Tuesday, February 23, 2016

சற்குரு - தாத்தா - 24

மலேயா: போர் ஓயும் வழியாகத் தெரியவில்லை. இனி இப்படித்தான், கொத்தடிமைகளாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்பது போன்ற பேச்சுகள் தொடங்கின. உலகெங்கும் கோலோச்சும் ஆங்கிலேயனையே இரவோடு இரவாக அஞ்சி ஓடச் செய்து விட்டது ஜப்பான். சிங்கப்பூர் ஒரே நாளில் விழுந்துவிட்டது, எதிர்ப்போரையெல்லாம் கடற்கரையில் நிற்க வைத்து தலையை வெட்டியும் கைகளை பின்னுக்குக் கட்டி சுட்டுக் கடலில் தள்ளியும் கொன்று குவிக்கிறார்கள். சிறிது திடகாத்திரமாய் இருக்கும் பொதுமக்களையெல்லாம் பிடித்து சியாம் மரண ரயில் பாதை கட்டுமானத்துக்கு அனுப்பிவிடுகிறார்கள். கொலையினும் கொடுமையாய் நரகினும் கொடூரமாய் வாழ்க்கை மாறி வருகிறது. மானுடனுக்குள் ஒளிந்திருக்கும் குரூரங்களை அள்ளி இரைத்தது போர்.
இவ்வாறெல்லாம் தினந்தோறும் வரும் செய்திகள் பீதியை உண்டு பண்ணத் தொடங்கியது.  

[அந்த சமயத்தில் ஜப்பானியர்கள் நிகழ்த்திய போர்க் கொடூரங்கள் கணக்கற்றது. அகப்பட்ட பெண்களை எல்லாம் வயது வித்தியாசமின்றி சிறைப்பிடித்து பாலியல் அடிமைகளாய் 'Comfort homes' என்ற பெயரில் சிதைத்திருக்கிறார்கள். அதனால் இன்றும் அது குறித்த கசந்த நினைவுகள் இங்கு கிழக்காசிய நாடுகளில் அதிகம். இது குறித்த History channelல் ஒளிபரப்பப்பட்ட காணொளிகளுக்கு இங்கு பார்க்கவும் -
நேதாஜி ஜப்பானியர்கள் உதவியுடன் படை அமைத்ததால் சிங்கப்பூர்/மலேசியாவில் INA மற்றும் சுபாஷ் குறித்த எதிர்மறை உணர்வுகளும் நிறைய இருக்கின்றன. ஹிட்லர், முசோலினி மற்றும் ஜப்பானியரோடு கொண்ட போர் படைகளுக்கான கூட்டு என்பது, அவரவரது சொந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதும், தனிப்பட்ட முறையில் ஜப்பானது போர் முறைகளிலும், நிகழ்ந்த போர்க் கொடுமைகளை அவர் எதிர்த்ததும் பெரிய அளவில் தெளிவு செய்யப்படவில்லை. ]

குண்டடி பட்டு வீழ்வதாயினும் மரணம் ஒரு முறைதான். இறப்பினும் கொடிய வாழ்வுக்கு அஞ்சியே ஒவ்வொரு வினாடியும் இருத்தல் என்பது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக மாற்றத் தொடங்கியது.
இவ்விதமாய் நரகத்து வாழ்வில் உழலும் போது, கோலாலம்பூர் கடையிலிருந்து வந்த நண்பர் ஒருவர் பலமாதம் முன்பு எழுதப்பட்டு உலகெல்லாம் சுற்றி வந்து சேர்ந்த  உயிர் காக்கும் மருந்தோடு வந்து சேர்ந்தார். ஆம், கடிதம்!! அருமைத் தந்தையிடமிருந்து உறவுகளின் ஸ்பரிசத்தோடு கவலைகளோடு பிரார்த்தனைகளை சுமந்த கடிதம்.ஜப்பானியர்களின் கண்காணிப்பால் உறை பிரிந்து தான் வந்து சேர்ந்திருந்தது. எனினும் கடிதத்தை வெளியே எடுப்பதற்குள் மெய்தான் அரும்பி, விதிர்விதிர்த்து, கண்ணீர்த்திரைக்குப் பின் மங்கலாகத் தெரிந்தது ஐயாவிடமிருந்து வந்த கடிதம்.

உயிர் வாழ்வதன் சாத்தியக்கூறுகள் குறைவான நிலையில் தெய்வ சாந்நித்தியமாய் வந்த கடிதம். அதுவே காலடிகளை முன்னோக்கி எடுத்து வைக்க உதவும் ஊன்றுகோலாகியது. இதற்கு முன் மகன் பிறந்த செய்தி வந்ததுதான் கடைசிக் கடிதம் அது பலநூறு முறை படித்துக் கண்ணீர் படிந்து நொய்ந்திருந்தது. அடுத்தது இந்தக் கடிதம் கலங்கரை விளக்கமாய்.

இதே போல வேறு ஒருவருக்குத் தன் தாயிடம் இருந்து கடிதம் வந்து சேர்ந்திருக்க கண்ணீர் வெள்ளமெனப் பெருக, அதைப் படிக்க முற்படும்போது ஊதியது அபாயச் சங்கு. கடிதத்தை உயிரினும் மேலாய் சுமந்து ஓடி குழிக்குள் மறைந்து, பல மாதங்களாய் காத்திருந்து வந்த செய்தி கையில் கிட்டியும் படிக்க முடியாத சுமை நெஞ்சையழுத்த, குழிக்குள்ளேயே கடிதத்தைப் பிரித்து படிக்க அவர் முற்பட்டார். தலை மேல் விமானம் பறக்க, வேகமாய் காற்று வீசியது - எமனின் பாசக் கயிறா அது? கடிதம் அவர் கையை விட்டுப் பறந்தது. உயிர் பறந்தது போன்ற உணர்வுடன் பதைத்து வெளியேறினார்; கடிதத்தை எட்டிப் பிடிக்க ஓடினார். குண்டு வீழ்ந்தது. அவர் சில நொடிகளுக்கு முன் பதுங்கியிருந்த குழியில்.. மரணத்தைத் தட்டி எறிந்திருந்தாள் அந்தத் தாய். தாய்மடியில் சேயாய் கடிதம் அவரை சுமந்து காத்துநின்றது. பல்லாயிரம் மைல் அக்கரையில் காத்து நிற்கும் உறவுகளின் பாசமும் பிரார்த்தனையும் கவசமாய் உடன் வருவது சத்தியமாய்க் கண் முன் தெரிந்தது.

மனிதனின் சின்னஞ்சிறு பிரயத்தனங்களைத் தாண்டி இதுபோல பிரார்த்தனைகளும், அன்பும், முனனோர் அருளும், இறை அருளும் துணை வரும் என்பதை நமக்கு நினைவூட்டும் இந்நிகழ்வுகள்.

முந்தைய பதிவு (23)

அடுத்த பதிவு (25)

No comments:

Post a Comment