதம்
https://youtu.be/6ir83IT6eQI

3. Pularippoo manjuthulliyil
இசை: G. தேவராஜன்
திரைப்படம்: உல்சவப்பிட்டென்னு
கவிஞர்: கவலம் நாராயண பணிக்கர்
ராகம்: சாருகேசி
https://youtu.be/xqa9dm8rP8s

4. Dheere Dheere Subah huyi
இசை: பப்பி லஹரி
திரைப்படம்: ஹைசியத்
கவிஞர்: இந்தீவர்
ராகம்: ஆஹிர் பைரவ் (ஹிந்துஸ்தானி)
https://youtu.be/qqieb54NMfE

5. புத்தம் புது காலை
இசை: இளையராஜா
கவிஞர்: கங்கை அமரன்
திரைப்படம்: அலைகள் ஓய்வதில்லை
https://youtu.be/rElxu7BR0Kc

6. காலைத் தென்றல்
இசை: இளையராஜா
கவிஞர்: வைரமுத்து
திரைப்படம்: உயர்ந்த உள்ளம்
https://youtu.be/ab9zPF1RM8A


ஆனால் மனிதப் பிரயத்தனங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. கவிகளின் இத்தனை சொற்களுக்குப் பிறகும் காலையின் அழகு வார்த்தைகளால் தொட முடியாத தொலைவில் அனைத்துயிரும் அண்ணாந்து பார்க்க எங்கோ உயரே நிற்கிறது.

