Sunday, February 14, 2016

சற்குரு - தாத்தா - 28

1942-43: வறண்டிருந்த பாலை நிலத்தில் புது வெள்ளமெனப் பாய்ந்தது சுபாஷ் சந்திர போஸ் எனும் மாகங்கை. அடிமைத் தளையுண்ட அனைத்து இந்தியரையும் அழியாப் பெருநெருப்பெனக் கிளறியது அந்தப் புயற்காற்று. கீழ்மையின் பிடியில் புழுவென உழன்றவர்க்கும் புத்துயிர் கொடுத்த மகாசக்தி. ஜப்பானிய ஆட்சியிலிருந்த கிழக்காசிய நாடுகளெங்கும் பரவி ஏறியது வேள்வித்தீ.. சோம்பிக் கிடந்த நெஞ்சங்களை, இதுவே முடிவென விதிக்குத் தலைநீட்டியிருந்த பலியாடுகளை உயிர்த்தெழுப்பி சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார் நேதாஜி.

இது தொடர்பான எனது பதிவுக்கு கீழ்க்காணும் பதிவுகளைப் பார்க்கவும்:
http://manaodai.blogspot.sg/2016/01/blog-post.html?m=1
http://manaodai.blogspot.sg/2016/01/striding-along-forgotten-alley.html


சுபாஷ் படைக்கு நிதி திரட்டி உதவலாம் என்ற சந்தர்ப்பம் நேர்ந்ததும், அனைவருக்கும் தங்கள் பங்கை நாட்டிற்கு செய்யலாம் என்ற உந்துதல் உருவாகியது. மலேயாவில் அவ்விதம் நடந்த நிதி திரட்டும் நிகழ்வில், நாடகம் போடலாமென தாத்தா மற்றும் நண்பர்கள் முடிவெடுத்தனர். நாடகம் மக்களைக் கவர்ந்திழுப்பதாகவும் இருக்க வேண்டும், நேதாஜியின் படைதிரட்டுதலுக்கு உதவியாக ஆள்பலமோ பணபலமோ சேர்ப்பதாகவும் அமைய வேண்டும். என்ன நாடகம் போடலாம் என யோசித்தனர். வாழ்வில் மனிதனுக்கு ஏற்படக் கூடிய ஒவ்வொரு அறச் சிக்கலுக்கும் வினா எழுப்பி விடையும் அளிக்கும் கீதையே பொருத்தமாகப் பட்டது. அதுவரை பாரதம் கண்டிராத போர்க்களத்தில், தர்மத்தைக் காக்கும் பொருட்டு அவரவர் ஆற்ற வேண்டிய கடமையை நினைவூட்டும், கர்மபூமியில் தலைசிறந்த வீரனுக்கும் ஏற்படக்கூடிய ஆயிரம் சஞ்சலங்களுக்கும், அவனது கேள்விகள் வாயிலாய் மானிடத் திரளுக்கே பதில் அளிப்பதாக கண்ணன் கூறிய மொழிகளுமாய் குருக்ஷேத்திரம் நாடகக் களமாய் முடிவு செய்யப்பட்டது.
கீதையின் நாயகனாய் நம் கதையின் நாயகன் - ஆம் தாத்தா கண்ணனாய் வேடமிட்டு மயிற்பீலி குழல் சூடி, மேடையேறினார்கள்.
'தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும் போது நான் யுகம் தோறும் அவதரிப்பேன்' என்று கண்ணன் உரைக்க, அது கண்ணன் மொழியா மேடையில் அமர்ந்த சுபாஷின் உறுதிமொழியா - என்ற மயக்கில் முழுநிலவு கண்டெழும் கடலலையாய் கூட்டம் ஆர்ப்பரித்தது.
நாடகம் முடிந்ததும் சுபாஷ் மேடையேறினார். இந்தியாவின் நிலை குறித்தும் அதை விடுவிக்க உயிர் ஈந்த எண்ணற்றவர்கள் குறித்தும் பேசினார். 'நீங்கள் உங்கள் ரத்தத்தை எனக்கு அளியுங்கள்; நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன்' என்று வாக்களித்தார். சுதந்திர வேள்வியில் ஒவ்வொருவரும் இயன்ற வகையில் ஈடுபடுவது கடமை என்று உணர்வுகளைத் தட்டி எழுப்பினார். 'உங்கள் ஒவ்வொருவரையும் அன்னை பாரதமாதா நம்பி இருக்கிறாள். அன்னையை மீட்க வாருங்கள்' என்று குரல் கொடுத்தார்.
அன்றெழுந்த உணர்ச்சி வெள்ளத்தில், ஒற்றை மனிதன் ஏற்படுத்திய ரசவாத மாற்றத்தில், மக்கள் மனதில் புரட்சி விதை வேரூன்றியது நன்கு தெரிந்தது, மானுடனுக்குள் உறையும் தேவனின் முகம் தெரிந்தது. அலை அலையாய் முன்வந்து நிதி வழங்கியோர் எத்தனை பேர்! காது கையிலிருந்த அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்த பெண்கள் எத்தனை பேர்!! வீடு வாசல் என சொத்து முழுவதையும் நேதாஜி இயக்கத்துக்கு எழுதி வைத்த செல்வந்தர்கள் எத்தனை பேர்!! என்னிடம் இருப்பது இந்த உயிரும் உடலும் தான் எனப் படை சேர்ந்தோர் எத்தனை பேர்!! ரத்தத்தால் கையெழுத்திட்டோர் எத்தனை பேர்!! உணர்ச்சிப் புயல் வீசியது.
ஒப்பனை கலைக்கப் போகாது, சுபாஷ் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தாத்தா கண்ணீர் வடிய மேடையேறினார்கள் கையெழுத்திட.
'நாட்டு விடுதலைக்காக இந்த உடலையும் உயிரையும் அர்ப்பணிப்பேன்' என உறுதிமொழியில் கையெழுத்திட, பார்த்தனுக்கு கீதை சொன்ன பார்த்தசாரதியாய், பரந்தாமனாய் தாத்தா மேடையேற, சுபாஷ் அதைப் பார்த்து விட்டு கிருஷ்ண பரமாத்வே நம் பக்கம் இருக்கும் போது, வெற்றி நமதே என உரக்க முழங்கினார்.
அரங்கம் அதிர்ந்தது!!!
(நேதாஜியை மீட்பராய் இரட்சகராய்ப் பார்த்த அன்றைய மக்கள் மனநிலையை 'Lord Krishna of the moment' எனத் தலைப்பிட்டு பதிவு செய்திருந்தது அன்றைய நாளிதழான Syonan Sinbun - photo attached)


No comments:

Post a Comment