Thursday, June 4, 2020

அன்னப்பறவையின் அழைப்பு




அது ஒரு மென்மழை பெய்தோய்ந்த மஞ்சள் வெயில் மாலை. துணிக்கம்பிகளில் நீர்க் கோர்வையை பொன் ஆரமென ஆக்கியிருந்தது மேற்திசை. இன்னும் மழை எங்கோ பெய்து கொண்டிருப்பதை காற்று சொல்லிக் கொண்டிருந்தது. மழை நேரத்தில் கிளர்ந்தெழும் வாசனை வெந்த மண்ணுடையதா, உள்ளுறையும் தீயுடையதா, நனைத்த மழையுடையதா, மழை உதித்த விண்ணுடையதா, காற்றே அறியக் கூடும்.
புத்தகம் ஒன்றை கைத்துணைக்கு அழைத்துக் கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றேன். வீட்டின் முகப்பில் நின்று குடை விரித்த இரு வேம்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அணில் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு வேம்பின் கிளைகளுக்குள் ஓடி மறைந்தது. அதன் வால் ஆடுவதை நினைவுறுத்தும் அதன் ஒலி மட்டும் கேட்டது. பார்த்துக் கொண்டிருக்கையிலையே இலைகளுக்குள் பொன்மங்கி இருள் புகத் தொடங்கியது. புத்தகத்தின் எழுத்துக்கள் மறையும் இருள்.
கருமை ஏறத் தொடங்கவிட்ட செவ்வோடுகளின் தண்மை காலுக்கு சுகமாக இருந்தது. மெத்தென்ற தொடுகை புறங்கையில். இருளுக்குள் வெண்மையாய் ஏதோ ஒரு பறவை இறகொன்றை உதிர்த்து விட்டு சென்றது. மழை ஓய்ந்த வானம் எனினும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் என்பதால் ஒளி முற்றிலும் இல்லாமலும் இல்லை.
காற்று வீசத் துவங்கியது. சாம்பல் மேகங்கள் நிலவைத் தொட்டும் விலகியும் விளையாடிக் கொண்டிருந்தன. மேகங்கள் விரைந்தோடுவதன் பழி நிலவின் மேல். நிலவு நில்லாதது போல் ஓடிக்கொண்டிருந்தது.
பக்கத்து வீட்டு வானொலியில் பாடல் துவங்கியது. இசை தொடங்கியது, காற்றும் வேகம் கொண்டது. எழப்போகும் அசைவு கொண்டது இறகு . இசையோடு தபலா சில நொடி மோனத்திற்குப் பின் சேர்ந்து கொள்ள, சில நொடிகளில் நான்கு முறை வயலின் ஒரே ஸ்வரக்கோர்வையை வாசித்ததும் கானகந்தர்வன் யேசுதாசின் குரல் தொடங்கியது - 'தென்றல் வந்து என்னைத் தொடும்'.
மழைக்காற்றை மேலும் குளிர்வித்தது இசை. மாலை பெய்த மழை நினைவுகளில் ஈரமாயிருக்கும் தென்னை ஓலைகளில் நிலவு சொட்டுகிறது. ஜானகியின் பல்லவி முடிந்ததும் தரையிலிருந்து விண்ணுக்கு ஒரே நொடியில் பறந்தெழும் பறவைக் கூட்டம் போல வயலின் இசை தொடங்கியது. அதற்கு மேல் தரையிலிருக்க வழியில்லை. பறவையென வான் பறந்த நினைவு போலும், சுழன்று மேலெழுந்தது வெண் இறகு. வீணையும் குழலுமாய் அந்தரத்தில் மிதக்கும் நொடிகள்.
கந்தர்வன் தொடர்கிற கானம் - "தூறல் போடும் - இந்நேரம் - தோளில் சாய்ந்தால் போதும்" அந்தப் போதும்-க்குப் பிறகு இன்னொரு 'ம்' மில் சுழன்று நிற்கும் மாய தருணம். தரை இறங்க விடுவதாயில்லை. மேலேயே சஞ்சரிக்கும் சரணத்தில் அனுவளவும் சுகம் குன்றாது பெண் குரல் இழைகிறது. (நாணம் என்ற வார்த்தையில் ஒலிக்கும் செயற்கையான சிரிப்பு பாடல் உருவாக்கும் நெகிழ்வை ஒரு மாற்றுக் குறைக்கிறது) அந்த இழைவிலும் கணீரென்று நேசத்தைச் சொல்லும் ஆண் குரல் அழகாக ஒலிக்கிறது. நேசம் என்பதில்தான் எத்தனை வண்ணங்கள், இது ஒரு விதமான உன்னதத்தை, வியந்தோதலை, போற்றுதலைக் கிளர்த்தியது இவ்விசை.
மீண்டும் பல்லவியில் தரையிறங்குவது போலப் பறக்கிறது இறகு. தரை தொடுவதற்கு முந்தைய வினாடி கையிலேந்திவிட வேண்டும் என்கிறது மனம். உடல் நகரவில்லை.
இரண்டாவது சரணம் தொடங்கும் முன் இடையிட்ட இசையில் குழல் சுருள் சுருளாய் முரல்கிறது. இருவரும் குழலை நகல் செய்ய முயலும் ஹம்மிங். மீண்டும் விண்ணோக்கி ஏறுகிறது இசை. இம்முறை கால்கள் தரையில் பாவாமல் இறகைப் பற்றி உடனேறிப் பறக்கிறேன்.
நிலவுப் பூச்சில் பச்சையம் வெள்ளியெனத் தெரியும் மர உச்சிகள் கீழே எங்கோ தெரிகின்றன. வீடும் சமணமலையும் நாகமலையும் மறைகின்றன. காற்றும் வெளியும் நீர்த்துவாலைகளுமான வெளியில் மிதந்து கொண்டிருக்கிறேன். இன்னும் கூர்மையாக இசை மட்டும் தெளிவாகக் கேட்கிறது. இல்லையில்லை, அந்தக் குரலோடு வரும் வயலின் இசையாக எங்கோ இசைந்து கொண்டிருக்கிறேன் வெளியில். நிலவு நகரவேயில்லை. மேகமும்தான், புவியும்தான். இறகு மட்டும் மெல்ல அசைந்து, அசைவிழந்து, அந்தரத்தில் சுழன்று, அந்தகாரத்தை வெண்மையாக்கி, இருப்பை இன்மையாக்கி, நிலவுக் கிரணங்களைப் பற்றியபடி நழுவிவந்து எங்கோ தரை தொடுகிறது.
அது ஒரு பித்தின் தருணம் என்று நம்ப மறுக்கும் தரையிறங்கிய தர்க்கம் அவ்விறகு அன்னத்தின் இறகு என்றால் நம்பிவிடுமா என்ன! விண்வெளியில அழைத்துச் சென்ற இந்த அன்னப்பறவையின் அழைப்பு ஹம்சநாதம் எனும் ராகம் என்றறிந்தது பிறகே. இதன் ராக இலக்கணங்கள் ஏதும் அறியேன். உணர்வுகளின் உணர்கொம்புகளால் இசையறியும் உயிரி நான்.
இதில் சாரங்க தரங்கிணியின் ஸ்வரங்கள் வருகிறது என்றும் வாசித்தேன். திரையிசையில் இது போன்ற மீறல்கள் இயல்புதான். எனில் பாடல் உருவாக்கும் மனநிலை இதே சிறகெனப் பறந்தெழுந்த உணர்வைத் தருமெனில் அதை ஹம்சநாதம் என்றே மனம் உணர்கிறது.
ஹம்சநாதம் என பின்னர் அறிந்த அனைத்துப் பாடல்களிலும் எப்போதும் கிளர்ந்தெழுவது இதே உணர்வுகள்தான். இருள் மயங்கும் நிலவொளியும், தென்றலும், போற்றுதலுக்குரிய ஒரு உணர்வு கொண்ட மனநிலையும்.
இன்னும் எனக்கு மிகவும் பிடித்த சில ஹம்சநாதங்கள் உண்டு. அவற்றுள் இளையராஜா இசையில் ஹேராம் திரைப்படத்தில் 'இசையில் தொடங்குதம்மா' மற்றும் மலையாளத் திரைப்படம் 'சிந்தூர ரேகா'வில் இசையமைப்பாளர் சரத் இசையில் இடம்பெற்ற 'ராவில் வீணா நாதம் போலே' இரண்டும் மீள மீள போதையில் ஆழ்த்துபவை.
தரையோடு கட்டுண்ட கால்களை விடுவித்து சில நொடிகளுக்கேனும் சிறகுகள் அருள இசையால் இயல்கிறது. இசை இசை என்று பேருணர்வில் இசையச் செய்யும் இசை தெய்வம். அத்தெய்வம் அன்னப்பறவை உருவெடுத்து வருமெனில் அதுவே இந்த ஹம்சநாதம்.
இதோ இன்றும் மென்மழை பெய்கிறது. அதே பாடல், அன்னப்பறவையாகி உடன் பறந்தெழுகிறேன்.

4th June 2020

Wednesday, June 3, 2020

மௌனத்திடம் ஒரு மன்றாட்டு


1930களில் கிழக்கு வங்காளத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக சூர்யா சென் (மாஸ்டர் தா) என்பவர் தலைமையில் நடைபெற்ற சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல் என்ற வரலாற்று நிகழ்வை கதைக்களமாகக் கொண்ட படம் 2012-ல் வெளிவந்த 'சிட்டகாங்'. அதன் நடுவில் மலரும் மெல்லிய நேசத்தை சொல்லும் பாடல் இது

இப்போது இந்த சிட்டகாங் பங்களாதேஷில் உள்ளது.

ஷங்கர் இஷான் லாய் என்ற மூவரின் இசையில் வெளிவந்த படத்தில் இடம்பெற்ற பாடல் 'போலோ நா'. ஷங்கர் மகாதேவன் பாடிய இப்பாடலுக்கு அந்த வருடத்துக்கான சிறந்த பிண்ணனிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது.

பாடல்:
https://youtu.be/BG_9-7xJuKQ

சில பாடல்கள் விழி அறியாது பூ விரிவது போல மெல்ல மலரும், அதன் மணம் மட்டும் மனதில் தங்கி விட பிறகேதோ தருணத்தில் பாடல் நினைவில் மேலெழுந்து வந்து உள்ளே கமழ்ந்து கொண்டே இருப்பதை உணர்வோம். அப்படி ஒரு பாடல் இது.

படத்தில் இந்த பாடல் ஆங்காங்கே பல துண்டுகளாக வரும். முழுமையாக ஒருமுறை கேட்டு விடமுடியாதா என்று ஏங்கச் செய்யும். படம் பார்த்த அன்று இரவு மற்றதெல்லாம் அகன்ற பின்னர் இந்த ஒரு பாடலின் ராகமும் சரோட் இசையும் மட்டும் உள்ளே எஞ்சியிருந்தது. இது வரமு என்று வெகுநாள் எண்ணியிருந்தேன். பாகேஸ்ரீ (இந்துஸ்தானி ராகம்) என்று இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் கூறியிருப்பதால் அதுவே சரியாக இருக்கும். (இந்துஸ்தானி பாகேஸ்ரீயில் அவரோகணத்தில் ஒரு ரிஷபம் மாத்திரம் அதிகம்; வரமுவில் ரி கிடையாது)
ஸ்வரங்களை இனம்காணும் ஞானம் எனக்கில்லை, உணர்வுகளே ராகங்களுக்கு இட்டுச் செல்கின்றன, எதுவாயினும் அழகான நிலவொளி சொட்டும் மெட்டுக்களில் ஒன்று இப்பாடல்.

சரோட் தந்திகள் ஒலிக்க, தம்பூர் மெல்ல சுருதி சேர்க்க இன்னொரு ஒற்றைக் கம்பி மீட்டலென ஷங்கர் மகாதேவன் பாடத் தொடங்கவும், வாத்திய இசை மெல்லத் தேய்ந்து அவர் குரல் மட்டும் ஒலித்து மீண்டும் சிறிது நேரத்தில் இசை இயைந்து கொள்ளும். சரணத்துக்கு முன்னர் வரும் கிடார் இசையும் இந்தப் பாடலோடு உறுத்தாமல் சேர்ந்து கொள்கிறது. மௌனத்திடம் ஒரு மன்றாட்டு இப்பாடல்.

Bolo na, bolo na,
Bolo naa, bolo naa..

பேசிவிடு ஏதேனும் பேசிவிடு

rituon ko ghar se nikalne toh do
boye the mausam khilne toh do
hothon ki munder pe ruki,
motiyon si baat bol do,
pheeki pheeki si hai zindagi
cheeni cheeni khwab ghol do
dekho na beet jaayen,
ye lamhe, ye ghadiyaan..

பருவங்களை வீடுகளுக்குள் இருந்து வெளியே வரவிடு..
நாம் விதைத்த வசந்தங்களை மலரவிடு..
இதழின் எல்லைகளில் சிக்கிய சொற்களை
முத்துக்களென உதிர்த்துவிடு..
சாரம் இல்லாதிருக்கிறது வாழ்வு இனிமையின் கனவுகளைக் கலந்து விடு..
பார்..இந்த தருணங்களை..இந்த மணித்துளிகளை நழுவவிடாதே..

dhadkan jhoom jhoom
saansein rum-jhum,
man ghunghroo sa baaje
ankhiyaan payal
sapne kangna
tan mein thirkan saaje
kuhniyon se dhel ke kehti hawa
itar ki sheeshi khol do zara
raag mehkao,
geet chhalkao,
misri si gholo na..
bolo na..

இதயத்துடிப்பு தாளமிட,
சுவாசம் இயைந்துவிட,
மனம் சலங்கையென சிணுங்குகிறது..
கண்களே கொலுசுகள்,
கனவுகளே வளையல்கள்,
நடனம் உடலை அலங்கரிங்கிறது..
காற்று தன் கரங்களால் உந்தி
சுகந்தத்தைத் திறந்து விடச் சொல்கிறது..
ராகத்தைக் கமழ விடு..
கீதத்தை இசைத்துவிடு..
இனிமையைக் கலக்கவிடு..
பேசிவிடு ஏதேனும் பேசிவிடு...

sannaton ki choti kheencho
shor ki raunak laao.
kaanch khamoshi farsh pe todo
halla pyaar sajao..
aaj inkaar pukaar bane
aaj chuppi jhankaar bane
shabd khankao, chhand bikhrao,
man ke sang ho lo na, holo na,
bolo na.. bolo naa..

நிசப்தத்தின் இறுகிய பின்னலை அவிழ்த்துவிடு..
ஒலியின் ஒளிர்வைக் கொடு..
மௌனமெனும் கண்ணாடியை தரையில் சிதறவிடு..
அன்பின் ஆரவாரத்தை ஒலிக்க விடு..
இன்று மறுப்பு அழைப்பாகட்டும்..
இன்று மௌனம் பேரிசையாகட்டும்..
சொற்களைத் துள்ளவிடு..சந்தத்தை பரவவிடு..
மனதோடு ஒன்றிவிடு..ஒன்றிவிடு..
பேசிவிடு ஏதேனும் பேசிவிடு..

ப்ரீத்திலதாவாக நடித்த நடிகை வேகா டாமோடியாவின் ஒளி மின்னும் எளிய முகமும் இப்படத்தின் அழகுகளில் ஒன்று. நடிகை ஷோபாவின் முகத்தில் திடீரென்று தோன்றி மறையும் ஒரு கணப் புன்னகை மின்னல் போல ஒன்று இவரது சிரிப்பிலும் மிளிர்கிறது.

இத்திரைப்படத்தில் வரும் மற்றொரு பாடலான 'Bechain hein sapne' வங்காள மொழியின் இசையும் இனிமையும் கலந்த பாடல், அழகான வரிகள். அது இன்னொரு நாள்.

Wednesday, May 20, 2020

கோவிட்

செல்லாஇடத்து செலல் தீது செல்லிடத்தும்
இல்அதனிற் தீய பிற என்றுரைத்து
இல்லிடத்தே இற்செறிந்தே இரவுபகல் இல்லாமல்
நில்லாது நீளுதே நாள்..